அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர் செய்யாதுரை மற்றும் அவரது மகன்களுக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது புதிதல்ல. 2018-ல் நடந்த சோதனையின்போது, கணக்கில் வராத பல கோடி ரூபாய் ரொக்கப்பணம், தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. கடந்த 6-ஆம் தேதி, அருப்புக்கோட்டை அனந்தபுரி நகரிலுள்ள அவரது வீடு, குடும்பத்தினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மதுரையிலிருந்து வந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அரசியல் ரீதியான இவர்களின் நெருக்கத்தைப் பார்த்தால், முன்பு மு.க.அழகிரியின் ஆசி இருந்தது. வே.தங்கப்பாண்டியன், கே.கே.எஸ். எஸ்.ஆர்.ஆர்., தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, அவருடைய தம்பி ரவிச்சந்திரன், உறவு வட்டத்தில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் என தி.மு.க. தொடர்புகளும் அப்போது நின்றன. அடுத்து அ.தி.மு.க. பீரியடில் சசிகலா, டாக்டர் வெங்கடேஷ், அதன்பிறகு, ஓ.பன்னீர்செல்வம், அவருடைய மகன் ரவீந்திரநாத் குமார், பிறகு எடப்பாடி பழனிசாமி, அவருடைய மகன் மிதுன் என இவர்களின் அரசியல் உறவுகள் பலம் வாய்ந்தவை.
தற்போது நடக்கும் வருமானவரித்துறை சோதனைக்கும், இன்றைய அரசியலுக்கும் முடிச்சுப் போட்டு பேசுகின்றனர். கடந்த ஜூன் 23-ஆம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. எடப்பாடி பழனிசாமி ஆதரவுநிலை எடுப்பதற்காக அப்போது பணம் வாரியிறைக்கப்பட்டது. இதன் பின்னணியில் செய்யாதுரை தரப்பு இருந்ததாகப் பேசப்படும் நிலையில், வருமானவரித்துறை சோதனை நடந்திருக்கிறது.
எடப்பாடியின் வலதுகரத்தின் இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடக்கும்போதே, எடப்பாடிக்கு தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் எஸ்.வி.வேலுமணிக்கு நெருக்கமான வடவள்ளி சந்திரசேகர் வீட்டிலும் வருமானவரிச் சோதனை நடந்தது. இவர் அ.தி.மு.க.வின் ஏடான நமது அம்மாவின் வெளியீட்டாளராக இருக்கிறார். ஏற்கனவே மாநில அரசின் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்த எடப்பாடி -வேலுமணி தரப்பு, தற்போது அடக்க ஒடுக்கமாக வேடிக்கை மட்டும் பார்த்தது. இதன்மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் ஒன்றிய அரசு நடந்துகொள்கிறதா என்ற கேள்வி எழுகிறது.