குமாரபாளையம் நகர தி.மு.க. செயலாளருக்கு சொந் தக் கட்சியினரே "நாகரிகமாக' கொலை மிரட்டல் விடுத்து, அறிவாலயத்திற்கு அனுப்பியுள்ள கடிதம், நாமக்கல் மாவட்ட அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வடக்கு நகர தி.மு.க. செயலாளராகவும், நகர் மன்றத் தலைவராகவும் இருப்பவர் விஜய்கண் ணன். இவர்மீது புகாரளித்து, தி.மு.க. மேலிடத் திற்கு அண்மையில் ஒரு பரபரப்புக் கடிதத்தை கழக உடன்பிறப்புகள் பெயர் குறிப்பிடாமல் அனுப்பிவைத்துள்ளனர். அந்த கடிதத்தில், "விஜய்கண்ணன், திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து ஏற்கெனவே இருந்த நகர பொறுப்பாளர் செல்வத்தை தூக்கச் செய்துவிட்டு, அந்த பதவியைக் கைப்பற்றிக் கொண்டார். பதவிக்கு வந்த பிறகு மூத்த நிர் வாகிகளை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறார். தன்னை மட்டும் ஃபோகஸ் செய்து கொள்கிறார். கட்சியினரின் தனிப்பட்ட விவகாரங்களில் அடிக்கடி தலையிடுகிறார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட கடன் சுமையால், பதவியை வைத்துக் கொண்டு பலரையும் மிரட்டிவருகிறார். எப்போது வேண்டு மானாலும் இவர் கொலை செய்யப்படலாம். அந்தளவுக்கு இவருக்கு தனிப்பட்ட எதிரிகள் அதிகம். கள்ளச்சாராயம், லாட்டரி சீட்டு வியாபாரம், எல்லா ஊர்களிலும் நடப்பது போல் குமாரபாளையத்திலும் நடக்கிறது. இதிலெல்லாம் அவர் தலையிடுகிறார். இதனால் கட்சிக்குள் வன்மத்தை அதிகரிக்கச் செய்கிறது. அவர் கட்சியிலிருந்தால் வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு கெட்ட பெயர் ஏற்படும்.'' என்று கடிதத்தில் மர்ம நபர்கள் கூறியுள்ளனர்.
இந்த புகார் கடிதத்தை, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர், காவல்துறைக்கும் மர்ம நபர்கள் அனுப்பியுள்ள னர். இந்த கடிதம், சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவிவருகிறது. இதன் பின்னணி குறித்து குமாரபாளையம் தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தோம். "குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி உருவானதிலிருந்து இங்கு தொடர்ந்து அ.தி.மு.க. மாஜி அமைச்சர் தங்கமணிதான் வெற்றிபெற்று வருகிறார். இங்குள்ள தி.மு.க.வில் யார் பொறுப்பாளராக இருந்தாலும் அவர்கள் திரைமறைவில் தங்கமணியுடன் "டீல்' போட்டுக்கொள்கின்றனர்.
இந்த நிலையில்தான் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக தங்கமணிக்கும், விஜய் கண்ணனுக்கும் நேரடி உரசல் ஏற்பட, அவர்மீது வழக்குப்பதிவு வரை சென்றது. இதையடுத்து தான் தங்கமணியை எப்படியாவது தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்று விஜய்கண்ணன் திட்ட மிட்டு கட்சி வேலைகளைச் செய்து வந்தார். இந் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது விஜய்கண்ணன், குமாரபாளையம் நகராட்சியில் போட்டியிட தி.மு.க.வில் சீட் கேட்டார். உட்கட்சி மோதலால் அவருக்கு சீட் மறுக்கப்பட்டது. இதன் பின்னணியில் தங்க மணியின் அழுத்தமும் இருந்தது. ஏமாற்ற மடைந்த அவர், சுயேட்சையாகக் களமிறங்கிய தோடு, அவரது ஆதரவாளர்களையும் சொந்தச் செலவில் சுயேட்சையாகக் களமிறக்கி, அவர் உட்பட 9 பேர் வெற்றிபெற்றனர்.
