அக்டோபர் 30-ஆம் தேதி காலை திருவண்ணா மலை மாவட்டம் மங்கலத்திலிருந்து பாலானாந்தல் கிராமத்துக்குச் செல்லும் வழியில் ஏரிக்கரை ஓரம், முனியப்பன் என்பவரின் வைக்கோல்போர் எரிந் திருப்பதும் அதன் அருகில் ரத்தக்கறையும் இருப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தந்துள்ளனர். மங்கலம் உதவி ஆய்வாளர் நஸ்ரூதீன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
எரிந்துபோயிருந்த வைக்கோல்போரை ஆராய்ந்தபோது, அதனருகில் ரத்தக்கறைகளும், ஒரு பைக் சாவி, 10 மீட்டர் தூரத்தில் ஒரு பைக் தலைகுப்புற விழுந்து கிடப்பதும், அருகில் ரத்தம் தோய்ந்த செல்போன் ஒன்று இருப்பதையும் கைப்பற்றினர். அந்த பைக் மற்றும் செல்போன் யாருடையது என விசாரணை நடத்தியதில், மேல்பாலானந்தல் கிராமத்தைச் சேர்ந்த 33 வயதான மணிகண்டனின் பைக், செல்போன் என தெரியவந்தது.
மணிகண்டனின் மனைவி ஷர்மிளாவிடம் போலீஸார் விசாரித்தபோது, என் கணவர் வெளியில போய்ட்டு வர்றேன்னு நேத்து போனார், இன்னும் வீட்டுக்கே வரல எனச் சொல்லியுள்ளார். அவரை அழைத்துவந்து வைக்கோல்போர் அருகில் கிடந்த பொருட்களைக் காட்டியபோது "அய்யோ என் புருஷன்துதான், அவருக்கு என்னாச்சி?' என கதறி கண்ணீர் விட்டுள்ளார். என் கணவரைக் கண்டுபிடித்துத் தாருங்கள் என புகார் தந்தார். குடும்பத்தாரின் செல்போன் எண்களை போலீஸார் வாங்கியபோது, மணிகண்டனின் தாய், வயசான எங்கிட்ட ஏது செல்போன் எனச் சொல்லியுள்ளார்.
யாரிந்த மணிகண்டன்?
2013-ஆம் ஆண்டு மேல்பாலானந்தல் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் என்பவரின் 4 வயது பெண் குழந்தை பச்சையம்மாள், இறந்துபோய் கிணற்றில் மிதந்தது. பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினையில் பள்ளிக்குப் போய்விட்டு வந்த 4 வயதுக் குழந்தையை கடத்தி கொலை செய்து கிணற்றில் வீசியவன், அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பதைக் கண்டறிந்த மங்கலம் போலீஸார் அவனை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் 2018-ல் திருவண்ணாமலை மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் மணிகண்டனுக்கு தூக்குத்தண்டனை விதித்தது. இதற்கான மேல்முறையீடு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தபோது, போலீஸார் சரியான முறை யில் ஆவணங்கள் தாக்கல் செய்யவில்லை, அரசுத் தரப்பு சரியாக வாதாடவில்லையென அவனது தூக்குத்தண்டனையை நிறுத்தி வைத்தது.
"இந்தக் கொலையை நான் செய்ய வில்லை. அதனால் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும்' என மணிகண்டன் கோரிக்கை வைத்தான். அந்த கோரிக்கையை ஏற்று நீதிமன்றமும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், நவம்பர் 2.ஆம் தேதி நீதிமன்றத்திற்கு வரச்சொல்லி மணிகண்டனுக்கு ஆணை வந்துள்ளது. அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக இந்த சம்பவம் நடந்திருந்தது.
எரிந்த வைக்கோல்போருக்கு, மனித உடல் தீயில் எரிந்ததற்கான எந்த தடயங்களும் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீஸார், எஸ்.பி. கார்த்திகேயன் உத்தரவுப்படி டி.எஸ்.பி. குணசேகரன் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இதுபற்றி மங்கலம் காவல்நிலைய உதவி ஆய்வாள ரும், விசாரணை அதிகாரியு மான நஸ்ருதீனிடம் கேட்ட போது, “"மணிகண்ட னுக்கு என்னாச்சி? அவனை யார் என்ன செய்திருப்பாங்க? உயிரோடு இருக் கானா, இல்லையான்னு எதுவுமே தெரியாம விசாரணையைத் தொடங்கினோம். அவன் மீதுள்ள கொலை வழக்கு தெரியவந்துச்சி. பழிக்குப் பழி வாங்கிட்டாங்களான்னு விசாரித்தால் அதுவுமில்லை. கள்ளக்காதல் விவகாரம், பணம் கொடுக்கல்-வாங்கல் விவகாரம் இல்லை. மணிகண் டன் சமீபத்தில் தனது இடத்தை 8 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ததும், அதேபோல், அவன் நடத்திய பால் ஸ்டோரை வேறு ஒருத்தருக்கு மாத்தித் தந்ததும் தெரியவந்தது. இப்படி ஏன் செய்தான்னு சந்தேகம் வந்தது. எங்க கண்காணிப்பில் மணி கண்டன் அம்மா செல்போன் வச்சிருக்கற தகவல் தெரிந்தது. எங்களிடம் அந்தம்மா, எங்கிட்ட செல்போனே இல்லன்னு சொல்லியிருந்தாங்க. சில வழிகளை பயன்படுத்தி அந்தம்மா நம்பரை கண்டுபிடிச்சி கால் டீட்டய்ல்ஸ் எடுத்தோம்.
