"ஜனநாயகம் என்பது வெறும் அரசாங்க வடிவம் மட்டுமல்ல. இது முதன்மையாக தொடர்புடைய வாழ்க்கை முறையும், அதோடு இணைந்த தொடர்பு அனுபவமும் ஆகும். இது அடிப்படையில் சக மனிதர்களுக்கு மரியாதை தரக்கூடிய அணுகுமுறையாகும்' -புரட்சியாளர் அம்பேத்கர்
தலித் எழுச்சி -மோடியின் வீழ்ச்சி
இந்திய ஜனநாயகத்தின் மாண்பு சிதைக்கப்படும்போதெல்லாம் தலித் மக்கள் நாட்டின் இறையாண்மையைக் காத்துள்ளனர். சனாதனம் உயர்த்திப்பிடிக்கப்பட்ட போதும், சாதிரீதியான கட்டமைப்புக்கு எதிராகவும், பொதுசமூகத்தின் உரிமைக்கும் சேர்த்தே தலித் மக்கள் குரல் கொடுத்திருக்கின்றனர். உண்மையில், இந்தியாவின் வரலாறு என்பது ஒடுக்குவோருக்கும், ஒடுக்கப்படுவோருக்கும் இடையில் நடந்த போராட்டத்தின் வரலாறுதான். பார்ப்பனீயம் - சனாதனம் -மனு உள்ளிட்டவை இந்திய மக்களை பிரித்து சாதிய சமூகமாக பாகுபடுத்தி அரசியல் செய்தபோது இதனை துணிச்சலோடு எதிர்த்தவர்கள் தலித் மக்கள் தான்.
கீழ் வெண்மணி, பீமா கொரேகான் என இந்திய சரித்திரத்தில் ஒரு எழுச்சியையே தலித்துகள் தங்களின் உரிமை முழக்கத்தின் மூலமாக நிலைநாட்டிக் காட்டியிருக்கிறார்கள். 2024-ஆம் ஆண்டு மோடிக்கு எதிராக ஜனநாயக முறைப்படி வாக்கு அரசியலில் தலித் மக்கள் மிகவும் நுட்பமான ஒரு அரசியல் போராட்டத்தை நடத்தி மோடிக்கு கடிவாளம் போட்டுள்ளனர்.
பா.ஜ.க. தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கமுடியாமல் போனதற்கும், கூட்டணியை நம்பியே ஆட்சியை தொடரவேண்டும் என்ற நிர்பந்தத்தை உருவாக்கியதே தலித் மக்களின் எழுச்சிதான். அதாவது, பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 77 தொகுதிகளில் வெற்றிபெற்றது.
2019 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 77 தொகுதிகளில் 22 இடங்களில் தோற்று, தற்போது 55 தொகுதிகளை மட்டுமே பா.ஜ.க. தக்கவைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க மொத்தம் 272 இடங்கள் தேவை. இதில், பா.ஜ.க. வெறும் 240 தொகுதிகளைத்தான் கைவசம் வைத்துள்ளது. பா.ஜ.க. செல்வாக்கு உள்ளதாக மோடி கும்பலால் திரும்பத் திரும்ப செல்லப்படும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஷ்கர், மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட இடங்களில் பா.ஜ.க.வை தலித் மக்கள் ஜனநாயகத்திற்கு எதிரி என இனம்காட்டி வெளியே தள்ளியுள்ளனர். தலித் மக்களின் இந்த எழுச்சிதான் மோடியின் ஆட்சிக் கட்டிலை அசைத்துப்பார்த்துள்ளது.
ஒவ்வொரு நாளும் பிரதமர் நாற்காலியில் மோடி நடுக்கத்துடன் அமர்ந்திருக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. எப்படி நடந்தது இது என்பதை விரிவாக ஆராய்ந்தால் பல நுட்பமான விஷயங்கள் வெளிச்சப்படுகின்றன.
