மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்தே விலைவாசி உயர்வு, கட்டண உயர்வு, பண மதிப்பிழப்பு, அதிகப்படியான ஜி.எஸ்.டி. போன்ற வற்றால் நடுத்தர, அடித்தட்டு மக்களின் வருமானம், குடும்பம் நடத்துவதற்கான அத்தியாவசியச் செலவுகளைக்கூட எதிர்கொள்ளப் போதுமானதாக இல்லாததால், கடன் பிரச்சினைகளில் சிக்கி, பலரும் தற்கொலை முடிவை எடுக்கும்படியாக உள்ளது.
தமிழ்நாட்டில், ஈரோடு மாவட் டத்தில் மட்டும் ஒரு மாதத்திற்கு சராசரியாக முப்பது தற்கொலைச் சம்பவங்கள் நிகழ்கின்றன. வெவ்வேறு வழிமுறைகளில் நடந்தாலும் இவை யனைத்தும் வருவாய் மற்றும் பொருளாதாரப் பற்றாக்குறையைச் சார்ந்தே இருக்கிறது. சென்ற 10-ஆம் தேதி மட்டும் ஒரே நாளில் நான்கு தற்கொலைச் சம்பவங்கள்.
முதலாவது சம்பவத்தில், ஈரோடு வீரப்பன்சத்திரத்தையடுத்த பெரியசேமூர், ஈ.பி.பி. நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி உமாதேவி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். விஜயகுமார் மருந்து விற்பனைப் பிரதிநிதியாக பணிபுரிந்தார். அவரது தாய், தந்தையுடன் கூட்டுக் குடும்பமாக வசித்துவந்தார். கொரோனா காலத்திற்குப் பிறகு விஜயகுமாருக்கு வருமானம் குறைவாக இருந்ததால் தொடர்ந்து குடும்பச் செலவுக்காக அவருக்குத் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி வந்துள்ளார். இது தொடர்பாக கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடும் மனஉளைச்சலில் இருந்த விஜயகுமார், சம்பவத்தன்று அவர் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். மற்றவர்கள் அனைவரும் வெளியே சென்றுவிட்டனர். பின்னர் அவர்கள் வீட்டுக்கு வந்தபோது, வீட்டிலுள்ள ஒரு அறையில் விஜயகுமார் தூக்கு போட்டுக்கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவைத் திறந்து அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே விஜயகுமார் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இரண்டாவது, பவானியை அடுத்த குருப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் 27 வயது சரவணன். ஈரோட்டில் ஒரு ஜவுளிக் கடையில் பார்சல் செய்யும் பணியிலிருந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சொற்ப சம்பளத்தில், தாய் தந்தையோடு குடும்பம் நடத்தவே சிரமப்பட்டிருக் கிறார். அதனால் பல இடங்களில் பெண் பார்த்தும் அவருக்கு அமையவில்லை. இதனால் பல நாட்களாக மன வருத்தத்திலிருந்த சரவணன், வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூன்றாவது, பவானி வர்ணபுரம், பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 21 வயது தமிழரசன். பத்தாம் வகுப்பு படித்துவிட்டு டைப்ரைட்டிங் கிளாசுக்கு போய் வந்துள்ளார். அதற்கடுத்ததாக மேற்படிப்பு படிக்க விருப்பப்பட்ட தமிழரசனை தொடர்ந்து படிக்க வைக்க வசதியில்லை என்று அவரது பெற்றோர் மறுத்து வந்துள்ளனர். படிப்பின் மீது ஆர்வமிருந்தும், படிக்க வசதியில்லையே என்ற வேதனையே அவருக்கு வாழ்வின் மீது விரக்தியை ஏற்படுத்த, சம்பவத்தன்று எலி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார் தமிழரசன். அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் தமிழரசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்தும் பவானி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நான்காவது சத்தியமங்கலம் பவானிசாகர், கணபதி நகரைச் சேர்ந்த லோகநாதன். இவருக்கும் புளியம்பட்டி அருகேயுள்ள குரும்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த அம்சவேணி என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு குழந்தை இல்லை. அதற்கான சிகிச்சை எடுக்கவும் பண வசதியில்லை. இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால் லோகநாதன் குடிப்பழக்கத்திற்கு ஆளானார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கோபித்துக்கொண்டு அம்சவேணி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனவேதனையடைந்த லோகநாதன், தன்னை மனைவியுடன் சேர்த்து வைக்குமாறு கூறி வந்துள்ளார். ஆனால் மனைவி அம்சவேணி குடும்பத்தினரோ, 'சில நாட்கள் போகட்டும், முதலில் குடும்பம் நடத்த வருவாயைச் சேமித்து வை' எனக் கூறியிருக்கின்றனர். கூடுதல் வருவாய்க்கு எங்கே வழியென்று வேதனையுடன் இருந்த லோகநாதன், சம்பவத்தன்று வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்துவிட்டார். இதனால் வாயில் நுரை தள்ளிய நிலையில், அக்கம்பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லோகநாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இப்படியாக சமீபகாலத்தில் தொடர் தற்கொலை கள் பெருகி வருவதற்கு, போதிய வருமானமின்மை, கடன் தொல்லை, அதிக வருமானத்துக்கு ஆசைப்பட்டு ஆன்லைன் ரம்மியில் பணத்தைத் தொலைப்பது என, மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தற்கொலையின் எண்ணிக்கை பெருகிவருவது வேதனையானது.