rto-corruption

மிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட அரசுத்துறைகள் உள்ளன. இவற்றில், லஞ்சம் தலைவிரித்தாடும் துறைகளாக பத்திரப் பதிவுத்துறை, வட்டார போக்குவரத்துத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை போன்றவை இருக்கின்றன. கடந்த ஆண்டில், ஒரே நாளில் திருச்சி கிழக்கு, கும்பகோணம், நாகப்பட்டினம், அறந்தாங்கி, காரைக்குடி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மார்த்தாண்டம் ஆகிய ஊர்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் விஜிலென்ஸ் ரெய்டு நடந்து, ரூ.15 லட்சம்வரை ரொக்கமும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, 12 வழக்குகள் பதிவாகின. பிப்ரவரி 2-ஆம் தேதி விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்தியது. யாரும் பொறியில் மாட்டவில்லை.

வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் பொதுவான நடைமுறையைத்தான் சிவகாசியிலும் பின்பற்றுகிறார்கள். டூவீலர் ஓட்டுவதற்கான லைசன்ஸ் பெறுவதற்கு ஒருவர் ரூ.2500 வரை செலவழிக்க வேண்டும். இந்தப் பணத்தில், அரசாங்கத்துக்கு செலுத்தவேண்டிய கட்டணம் எவ்வளவு என்று பார்த்தால், முதலில் பெறவேண்டிய க.க.த.-க்கு ரூ.230-ம், அடுத்து வாங்க வேண்டிய லைசன்ஸுக்கு ரூ.800 மட்டும்தான். புரோக்கர் கமிஷன் ரூ.100 போக, மீதியுள்ள ரூ.1,370-ம் அந்த புரோக்கர் மூலம் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளுக்கு லஞ்சமாகப் போய்ச் சேர்ந்துவிடுகிறது. அதாவது, கட்டணமாக அரசாங்கத்துக்கு கிடைக்கும் வருவாயைக் காட்டிலும் அதிகமாக ‘சம்திங்’ பெறுகிறார்கள் இந்தத் துறையின் அதிகாரிகள்.

மேக்ஸி கேப் வாகன உரிமம் புதுப்பித்தலுக்கு அரசுக்கு செலுத்தவேண்டிய தொகை ரூ.850 மட்டுமே. இதற்காக, வட்டார போக்குவரத்து அலுவலர் வற்புறுத்தி வாங்கும் லஞ்சமோ ரூ.5,000. இதே ரீதியில்தான், வாகன தகுதிச் சான்று, வாகனப் பதிவு, பெர்மிட், பெயர் மாற்றம், முகவரி மாற்றம் என அத்தனை வேலைகளுக்கும் லஞ்சம் கொடுத்தாக வேண்டும். தமிழகத்தில் இந்த ஒரு துறை மட்டும், ஆண்டொன்றுக்கு மக்களிடமிருந்து கறந்த லஞ்சத் தொகை ரூ.200 கோடியைத் தாண்டுகிறது.

Advertisment

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணியாற்றும் பலரும் லஞ்சத்தொகையை பங்கு போட்டுக்கொள்கிறார்கள். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஒருபுறம் கல்லா கட்டுகிறார்கள். ஆர்.டி.ஓ. இன்னொருபுறம் தனியாக வசூல் வேட்டை நடத்துவார். மோட்டார் வாகன ஆய்வாளர்களும் ஆர்.டி.ஓ.வுக்கு உரிய மரியாதை செய்வார்கள். ஆர்.டி.ஓ.க்கள், தங்களுக்குக் கிடைக்கும் லஞ்சப் பணத்தில், குறிப்பிட்ட பங்கினை போக்குவரத்து துணை கமிஷனருக்கு கொடுத்துவிடுவார்கள். இந்தத் துணை கமிஷனர்கள் பலரும் சேர்ந்து, போக்குவரத்து இணை கமிஷனரை கவனிப்பார்கள். துறை அமைச்சர்வரை பெரிதாக கவனித்து, தங்களுக்கு குடைச்சல் வராமல் பார்த்துக்கொள்கிறார்கள் அதிகாரிகள்.

rto-officers

சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலர் நடராஜனுக்காக, அவர் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் டிரைவர் சுரேஷ்தான் பக்கத்தில் ஒரு டீ கடையில் உட்கார்ந்துகொண்டு லஞ்சப் பணத்தை வசூலித்துக் கொடுக்கிறார். திருப்பதி டிரைவிங் ஸ்கூலை நடத்தும் கோவிந்த் என்பவர், சுரேஷ் இடத்துக்கு வரத்துடித்தார். அது நடக்காததால், ஆர்.டி.ஓ. அலுவலக லஞ்சக் காட்சிகளை செல்போனில் பதிவு செய்து, லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு அனுப்பிவிட்டார். இதனைத் தொடர்ந்தே, சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடந்தது.

Advertisment

""கோவிந்தின் நடவடிக்கைகள் அனைத்தும் மிரட்டல் ரகம்தான். லஞ்ச ஒழிப்புத்துறையினர் எந்த நாளில் ரெய்டுக்கு வருவார்கள் என்பதை அறிந்து, தனக்கு வேண்டிய அதிகாரிகளை, முதல்நாளே உஷார்ப்படுத்தி விடுவார். கோவிந்த் மூலம் தகவல் கிடைத்துதான், விஜிலென்ஸ் ரெய்டுநாளில் விடுமுறையில் சென்றுவிட்டார் மோட்டார் வாகன ஆய்வாளர் கதிர்வேல். "விஜிலென்ஸ் என் கையில்'’எனச் சொல்லியே பல துறைகளிலும் காரியம் சாதித்துவருகிறார் கோவிந்த்'' என்கிறார் டிரைவிங் ஸ்கூல் நிர்வாகி ஒருவர்.

விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சீனிவாச பெருமாளை தொடர்பு கொண்டோம். ""எங்களுக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கும்போது, முதலில் அதை சரி பார்ப்போம். யார், யாரோ சொல்கிறார்கள் என்பதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. குற்றச்சாட்டை உரிய ஆதாரங்களோடு யார் முன்வைத்தாலும், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்''’என்றார்.

கோவிந்தை நாம் விசாரித்தபோது, ""நானும் இந்த ஃபீல்டில்தான் இருக்கிறேன். யாரையும் போட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. விஜிலென்ஸ் ரெய்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை''’என்று ஒரே போடாகப் போட்டார்.

சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. நடராஜனை சந்தித்தோம். ""ஃபைலில் கையெழுத்து போடுறதுல தாமதம் ஆவதற்கு சில காரணங்கள் இருக்கும். வருவாய் இழப்பு இல்லாமல் எல்லா வேலைகளும் இங்கே நடந்துக்கிட்டிருக்கு. அமைச்சர் வரைக்கும் லஞ்சமா? அப்படியெல்லாம் எதுவும் இல்லை''’என்று மறுத்தார்.

லைசென்சுக்காக வாசலில் காத்திருப்பவர்களைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

-சி.என்.இராமகிருஷ்ணன்