வடஇந்தியாவில் கோலோச்சிய தலித் மக்கள்:
இந்தியா முழுமைக்கும் மொத்தம் 131 தொகுதிகள் பட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா, கர்நாடகா, பீகார், பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 19 இடங்களில் பா.ஜ.க.வுக்கு எதிராக பட்டியலின மக்கள் இந்தியா கூட்டணியை ஆதரித்து வாக்களித்துள்ளனர். மகாராஷ்டிரா, ஜார்கண்ட், கர்நாடகா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் முழுவதிலும் 10 பழங்குடியின தொகுதிகளை பா.ஜ.க. இழந்துள்ளது. இதில், நுட்பமாக கவனிக்கவேண்டியது என்னவென்றால், பட்டியலின மக்களுக்கான தொகுதிகளில் 12 தொகுதிகளையும், பழங்குடியின மக்களுக்கான தொகுதிகளில் 7 இடங்களையும் பா.ஜ.க.விடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. 2014-ல் பட்டியலின பழங்குடியின மக்களின் தொகுதிகளில் 71 இடங்களையும், 2019-ல் 77 இடங்களையும் பா.ஜ.க. கைப்பற்றியது. மறுபக்கத்தில், 2019-ல் 7 இடங்களை மட்டுமே தக்கவைத்திருந்த காங்கிரஸ் தற்போது பழங்குடியின, பட்டியலின தொகுதிகளில் 32 தொகுதிகளை மீட்டுள்ளது. அதில் 19 தொகுதிகளில் நேரடியாக பா.ஜ.க.வை வீழ்த்தியுள்ளது.
ஒருவகையில், பா.ஜ.க.வின் சனாதனத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியோடு தலித் மக்கள் கைகோர்த்து நின்றுள்ளனர். சமாஜ்வாதி கட்சி உத்தரபிரதேசத்தில் பட்டியலின மக்களுக்கான ஐந்து தொகுதிகளைக் கைப்பற்றியது; திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி.) கூச்பெஹாரில் வெற்றிபெற்றது. தும்காவில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) வெற்றிபெற்றது; சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க.வுக்கு எதிராக நின்ற திண்டோரியை கைப்பற்றியது.
பாரதிய ஆதிவாசி கட்சியின் ராஜ்குமார் ரோஹத், காங்கிரஸ் ஆதரவுடன் ராஜஸ்தானின் பன்ஸ்வாரா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரைவிட 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். பழங்குடிகளுக்கு ’பில் (இட்ண்ப்) மாநிலம்’ கோரிக்கையை இன்னும் தீவிரப்படுத்துவோம் என்று அறிவித்துள்ளார் ராஜ்குமார்.
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சரும் ஒன்றிய அமைச்சரவையில் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சருமாக பொறுப்பு வகித்த அர்ஜூன் முண்டாவை குந்தி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் காளிசரண் முண்டா கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பழங்குடிகளுக்கான 5 தனித்தொகுதிகளிலும் பா.ஜ.க. படுதோல்வி அடைந்துள்ளது.
சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரும் வேலூர் முன்னாள் மேயருமான கார்த்தியாயினி (3,36,591) 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளார். விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் அறிஞர் ரவிக்குமாரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க வேட்பாளர் முரளிசங்கர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
தலித் மக்களின் எழுச்சி எப்படி?
புரட்சியாளர் அம்பேத்கர் தொடங்கிவைத்த கருத்தியல் நெருப்பு 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பரவியது. இந்த தேர்தலில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் தலித் மக்கள் மிகவும் உறுதியாக இருந்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே மோடியை காத்திரமாக எதிர்த்தவர். தமிழ்நாட்டில், 2014-லிலிருந்து உண்மையிலேயே மோடியை, ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் கும்பலை கொள்கைரீதியாக திருமாவளவன் வலுவாக தொடர்ந்து எதிர்த்துவந்தார். பா.ஜ.க.- மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பை மாற்றிவிடுவார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் தலித் மக்களுக்கு போராடி பெற்றுக்கொடுத்த உரிமைகளைக்கூட மோடி கும்பல் பறித்து சனாதனவாதிகளின் கையில் கொடுத்துவிடுவார்கள் என்று முழங்கினார்.
திருமாவளவனின் சனாதன எதிர்ப்பு முழக்கத்தை பொறுத்துக்கொள்ள முடியாத ஆர்.எஸ்.எஸ். -பா.ஜ.க. கும்பல், தலைவர் திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்தியும் உருவ பொம்மையை எரித்தும் அமைதிக்கு குந்தகம் விளைவித்தனர். ஆனால், 2014-லிருந்து தலைவர் திருமாவளவன் எதை முழங்கினாரோ அந்த கருத்துதான் இன்றைக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டுள்ளது.