அதேநேரம், தனிப்பெரும் கட்சியாக தி.மு.க.வில் 14 பேரும், அ.தி.மு.க. தரப்பில் 10 பேரும் வெற்றி பெற்றிருந்தனர். இன்னும் 3 கவுன்சிலர்கள் ஆதரவு இருந்தால் நகர்மன்றத் தலைவர் பதவியைக் கைப்பற்றி விடலாம் எனக் கருதி, தி.மு.க. மேலிடம் வேட்பாளரை அறிவித் தது. அ.தி.மு.க.வும் களத்தில் குதித்தது. ஆனா லும் இரண்டு கட்சிகளிலும் ஆட்களைத் தூக்கி, நகர்மன்றத் தலைவரானார் விஜய்கண்ணன். அதன்பிறகு அவர் மீண்டும் தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இந்த சம்பவத்திலிருந்தே அவர்மீது குமாரபாளையம் மூத்த தி.மு.க. நிர்வாகிகள் கடுப்பிலிருக்கிறார்கள். அ.தி.மு.க. மாஜி தங்கமணிக்கும் இச்சம்பவம் பயங்கர மூக்குடைப்பானது. லாட்டரி, சந்துக்கடை மதுபான வியாபாரத்தில் முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் சிலரின் பெயரைக் குறிப்பிட்டு நாமக்கல் மேற்கு மா.செ. மதுரா செந்திலிடம் புகாரனுப்பினார் விஜய். இந்த பின்னணியில்தான் விஜய்கண்ணன் கொலை செய்யப்படலாம் என "நாசூக்காக' எச்சரிக்கை விடுத்து, கட்சித் தலைமைக்கு உடன்பிறப்புகள் மொட்டை பெட்டிஷன் போட்டுள்ளனர்'' என்கிறார்கள் கழக கண்மணிகள்.
விஜய்கண்ணனின் ஆதரவாளர்களிடம் விசாரித்தோம். "இளம் வயதிலேயே குமார பாளையம் நகரசபைத் தலைவரானது, ரியல் எஸ்டேட் தொழிலில் அபார வளர்ச்சி, தங்க மணியுடன் மோதல் என விஜய்கண்ணன் தொடர்ந்து "லைம்லைட்'டில் இருக்கிறார். இவற் றையெல்லாம் உள்ளூர் மூத்த கட்சிக்காரர்கள், மா.செ.வரை யாருமே ரசிக்கவில்லை. தீபா வளியையொட்டி குமாரபாளையத்திலுள்ள மூத்த தி.மு.க. பிரமுகர்கள், நகராட்சி ஊழியர்கள் 2,000 பேருக்கு சேலை, இனிப்புகள், பட்டாசு அடங்கிய பரிசுத்தொகுப்பை மா.செ. மூலமாக வழங்க அவரிடம் அனுமதி கேட்டார் விஜய். அதற்கு அவரோ, மொக்கையான காரணத்தைச் சொல்லி நிகழ்ச்சிக்கு வர மறுத்துவிட்டார். நிகழ்ச்சியை யார் ஏற்பாடு செய்தால் என்ன? அதன் நற்பெயர் கட்சிக்குதானே செல்கிறது என்ற எண்ணம் யாருக்குமே இல்லை. நிர்வாகிகளிடையே நிலவும் 'ஈகோ' மோதல், தேர்தல் நேரத்தில் நிச்சயம் நல்ல பலனைக் கொடுக்காது'' என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
இதுகுறித்து விஜய்கண்ணனிடம் கேட்ட போது, "குமாரபாளையம் நகர செயலாளராக முன்பு பொறுப்பிலிருந்த செல்வம், அ.தி.மு.க. மாஜி தங்கமணியுடன் நெருக்கமாக இருக் கிறார். அவர் "ஹார்ட் அட்டாக்' வந்து மருத்துவமனையில் இருந்தபோது, தங்கமணி அவரை நேரில் சென்று நலம் விசாரித்தார். அவர் சிகிச்சை செலவுக்காக 2 லட்சம் ரூபாய் கொடுத்ததையும் செல்வம் வாங்கிக்கொண்டார். இந்த ஆதாரத்தின் அடிப்படையில்தான் செல்வத்தின் பதவி பறிபோனது. இந்த ஊரில் சந்துக்கடை மதுபான வியாபாரமும், லாட் டரிச் சீட்டு விற்பனையும் பகிரங்கமாக நடந்து வருகிறது. இந்த வியாபாரத்தில் செல்வம் மற்றும் சொத்து பாதுகாப்புக் குழுவிலுள்ள ஒருவர், நகரப் பொறுப்பிலுள்ள மற்றொருவர் ஆகிய மூவருக்கும் தொடர்பு உள்ளது. இதையெல் லாம் நான் மேலிடத்திற்கு புகாரளித்த தால் அவர்கள்தான் மொட்டை பெட்டி ஷன் மூலம் கொலை மிரட்டல் விடுத் துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையில் புகாரளித்துள்ளேன். மா.செ. வின் கவனத்திற்கும் கொண்டு சென்றேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கட்சிக்குள் எனது வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் அ.தி.மு.க. மாஜி தங்க மணியுடன் சேர்ந்துகொண்டு எனக்கெதிரான வேலைகளில் இறங்கியுள்ளனர். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.'' என்றார்.
