கர்நாடக அரசியலில் தற்போது பென் ட்ரைவ் ஆபாச வீடியோ பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்த லில், கர்நாடகாவிலுள்ள 28 தொகுதிகளில் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 26 மற்றும் மே 7 தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், முதல்கட்டத் தேர்தல் நடக்கும் முன்பாக, கர்நாடகாவில் ஹசன் தொகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான வீடுகளின் முன்பாக பென் டிரைவ்கள் கிடந்திருக்கின்றன. அந்த பென் டிரைவ்களில் கிட்டத்தட்ட 3,000 ஆபாச வீடியோக்கள் இருந்திருக்கின்றன. அவை அனைத்திலும், ஹசன் தொகுதியின் எம்.பி.யும், தற்போது அங்கே போட்டியிடுபவருமான பிரஜ்வால் ரேவண்ணா தொடர்புடைய அந்தரங்க ஆபாசக்காட்சிகளைப் பார்த்து அதிர்ந்திருக்கிறார்கள்!
யார் இந்த பிரஜ்வால் ரேவண்ணா? இந்தியாவின் பிரதமராகவும், கர்நாடகாவின் முதல்வராகவும் முன்பு பதவி வகித்த தேவகவுடாவின் பேரனாவார். தேவகவுடாவின் மகன் ரேவண்ணா, ஹசன் மாவட்டத்திலுள்ள ஹாலேநரசிப்புரா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவரது மகனான பிரஜ்வால் ரேவண்ணா, மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியின் சார்பில் ஹசன் தொகுதி எம்.பி.யாக இருக்கிறார். தற்போது பா.ஜ.க. கூட்டணி சார்பாக மீண்டும் ஹசன் தொகுதியில் எம்.பி. பதவிக்காகப் போட்டியிடுகிறார். இந்நிலையில் இவர் தொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியாகி இந்தியா முழுக்க தேர்தல் பேசுபொருளாகி யுள்ளது. அனைத்து ஆபாச வீடியோக்களிலும் பிரஜ்வால் ரேவண்ணாவின் முகம் தெரியாவிட்டாலும், அவரது குரல் தெளிவாகப் பதிவாகியிருப்பதன் மூலம், அவர் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்கள் என்பது உறுதியானது.
அந்த வீடியோக்களில் இடம்பெற்ற பெண்களில், வீட்டுப் பணிப்பெண்ணிலிருந்து, பல்வேறு அரசாங்கப் பதவிகளில் இருக்கக்கூடிய பெண்கள்வரை இடம் பெற்றிருப்பது பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. பல பெண்களைக் கட்டாயப்படுத்தியும், துன்புறுத்தியும் தனது பாலியல் இச்சையைத் தீர்த்துக்கொண்டதோடு, அதை வீடியோவாகவும் எடுத்து மிரட்டியிருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில் பிரஜ்வால் வீட்டுப் பணிப்பெண் ஒருவர், பிரஜ்வால் மீதும் அவரது தந்தை ரேவண்ணா மீதும் ஹசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா காவல் நிலையத்தில் பாலியல் புகாரளித்திருப்பது அதிர்ச்சி யளித்துள்ளது. அவரது புகாரில், ரேவண்ணாவின் மனைவி வீட்டிலில்லாத பொழுதுகளில், ரேவண்ணாவும், அவரது மகன் பிரஜ்வால் ரேவண்ணாவும் ஸ்டோர் ரூமுக்கு பெண்களை அழைத்து பாலியல் பலாத்காரம் செய்வதை வழக்கமாக வைத் திருந்ததாகக் குற்றம்சாட்டி யுள்ளார். தன்னிடமே, தந்தையும், மகனும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக வும், தனது மகளிடமும் பிரஜ்வால் ரேவண்ணா ஆபாசமாக வீடியோகாலில் பேசியதால் அவரது எண்ணை ப்ளாக் செய்ததாகவும் குறிப் பிட்டுள்ளார். இதுதொடர்பாக பிரஜ்வால் ரேவண்ணா மீது 54(ஆ), 354(உ), 506, 509 ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் வெளி யானதுமே, மாநில பெண்கள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் நாகலட்சுமி சவுத்ரி, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார். அதையடுத்து, இவ்விவகாரத்தில் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை (எஸ்.ஐ.டி.) கர்நாடக அரசு அமைத்தது. இதையடுத்து, பிரஜ்வால் ரேவண்ணா விசாரணைக்கு பயந்து ஜெர்மனிக்கு ஓட்டமெடுத்து தலைமறைவாகி யுள்ளார். கர்நாடகாவில் இன்னொரு கட்டத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள், பீகார், உத்தர பிரதேச மாநிலங்களுக்கும் பரவியதில், அங்குள்ளவர்களின் வாட்ஸப் குழுக்களில் வைரலாகி, கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. இன்னமும் அங்கெல்லாம் தேர்தல் நடக்கவேண்டியிருப்பதால், மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் கூட்டணி சேர்ந்துள்ள பா.ஜ.க.வுக்கு இந்த விவகாரம் பெருத்த பின்னடைவாக அமைந்துள்ளது.
பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் கடந்த ஆண்டே முக்கிய அரசியல் தலைவர்களின் பார்வைக்கு சென்றிருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதியே பா.ஜ.க மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திராவுக்கு பா.ஜ.க.வை சேர்ந்த தேவராஜே கவுடா என்பவர் எழுதிய கடிதத்தில், "என்னிடம் பிரஜ்வால் ரேவண்ணா சம்பந்தப்பட்ட 2,976 ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ் இருக்கிறது. இந்த வீடியோவில் அரசு அதிகாரிகளாக இருக்கும் பெண்களிடமும் பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தெரியவருகிறது. இந்த பென் டிரைவ் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கும் சென்றிருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட ஜே.டி.எஸ். கட்சியோடு கூட்டணி வைத்து பாராளுமன்றத் தேர்தலில் பிரஜ்வால் ரேவண்ணாவை வேட்பாளராகக் களமிறக்கினால் நமக் கெதிராக இந்த வீடியோக்களை எதிர்க்கட்சிகள் பயன்படுத்தக்கூடும். அது நமக்கு பின்னடைவாக அமையக்கூடும்'' என எச்சரித்திருக்கின்றனர்.
இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து முன்பே தெரிந்திருந்தும் வலுக்காட்டாயமாக பா.ஜ.க. கூட்டணி வைத்தது ஏன்? என்று காங்கிரஸ் தரப்பில் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், ஜே.டி.எஸ். கட்சிக்குள்ளேயே ரேவண்ணாவையும், அவரது மகனையும் கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்று எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், பிரஜ்வால் ரேவண்ணாவை சஸ்பெண்ட் செய்வதாக குமாரசாமி அறிவித்துள்ளார். "பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட பிரதமர் மோடி, ஆபாச வீடியோ விவகாரத்தில் ஏன் மவுனமாக இருக்கிறார்?'' என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் பதிலளிக்காவிட்டாலும் வாக்காளர்கள் பதிலளிப்பார்கள்!