tanjoreuniv

ல்கலைக்கழகங்களின் மோசடி செயல்பாடுகள் மற்றும் துணைவேந்தர்கள் மீதான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகளை நக்கீரன் தொடர்ந்து ஆதாரத்துடன் வெளியிட்டு வருகிறது. கோவை பல்கலை துணைவேந்தர் கைதாகியுள்ள நிலையில்... தமிழ்மொழிக்கு பெருமை சேர்க்கும் வகையில் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் பெயரும் ஊழல் புகாரில் இடம்பெற்றுள்ளது.

vc

பாஸ்கர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிக்கொண்டு வந்த காரணத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட சிவகுமார், பாஸ்கரை நோக்கி தனது விரலை நீட்டுகிறார். ""தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு தமிழ் படித்தவர்கள் மட்டுமே துணைவேந்தராக நியமிக்கப்பட்டுவந்தனர். தகுதிவாய்ந்த பலரும் இருந்தபோதும், அவர்களை வரவிடாமல் தடுத்து, தத்துவம் படித்த பாஸ்கர் பதவியை அடைந்தார். பதிவாளராக இருந்தபோதே, பதவி நியமனம் மூலம் சம்பாதித்து பணத்தைத் தருகிறேனென்று அமைச்சர்களிடம் கடன்சொல்லி துணைவேந்தர் பதவிக்கு வந்தவர் பாஸ்கர். பல்கலைக்கழக பதிவாளர் பதவிக் காலம் 6 மாதம் என்ற விதிக்குமாறாக, முன்பிருந்த துணைவேந்தரை மிரட்டி இரண்டாண்டுகள் பதவியிலிருந்தார். அதற்குமுன்னர் துறைத்தலைவர் பதவி சுழற்சிமுறையில் மாறக்கூடியது. இவருக்கு அடுத்து துறைத்தலைவராக வரக்கூடிய பேராசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி மாணவர்களைத் தூண்டிவிட்டும் எதுவும் நடக்கவில்லை.

Advertisment

இதனால் முன்பு துணைவேந்தராக இருந்தவரை எந்த நியமனமும் செய்யவிடாமல் தனது ஆட்களைக்கொண்டு தடுத்தார். அப்படிச் செய்வதன்மூலம் தான் துணைவேந்தராக வரும்போது அந்த பணியிடங்களை நிரப்ப திட்டம் தீட்டி, தற்போது அதனைச் சிறப்பாக செயல்படுத்திவருகிறார். பாஸ்கர் வந்ததுமுதல் பலமுறை விதிகளை தனக்குத் தகுந்ததுபோல மாற்றியமைத்தார். இதுகுறித்து நீதிமன்றம் சென்ற ஓய்வுபெற்ற முன்னாள் பேராசிரியரை ஆட்களை வைத்து மிரட்டியிருக்கிறார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 25 துறைகளில் 160 பணியிடங்களை நிரப்பினார். இதில் பேராசிரியர் பணிக்கு 60, இணைப்பேராசிரியர் பணிக்கு 40, உதவிப்பேராசிரியர்கள் பணிக்கு 30 முதல் 40 என லகரங்கள் விளையாடியுள்ளன.

siva

Advertisment

துணைவேந்தருக்கு உதவி செய்யக்கூடிய நபர்களாக உதவியாளர் செந்தில், பதிவாளராக கணிதம் படித்த முத்துக்குமார் ஆகியோரை இங்கு பணிக்கு அமர்த்தியதே முறைகேடுதான். வெறும் 12-ஆம் வகுப்பு வரையே படித்த சக்திசரவணன் என்பவர், துணைவேந்தருக்கு ஒத்துழைப்பாக இருக்கிறார். சித்த மருத்துவத் துறையில் ஆங்கில மருத்துவம் படித்தவர்களை நியமித்திருக்கிறார்கள். மொழிபெயர்ப்புத் துறைக்கு, தொடர்பே இல்லாத நாட்டுப்புற துறையில் இருப்பவரை நியமித்திருக்கிறார்கள்.

பணி நியமனத்துக்கு எவ்வளவு பணம் என்பதை அமைச்சர்தான் முடிவு செய்கிறார்கள் என்று கூறி அவர்களையும் கூட்டு சேர்த்துக்கொள்கிறார் துணைவேந்தர். அதை அனைவரும் நம்பவேண்டும் என்பதற்காக, சென்னைக்கு வரவைத்து பணத்தைப் பெறுகிறார்கள்.

பல்கலைக்கழகத்தில் பணி வாங்கித்தருவதில் இடைத்தரகராக துணைவேந்தரின் உதவியாளர், பதிவாளரின் உதவியாளர் உள்ளிட்ட மூன்றுபேர் இருப்பதாகச் சந்தேகிக்கிறோம். துணைவேந்தர் நடத்திவரும் அச்சகத்தில்தான் பல்கலைக்கழக அறிக்கைகள், அழைப்பிதழ்கள் அச்சிடப்படுகின்றன. அவரது அச்சகத்தைப் பயன்படுத்தாமல் வெளியில் சென்றால், பின்னர் பேராசிரியர்களுக்கு வேறுவிதத்தில் பிரச்சனை கொடுப்பார்.

அரசு ஒதுக்கியுள்ள இடஒதுக்கீட்டின்படி பணியிடங்களை நிரப்பாமல் முழுக்க முழுக்க சமூக நீதியைக் காலில் போட்டு மிதித்து சாகடித்து வருகிறார். ஊழல் குறித்து நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்குகளுக்கு பதில்மனு தாக்கல் செய்யாமல் நீதிமன்றத்தை அவமதித்துவருகிறார்.

இந்த ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆளுநர், அரசுத் துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கு ஆதாரத்துடன் மின்னஞ்சல், தபால், ஃபேக்ஸ் அனுப்பி வைத்திருக்கிறோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் பல்கலைக்கழகத்திற்கு வந்தபோதுகூட அனைத்தையும் விரிவாக விவரித்திருக்கிறோம்'' என்றார்.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தரின் அலுவலகத்தை தொடர்புகொண்டபோது... பதில் இல்லை. அவர் தரப்பு விளக்கத்தை எதிர்பார்க்கிறோம்.

""தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் காலகாலமாக சேர்த்துவைக்கப்பட்டிருக்கிற ஆவணங்கள், ஓலைச்சுவடிகள், சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புகள் அழிக்கப்படாமல் காப்பாற்றப்பட வேண்டும். ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்கிறார்கள் கல்வியாளர்கள்.

-சி.ஜீவாபாரதி

படம்: தினேஷ்

உறவினருக்கு அதிக ஊதியம்!

c

சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தாண்டவன், தனது மருமகனான சந்திரசேகரன் என்பவரை சென்னை பல்கலைக்கழக கல்வித் தலைவராக நியமித்ததோடு, அவருக்கு ஊதியப் பாதுகாப்பு என்ற பெயரில் ரூ 16,000 அளவுக்கு கூடுதலாக ஊதியமும் வழங்கியிருக்கிறார். சம்பள உயர்வுக்கு 9 மாத காலத்துக்கு முன்பே இந்த தில்லாலங்கடி வேலைகள் நடைபெற்றது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதனையடுத்து அவர் பெற்றுவந்த கூடுதல் ஊதியத்தை திரும்பப்பெற முடிவெடுத்து, பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

-க.சுப்பிரமணி