தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்து கடந்த ஜூன் மாதம் பணி ஓய்வு பெற்றார் முனைவர் இறையன்பு. ஓய்வுக்குப் பிறகும் அவர் ஓய்வெடுக்காமல் இலக்கியப் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் கடலூர் சிறைச்சாலைக்கு அவர் சென்று வந்ததை சிலாகித்துச் சொல்கிறது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டாரம்.
ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தமிழக அரசுப் பணியில் இணைந்த அவர், கூடுதல் ஆட்சியராக 1992-94 கால கட்டத்தில் பணிபுரிந்தார். அப்போது, கடலூர் கேப்பர் மலையில் உள்ள சிறைச்சாலையைச் சுற்றி சுமார் 12,000 முந்திரி, தேக்குக் கன்றுகளை நட்டார் இறையன்பு.
இந்த நிலையில், புத்தகக் காண்காட்சியில் கலந்து கொள்வதற்காக, காந்தி ஜெயந்தி அன்று கடலூர் வந்த இறையன்பு, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, தான் நட்டு வைத்த முந்திரிகளும், தேக்குகளும் என்ன நிலையில் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பி யுள்ளார்.
இதனையடுத்து அந்த சிறைச்சாலைக்குச் சென்றார் இறையன்பு. அங்கு அவர் கண்ட காட்சி பெரும் மலைப்பை ஏற்படுத்தியது. கண்களில் ஒரு புத்தொளி; முகத்தில் ஒரு மலர்ச்சி. காரணம், தான் கைக்குழந்தைகளாய் விட்டுச் சென்ற கன்றுகள் இன்று கட்டிளங்காளைகளாய் நெடிதுயர்ந்து வளர்ந்து காடுபோல் காட்சியளித்தன.
இதுகுறித்து பேசும் இறையன்பு, "வழி தவறி வனத்துக்குள் வந்துவிட்டோமோ என வியக்குமளவுக்கு தேக்கு மரங்கள் அடர்த்தியாய் வானுயர வளர்ந்திருந்தன. முந்திரிகளோ பசுமைக் குடைகளாய் விரிந்து வளர்ந்து விழிகளை ஈர்த்தன. சிறைச்சாலை ஒரு கோட்டை போன்றும், அதைச் சுற்றி இருந்த இந்த மரங்கள் காவலுக்கு அணிவகுத்து நிற்கும் போர்வீரர்கள் போன்றும் தோற்றமளித்தன. அப்போது என் கண்களிலிருந்து பனித்துளிகள் வழிந் தன. என் அருகிலிருந்த அலுவலர், "அந்த மரங்களின் தற்போதைய மதிப்பு பல கோடி ரூபாய்' எனும்போது எனக்குள் ஒரு தன்னிறைவு ஏற்பட்டது'' என்கிறார் பெருமிதமாக.
அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் என்பதால் சிறைக் கைதி களுக்கு, பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி ஒன்று சிறைச்சாலையில் ஏற் கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொள்ள வேண்டும் என சிறைஅதிகாரி கோரிக்கை வைக்க, அதில் கலந்துகொண்டார் இறையன்பு.
பல்வேறு தலைப்புகளில் அவர் எழுதிய 150 புத்தகங்களை கைதிகள் வாசித்துப் பயன்பெறும் பொருட்டு அங்கிருந்த நூலகத்திற்குப் பரிசளித்து கைதிகளுடன் உரையாடினார். சிறைவாசிகளை நல்வழிப்படுத்தும் நோக்கத்துடன், அவர்கள் மனதில் சிறிதளவேனும் மாற்றம் ஏற்படும் வகையில் பல்வேறு நீதி நெறிகளை, காந்தியின் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளுடன் எடுத்துச் சொல்லியது நெகிழ்ச்சியாக இருந்தது.
பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை அமர்ந்து பார்ப்பதற்காக நாற்காலியை அலுவலர் எடுத்துவந்த போது, அதை ஏற்க மறுத்துவிட்டு தரையில் அமர்ந்து ரசித்தார் இறையன்பு. குழந்தைகள் இதனை வியப் பாகக் கவனித்தனர்.
