"இந்தக் கட்சிக்கு வாக்கு அளிப்பதைவிட, இந்த வேட்பாளர்களை தெரிந்துகொண்டு வாக்களியுங்கள்'' என்பதுபோல வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை பொதுவெளியில் வைத்திருக்கின்றது தேர்தல் ஆணையம். 2024-ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வுசெய்து அதிர்ச்சி தரும் டேட்டாக்களை வெளியிட்டுள்ளது தேசிய தேர்தல் கண்காணிப்பகம்.

தேசிய பிரச்சாரம், தேர்தல் சீர்திருத்தம், ஜனநாயக மேம்பாடு மற்றும் ஆளுகையில் மேம்பாடு ஆகிய துறைகளில் உறுப்பினர்களைக் கொண்டு இயங்கிவரும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் எனும் அமைப்பு ஆய்வு செய்த 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் டேட்டாவின் படி, தமிழ்நாட்டிலுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 950 வேட்பாளர்களும், புதுச்சேரி தொகுதியில் 26 வேட்பாளர்களும் என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் கட்சிகள், சுயேட்சைகளுமாக 976 வேட்பாளர்கள் களத்திலிருந்தனர்.

dd

தமிழ்நாட்டிலுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் இறுதிசெய்யப்பட்ட வேட்பாளர்கள் 950 என கணக்கிடப்பட்ட நிலையில், கரூர் தொகுதியில் மட்டும் அதிகமாக 50 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் தனித் தொகுதியில் 9 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

Advertisment

கிரிமினல் வழக்குகளுள்ள வேட்பாளர்கள் என பிரமாணப் பத்திரங்களை தனித்தனியாக பகுப்பாய்வு செய்யும்போது, தமிழ்நாட்டில் ஆய்வுசெய்யப்பட்ட வேட்பாளர்கள் 945 நபர்களில், ஏறக்குறைய 135 வேட்பாளர்கள், தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் இருப்பதை ஒப்புக்கொண்டிருக்கின்றனர். இதில் கடுமையான கிரிமினல் வழக்குகள் கொண்ட வேட்பாளர்கள் 82 நபர்கள் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. கட்சியின் அடிப்படையில் ஆய்வுசெய்யப்பட்டதில் பா.ஜ.க.வே கிரிமினல் வேட்பாளர்கள் அதிகம்கொண்ட கட்சியாகக் கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஆய்வுசெய்யப்பட்ட 23 வேட்பாளர்களில் 16 வேட்பாளர்கள் கிரிமினல் வேட்பாளர்கள் பட்டியலிலும், 9 பேர் கடுமையான கிரிமினல் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளனர். அதுபோல காங்கிரஸ் கட்சியில் 7 பேர் கிரிமினல் பினனணி உள்ளவர்களாகவும், 2 பேர் தீவிர கிரிமினல் பின்னணி உடையவர்களாகவும் உள்ளனர், தி.மு.க.வில் இது 13, 6 ஆக உள்ளது. அ.தி.மு.க.வில் இந்த எண்ணிக்கை 12, 6 என அமைந்துள்ளது. 606 சுயேட்சை வேட்பாளர்களில் 52 வேட்பாளர்கள் கிரிமினல் வேட்பாளர்களாகவும், தீவிர கிரிமினல் வேட்பாளர்களாக 36 வேட்பாளர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியிலோ, போட்டியிட்ட 26 வேட்பாளர்களில் இருவருக்கு மட்டுமே கிரிமினல் வழக்குகள் இருந்தது என்றாலும், யானம் பகுதியைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் அரதாடி பொசியா என்பவர் மீது போக்ஸோ வழக்கு உள்ளது.

வேட்பாளர்களின் பொருளாதாரப் பின்னணியை ஆய்வுசெய்ததில், தமிழ்நாட்டில் மட்டும் 202 கோடீஸ்வர வேட்பாளர்களும், புதுச்சேரியில் 5 கோடீஸ்வர வேட்பாளர்களும் இருந்துள்ளனர். பிரதான கட்சிகளான அ.தி.மு.க.வில் 97%, தி.மு.க.வில் 95% வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களே! குறிப்பாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூபாய் 24 கோடி. அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் (335) சராசரி சொத்து மதிப்பு ரூபாய் 99,61,914 எனவும் சுயேட்சை வேட்பாளர்களின் (606) சராசரி சொத்து மதிப்பு ரூபாய் 46,26,452 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ss

Advertisment

இத்தோடு இல்லாமல், அதிக சொத்துள்ள வேட்பாளர்கள் பட்டியலில் ஈரோடு தொகுதி அ.தி.மு.க. அசோக்குமாரின் சொத்து மதிப்பு ரூ.662 கோடி. அதற்கடுத்து சிவகங்கை தொகுதியில் இந்திய மக்கள் கல்விக் கழகம் சார்பாக, தாமரை சின்னத்தில் போட்டியிடும் தேவநாதன் சொத்து மதிப்பு ரூ.304 கோடி எனவும், வேலூர் தொகுதியில் போட்டியிடும் தாமரைச் சின்ன வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் சொத்து மதிப்பு ரூ.152 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதியை ஆய்வு செய்ததின்படி, படிக்காத வேட்பாளர்கள் 23 எனவும், முதுநிலை பட்டதாரி 164 எனவும், முனைவர் பட்டம் பெற்றவர்கள் 20 நபர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுபோல், வயதின் அடிப்படையினை ஆய்வுசெய்தால் 487 வேட்பாளர்கள் 41 -60 வயதுவரை உள்ளதாகவும், 130 வேட்பாளர்கள் 61 -80 வயதுவரை உள்ளதாகவும், 3 வேட்பாளர்கள் தங்கள் வயது 80 வயதுக்கு மேல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கட்சிவாரியாக பாலினப் பகுப்பாய்வின்படி பெண் வேட்பாளர்களுக்கு அதிக எண்ணிக்கை (49 சதவிகிதம்) கொடுத்தது நாம் தமிழர் கட்சி என்று அறியப்பட்டுள்ளது.

ஆய்வு குறித்துப் பேசிய தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர்ராஜ், "2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டும் போட்டியிட்ட 950 நபர்களில், 945 நபர்களின் பிரமாணப்பத்திரங்கள் மட்டுமே முழுமையாக எங்களுக்கு கிடைக்கப் பெற்றது. வேட்பாளர் ஒப்புக் கொண்ட பிரமாணப்பத்திரத்தின் அடிப்படையிலே இந்தத் தரவைத் தொகுத்தோம். மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டுமென்பதே எங்களின் எண்ணம்'' என்றார் அவர்.

படம்: விவேக்