யாரைத் தேர்ந்தெடுக்ககூடாது என்பதில் தெளிவு:
விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளை எடுத்துக்கொண்டால், தலைவர் திருமாவளவனையும் அறிஞர் ரவிக்குமாரையும் வீழ்த்த முழுவீச்சில் ஆர்.எஸ்.எஸ். -சங்பரிவார் கும்பல் தீவிரமாகக் களமாடியது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் ஆர்.எஸ்.எஸ். -சங்பரிவார் நேரடியாகவே தேர்தல் பணி செய்வதை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன. இவர்களோடு, பா.ஜ.க. கூட்டணியிலிருக்கும் பா.ம.க.வும் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக தேர்தல் பரப்புரையில் இறங்கியது. ஆனால், நடந்தது என்ன? மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னிய சொந்தங்களும்கூட தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக நின்றனர். சர்வாதிகாரத்தையும் சாதிய கொடுங்கோன்மையையும் சிதம்பரம் தொகுதி மக்கள் மிக உறுதியாக எதிர்த்தனர்.
பா.ஜ.க. செல்வாக்கு செலுத்தும் மாநிலமாகப் பார்க்கப்படும் உத்தரப்பிரதேச அரசியல் களத்திலும் தலித் மக்கள் அக்கட்சியை விரட்டியடித்துள்ளனர். மறைமுகமாக பா.ஜ.க.வுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியில் இருப்பதை உத்தரப்பிரதேச மக்கள் தெளிவாகவே புரிந்துகொண்டனர். ராம்தாஸ் அத்வாலே, மாயாவதி இருவரும் அம்பேத்கரின் கொள்கையிலிருந்து பிறழ்ந்து செல்வதை உத்தரப்பிரதேச மக்கள் தெளிவாகவே இனங்கண்டுகொண்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய சி.ஏ.ஏ.க்கு எதிரான போராட்டங்களின்போது மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களும், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தைத் தூண்டிவிட்டு என்.ஆர்.சி.யை முன்மொழிந்தனர். ஆனால் யார் பாதிப்பை ஏற்படுத்தினார்கள்? மிருகத்தனமான காவல் சித்ரவதை அடக்குமுறைகளையும் தோட்டாக்களையும் எதிர்கொண்டவர்கள் முஸ்லிம்களும் தலித் மக்களுமாக இருந்தார்கள். பாதிக்கப்படும் தலித், இஸ்லாமியர்களுக்காக மாயாவதி குரல் கொடுக்காததன் பலனை தேர்தல் தோல்வி மூலமாக அடைந்துவிட்டார்.
பா.ஜ.க.வின் மிருகத்தனமான போக்கு:
பா.ஜ.க. 400 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்ற முழக்கத்தை தலித் மக்கள் முற்றுமுழுதாக நிராகரித்துவிட்டனர். அம்பேத்கர் தன் வாழ்நாள் இறுதிவரைக்கும் ஆர்.எஸ்.எஸ். - சனாதன - இந்துத்துவ கருத்திற்கு எதிராக இருந்தார். அகண்ட பாரதம், இந்தியா இந்துக்களுக்கான நாடு என்ற சனாதனவாதிகளுக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தக்க பதிலடியைக் கொடுத்துக்கொண்டுதான் இருந்தார். மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலம் முழுக்க முழுக்க சனாதன கருத்துக்களை உச்சம் அடையச்செய்த காலமாக மாறியது. இஸ்லாமியர்கள், தலித்துகள் மீதான தாக்குதல்கள் தலைவிரித்தாடின. இதனை தலித், இஸ்லாமிய மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தனர். இந்த சூழலில்தான், 400 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றும் என்ற முழக்கத்தை இந்திய ஜனநாயகத்திற்கான பெரிய ஆபத்தாக இந்தியாவிலுள்ள தலித் மக்கள் பார்த்து பதிலடி கொடுத்துள்ளனர். இந்த தீவிர இந்துத்துவ மனநிலையை மாயாவதி எதிர்க்காததால்தான் 488 இடங்களில் போட்டியிட்டும் ஒன்றில்கூட பகுஜன் சமாஜ் கட்சி வெற்றிபெறவில்லை. அதேநேரத்தில் பா.ஜ.க. -சங் பரிவார் கூட்டத்தை எதிர்க்கும் தீவிர அம்பேத்கரிய அரசியலை முன்வைத்த ஆசாத் சமாஜ் கட்சியின் இளம் தலைவர் சந்திரசேகர் ஆசாத், தான் போட்டியிட்ட நாகினா தனித் தொகுதியில் 1,51,000 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளரை வீழ்த்தினார்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவை தலித் மக்கள் அம்பேத்கர் வழியில் தான் பார்த்துள்ளார்கள். ஜனநாயகம் என்பது வெறும் அரசாங்க வடிவம் மட்டுமல்ல. இது வாழ்க்கை முறை, இணைந்த தொடர் அனுபவம். சக மனிதர்களுக்கு மரியாதை மற்றும் மரியாதைக்குரிய அணுகுமுறையாக இருக்கிறது. இஸ்லாமியர்கள், தலித்துகள், குழந்தைகள் மீதான தாக்குதல் அதிகரிக்கும்போது அதனை அமைதியாக இருந்து கேள்வி கேட்ட மக்கள் தேர்தல் முடிவுகள் மூலம் பா.ஜ.க.வை நிர்மூலமாக்கிவிட்டனர்.
