சென்னை-சேலம் 8 வழிச்சாலை பற்றி அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கு அடுத்தபடியாக பேசி வருபவர்கள் எம்.பி.க்களான நாமக்கல் சுந்தரமும் ஊட்டி அர்ஜுனனும்தான். ஊட்டி அர்ஜுனனை டெல்லியில் பாதுகாப்புத்துறை கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் செல்போனில் பிடித்தோம். கூட்டத்தை விட்டு வெளியே வந்து நம்மிடம் பேசினார்.
சேலத்திற்கும் சென்னைக்கும் 8 வழிச்சாலை ஏன் இவ்வளவு அவசரமாக அமைக்கப்படுகிறது?
அர்ஜுனன்: நகருக்கு நகர் வாகனங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அவசர வேலைகளுக்காக குறித்த இடத்திற்கு விரைவாக செல்ல இதுபோன்ற சாலைகள் அவசியம் என தமிழக முதல்வர் எடப்பாடியும் துணைமுதல்வர் ஓ.பி.யும் முடிவு செய்து, மத்திய அரசின் உதவியுடன் இந்த சாலை அமைக்கப்படுகிறது.
அதற்கென சேலம் மாவட்டத்தையும் சென்னையையும் இணைக்கும் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்?
அர்ஜுனன்: சேலம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி போன்றவை வறட்சி மிகுந்த மாவட்டங்கள். 8 வழிச்சாலை அமைவதால் சேலத்தைச் சுற்றியுள்ள 8 மாவட்டங்கள் வளர்ச்சியடையும் என்பதால் சேலம்-சென்னை சாலையை அமைக்க அரசு முடிவு செய்தது.
பெரும்பாலும் விவசாய நிலங்களில் பசுமை வழிச்சாலை அமைக்கப்படுவது ஏன்?
அர்ஜுனன்: விவசாய நிலங்களில் இந்த சாலை அமைக்கப்படுவது மிகவும் நல்லது. இதை விவசாயிகள் வரவேற்கிறார்கள். இந்த சாலையால் நிலம் இழக்கும் விவசாயிகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு வரக்கூடாது என்பதில் தமிழக அரசு கவனமாக இருக்கிறது.
இந்த சாலை திட்டத்தினால் விவசாயிகள் இழக்கும் ஒரு தென்னை மரத்திற்கு ரூ.50,000 அரசு வழங்குகிறது. விவசாயிகளின் இழப்பீடாக 3,000 கோடிக்கு மேல் வழங்கப்படுவதால் இத்திட்டத்தால் விவசாயிகள் பாதிப்படைய வாய்ப்பே இல்லை. விவசாயிகள் எதிர்பார்க்கும் இழப்பீடு கிடைக்கும் என சேலம் கலெக்டர் ரோகிணி அறிவித்துள்ளார். 8 வழிச்சாலை திட்டத்தால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படும். ஏழை, எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும்.
-பிரகாஷ்