காமன்வெல்த் போட்டியில் இந்தியா தங்கம் வென்றதைக் கொண்டாடிக்கொண்டிருந்த நேரத்தில் காமவெறி மனித மிருகங்களால் காஷ்மீர் சிறுமி பாலியல் பலாத்கார விவகாரம் வெளியில் வந்து ஒட்டுமொத்த தேசமும் கூனிக்குறுகி நின்றது.

கயவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. அமைச்சர்களே போராடியது மக்கள் மத்தியில் கோபத்தை அதிகப்படுத்தியது. இதைப்பற்றி பேசியவர்களுக்கு நேரடியாகவே இந்துத்வா அமைப்புகள் மிரட்டல் விடுத்தன. காஷ்மீர் சம்பவத்திற்குப் பின்னர் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதலில் ஈடுபடுபவர்களுக்கு மற்ற நாடுகளைப் போலவே மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற குரல் அதிகரிக்கவே பிரச்சனைகளை குறைக்க அதை கையில் எடுத்தது மத்திய பா.ஜ.க. அரசு.

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளை தடுக்க மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு 2012-ஆம் ஆண்டு போக்ஸோ (டழ்ர்ற்ங்ஸ்ரீற்ண்ர்ய் ஞச் ஈட்ண்ப்க் ச்ழ்ர்ம் நங்ஷ்ன்ஹப் ஞச்ச்ங்ய்ஸ்ரீங்ள் ஹஸ்ரீற்) சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தில் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனையும் இதை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களும் ஏற்படுத்தப்பட்டன. இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னும் குற்றங்கள் அதிகரித்தே வந்திருக்கின்றன. தேசிய அளவில் 2013 ஆம் ஆண்டு 58,224, 2014-ல் 89,423 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. தமிழக அளவில் 2014-ல் 655 வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில் அதன் பின்னர் தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது.

இப்போது கொண்டு வரப்பட்ட மரண தண்டனை அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவே ஜனாதிபதி ஒப்புதலுடன் அமலுக்கு வந்திருக்கிறது. சட்டம் வந்த மறுதினமே திருவனந்தபுரம்-சென்னை ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பயணி, ஈரோட்டில் கைது செய்யப்பட்டார். இவர் 2006-ஆம் ஆண்டு ஆர்.கே. நகரில் போட்டியிட்ட தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க. உறுப்பினர் பிரேம்ஆனந்த். இவர்தான் முதல் நபராக அவசர சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுபோலவே சிறுமிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் அரியானா மாநிலத்தில் ஒருவனும், டெல்லியில் சில கயவர்களும், சென்னை-வேளச்சேரி கடற்கரை புறநகர் ரயிலில் பலாத்காரம் செய்ய முயன்ற ஒருவனும் மேற்படி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரணதண்டனை என்கிற இந்த அவசர சட்டம் குறித்து வழக்கறிஞர் அஜிதாவிடம் கேட்டோம். ""12 வயதுக்குக்கீழ் இருக்கக்கூடிய குழந்தைகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டால், குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும். குற்றத்தின் தன்மையைப் பொறுத்து குற்றவாளிக்குத் தூக்குத்தண்டனை வழங்கப்படும். 16 வயதுக்கும் குறைவான குழந்தைகள் என்றால் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும். சிறைத்தண்டனை என்பது 20 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்பது 10 ஆண்டுகளாக மாற்றப்பட்டிருக்கிறது. அனைத்து வகையான வழக்கு விசாரணைகளும் 2 மாத காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். மேல்முறையீடு வழக்குகளை 6 மாத காலத்திற்குள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும். 16 வயதிற்கும் குறைவான குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது. ஒருவேளை ஜாமீன் வழங்க முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பு அரசு வழக்கறிஞர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதியிடமும் 15 நாட்களுக்கு முன்னரே நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும்'' என்கிறார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் சுகந்தியிடம் பேசினோம். ""தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறக்கூடிய பாலியல் தாக்குதல் அதிகம் நடைபெற்று வருகிறது. அதேசமயத்தில் போக்ஸோ சட்டப்படி எல்லா இடங்களிலும் வழக்குப் பதிவு செய்யப்படுகிறதா, நீதிமன்றத்தில் சரியாக வழக்கு நடக்கிறதா என்பது கேள்விகுறியாகத்தான் இருக்கிறது. போக்ஸோ சட்டம் வந்தபிறகு அந்தச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவே மிகவும் போராடவேண்டியிருக்கிறது. ஒருவேளை போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் அதில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அந்தச் சட்டத்தில் உள்ளபடி விசாரிக்கப்படுவது இல்லை. இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க போதுமான பயிற்சிகள் இல்லாமல் இருக்கிறது. காவல்துறை தொடங்கி ஆசிரியர்கள்வரை அனைவருக்கும் பயிற்சியளிக்கப்பட வேண்டும். தூக்குத் தண்டனையை எதிர்க்கிறோம். ஆனாலும் அரிதினும் அரிதான வழக்குகளில் காலம் முழுவதும் சிறைத் தண்டனை வழங்க வேண்டும்''’என்கிறார்.

ஆனால், ""மற்ற நாடுகளைப் போன்று குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, பெண் குழந்தைகள் மீது கை வைக்க நினைக்கும் கயவர்களுக்கு பயம் வரும்'' என்கிறார்கள் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

Advertisment