பிரிக்க முடியாதது கார் டயரும் அ.தி.மு.க.வினரும் என்பது ஜெ.காலத்து வழக்கமாக இருந்தது. அதை எடப்பாடி காலத்திலும் தொடங்கி வைத்திருக்கிறார் அமைச்சர் சம்பத். ஆகஸ்ட் 27-ந்தேதி கடலூர் மாவட்டத் திற்கு விசிட் அடித்த எடப்பாடிக்கு, மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் தனது ஆதரவாளர்களுடன் வரவேற்பு கொடுத்தார் அமைச்சர் சம்பத். காரை விட்டு எடப்பாடி கீழே இறங்காத நிலையில், சம்பத் கொடுத்த சால்வையை காரில் இருந்த படியே பெற்றுக்கொண்டு வணக்கம் வைத்தார். பதில் வணக்கம் வைத்த அமைச்சர் சம்பத், சட்டென காரின் சக்கரத்தை எடப்பாடியின் காலாக நினைத்து தொட்டு வணங்கினார். கட்சிக்காரர்களும் அதிகாரிகளும் அதிர்ச்சியடைய, கார் டயரை கும்பிடும் அமைச்சரின் படம் வைரலானது.
சம்பத்தின் செயல் அவரது சமூகமான வன்னியர் சமுதாயத்தினரிடம் அதிர்ச்சியையும் வேதனையையும் உருவாக்கியுள்ளது. அதைப் பார்த்து ஓ.பி.எஸ்.சும் முகம் சுளித்திருக்கிறார். இதுபற்றி நம்மிடம் பேசிய ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளரான அந்த மூத்த தலைவர், ""சம்பத்தின் செயல் ரசிக்கும்படி இல்லை. கார் டயரை வணங்குவது குறித்து பழைய சம்பவம் ஒன்றை நினைவு படுத்துகிறேன். அதிமுக தலைமையகத்தில் ஜெயலலிதாவின் சிலை திறக்கும் நிகழ்வு கடந்த 2018-ல் நடந்தது. நிகழ்ச்சி முடிந்து அமைச்சர்கள் உட்பட சீனியர்கள் எல்லோரும் உட் கார்ந்து பேசிக் கொண்டிருந் தோம். அப்போது, ஜெயலலிதாவின் நினைவுகளைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விசயத்தை பகிர்ந்து கொண்ட போது, ’கார் டயரை வணங்கும் இழிவுகளிலிருந்து நமக்கு விடுதலை கிடைச்சிடிச்சுப்பா என எடப்பாடி சொல்ல, எல்லோரிடமும் திடீர் சந்தோஷம் வெளிப்பட்டது. இனி இந்த மாதிரி சம்பவங்கள் எதுவும் நடக்கக் கூடாது என சொன்னார்கள். அப்படி சொன்னவர்களில் சம்பத்தும் ஒருவர்.
கடலூர் மாவட்ட அதிமுகவில் சம்பத்துக்கு எதிராக தனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட புகார்கள்மீது, சம்பத்தை கண்டித்திருக்கிறார் எடப்பாடி. லோக்கல் எதிர்ப்பை சம்பத்தால் சமாளிக்க முடியவில்லை. வருகிற தேர்தலில் கட்சி பணிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அமைச்சர்களில் சம்பத்தும் ஒருவர். இதையெல் லாம் மனதில் நிறுத்தித்தான், எடப்பாடியை கூல் பண்ண இப்படி நடந்து கொண்டிருக் கிறார் சம்பத்'' என்று ஆதங்கப் பட்டார்.
