கடந்த மே 13 சனிக்கிழமை. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள எக்கியார்குப்பத்தைச் சேர்ந்த சிலர், அப்பகுதியில் விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கிக் குடித்துவிட்டு மயங்கி விழுந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 40-க்கும் மேற்பட்டோரில் 14 பேர் உயிரிழந்தனர். வேறுசில இடங்களில் இறந்தவர்களும், சிகிச்சை பெற்றவர்கள் உயிரிழப் பும் சேர்ந்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே பரபரப் பாக்கியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் அடுத்த பெருங்கருணை கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி, அவரது மாமியார் வசந்தா ஆகியோர் சாராயம் குடித்த தால் சனிக்கிழமை இரவு உயிரிழந்த னர். சித்தாமூர் அடுத்த பேரம் பாக்கம் கிராமத் தைச் சேர்ந்த வெண்ணியப்பன், சந்திரா மாரியப்பன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் தீவிர சிகிச்சை பெற்றுவந்த சின்னக்கயப்பாக்கத்தை சேர்ந்த சங்கர், பெருங்கருணை கிராமத்தைச் சேர்ந்த முத்து, தம்பு ஆகியோர் சிகிச்சை பலனின்றி கடந்த 16-ஆம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தனர். அத்துடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சங்கரன் மற்றும் ராஜி மருத்துவமனையிலிருந்து தப்பியோடிவிட்டனர்.
விஷச்சாராயம் குடித்ததில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டவர்களில், தற்போது பெருங்கரணையைச் சேர்ந்த உயிரிழந்த சின்னத்தம்பியின் மனைவி அஞ்சலை மட்டும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வருகிறார்,
சிகிச்சை பெற்றுவரும் அஞ்சலையை நேரில் சந்தித்தோம்... அவரால் பேச முடியாத நிலையில் அவரின் அண்ணன் கார்த்திக்கிடம் பேசினோம். "சம்பவம் நடந்த அன்று எங்கம்மா வசந்தா, மாமா சின்னத்தம்பி, தங்கச்சி அஞ்சல ஆகியோர், சித்தாமூர் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த பகதூர் சேட் கிட்ட, வழக்கம்போல வேலை செஞ்சி முடிச்சதும் அஞ்சி கோட்டர் பாட்டில் குடுத்து அனுப்பினார் . சாப்பாடு செஞ்சிட்டே சரக்கு குடிச்சிட்டு சாப்பிட்டு தூங்கினாங்க, கொஞ்ச நேரத்துல வயிறு வலிக்கிதுனு துடிச்சாங்க. படுத்த இடத்திலே மாமா சின்னத்தம்பியும், அம்மா வசந்தாவும் துடிதுடிச்சி செத்துப் போயிட்டாங்க. தங்கச்சிய மட்டும் காப்பாத்தி ஆம்புலன்ஸ்ல செங்கல்பட்டு ஜி.ஹெச்.சுக்கு கூட்டிட்டு வந்து சேர்த்தோம்.
இங்க வந்து பார்த்தா விஷசாராயம் குடிச்ச நிறைய பேர் சிகிச்சையில இருக்காங்க. எங்க பகுதியில அம்மாவாசை ஒருத்தர்தான் 150 ரூபாய் கோட்டர் விக்கிறாரு. அவர்கிட்ட சரக்கு வாங்கிக் குடிச்சவங்கதான் இப்போ இங்க ஆஸ்பெட்டல்ல அட்மிட் ஆயிருக்காங்க. சும்மா கொடுத்தாங்கனு குடிச்சதால எட்டு உயிர் போயிடுச்சு. என் குடும்பத்துல இப்போதைக்கு ரெண்டு பலி. அஞ்சலயும் பிழக்கிறது கஷ்டமுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. அப்பா அம்மாவ இழந்த இரண்டு குழந்தையோட நிலைமைதான் என்னவாகும்னு தெரியல'' என்றார்.