மாயாவதி, ராமதாஸ் உள்ளிட்டவர்களும்கூட பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டின் மூலமாக தக்க பாடத்தைக் கற்றுக்கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஏற்பட்ட நிலை நாளை நிதீஷ்குமாருக்கும், சந்திரபாபுவுக்கும் ஏற்படும். சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராகவும், மண்டல் கமிஷனுக்கு எதிராக கமண்டல் கமிஷனையும் முன்னிறுத்தும் பா.ஜ.க.வின் ஊதுகுழலாக நிதீஷ் மாறினால் அவரின் அரசியல் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும்.
தெலுங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியானது, போட்டியிட்ட நான்கு தனித் தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. குல்பர்கா தனித் தொகுதியை பா.ஜ.க. இழந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 5 தனித்தொகுதிகளில் பா.ஜ.க. படுதோல்வியைச் சந்தித்துள்ளது. மகாராஷ்டிராவிலும்கூட தனித்தொகுதியாக உள்ள 9-ல் 6 தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்களை காங்கிரஸ் வேட்பாளர்கள் படுதோல்வி அடையச்செய்துள்ளனர். ராஜஸ்தானில் பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டிலிருந்த பல தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனித்தொகுதிகளில் பா.ஜ.க. படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
ஒரு ஆணவப் போக்கு அரசியல் வரலாற்றில் எதையெல்லாம் செய்யும் என்பதை மோடியின் இந்த சறுக்கல் மூலமாகவும், ஒரு சிறிய அமைப்புகூட ஜனநாயகத்தின் மாண்பைக் காக்க தனது அரசியல் ஆயுதம் மூலமாக பதிலடி கொடுக்கமுடியும் என்பதை தலித் மக்களின் வாக்கு அரசியல் மூலமும் புரியவைத்துள்ளது.
குஜராத்தின் முதல்வராக மோடி இருந்த காலம் தொடங்கி 2024 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரைகூட மோடி தன்னை ஒரு அசைக்கவே முடியாத சக்தியாக நிறுவிக்கொண்டே இருந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பா.ஜ.க.வும் மோடியும் வெறும் மைனாரிட்டிகள்தான் என்பதை தலித் மக்கள் மோடிக்கு கற்றுக்கொடுத்துவிட்டனர். இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும், இஸ்லாமியர்களை வஞ்சித்ததற்கு கைமாறாகவும் உனாவில் தலித் மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டதற்கான நீதிப் போராட்டத்திற்கு கிடைத்த அறத்தின் வெற்றியாகவும் தலித் மக்கள் ஜனநாயகத்திற்கு கொடுத்துள்ள செய்தியாக இந்த தனித்தொகுதிகளில் தலித்துகளின் வெற்றியைப் பார்க்கிறேன். இந்தியா அரசியலில் தவிர்க்க முடியாதவர்கள் தலித்துகள் என்பதையும் தலித்துகளின் எழுச்சி ஒரு புரட்சிப் பாதையின் நெருக்கத்தை அடைந்துவிட்டது என்பதை மோடி கும்பல் உள்வாங்கிக்கொண்டுவிட்டது.