எடப்பாடியின் கடலூர் விசிட்டின்போது நிறைய பேனர்களை கட்டியிருந்தனர் சம்பத்தின் ஆதரவாளர்கள். இதுவும் விவகாரமாகி, கலெக்டர் வரை புகாராகி, 27-ந்தேதி காலையில் கடலூருக்கு புறப்பட்ட எடப்பாடியிடம் தெரி வித்திருக்கிறது உளவுத்துறை. அந்தத் துறையினரிடம் கேட்டபோது, ""அ.தி.மு.கவினர் வைத்த பேனரால் சுபஸ்ரீ என்ற பெண் மரணமடைந்ததால், பேனர் வைக்கமாட்டோம் என கோர்ட்டிலும் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்து, கட்சி சார்பிலும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது அ.தி.மு.க. ஆனால், கடந்த 26-ந்தேதி மாலை அமைச்சர் சம்பத்தின் உத்தரவின்படி அவரது ஆதரவாளர்கள் நிறைய பேனர்களை திடீர் என வைத்தனர். அதில், சம்பத்துக்கு ஆகாதவர்களான அருண்மொழித்தேவன், பாண்டியன், சத்யா பன்னீர்செல்வம் ஆகியோரின் படங்களும் இருந்தன. அதாவது, கடலூரில் நாங்களெல்லாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என கடலூருக்கு வரும் எடப்பாடிக்கு காட்டுவதற்காகவே தனது பேனரில் தனது எதிரிகளின் படங்களையும் இடம் பெற வைத்திருக்கிறார் சம்பத். இதுமட்டுமல்லாமல், அருண்மொழித்தேவன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சத்யா, பாண்டியன், கலைச்செல்வன், முருகுமாறன் ஆகியோரின் ஆதரவாளர்கள் வைக்கவிருந்த பேனர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்த வில்லங்கத்தை அறிந்து, நமது படங்களை வைத்து அரசியல் செய்ய சம்பத் திட்டமிடுகிறார் என அதிர்ந்துபோன அருண்மொழித்தேவன், பாண்டியன் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் சத்யா பன்னீர்செல்வம் ஆகிய மூவரும், கலெக்டர் சந்திரசேகரசகாமுரியை தொடர்புகொண்டு, ’பொது வெளியில் பேனர் வைக்க நீதிமன்றத்தின் தடை உத்தரவு இருக்கிறது. எங்க படங்களை அச்சிட்டு வைக்கப்பட்ட பேனர்களுக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை. அதனால் அந்த பேனர்களை அகற்றுங்கள்’ என தனித்தனியாக புகார் தெரிவித்திருக்கிறார்கள். அதனால் பேனர்களை அகற்ற உத்தரவிட்டார் கலெக்டர்.
ஆய்வுக்குப் பின் சர்க்கியூட் ஹவுசில் ஓய்வு எடுத்த முதல்வர் எடப்பாடியை, தனது மாவட்ட நிர்வாகிகளுடன் சென்று சந்தித்த அருண்மொழித்தேவனிடம், தேர்தல் பணிகள் குறித்து 20 நிமிடம் விவாதித்துள்ளார் எடப்பாடி. ஆனால் அமைச்சர் சம்பத்துக்கும் கிழக்கு மா.செ.வான பாண்டியனுக்கும் நிர்வாகிகளை ஒருங்கிணைக்க முடியவில்லை. எல்லாவற்றையும் கவனித்தபடிதான் நாகை மாவட்டம் சென்றார் முதல்வர்‘’என்று கடலூர் மாவட்ட கூத்துகளை விவரித்தனர் உளவுத்துறையினர்.
இது குறித்து கருத்தறிய அமைச்சர் சம்பத்தை தொடர்பு கொண்டபோது, ""மதிப்புக்கும் மரியாதைக்குரியவர் முதல்வர். அவரை வணங்குவதில் தவறில்லை. அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு மரியாதைக்காக குனிந்து கை நீட்டியதை எப்படி தவறாக பார்க்கிறார்கள்? ஒரு சாதாரண நிகழ்வை எனது எதிரிகள் என் மீதான காழ்ப்புணர்ச்சியோடு ஊதிப் பெரிதாக்கி அரசியல் செய்கின்றனர். என்னை அழிக்க என்ன செய்யலாமென எனது அரசியல் எதிரிகள் யோசிக்கிறார்களே தவிர, கட்சியின் வளர்ச்சியில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை'' என்கிறார் அதிரடியாக
-இரா.இளையசெல்வன்