விஷ சாராயம் வழக்கு தொடர்பா போலீசார் பா.ஜ.க. பிரமுகர் விஜயகுமார், அம்மாவாசை, பனையூர் ராஜேஷ், நரேஷ், சந்துரு, வேலு ஆகிய ஆறு பேரை கைது செய்துள்ளார்கள். மேலும் ஓர் முக்கிய குற்றவாளியான பரக்கத்துல்லா உள்ளிட்ட சிலரை போலீசார் தேடிவருகின்றனர். இந்தநிலையில் விழுப்புரம் போலீஸ் எஸ்.பி. ஸ்ரீநாதா, டி.எஸ்.பி பழனி, செங்கல்பட்டு கலால் டி.எஸ்.பி. துரைபாண்டி, மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்தன், சித்தாமூர் எஸ்.ஐ. மோகனசுந்தரம், மதுராந்தகம் கலால் எஸ்.ஐ. ரமேஷ் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு போலீஸ் எஸ்.பி. பிரதீப் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள் ளார்.
இதுதொடர் பாக நம்மிடம் பேசிய அப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர், "இப்பகுதியில் எத்தனால் மற்றும் மெத்தனால் வாங் கப்பட்டு நிறம்சேர்த்து, டாஸ்மாக் கா- மது பாட்டிலில், ஸ்டிக்கர் ஒட்டி, மூடி போட்டு சீல் வைத்து, பாண்டி சரக்குன்னு போலி மதுபான ஆலை செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
போலி சரக்கு தயாரிக்க ஆர்.எஸ். எனப்படும் (Rectified sprit) வேதிப்பொரு ளுடன் தேவையான அளவு மெத்தனால் மற்றும் தண்ணீர் கலந்து தயாரிக் கின்றனர். இது இப்பகுதியில் தான் பாண்டி சரக்கு. மற்ற பகுதியில், குறிப்பாக டாஸ் மாக் பாரில் பெரும்பான்மை யாக இரவு முதல் விடிய விடிய குறைந்த விலை சரக்காக இது விற்கப்படுகிறது"” என்றார்.
மதுராந்தகத்தை அடுத்த அச்சரப் பாக்கம் அருகேயுள்ள வடமணிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் 47 வயதான வடிவேலு. இவரது மனைவி ஜெயந்தி ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார். வடிவேலு, கொங்கரை கிராமத்தில் ஒரத்தி- திண்டிவனம் சாலையிலுள்ள ஒரு அரிசி ஆலையை ஒப்பந்தத்துக்கு எடுத்து வியாபாரம் செய்துவருகிறார். இந்த அரிசி ஆலையில் போலி மதுபானங்கள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த அரிசி ஆலையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அரிசி ஆலைக்குள் போலி மதுபான தொழிற்சாலை மறைமுகமாகச் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக் கப்பட்டது.
விற்பனைக்கு தயாராக இருந்த 5 ஆயிரம் போலி மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் மதுபானம் தயாரிக்க 212 கேன்களில் வைத்திருந்த எரி சாராயம், 11 ஆயிரம் பாட்டில் மூடிகள், 20 ஆயிரம் காலிபாட்டில்கள், மதுபாட்டில்களை சீல் வைக்கும் எந்திரங்கள் உள் ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன. போலி மதுபான ஆலையில் தயாரிக்கப்பட்ட மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளி லும் கள்ளத்தனமாகக் கொடுத்து விற்பனை செய்துவந்ததாகக் கூறப் படுகிறது.
இதுதொடர்பாக மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி களில் உள்ள மதுக் கடைகளில் ஆய்வுசெய்ய அதிகாரிகள் திட்ட மிட்டுள்ளனர்.
வடிவேலு, அவருக்கு உடந்தையாக இருந்த முருகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். எரி சாராய வழக்கில் கைதான வடிவேலு மீது ஏற்கனவே நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு, ரேஷன் அரிசி கடத்தல், மணல் கடத்த லின்போது தடுத்த போலீசார் மீது டிராக்டர் மோதி கொலை செய்ய முயன்றது, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர்களைப் போலவே தமிழகத்தில் பல இடங்களில் மறைமுகமாக போலி மதுபான ஆலைகள் செயல்பட்டு வருவது, உளவுத்துறை போலீசாருக்குத் தெரியும். மேலதிகாரிகளுக்கு தெரியாமல், மாதாமாதம் கட்டிங் வாங்கிக்கொண்டு இருப்பதால் தெரிந்தாலும் அவர்களைக் கண்டுகொள்வதில்லை. விஷயம் விவகாரமாகியிருப்பதால் இன்னும் சில மாதங்களுக்கு கெடுபிடி இருக்கும். அதன்பிறகு "பழைய குருடி கதவைத் திறடி'தான்.…
இந்தத் துயர நிகழ்வில், ஒரு வேடிக்கை என்ன வெனில் விஷசாராய வியாபாரிகளில் ஒருவரான அம்மாவாசை வரிசையாக சாவு விழுந்ததும், கள்ளச் சாராயம் குடித்துப் பாதிக்கப்பட்டவர்போல் மருத்துவமனையில் வந்து படுத்துக்கொண் டார். கள்ளச்சாராயத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு முதல்வர் கொடுத்த நிவாரண நிதியான ரூ 50,000-யும் பெற்றிருக்கிறார்.