வந்தவாசி தென்கொழப்பலூரில் உள்ள தனது மகள் தேன்மொழி, சீதா உட்பட 3 பேரிடம் மட்டும் அதிக நேரம் பேசுவது தெரிஞ்சது. அந்தம்மாவை அழைச்சி செல்போன் வச்சிருக் கீங்களே தாங்கம்மான்னு கேட்டதுக்கு, இல்லவே இல்லன்னு சாதிச்சாங்க. நாங்க விசாரிச்சதுக்கப் பறம் அந்த நம்பரை சுவிச்டு ஆப் செய்துட் டாங்க. மணிகண்டனோட தங்கை தேன்மொழியை விசாரிக்கலாம்னு முடிவான தும், கணவன்- மனைவி இருவரும் வீட்டைப் பூட்டிக்கிட்டு எஸ்கேப். மணிகண்டன் போட் டோவை அக்கம்பக்கம் காட்டி விசாரிச்சப்ப, இரண்டு நாளைக்கு முன்னாடி இங்க வந்தான்னு சொன்னாங்க. அப்பாடா அவன் உயிரோட இருக்கான்னு முடிவுசெய்து தேடியபோது, ஆரணியில் ஒரு வீட்டில் இருப்பது தெரிஞ்சி அவனை நவம்பர் 19-ஆம் தேதி கைதுசெய்தோம்.
எதுக்குடா இந்த நாடகம்னு கேட்டதுக்கு, குழந்தை கொலை வழக்கில் எனக்கு தண்டனை கிடைக்கிற மாதிரி இருந்தது, அதுலயிருந்து தப்பிக்கறது எப்படின்னு யோசிக்கறப்ப பாபநாசம் படம் பார்த்தன், யூ டியூப்பில் சில சினிமா பார்த்தேன். அதேமாதிரி ப்ளான் பண்ணி தப்பிச்சிடலாம்னு முடிவுசெய்து இடத்தை வித்து கடன்களையெல்லாம் செட்டில் செய்தேன். எனக்கு ‘நெருக்கமான’ அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பாண்டியராஜ், நண்பன் சத்தியராஜோடு சேர்ந்து ப்ளான் செய்தேன். 29-ஆம் தேதி என்னுடைய ரத்தத்தை ஊசி வழியா என் உடம்பிலிருந்து 80 மில்லி அளவுக்கு எடுத்து அது உறையாதமாதிரி பாக்கெட்டில் போட்டு ஐஸ் வச்சித் தந்தானுங்க, இதுக்காக அவனுங் களுக்கு 20 ஆயிரம் பணம் தந்தேன். திருவண்ணாமலைக்கு வந்து சர்தார் படத்துக் குப் போனேன். அங்க பாப்கார்ன் கவுன்டர்ல இருந்தவன்கிட்ட சண்டைபோட்டேன், சினிமாவுக்கு வந்திருந்த இன்னொரு நண்ப னிடம் நானா வலியப்போய் பேசினேன். தியேட்டரிலுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகறமாதிரி நடந்து ரெக்கார்டு உருவாக்கி னேன். இரவு ஊருக்கு வந்து அவலூர்பேட் டையில் 500 ரூபாய்க்கு டீசல் வாங்கிவந்து ஏற்கனவே வைக்கோல்போர் பக்கத்தில் வச்சிருந் தேன். அதையெடுத்து வைக்கோல்போர் மீது ஊத்தி தீ வச்சிட்டு, ரத்த பாக்கெட் பிரிச்சி அங்கங்க தெளிச்சிட்டு, என் டூவீலரை கவிழ்த்துப் போட்டுட்டு, செல்போனை ரத்தக் கறையோட கீழ போட்டேன்.
போலீஸ் வந்து பார்த்தால் என்னை கடத்தி எரிச்சி கொலை செய்தமாதிரி இருக்கணும்னு செட் டப் செய்துட்டு அங்கிருந்து நடந்து திருவண்ணாமலைக்கு வந்து பஸ் ஏறி திருப்பூர் போனேன். திருப்பூர்ல போய் ஏற்கனவே வேலைசெய்த கம்பெனியில் வேலை கேட்டேன். அவுங்க ஆதார் கார்டு கேட்டாங்க. இல்லன்னதும் வேலை தரல. அதுக்கப்புறம் என் மச்சானுக்கு (தங்கச்சி தேன்மொழி கணவர்) போன் செய்து தலை மறைவா வாழ வீடு கேட்டேன். என் மச்சான் என்னை ஆரணியில் தங்க வச்சான்''’என்றார்.
கொலை வழக்குத் தண்டனையிலிருந்து தப்பிக்க "பாபநாசம்' படம் பார்த்து திட்டம் போட்டு அது ஃபெயிலியராகி சிக்கிக்கொண்டது மணி கண்டன் மட்டுமல்ல, மணிகண்டனின் திட்டத்துக்கு தெரிந்தே உதவிய அவனின் தங்கை கணவர் சரத் குமார், ‘நெருங்கிய நண்பர்களான அரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக நர்ஸாக பணியாற்றும் மதுரை திரு மங்கலம் ஊரனூரை சேர்ந்த பாண்டியராஜன் போன்றோரையும் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.