"இந்த இடத்தில் வாழை போட்டிருந்தோம்... இங்கு ரைஸ்மில் இருந்தது... இங்கு வீடு இருந்தது... அங்கு இது இருந்தது... அப்பா இருந்தார்...' என உறவுகளை, உடமைகளை மழையினால் ஏற்பட்ட ஊழிப் பெருவெள்ளத்தில் இழந்துள்ள தென்மாவட்ட மக்கள் நினைவுகூர்ந்து ஏங்குகின்றனர்.

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட் டங்களில் ஏறக்குறைய 150 வருடங்களுக்குப் பிறகு ஒன்றரை நாட்களாக பெய்திருக்கின்றது பேய்மழை. தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் நெல்லை சிக்கியுள்ளது என அனைவரின் கவனமும் நெல்லை மக்களை நோக்கித் திரும்பிய நிலையில், ஆற்றின் கரையோரமுள்ள வல்லநாடு, அகரம், நாணல் காடு, ஏரல் உள்ளிட்ட பகுதிகளை எவரும் கவனிக்கவில்லை. திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டத்திலேயே நிறுத்திவைக்கப்பட் டது. கனமழையின் கோரத்தால் எங்கும் செல்லமுடியாமல் 800-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலிலும், ரயில் நிலையத்திலும் உண்ண உணவின்றி பரிதவித்தனர். மழை சிறிது குறைந்ததும் சிலர் வெள்ளத்தில் கொண்டு செல்லப்படாத, மிச்சமிருக்கின்ற தண்டவாளத்தின் வழியாக நடைபயணத்தை துவங்கினர். "சேம்பரில் சிக்கியுள்ளோம். 12 அடி உயரத்திற்கு நீர்வரத்து உயர்ந்துவிட்டது. எங்களைக் காப்பாற்ற வாருங்கள். தீவாய் மாறி விட்டது நாணல்காடும், அகரமும். எங்களுக்கு சோறு தண்ணீ வேண்டாம். உயிரைக் காப்பாற்றினாலே போதும்'' என்பது போன்ற கூக்குரல்கள் வாட்ஸ் அப் வழியாக பரவத்தொடங்க இறுக்கமான சூழ்நிலைகளுடனே பயணித்தது தமிழ்நாடு அரசு.

south-rain

சனிக்கிழமை பின்னிரவில் தொடங்கிய பேய்மழையின் தீவிரம் எதிரொலிக்க, ஞாயிறன்று நெல்லையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தென்காசியில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தூத்துக்குடி மாவட்டத்தில் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் முகாமிட்டு தீவிரமாக பேரிடரை எதிர் கொண்டனர். இந்த பேய்மழைக்கு இவர்கள் மட்டும் போதாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தென்மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண் டம் பகுதிக்கு அமைச்சர் எ.வ.வேலு, சாத்தான்குளம் - காயல்பட்டினம் பகுதி களுக்கு அமைச்சர் மூர்த்தி, தூத்துக்குடி மாநகராட்சியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் முதலமைச்சரால் நிவாரணப்பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisment

முன்னதாக தனி ஆளாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை படகு மூலம் மீட்டவர், "பத்திரமா இருக்கீங்களா..? சாப்பிட்டீங்களா?'' என கனிவாக பேசி நம்பிக்கையளித்தார். மூன்று நாட்களில் நாடாளுமன்றத் தொகுதிக்குள் சுற்றாத இடங்களே இல்லை எனும் அளவிற்கு அரும்பாடுபட்ட எம்.பி. கனிமொழி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட புஷ்பா நகரைச் சார்ந்த கர்ப்பிணிப் பெண் ணை மீட்டு, அங்கிருந்த லோடுவேன் மூலம் அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

எனினும், தூத்துக்குடி கே.வி.கே. நகர் கதிருதீன், போல் பேட்டை செல்லப்பா போன்றோர், "தூத்துக்குடி யிலே முத்தம்மாள் காலனி, அடுத்து கே.வி.கே. நகர் பகுதியில்தான் ரொம்ப பாதிப்பு. வீடுகளுக்குள் போகமுடியல. நாலாம் கேட் சாலையில் நிவாரண பொருட்களுக்காக காத்துக்கிடக்கிறோம். ஒழுங்காக அனைவருக் கும் தரவில்லை. தெருவில் வீட்டைச் சுற்றி மழைத்தண்ணீர் வெள்ளமாக தேங்கிநிற்கிறது. மின்சாரம் இல்லை. வீட்டுக்கு உள்ளே போகமுடியல. சாலையில்தான் நிவாரணப் பொருட்கள் வருமென காத்துக்கிடக்கிறோம். இங்கு நிற்கின்ற ரயில்தான் காலைக்கடனை ஆற்ற உதவிசெய்கின்றது'' என வேதனைப் பட்டதும் நிதர்சனமே!