இதற்கிடையில் தாமதமாகத்தான் உளவுத் துறை, அம்மாவாசை பாதிக்கப்பட்டவர் அல்ல… சாராய வியாபாரி என்பதைக் கண்டறிந்து தெரிவிக்க... அவருக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகை பறிக்கப்பட்டு அவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
___________
பா.ஜ.க. பிரமுகர் கைது!
மரக்காணம் பகுதியைச் சேர்ந்த கள்ளச்சாராய ஏஜென்ட் டான பரக்கத்துல்லாவிடமிருந்து கடந்த மாதம் மட்டும் இரண்டா யிரம் லிட்டர் மெத்தனால் வாங்கிய சூனாம்பேடு அடுத்த விளாம்பூரைச் சேர்ந்த பா.ஜ.க. வின் செங்கல்பட்டு மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவரான விஜயக் குமார் சம்பவத்திற்கு முந்தைய நாள் 400 லிட்டர் மெத்தனாலை வாங்கி பனையூர் ராஜேஸுக்கு 130 லிட்டர் கொடுத்துள்ளார். அதில் நூறு லிட்டர் சந்திரனுக்கு விற்பனை செய்ய அதில் 35 லிட்டர் அம்மாவாசைக்கு விற்பனை செய்ய, அம்மாவாசையிடமிருந்து அதே பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. ஒன்றிய சிறுபான்மைப் பிரிவு நிர்வாகியான பகதூர்சேட் மெத்தனால் வாங்கியிருக்கிறார். பகதூர்சேட்டின் அண்ணன் பேரம்பாக்கத்தை சேர்ந்த ஜாபர், மலிவு விலையில் வாங்கிவந்த மெத்தனாலில் தயார்செய்த மதுவைக் குடித்த அவர்களின் நிலத்தில் வேலை செய்துவந்த சின்னத்தம்பி, வசந்தா உயிரிழந்துள்ளனர். சின்னத்தம்பியின் மனைவி அஞ்சலை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். இப்போது விஜயகுமார் உள்ளிட்ட சாராய வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விஷமானதன் காரணமென்ன?
தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய வியாபாரி களை சல்லடை போட்டுத் தேடியதில், திண்டிவனம் நகராட்சி வார்டு தி.மு.க. கவுன்சிலர் ரம்யாவின் கணவர் மரூர்ராஜா, தனது காரில் கள்ளச்சாராய பாக்கெட்டுகளைக் கடத்திச் செல்லும்போது போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மெத்தனால் என சொல்லப்படும் எரிசாராயத்தை கேன் கணக்கில் வாங்கி, குறிப்பிட்ட அளவு தண்ணீர் கலந்து விற்பனை செய்வது விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
400 மில்லி சாராயம் இருக்கும் பாக்கெட்டுகள் அமோகமாக விற்பனையாகும். இந்த விற்பனை மந்தமானால் 25 ரூபாய்க்கும், அதுவும் மந்தமானால் ஒரு பாக்கெட்டுக்கு ஒரு பாக்கெட் இலவசமென்றும் விற்பனையாகும். பாக்கெட் சாராயத்திற்கு மற்றொரு பெயர் மூலை கடிச்சான், பாக்கெட் சாராயத்தின் ஒரு மூலையில் வாயால் கடித்து குடித்துவிட்டு தூக்கி எறிந்துவிட்டுப் போவதால் தான் இந்த பெயர். புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த பரக்கத்துல்லா, தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த ஏழுமலை ஆகியோர்தான் பெங்களூரிலிருந்து சென்னைக்கு எரிசாராயத்தை வரவழைத்துள்ளதாகவும், சரக்கு நீண்ட நாட்களாக ஸ்டாக்காக இருந்ததால் உயிரிழப்புகள் நேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
-எஸ்.பி.எஸ்.