குடியரசு தின கொண்டாட்டத்தில் தமிழகமே மூழ்கியிருந்தபோது, மாநில உளவுத்துறை போலீசார் கள்ளநோட்டு மற்றும் துப்பாக்கிக் கடத்தலில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்தவர்களை கைதுசெய்திருப்பது தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
கடந்த ஜனவரி 26 அதிகாலை, மாநில உளவுத்துறைக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் தகவல் வந்தது. அசாம் மாநிலம் கவுகாத்தியிலிருந்து சென்னை வழியாக திருவனந்தபுரம் செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் வருவதாக அந்த தகவல் உறுதிசெய்தது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனின் உத்தரவின் பெயரில், சென்னை மாநகர போலீஸார் வேப்பேரி காவல் ஆய்வாளர் வீரகுமார் தலைமையில் பத்துப்பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
விடிந்தால் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கோலாகலமாக கொடியேற்றுவிழா நடக்கவுள்ள நிலையில், எந்த ஓர் அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாதென்கிற கவனத்துடன் செயல்பட்ட தனிப்படையினர், துரிதமாக ரயில்வே அதிகாரிகளுடன் தொடர்புகொண்டனர். வழக்கமாக சென்னை -சென்ட்ரல் ரயில்நிலையத்தை அதிகாலை மூன்று மணிக்கு வந்தடையும் எக்ஸ்பிரஸ், அன்று சில தொழில்நுட்பக் கோளாறுகளால் ஐந்துமணிநேரம் தாமதமாக வருவதாக தகவல் கிடைத்ததில் கொஞ்சம் நிம்மதியடைந்து, அந்த அவகாசத்தைப் பயன்படுத்தி ஆபரேஷனை ப்ளான் பண்ணினர்.
ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் உதவியுடன் ரயிலை கண்காணித்த தனிப்படை, சென்னை -சென்ட்ரலுக்கு முந்தைய நிறுத்தமான திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் காத்திருந்தது. லோக்கல் ரோந்து போலீசாரையும் அலர்ட் செய்ததுடன், திருவொற்றியூர் வந்தவுடன் ரயிலை எங்கும் நிறுத்தாமல் மெதுவாக இயக்கும்படி, ரயில்வே கட்டுப்பாட்டு அறை மூலம் ஓட்டுநருக்கு தகவலளிக்கப்பட்டது.
போலீசாரின் அறிவுரைப்படி ரயில் மெதுவாக இயங்க, ஓடும் ரயில்பெட்டியில் மப்டியில் மூன்று போலீசார் ஏறி சோதனையை தொடர்ந்தனர். வழக்கத்துக்கு மாறாக ஏதோ நடப்பதையறிந்த மர்ம ஆசாமிகள் நான்கு பேர், ஓடும் ரயிலைவிட்டு இறங்கி தப்பமுயன்றனர். திட்டப்படி தனிப்படை, ரயிலின் முன்னும்பின்னும் ஓடியபடி வந்த போலீசாரை அலர்ட் செய்ய, தப்பிய நான்கு ஆசாமிகளில் இருவரை திருவொற்றியூர் மேற்கு மாடவீதிவரை துரத்திச்சென்று துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அவர்களிடமிருந்து ஐந்து நவீன ரக "9 எம்.எம்.' துப்பாக்கிகளும், இருபத்தைந்து தோட்டாக்களும், 4 லட்ச ரூபாய் மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளும், மூன்று செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. "ஆபரேஷன் சக்ஸஸ்' எனத் தெரிந்ததும்தான், சென்னை மாநகர போலீசார் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்கள்.
போலீஸ் விசாரணையில், பிடிபட்டவர்கள் சென்னை, பெரம்பூர், ராமகிருஷ்ணன்நகரை சேர்ந்த பிரதீப், சென்னை, திருமங்கலம், நேரு நகரை சேர்ந்த கமல் என்பதும் சதீஷ் மற்றும் ஸ்ரீதர் தப்பியோடியதும் தெரியவந்தது. மேற்குவங்க மாநிலம், மால்டாவில் துப்பாக்கியும், தோட்டாக்களும், கள்ள நோட்டுகளும் வாங்கிவந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
மால்டாவில் இவர்களுக்கு துப்பாக்கி விற்பனை செய்த மர்ம நபரை "க்யூ' பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்ரமன் தலைமையிலான தனிப்பிரிவு தேடிவருகிறது. இதற்கிடையில் பிரதீப், கமல் கொடுத்த தகவலின்பேரில் தஞ்சை ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாருக்கு ஒரு செய்தி அளிக்கப்பட்டது. திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகேயுள்ள அசோக், கல்பனா தங்கும் விடுதிகளை அவர் சுற்றி வளைத்தார். விடுதியில் மூன்று பேர் சுற்றி வளைக்கப்பட்டனர்.
