காடுகளை அழித்து, வயல்வெளிகளை, கட்டுமானங் களை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்ட புல்டோசர்கள், பின்னர், பாழடைந்த கட்டுமானங்களை அகற்றுவதற்காகப் பயன்படுத்தப்பட்டு... ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதர்களைக் கடித்த கதையாக, தற்போது, அதிகாரவர்க்கத் தால் கைகாட்டப்படும் எளிய மக்களின் வீடுகளை அடித்து நொறுக்குவதற்காகக் களமிறக்கப்பட்டிருப்பது, சர்வாதி காரத்தை நோக்கிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் அரசாங்கம், ஏதேனும் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இஸ்லாமி யர்களாக, தலித்துகளாக இருக்கும்பட்சத்தில், எவ்வித நீதி மன்ற உத்தரவும் இன்றி, ஆக்கிரமிப்பு வீடுகள் என்ற காரணத் தைக்கூறி, அவர்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கும் செயலில் இறங்கியது.
இப்படி இடித்து நொறுக்குவதன்மூலம், மதவெறி அரசியலைத் தூண்டி, பெரும்பான்மை மக்களின் மத்தியில் ஹீரோயிசமாகக் காட்டிக்கொள்ளத் தொடங்கினார். அதை யடுத்து, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இந்த உத்தியைக் கையிலெடுக்கத் தொடங்கினார்கள். இதன் தொடர்ச்சியாக ஹரியானா பா.ஜ.க. அரசு தனது புல்டோசர் அரசியலை, தற்போதைய கலவரத்தையடுத்து கையிலெடுத்துள் ளது. விஸ்வ இந்து பரிஷத், சங் பரிவார் அமைப்புகள் நடத்திய ஊர்வலத்தில், இஸ்லாமியர்களின் பகுதியில் திட்டமிட்டு எழுப்பப்பட்ட கோஷங்களால் ஏற்பட்ட கலவரத்தில் ஆறு பேர் வரை கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தால் இஸ்லாமியர் களின் கடைகள், மசூதிகள் நொறுக்கப்பட்டும், தீவைக்கப்பட்டும், பெரிதும் பாதிக்கப்பட்டது இவர்கள் தரப்பு. இந்நிலையில் கலவரப்பகுதிகளான நுஹ், குருகிராம் பகுதிகளில் இணையச்சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், மேற்கு வங்கத்திலிருந்து அகதி களாக வந்து அங்கே சின்னச்சின்ன வேலைகளைப் பார்த்து பிழைப்பு நடத்திவரும் இஸ்லாமியர்களை கலவரக் கும்பல், "இங்கிருந்து காலி செய்து செல் லுங்கள்' என மிரட்டியிருக்கின்றனர். இச்சூழலில், கலவரக்காரர்களுக்கு ஆதரவாக, நுஹ் மாவட்ட நிர்வாகமே போலீசார் மற்றும் புல்டோசர்களுடன் களமிறங்க, நுஹ் நகருக்கு 20 கி.மீ. தொலைவிலுள்ள டவ்ரு பகுதியில் வசிக்கும் புலம்பெயர்ந்தோரின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டன. இங்குள்ள மக்களனைவரும் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான மக்கள் குடிசைகளிலும், சிலர் மட்டும் சிமென்ட் வீடுகளிலும் வசித்துவரும் நிலையில், அனைத்தையும் ஆக்கிரமிப்பு எனக்கூறி இடித்துத் தள்ளும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது. இப்படியாக, நுஹ் பகுதியில் 4 நாட்களாகத் தொடர்ந்த இடிப்புப் பணிகளில், அப்பகுதியிலிருந்த 350 குடிசைகள் மற்றும் 50 கான்க்ரீட் வீடுகள் இடிக்கப்பட்டன. ஹரியானா வன்முறையின்போது, மறைந்திருந்து கற்களை வீசுவதற்காகப் பயன்பட்டதாகக்கூறி, ஒரு உணவகத்தையும் இடித்துத் தள்ளியுள்ளார்கள். அதேபோல், நல்ஹார் சாலை பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கூறி 45 கடைகளை மாவட்ட நிர்வாகம் இடித்துத் தள்ளியது.
ஹரியானாவில் பற்றியெரிந்த கலவரம், அதையடுத்து வீடுகளை இடிக்கும் புல்டோசர் அர சியலைப் பார்த்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், இவ்விவகாரத்தில் தானாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியது. "ஒரு குறிப்பிட்ட பிரி வினரின் வீடுகள் மட்டுமே இடிக்கப்படுவதாகத் தெரிய வந்தால் அது இன அழிப்பு நடவடிக்கையாகவே கருதப்படும். இடிப்பு நடவடிக்கைக்கு முன் முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதா? உரிமையாளர்களின் பதிலைப் பெற அவகாசம் அளிக்கப்பட்டதா?' என்றெல்லாம் கேள்வி எழுப்பியது. அதை யடுத்து, ஹரியானா அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், உடனடியாக இடிப்புப் பணியை நிறுத்தும்படி உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, நுஹ் பகுதியில் வீடுகளை இடிக்கும் பணியை நிறுத்தும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் துணை ஆணையர் திரேந்திர கட்கடா கேட்டுக் கொண்டார்.
ஹரியானா அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, "எந்தவொரு புல்டோசர் இடிப்பு நடவடிக்கையை எடுப்பதற்கு முன்பும், சட்டரீதியான நடவடிக்கையை முறை யாகப் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன் றம் கூறியுள்ளது. இடிக்கப்படக்கூடிய கட்டடத் தின் உரிமையாளருக்கு தனது கருத்தைத் தெரி விக்கும் உரிமையை வழங்காமல், ஏழை இஸ் லாமியர்களைக் குறிவைத்து இடிப்பு நடவடிக் கையில் இறங்கியுள்ளனர். ஆக்கிரமிப்பு எனக் குற்றம்சாட்டப்பட்டு நூற்றுக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ள னர். உண்மையான குற்றவாளிகள் துப்பாக்கி ஏந்தியபடி சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்கள். அவர்களின் முன் கட்டார் அரசு பணிந்து விட் டது. மண் வீடுகளையும், சேரிகளையும் இடித்து உங்களை வலிமையாகக் கருதுவது பெரிய விஷய மா?'' என்று தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில், நுஹ் நகரின் துணை ஆணையர் பிரசாந்த் பன்வார், "நிர்வாகத்தின் சார்பாக ஆக்கிரமிப்புகளை இடிப்பதற்கும், சமீபத்திய வன்முறைக்கும் தொடர்பு இல்லை'' என்று மறுத்துள்ளார். ஆனால், ஹரியானா மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ், "கட்ட டங்கள் இடித்துத் தள்ளப்பட்டிருப்பது, சமீபத்தில் வகுப்புவாத மோதல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதிதான்'' என்று கூறியிருப்பது, ஹரியானா அரசின் இஸ்லாமிய விரோதச் செயல்பாட்டை அப்பட்டமாக வெளிப் படுத்துகிறது. எங்கோ தானே இடிக்கிறார்கள்.... வேறு யாரையோ தானே இடிக்கிறார்கள்... என் றெல்லாம் இந்த சர்வாதிகாரச் செயல்பாட்டை எளிதாகக் கடந்து சென்றால் அந்த புல்டோசர் கள் நம் வீட்டை நோக்கி வருவதற்கு நெடு நாட்களாகாது!