south-rain

Advertisment

இது இப்படியிருக்க, "திருநெல்வேலி மாவட்டத்தில் 35 படகுகள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. கன்னியாகுமரி மாவட் டத்தில் 19 படகுகள், தூத்துக்குடி மாவட்டத்தில் 24 படகுகள், தென்காசி மாவட்டத்தில் 6 படகு கள் என மொத்தம் 84 படகுகள் மூலம் நான்கு மாவட்டங்களிலும் மீட்பு பணி நடக்கிறது'' என மக்களின் உயிர் காப்பதிலேயே குறியாய் இருந் தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. உள்ளூர்க் காரரும், ஏரியாவை நன்கு அறிந்து வைத்திருப் பவருமான இயக்குநர் மாரி செல்வராஜின் துணையுடன் செய்துங்கநல்லூர் தூதுகுழி கிராமத்திற்குச் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினோ, "தாமிரபரணி ஆற்றின் கால்வாய்க் கரையிலிருந்து வெளியேறிய தண்ணீரால் பாதிக் கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வுசெய்தோம். மேலும், அந்த கிராமத்து மக்களின் பாதுகாப் பை உறுதி செய்யவும் -உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கிடவும் அதிகாரிகள், அலுவலர்களிடம் வலியுறுத்தி னோம்'' என்றார். தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படை யினர், காவல் துறையினர் ஆகியோர் ஆங்காங்கே மக்களைக் காப்பதில் தீவிரம் காட்டிய நிலையில், திங்கட்கிழமை இரவுவேளையில் வந்திறங்கிய தேசிய மீட்புப் படையினரோ தாமிரபரணியால் சூழப்பட்டிருந்த மக்களை மீட்பதில் கவனம்செலுத்தினர். எப்பாடுபட்டா வது அகரம் கிராமத்திற்குள் சென்று மக்களை மீட்டுவிடலாம் எனப் போராடிய வேளையில் இயற்கை அவர்களுக்கு ஒத்துழைக்கவில்லை.

இருப்பினும் இந்தியக் கடலோர காவல் படையினர், ரப்பர் படகுகள் மூலம் வெள்ளத் தில் சிக்கியவர்களை மீட்டனர். அதுபோக, வெள்ள பாதுகாப்பு மற்றும் முக்கிய இடங் களில் பாதுகாப்புப் பணிகளில் காவல்துறை யினர் 24 மணிநேரமும் ஈடுபடுத்தப்பட்டனர். இதேவேளையில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய மக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். இதில் கர்ப்பிணிப் பெண் ஒருவரை மீட்டு மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிய நிலையில் அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது.

south-rain

இரண்டு நாட்களாக இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையினால் சங்கரன் கோவில், சிவகிரி, வாசுதேவநல்லூர், மேலநீதிநல் லூர், இருமன்குளம், குருவிகுளம், திருவேங் கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குளம் உடைந்து ஊருக்குள்ளும், பல்லாயிரக்கணக் கான விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் அனைத்தும் சேதமானது. சங்கரன்கோவில் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் கோட்டை மலையாறு, தலையணையாறு, மஞ்சள் கேணி உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயி கள் பயிரிட்ட நெல் பயிர்கள் அனைத்தும் என்ன நிலையில் என்று தெரிந்துகொள்வதற்காக உயிருக்கு ஆபத்தான நிலையில் நவாச்சோலை, புளியங்குடி பகுதியிலுள்ள ஆறுகளில் கயிறைக் கட்டி ஆற்றைக் கடந்து விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் செல்வது மாவட்ட நிர்வாகத்தை கவலைகொள்ளச் செய்துள்ளது. இதனிடையே, தானும் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு உதவ வருகின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி அண்ணா நகர் 12-ஆம் சந்திப்பு, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை மட்டும் பார்வை யிட்டு 1000 நபர்களுக்கு போர்வை உள்ளிட்டவற்றை வழங்கி அரசியல் பேசியதும் கவனிக்கப்படுகின்றது.

கனமழையின் காரணமாக தாமிர பரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் வாழ்வா தாரம் பெரிதும் பாதிப்பிற்குள்ளானது. கனமழையின் காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்கள், சாலைகள், பாலங்கள், பாதிப்புக்குள்ளான இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள், கால்நடை கள், நீர்நிலைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் சேதம் ஏற்பட்டதை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாக தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையக் குழு ஆலோசகர் கே.பி.சிங்கிற்கு விளக்கியது மாநில நிர்வாகம். இதேவேளையில் மீட்பு பணிக்காக கட்டணமில்லா பேருந்து சேவையை தமிழ்நாடு அரசு தொடங்க, ஆங்காங்கே இயல்பு நிலை திரும்பத் தொடங்கியது. எனினும் வியாழன் வரை வெள்ளம் முழுமையாக வடியவில்லை என்பதுதான் வேதனை. இயற்கைப் பேரிடர் களால் தமிழ்நாடு பாதிக்கப்படும்போது ஒருமுறைகூட மோடி தமிழ் மக்களை சந்திக்கவந்ததில்லை என்கிற குற்றச்சாட்டும் பரவலாக காணப்படுவது சுடும் உண்மையே.

ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த அருணாச்சலம் என்கின்ற 19 வயது இளைஞன், உறவினர் வீட்டிலிருந்த தன்னுடைய தங்கையை அழைத்து வரும் பொருட்டு ரெட்டியார்பட்டி யிலிருந்து சஏஞ 'இ' காலனிக்கு சென்றிருக்கின் றார். மாலைவரை தகவல் வரவில்லை என்பதால் மாவட்ட நிர்வாகத்தை நாடியுள்ளது அருணாச் சலத்தின் குடும்பம். காவல்துறையினர் ஜே.சி.பி. உதவியுடன் அருணாசலத்தை தேடும் முயற்சி 2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்த நிலையில் சஏஞ 'இ' காலனிக்கு செல்லும் வழி யிலுள்ள துதியின் கோட்டை எதிர்ப்புறம் உள்ள பகுதியில் டூவீலருடன் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். வெள்ளம் இருந்ததால் டூவீலரை தொடர்ந்து இயக்கமுடியாமல் உருட்டிக் கொண்டே சென்ற நிலையில் வெள்ளம் அவரையும், டூவீலரையும் விழுங் கியது குறிப்பிடத்தக்கது.

south-rain

நெல்லை டவுண் மாதாபூங்கொடி தெருவில் சாப்டர் பள்ளி என்.சி.சி. ஆசிரியர் ஸ்டீபன் ஆபிரகாம், மாணவர்களுடன் உணவு வழங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு மிதந்துவந்த உடலை மீட்டுள்ளனர். இறந்தவர் மாலை மழை வெள்ளத்தில் காணாமல்போன கிருஷ்ணபேரியைச் சேர்ந்த கடல்கனி என்பதும் தன்னுடன் பணியாற்றும் சக அலுவலர் டேவிட்டின் தந்தை என்பதும் தெரியவந்தது.

நெல்லை வடக்கு பாலபாக்யா நகர் 4-வது தெருவில் மழை வெள்ளத்தில் வீடிழந்து தனி யாக குளிரில் நடுங்கிய முதியவரை மீட்டிருக் கின்றார் நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன்.

south-rain

நெல்லை டவுண் கல்லணை பள்ளி வளா கத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பேரிடர் மீட்பு முகாமில் தங்கி யிருந்து வெளியேறிய பேட்டை பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த நபர் டவுண் அருணகிரி தியேட் டர் அருகே சடலமாக மீட்கப்பட்டதும், நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் முன்பு வெள்ளத்தில் அடை யாளம் தெரியாத நபர் உயிரிழந்து மிதந்ததும் வலிகளே.

_____________

மூழ்கிய வீட்டில் உயிரிழந்த தந்தை! செய்வதறியாது திகைத்த குடும்பத்தினர்!

south-rain

ஆரல்வாய்மொழியில் சொந்த தொழில் செய்யும் நமச்சிவாயம், நெல்லை உடையார்பட்டியில் வசித்துவருகின்றார். இவருடன் இஞ்சினியரிங் இறுதியாண்டு படிக்கும் மகன் விஜய்யும், பத்தாம் வகுப்பு படிக்கும் மகளும் இருக்கின்றனர். நமச்சிவாயத்தின் மனைவி சரஸ்வதி, திருச்சி இந்தியன் வங்கியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 17-ஆம் தேதி இரவு பெய்த மழைவெள்ளத்தால் உடையார்பட்டியினை மழைவெள்ளம் சூழ, வீட்டின் முதல் தளம்வரை வெள்ளம் நிறைந்திருக்கின்றது. மகன், மகளைக் காப்பாற்ற எவ்வளவு போராடியும் இயலவில்லை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களும், மீட்புப் படையினரும் உதவிக்கு வரமுடியாத சூழல். விடியற்காலை பொழுதில் சூழ்நிலை அறிந்து அப்பகுதியில் உள்ள மக்கள் மூவரையும் மீட்டுள்ளனர். அதுவரை மூவரும் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். இதில் நமச்சிவாயத்திற்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கிய நிலையில் அக்கம்பக்கத்தினர் போராடி... மதிய வேளையில் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், ஆனால் அங்கு மருத்துவர்கள் இல்லை. கண்முன்னே தந்தை உயிர் பிரிந்துள்ளது. தந்தையின் உடலை வைத்துக்கொண்டு இரண்டு பிள்ளைகளும் செய்வதறியாது நின்றது காண்போரைக் கண்கலங்க வைத்தது.