அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி சாலையில் உள்ளது பெரியவளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மலர்விழி, கண்ணகி ஆகிய இரண்டு பெண்களும், கடந்த 22ஆம் தேதி, ஊரருகே உள்ள காட்டுப்பகுதியில் பட்டப்பகலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இந்த சம்பவம் அரியலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தையே பரபரப்பாக்கியது.
தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையின் காரணமாக அப்பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் காளான்கள் நிறைய முளைத்துக்கிடந்துள்ளன. கண்ணகி, மலர்விழி இருவரும் காளான் சேகரிப்பதற்காக காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளனர். காலையில் சென்றவர்கள், மாலைவரை வீடு வந்து சேரவில்லை. அதனால் பதட்டமடைந்த அவர்களது குடும்பத்தினர் தேட ஆரம்பித்தனர். அவர்களோடு சேர்ந்து ஊர் மக்களும் காடு முழுக்கத் தேடியதில், தைல மரக்காடு அருகே இரு பெண்களும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைப் பார்த்து கிராம மக்கள் பேரதிர்ச்சி யடைந்தனர். தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கலைக்கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இரண்டு பெண்களின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப் துல்லா, தனிப்படைகள் அமைத்து கொலையாளி களைப் பிடிக்க உத்தர விட்டார். தீபாவளி நேரத்திலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீஸ் மோப்பநாய், கொலை நடந்த இடத்திலிருந்து கழுவந்தோண்டி என்ற கிராமத்திலுள்ள வேட்டைக்காரன் பால்ராஜ் என்பவரின் வீட்டருகே சென்றது. அதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வேட்டைக்காரன் பால்ராஜ், காட்டுப்பகுதியில் முயல் . காட்டுப்பன்றி, போன்ற வன விலங்குகளை வேட்டையாட அடிக்கடி செல்பவர் என்று கிராம மக்கள் தெரிவித்ததால் சந்தேகம் வலுத்தது.
பால்ராஜை போலீசார் தேட, அவர் தனது இரு சக்கர வாகனத்தில் த.பழூர் பகுதிக்கு தப்பிச்சென்று தலைமறைவானது தெரியவந்தது. செல்போன் டவரைக் கண்காணித்து பால்ராஜை போலீசார் மடக்கிப்பிடித்தனர். வேட்டைக்காரன் பால்ராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நடந்த உண்மையைக் கக்கிவிட்டார்.
கொலை நடந்த பகுதியையொட்டி பால் ராஜுக்கு விவசாய நிலம் உள்ளது. சம்பவத்தன்று பகலில், அப்பகுதியிலுள்ள காட்டுக்குள் முயல், காட்டுப்பன்றி, உடும்பு வேட்டைக்காக பால்ராஜ் சென்றிருக்கிறார். ஓடியாடி புதர்களுக்குள் மறைந்திருக்கும் முயல்களைக் குத்திப் பிடிப்பதற் காக சுளுக்கி எனப்படும் கூர்முனைக்கம்பி பொருத் தப்பட்டுள்ள நீண்ட கழியைப் பயன்படுத்தினார். அப்போது ஒரு புதருக்குள் முயல் அசைவது போன்று தெரியவும், சுளுக்கியால் புதருக்குள் குத்தியிருக்கிறார். ஆனால் முயலுக்கு மாறாக, பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது.
திடுக்கிட்டுப் பார்த்தபோது, புதர் மறைவில் காளான் பிடுங்கிக் கொண்டிருந்த கண்ணகியின் தொடையில் சுளுக்கி குத்தியிருந்தது உடனே அவரிடம், "முயல் என்று தவறுதலாக நினைத்துக் குத்திவிட்டேன்'' என்று மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆனால் கண்ணகியோ, பால்ராஜைத் திட்டிய படியே செல்போனால் உறவினர்களுக்கு தகவல் சொல்ல முயன்றார். ஊர்க்காரர்கள் திரண்டு வந்தால் ஆபத்தாயிற்றே என்ற பதட்டத்தில், பால்ராஜ் தனது கையில் வைத்திருந்த கத்தியால் கண்ணகியின் கழுத்தை அறுத்ததோடு, உடலிலும் கத்தியால் குத்த, சம்பவ இடத்திலேயே கண்ணகி துடிதுடித்து இறந்திருக்கிறார். கண்ணகியின் அலறல் சத்தம் கேட்டு, மலர்விழி அங்கே வர, கண்ணகியை கொலை செய்த விஷயத்தைத் தெரிந்துகொண்டார். இவர்மூலம் ஊருக்குத் தெரிந்துவிடுமே என்று யோசித்த மறுநொடியே கையிலிருந்த கட்டையால் மலர்விழியின் தலையில் ஓங்கி அடிக்கவும், அவரும் அதே இடத்தில் உயிரிழந்தார்.
ஆத்திரம் எல்லை மீறியதால் நடந்த கொலையை, நகைக்காக நடந்ததாகத் திசை திருப்ப, ஆறரை பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றிருக்கிறார். பின்னர், எதுவுமே நடக்காததுபோல் வீட்டிற்குச் சென்ற பால்ராஜ், அங்கிருந்து தா.பழூருக்குச் சென்று தலைமறைவாகி யிருக்கிறார். அவரது வாக்குமூலத்தை வைத்து, ஜெயங்கொண்டம் போலீசார் பால்ராஜை கைது செய்ததோடு, அவரது வீட்டில் வைத்திருந்த தாலிச்சங்கிலியையும் பறிமுதல் செய்தனர்.
பெரியவளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கடுங்கோபத்தோடு பால்ராஜ் வீட்டை அடித்து நொறுக்குவதற்காகப் புறப்படுவதை அறிந்த போலீசார், அவர்களைச் சாந்தப்படுத்தியதோடு, பதட்டத்தைத் தணிப்பதற்காக போலீஸ் காவலை யும் போட்டுள்ளனர். பெண்களைக் கொலை செய்தது வேட்டைகாரன் பால்ராஜ் மட்டும்தானா? வேறு யாராவது அவருடன் வேட்டைக்கு கூடச் சென்றார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், பால்ராஜ் மட்டுமே இந்த கொலைகளில் சம்பந் தப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.
மேலும், பால்ராஜ் உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கியை வேட்டைக்குப் பயன்படுத்தி யாக அவர்மீது போலீசார் ஏற்கனவே வழக்கு போட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இரு பெண்களின் உடலையும் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், கொலை செய்யப்பட்ட பெண்களின் உடலில் கத்திக்குத்து, சுளுக்கி போன்ற கூர்மையான ஆயுதம், கட்டை போன்றவற்றால் தாக்கியிருப்பது தெரியவந்துள்ளதாகக் குறிப் பிட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்