இதுகுறித்து குமாரபாளையம் நகர முன்னாள் செயலாளர் செல்வத்திடம் பேசி னோம். "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது விஜய்கண்ணன் சீட் கேட்டார். அவர் தி.மு.க.விலிருந்து பா.ஜ.க.வுக்கு தாவிச்சென்று, மீண்டும் கட்சிக்குள் வந்ததால் சீட் தரவில்லை. ஆனால் கட்சிக்கட்டுப்பாட்டை மீறி சுயேட்சை யாகப் போட்டியிட்டார். கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் வரை கவுன்சிலர்களுக்கு கொட்டிக் கொடுத்து, சேர்மன் பதவியைப் பிடித்துவிட்டார். அ.தி.மு.க. மாஜி தங்கமணி என்னை நலம் விசாரித்தது உண்மை. ஆனால் நான் அவரிடம் பணம் எதுவும் வாங்கவில்லை. என்னைப் பற்றி விஜய்கண்ணன் கட்சி மேலிடத்தில் தவறாகப் போட்டுக்கொடுத்து பதவியைத் தட்டிப்பறித்துக்கொண்டார். குமார பாளையம் வடக்கு நகரப் பொறுப்பாளரான பிறகு அவர் கட்சி அலுவலகத்திற்கு வருவதே இல்லை. மூத்த நிர்வாகிகளைக்கூட "அவன் இவன்' என ஒருமையில் பேசுகிறார். கட்சி அலுவலகம் கட்டுவதற்குக் காரணமாகயிருந்த மறைந்த முன்னாள் துணை செயலாளர் சேகரின் படத்தை மாட்டக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தார். கட்சி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் ரீதியாகவும் விஜய் கண்ணனுக்கு எதிரிகள் உள்ளனர். நிச்சயமாக அவர் கொல்லப்படுவார். அவர் நீண்ட காலம் கட்சியிலிருக்க மாட்டார்.
மா.செ.க்கு புதிதாக கார் வாங்கிக் கொடுத்த தால், அவர் இவரை சப்போர்ட் செய்கிறார். அமைச்சர் கே.என்.நேருவுக்கு என்னென்ன செய்து பதவியைப் பெற்றார் என்பது எங்க ளுக்கும் தெரியும். தறிப்பட்டறை, வாடகை மூலம் மாதம் 80 ஆயிரம் ரூபாய் எனக்கு வருமா னம் வருகிறது. நான் சட்டவிரோதமான தொழில் களைச் செய்யவேண்டிய அவசியம் இல்லை'' எனச் சரவெடியாய் வெடித்தார் செல்வம்.
நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்திலிடம் கேட்டபோது, "விஜய் கண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட் டது தொடர்பாக என் கவனத்திற்கு வந்தது. அவர் மீதும் பலர் புகார் சொல்லியிருக்கின்றனர். அவருக்கு சின்ன வயது. அனுபவம் இல்லாத தால் அணுகுமுறை தெரியாமல் இருக்கலாம்'' எனப் பட்டும்படாமலும் பேசினார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்கிறது தி.மு.க. மேலிடம். குமாரபாளையத்தில் நடக்கும் குஸ்திகளைப் பார்த்தால், மீண்டும் இலைக் கட்சிக்கே இந்த தொகுதி தாரைவார்க்கப் பட்டாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.