திருச்சியில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர், சென்னை -புளியந்தோப்பைச் சேர்ந்த போலீஸ்காரர் பரமேஷ்வரன் என்பது காவல்துறையை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இவருடன் வில்லிவாக்கத்தை சேர்ந்த நாகராஜ், தஞ்சை மாவட்டம் -திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களிடமிருந்தும் துப்பாக்கியும் கள்ளநோட்டுகளும் சிக்கியிருக்கின்றன. சிவா மூலம் திருச்சி -மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த ரவுடி குணா மற்றும் ரவுடி எண்ணூர் தனசேகரனின் கூட்டாளிக்கு துப்பாக்கியை விற்பனை செய்யவந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், போலீஸ்காரர் பரமேஷ்வரனின் அம்மா குப்பு மற்றும் தங்கை நாகலட்சுமியை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஏராளமான இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். இவர்கள் அனைவருக்கும் மூளையாகச் செயல்பட்டது சென்னை புழல்சிறையிலுள்ள ரபீக்தான் என கூறப்படுகிறது.
யார் இந்த ரபீக்?
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ள காஜாமைதீனுடன் இணைந்து அந்த அமைப்புக்கு நிதி திரட்டும் சதிச் செயலில் ஈடுபட்டு வந்தவர் ரபீக் என்கிறது போலீஸ் வட்டாரம். கடந்த 2014-ல் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஸின் உளவாளி இலங்கையை சேர்ந்த ஜாகீர்உசேனுடன் சேர்ந்து தீவிரவாத அமைப்புக்கு நிதிதிரட்டிய வழக்கில், தேசியப் புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டவர் ரபீக்.
இதுவரை ரபீக் நெட்வொர்க் மூலம் 17 லட்ச ரூபாய் வரை கள்ளநோட்டுகள் புழங்கவிடப்பட்டுள்ளதாக போலீசார் யூகிக்கிறார்கள். அத்தனையும் 2000 ரூபாய் கரன்சிகள். ஆனால், இதுவரை சென்னையில் ஒரு 2000 ரூபாய் கள்ளநோட்டுகூட பிடிபட்டதாக தகவல் இல்லை.
ஐ.எஸ். துணையுடன் பாகிஸ்தானில் அச்சிடப்பட்டு இந்தியாவுக்குள் கடத்தப்படும், கள்ளநோட்டுகள் ஒரிஜினலிலிருந்து அத்தனை எளிதில் வேறுபடுத்தி அறியமுடியாத துல்லியத்துடன் இருப்பதே இதற்குக் காரணமென்கிறார்கள்.
ஒருபுறம் சட்டம் ஒழுங்கையும், மறுபுறம் பொருளாதாரத்தையும் சீர்குலைப்பதற்கான திட்டமென்பதால், இதனை ஆழமாக விசாரித்தால்தான், தொடர்புடைய அனைவரும் சிக்குவார்கள். ஆனால் அதற்கு தமிழக காவல்துறை தயாரில்லை. வழக்கை சி.பி.சி.ஐ.டி.யின் கையில் தள்ளிவிட்டு பொறுப்பைத் தட்டிக்கழித்துவிடும் மனோநிலையில்தான் டி.ஜி.பி. ராஜேந்திரன் இருப்பதாக பேச்சு நிலவுகிறது.
இஸ்ரேல், ரஷ்யா போன்ற நாடுகளிலில் தயார்செய்யப்பட்ட துப்பாக்கிகள் பாகிஸ்தான் மூலம் கடல்வழியாகவும், நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து தரைவழியாகவும் இந்தியாவுக்குள் கடத்தப்படுகின்றன. இந்தக் கடத்தலில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்பு இருக்கிறது. பொதுவாக வடஇந்தியாவில்தான் துப்பாக்கி கலாச்சாரம் அதிகம். அவையும் அதிகமாக நாட்டுத்துப்பாக்கிகள்தான். தமிழக காவல்துறை கட்டுப்பாடாக இயங்குவதால் இங்கு துப்பாக்கிக் கலாச்சாரம் இல்லாமலிருந்தது. அந்த நம்பிக்கையை பொய்த்துப்போக வைத்திருக்கின்றன நடப்பு நிகழ்வுகள்.