சிறைச்சாலையை விட்டு கிளம்பும் போது, "மிகுந்த மனநிறைவைத் தந்திருக்கிறது இந்த வருட காந்தி பிறந்தநாள்'' என்று சிறைச்சாலை அதிகாரிகளிடம் உணர்வுபூர்வமாகத் தெரிவித்திருக்கிறார் இறையன்பு.
___________________________
"இதுதான் நடந்தது!'' -உண்மையை விளக்கும் கருணாகரன்!
கடந்த 2023 செப்.30-அக். 03 இதழில், "முதல்வர் பெயரால் கட்டப்பஞ்சாயத்து! எம்.எல்.ஏ.க்கள் கொந்தளிப்பு!' என்ற கட்டுரை இடம் பெற்றிருந்தது.
அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் கருணாகரன், "நான் வீடுகளுக்கு அலங்காரக் கற்களால் சிற்ப, அலங்கார வேலை செய்பவன். கபிலன் வீட்டுக்கு இன்டீரியர் தீர்த்தன், எக்ஸ்டீரியர் டெக்கரேஷன் அங்கித், நான் மூவரும் 9 கோடி மதிப்பில் வேலை செய்தோம். மூவருக்குமே கபிலன் முழுவதுமாக பணம் செட்டில் செய்யாமல், தோராயமாக ஒரு தொகை கொடுத்து செட்டில் செய்ய முயன்றார். இந்தநிலையில் எனக்கு மொத்தமுள்ள 33 லட்சத்தில் 18 லட்சம் கொடுத்திருந்தார். மிச்ச தொகை குறித்து கருத்து வேறுபாடு வந்ததால், நான் வக்கீல் ராம் முனுசாமியை அணுகினேன். அவர் முதுநிலை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார்.
தொடக்கத்தில் கபிலனும் அவரின் நணபர் எம்.எல்.ஏ. வைத்தியநாதனும் வக்கீல் ராம் முனுசாமியைத் தொடர்புகொண்டு, "புகார் வேண்டாம் பணம் கொடுப்பதாக'ச் சொல்லி 15 லட்சத்தில், 7 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டு மீதி 8 லட்சத்திற்கு வீட்டில் நிகழ்ச்சியிருப்பதாகக் கூறி ஒரு வாரம் அவகாசம் கேட்டனர். ஒரு வாரம் கழித்து எம்.எல்.ஏ. வைத்தியநாதன், கபிலன் இருவரும் வக்கீல் ராம் முனுசாமியிடம் 3 லட்சத்திற்கு காசோலை தருவதாகக் கூறினார்கள். அதற்கு உடன்படாததால் நடந்ததை திரித்து மிரட்டல் வழக்கு பதிவுசெய்ய முனைந்தனர். எம்.எல்.ஏ. வைத்தியநாதன், எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் ஆகியோருக்கும் வக்கீல் ராம் முனுசாமிக்கும் முன்விரோதம் இருந்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வக்கீல் மீது எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்ய கபிலனை மிரட்டி புகார் கொடுக்க வற்புறுத்தினர்.
கபிலனோ, "நான் கொடுக்கவேண்டிய தொகையைக் குறைத்துக் கொடுக்கத்தானே உங்களைக் கூப்பிட்டேன். உங்கள் பகைக்கு என்னை பலிகடா ஆக்காதீர்கள்'' என கேட்டிருக்கிறார். ஒருகட்டத்தில் கபிலன், என்னிடம் போன் போட்டு, கொஞ்சம் வைத்தியநாதனிடம் பேசி என்னை விடுவியுங்கள்'' என்றார். “"எம்.எல்.ஏ.க்களுக்கும் தனக்குமான பழைய பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள இந்த பிரச்சனை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எந்த பதவிகளிலும் இல்லாத நான், முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கமாக இருப்பது, எம்.எல்.ஏ.க்களுக்கு எரிச்சலை உண்டாக்கியுள்ளது. அதன் வெளிப்பாடுதான் இந்தப் புகார்'' என்கிறார் ராம் முனுசாமி.