அருப்புக்கோட்டை மீனாம்பிகை நகரில் எங்கு பார்த்தாலும் காக்கிகள் மயம். காரணம் -ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி, கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறைவாசியாக இருக்கும் இரா.பொ.ரவிச்சந்திரன், பரோலில் வெளிவந்து தனது வீட்டில் தங்கியிருப்பதுதான்.
8-ஆம் தேதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, மாநில அமைப்புச் செயலாளர் எல்லாளன் மற்றும் சில நண்பர்கள், தோழமை உணர்வோடு ரவிச்சந்திரனை சந்திப்பதற்கு மீனாம்பிகை நகர் வீட்டுக்குச் சென்றபோது, நீண்ட நேர விசாரணைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
நம்மிடம் பேசினார் வன்னியரசு...
""பேரறிவாளனைச் சந்தித்தபோது இந்த அளவுக்கு நெருக்கடி கிடையாது. ரவிச்சந்திரன் விஷயத்தில் ஏனோ, அவர்வீட்டு படுக்கை அறை வரை போலீஸார் வருகிறார்கள். எங்களை நெருக்கியடித்துக்கொண்டு 7 போலீசார் நின்றனர். எங்களது ஒவ்வொரு அசைவையும் வீடியோ எடுத்தார்கள்'' என்றவரிடம், "ரவிச்சந்திரனின் மனதை இப்போது ஆக்கிரமித்திருக்கும் கவலை எதுவும், இந்தச் சந்திப்பின்போது அவரிடமிருந்து வெளிப்பட்டதா?'’என்று கேட்டோம்.
""பரோலில், ஊடகங்களை சந்திக்கக்கூடாது என்ற விதிமுறையை ரவிச்சந்திரன் சரியாகக் கடைப்பிடிக்கிறார். அதுமட்டுமல்ல, பரோலுக்கான பாதுகாப்புச் செலவுகளையும் அவரே ஏற்கவேண்டும் என்பதும் எங்களுக்கு வியப்பாக இருக்கிறது. அதையும் கடைப்பிடிக்கிறார். அதேநேரத்தில், அவரது ஆதங்கத்தையும் நாங்கள் கவனிக்கத் தவறவில்லை''’என்று கூறியவர், ரவிச்சந்திரன் தன்னிடம் பேசியதை அப்படியே ரிபீட்’செய்தார் வன்னியரசு.
""ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் சர்வதேச சதி உண்டு. ராஜீவ்காந்தி கொலை நடந்த பிறகு, நான் இலங்கை சென்றேன். அங்கே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்தேன். ராஜீவ்காந்தி கொலை குறித்து அவரிடமே கேட்டேன். கொலைச்சதியின் பின்னணியில் விடுதலைப்புலிகள் நிச்சயமாக இல்லை என்று உறுதிபடச் சொன்னார். இந்தியாவின் உதவியில்லாமல் தமிழீழம் காணமுடியாது என்பதில் தலைவர் பிரபாகரன் தெளிவாக இருந்தார். மாத்தையா, கருணா போன்றவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சிலகாலம் இருந்துவிட்டு, பின்னாளில் எதிராக நடந்துகொண்டார்கள். இவர்களைப் போன்றவர்கள்தான், சர்வதேச சதித்திட்டத்தோடு நடந்த ராஜீவ்காந்தி கொலைக்கு, சிவராசனைப் பயன்படுத்தி இருக்கமுடியும். மற்றபடி, ராஜீவ்காந்தி கொலை என்பது விடுதலைப்புலிகளின் அசைன்மெண்ட் கிடையாது.
க்யூ பிரிவு போலீசார் என்னை விசாரித்தபோது, எனக்கும் விடுதலைப் புலிகளுக்குமான தொடர்பை மறைக்கவில்லை. நான் சொன்ன உண்மையை வைத்தே, என் மீது அபாண்டமாக கொலைப்பழி சுமத்தினார்கள். ராஜீவ்காந்தி கொலைக்கும் எனக்கும் துளியும் சம்பந்தமில்லாத நிலையில், கண்துடைப்பாக விசாரணை நடத்தி, உண்மைக் குற்றவாளிகளை தப்பிக்கவிட்டு, 27 ஆண்டுகளாக சிறையில் அடைத்து, எங்களைப் பரிதவிக்க வைத்திருக்கிறார்கள்.
என்னோடு சேர்த்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ் ஆகிய 7 பேருமே, அவரவர் விடுதலைக்காக தனித்தனி வழக்கறிஞர்களை வைத்து சட்டப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறோம். நீதிக்கான இந்தப் போராட்டத்தில் ஒத்த கருத்தும், ஒருங்கிணைப்பும் எங்களிடையே இல்லாமல் போனது வேதனைக்குரியது.
எங்களின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தமிழக அரசியல் தலைவர்களுக்கிடையிலும் ஒற்றுமை இல்லை. ஒருவருக்கொருவர் போட்டா போட்டி மனப்பான்மையைக் கொண்டுள்ளனர். இதனால் 7 பேர் விடுதலையில் இத்தனை பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
சாதி, மத மோதல்களுக்கு வழிவகுக்கும் இந்துத்வா சக்திகள் தமிழகத்தில் கால் பதித்துவிடத் துடிக்கின்ற இந்த நேரத்தில், தமிழ்த்தேசியம், தமிழர் ஒற்றுமை என, தமிழ் உணர்வைக் கொண்டிருக்கும் கட்சிகள், ஒற்றுமையாக ஓரணியில் நின்று கடும் எதிர்ப்பைக் காட்டி, பொது எதிரியை வீழ்த்துவதற்கான வியூகம் வகுத்து முன்னேறிச் செல்வதை விட்டுவிட்டு, நான் தமிழன்; நீ தமிழன் இல்லை; நீ தெலுங்கன்; நீ கன்னடன் என்று நம்மிடையே ஒரு பிரிவினைவாதத்தை உருவாக்கி வருவது வேதனை அளிக்கிறது. இது பார்ப்பனிய சூழ்ச்சிக்குத்தான் துணைபோகும்.
பேரறிவாளனுக்கும் அவருடைய தாயார் அற்புதம்மாளுக்கும் பல தலைவர்கள் உறுதுணையாக, ஆறுதலாக இருந்து வருகிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம்தான். அதே நேரத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் என் தாயாருக்கு உதவிட, இங்கே யாரும் இல்லை''’என்பதே ரவிச்சந்திரனின் ஆதங்கமாக இருக்கிறது என்றார் வன்னியரசு.
தமிழ் உணர்வின் காரணமாக, தமிழீழ வேட்கையோடு இலங்கை சென்று, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து களப்பணியாற்றிவிட்டு, தமிழகம் திரும்பி, தமிழ் தேச மீட்பு முன்னணி என்ற பெயரில் அரசியல் இயக்கம் ஒன்றை ஆரம்பித்து...
கொள்கையோடு பயணித்த ரவிச்சந்திரன், 27 ஆண்டுகளாக சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார். அவர் உள்ளிட்ட 7 பேர் எப்போது விடுதலைக் காற்றை சுவாசிக்கப்போகிறார்கள்?
-சி.என்.இராமகிருஷ்ணன்