இந்தக் கடத்தலுக்கான ஆட்கள் பெரும்பாலும், சென்னை -புழல் சிறையிலிருந்தே தேர்வு செய்யப்படுகிறார்கள். ஜேப்படி, செயின் அறுப்பு வழக்கில் உள்ளே வருபவர்களை ஜாமீன் எடுக்க ஆளிருக்காது. கையில் காசில்லாமலிருக்கும் அவர்களுக்கு கஞ்சா, சிகரெட், சிறைக்குள்ளேயே ருசியான உணவும் கிடைக்கச்செய்து தங்கள் வலையில் விழவைப்பார்கள். அதேசமயம், தங்களை காட்டிக் கொடுக்காதவர்களாக இருப்பார்களா என்பதையும் உறுதி செய்துகொள்வார்கள். பார்ட்டி வலையில் விழுந்ததும், அவர்களை ஜாமீனில் வெளியே எடுத்து, மேற்குவங்கத்துக்கு அனுப்பி வைப்பார்கள். மேற்கு வங்கத்துக்குச் சென்று வெற்றிகரமாகத் திரும்புபவர்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் கமிஷனாகத் தரப்படும். இப்படி பண ஆசையாலும், சாகச மனப்பான்மையாலும் உள்ளே வந்து மாட்டிக்கொண்டவர்கள்தான் கமலும் ஸ்ரீதரும்.
பிடிபட்டது ரெண்டு பேரானாலும், ரபீக் இதுபோல ஏகப்பட்டபேரை தயார் பண்ணியிருக்கலாம் என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். கள்ளநோட்டு, துப்பாக்கி கடத்துவதற்கான ஏஜெண்ட்டுகளில் ஒருவன் ரபீக். வெளியில் தெரியாமல் இதுபோல் பல ஏஜெண்ட்டுகள் தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் இருக்கலாமென்கிறார்கள்.
அமைதிப் பூங்கா தமிழகம், பயங்கரவாதிகளின் ஆயுதப் பூங்காவாகிவிடுமோ?
-அரவிந்த்
யாரை சுடுவதற்கு? ரபீக்கின் சொந்த ஊர் அதிராமபட்டினம். அதே ஊரைச் சேர்ந்த ஒருவரின் பெயரும் இந்த விவகாரத்தில் அடிபடுகிறது. "நாம் மனிதர் கட்சி' என்ற பெயரில் செயல்பட்டுவருகிறார். தற்சமயம் சென்னை -பிராட்வே அரண்மனைத் தெருவில் வசித்துவருகிறார். வெளிநாடுகளிலிருந்து வரிகட்டாமல், இல்லீகலாக மணி ட்ரான்ஸ்பர் நடக்கும். அப்படி ஒருவருடைய பணம் 50 லட்சம் தமிழகத்துக்குள் நுழைந்திருக்கிறது. அதை சம்பந்தப்பட்டவரிடம் சேர்க்காமல் ஒருவர் அபேஸ் செய்துவிடுகிறார். பணத்தை அபகரித்தவர் அரண்மனைத் தெரு பார்ட்டியைத் தஞ்சமடைய, ஏமாந்தவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொறுப்பிலிருக்கும் ஒருவரிடம் தஞ்சமடைகிறார். விடுதலைச் சிறுத்தைகளின் வடசென்னை மாவட்டச் செயலாளர் கபிலன் மூலமாக ஏமாற்றியவருக்கு அழுத்தம் தரப்படுகிறது. இதனால் எரிச்சலடைந்த எதிர்கோஷ்டி கபிலனை கொலைசெய்யத் திட்டமிடுகிறது. இந்த கொலைத் திட்டத்துக்காக வரவழைக்கப்பட்ட துப்பாக்கிதான் தற்சமயம் பிடிபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கேற்ப விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் நாம் மனிதர் கட்சியினரும் ஒரு தரப்புக்கு எதிராக பரஸ்பரம் போஸ்டர் ஒட்டிவந்ததையும், பரஸ்பரம் காவல்துறையில் புகார்செய்துகொண்டதையும் சுட்டிக்காட்டுகின்றனர். |