கிரிமினல்கள் குற்றச் செயலில் ஈடுபட்டாலும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கமாட்டார் எனப் பெயர் வாங்கியிருக்கும் அருப்புக்கோட்டை டவுண் இன்ஸ்பெக்டர் பாலமுருகனின் அலட்சியத்தால், அந்த ஊரில் கொலை, கொள்ளைகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன.

aa

வெளிநாட்டிலோ, வெளியூரிலோ வேலை பார்க்கும் பிள்ளைகளின் வயதான பெற்றோர் அருப்புக்கோட்டை வீடுகளில் தனியாக வசிப்பதை நோட்டம்விட்டு, பகலிலேயே அவர்களைக் கொலை செய்து, கொள்ளை யடிக்கும் துணிச்சல் கிரிமினல்களுக்கு வந்துவிட்டது. அப்படித்தான் கடந்த 18-ஆம் தேதி, அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகர் 2-வது தெருவில் வசித்துவந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் களான சங்கரபாண்டியன் - ஜோதிமணி தம்பதியர் கொலை செய்யப்பட்டு, வீட்டிலிருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் மற்றும் டி.ஐ.ஜி. பொன்னி ஆகியோர் இந்த வழக்கில் தீவிரம் காட்டியும், கொலையான ஆசிரியை ஜோதிமணி தனது உறவினர் என்பதால் உள்துறைச் செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் ஐ.ஏ.எஸ். அழுத்தம் தந்தும், நாட்கள் கடந்துகொண்டேபோக, கொலைக் குற்றவாளிகளைப் பிடிப்பதில் அருப்புக்கோட்டை காவல்துறையினர் திணறுகின்றனர்.

அருப்புக்கோட்டை டவுண் இன்ஸ் பெக்டர் பாலமுருகனிடம் பேசினோம். “"இப்ப முழுக்க முழுக்க இந்த வழக்கு விசாரணைதான் போய்க்கிட்டிருக்கு. கொலையாளிகளைப் பிடிக்கிறதுல என்னென்ன மெத்தட் இருக்கோ, எல்லாத்தயும் யூஸ் பண்ணிட்டி ருக்கோம். ஏழு டீம் போட்டு, தூங்காம கொள்ளாம போலீசார் குற்றவாளிகளைத் தேடிட்டு இருக்காங்க. இந்த வழக்கு குறித்து மேலதிகாரிகளுக்கு தொடர்ந்து ரிப்போர்ட் பண்ணிட்டு இருக்கோம். சின்னதா ஒரு க்ளூ கிடைச்சாலும் விடறதில்ல. ஃபாலோ பண்ணுறோம். சி.சி.டி.வி., செல்போன்னு எல்லாத்துக்கும் தனித்தனி டீம் வேலை பார்த்துக் கிட்டிருக்கு. எதுலயாவது ஒண்ணுல கண்டிப்பா கொலையாளிகள் சிக்கிருவாங்க''’என்றார் நம்பிக் கையுடன்.

Advertisment

aa

ஆசிரியர் தம்பதியர் கொலை வழக்கு எந்தத் திசையில் பயணிக்கிறது?

முன்கூட்டியே வீட்டு காம்பவுண்டுக்குள் பதுங்கியிருந்த கொலையாளிகள், அதிகாலையில் கோலம் போடுவதற்காக ஜோதிமணி கதவைத் திறந்து வெளிவந்தபோது, அவருக்கே தெரியாமல் வீட்டுக்குள் புகுந்துவிட்டனர். அப்போது தூங்கிக் கொண்டிருந்த சங்கரபாண்டியன் கொலையாளிகளின் நடமாட்டத்தால் விழித்தெழுந்து அவர்களுடன் போராட, கொலைவெறியுடன் கத்தியால் குத்தப் பட்டுச் சரிந்து விழுந்திருக்கிறார். சங்கர பாண்டியனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் வந்த ஜோதிமணியையும் சகட்டுமேனிக்கு குத்தியிருக்கிறார்கள். இச்சம்பவம் சில மணி நேரங்களுக்குப் பிறகே தெரியவர, போலீசுக்குத் தகவல் கிடைத்து, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டபோது, இருவருமே இறந்துபோயிருந்தனர்.

ஆசிரியர் தம்பதியினரின் ஒரே மகன் சதீஸின் குடும்பம் சென்னை வேளச்சேரியில் வசிக்கிறது. அவர் சென்னையிலேயே வேலை பார்க்கிறார். ஜோதிமணி குறித்து அவர் வசிக்கும் ஏரியாவில் “"அந்தம்மா எப்பவும் கறாரா பேசுவாங்க.. அதனால, நாங்க ரொம்ப பேசிக்கிறது இல்ல...''” என்கிறார்கள்.

Advertisment

arr

எதிர் வீட்டில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி., தங்களது வீட்டை நோட்டம் பார்ப்பதுபோல் இருக்கிறது என ஜோதிமணி கூறியதால், அந்த வீட்டு சி.சி.டி.வி.யை ஒரேயடியாகக் கவிழ்த்துவிட்டதெல்லாம் நடந்திருக்கிறது. அதுவே, வீடு புகுந்து கொலை செய்த கொள்ளையர்களை உடனே கண்டு பிடிக்கமுடியாமல் போனதற்கு ஒரு காரணமாகிவிட்டது.

அந்த ஏரியா சி.சி.டி.வி.க்களை காவல் துறையினர் ஆய்வு செய்தபோது, உள்ளூர் நபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் தென்பட்டுள்ளார். அந்தப் பகுதியில் நடந்து வரும் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவர் மீதும் சந்தேகம் வலுத்துள்ளது. சங்கரபாண்டியன் வீட்டிலேயே அந்த நபர் சில்லறைக் கட்டுமான வேலைகளைச் செய்திருக்கிறார். இன்னொரு கூட்டாளியும்கூட இருந்திருக்கலாம் என்கிற ரீதியில் விசாரணை நடக்கிறது. ஆசிரியர் தம்பதியினர் தனிமையில் வாழ்வதைத் தெரிந்துகொண்டு, திட்டமிட்டு வீடு புகுந்து கொலை செய்துள்ளனர்.

தொடர் விசாரணையில், இந்த வழக்கில் கொலையாளிகளை போலீஸார் நெருங்கி விட்டாலும், காவல்துறையின் அலட்சியத் தாலேயே இதுபோன்ற கொலை, கொள்ளைகள் நடக்கின்றன. ஏதோ ஒரு காரணத்தால் பிள்ளைகளைப் பிரிந்து தனிமையில் வசிக்கும் முதியோருக்கு உயிர் பாதுகாப்பற்ற சூழல் அருப்புக்கோட்டையில் மையம் கொண்டி ருப்பது, அந்த ஊர் மக்களைப் பீதியில் உறையவைத்துள்ளது.