உளுந்தூர்பேட்டை-சேலம் நெடுஞ்சாலையில்... சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்து உள்ளது வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் கோயில். பிரபலமான இக்கோயிலுக்கு தமிழகமெங்குமிருந்து குடும்பத்தினரோடு வழிபட வருவார்கள். சுற்றுலா போல இங்கே கல்லூரிக் காதலர்களும் கிராமக் காதலர்களும் அவ்வப்போது ஜாலியாக வந்து செல்வார்கள். அப்படிப்பட்ட கோயில் அருகே கடந்த 14-ந் தேதி கார்த்திகேயன் என்ற 24 வயது ரவுடி கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தான்.
ரவுடி கார்த்திகேயன் கத்திக்குத்துப் பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது ஆத்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கோயிலுக்குச் சென்றுள்ளனர். கார்த்தி நிலையைக் கண்டு 108 ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளனர். ஆம்புலன்சில் கார்த்தி உடலை ஏற்றும்போது இறந்துபோய்விட்டான். இதைக்கண்ட மாணவர்கள், "இது ஏது வம்பா போச்சே, போலீஸ் வந்து கேட்டா என்ன பதில் சொல்வது?' என எஸ்கேப்பாகிவிட்டனர்.
108 ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் போலீஸ் விசாரணை செய்தது. கல்லூரி மாணவர்கள் 108 ஆம்புலன்ஸை அழைத்த மொபைல் எண் கிடைத்தது. அவற்றை வைத்து சம்பவத்தன்று கோயிலுக்கு வந்த மாணவர்களை தூக்கிவந்து போலீஸ் விசாரித்தது.
""சார்... நாங்கள் மலையேறும்போது, கடலூர் மாவட்டம் வேப்பூரைச் சேர்ந்த மாணவன் தமிழரசனும் அவன் காதலியும் கீழே ஓடிவந்தார்கள். தமிழரசன் ஜட்டியோடு வந்தான். "என்னாச்சு' என்று விசாரித்தோம். "வழிப்பறிக் கொள்ளையன் என் செல்போனையும் பணத்தையும் பறித்துக்கொண்டான். அதில் ஒருவன் என் லவ்வரை கெடுக்க முயன்றான். அதனால் அவனை அடிச்சுப் போட்டுட்டு ஓடி வர்றோம்'னு சொன்னான். அவனுக்கு நாங்க டிரெஸ் கொடுத்து அனுப்பினோம். அவன் சொன்னதையெல்லாம் வீடியோவுல பதிவுசெய்திருக்கிறோம்'' என்றார்கள் சித்தூரைச் சேர்ந்த அந்த மாணவர்கள். மாணவர்களை விட்டுவிட்டு, வேப்பூர் தமிழரசனை தேடியது போலீஸ்.
இதற்கிடையே கொலையான கார்த்தியிடம் இருந்த செல்போனை கண்டெடுத்தது போலீஸ். அதில் சம்பவத்தன்று பதிவான எண்களைப் போட்டுப் பார்த்ததில் கார்த்தி, தன் நண்பனான மாரிமுத்துவிடம் பேசியது தெரியவந்தது. மாரிமுத்துவை தூக்கியது போலீஸ்.
போலீசிடம் மாரிமுத்து, ""நானும் கார்த்தியும் சேர்ந்து வழிப்பறி செய்வோம். சம்பவத்தன்று, மேற்படி காதலர்கள் இருவரும் தனிமையான இடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன், பணத்தையெல்லாம் பிடுங்கினோம். காதலன் உடைகளைக் கூட உருவிக்கொண்டோம். அப்போது அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தான் கார்த்தி. அவனது காதலனை நான் பிடித்துக்கொண்டேன். தன் காதலியோட கற்புக்கு கேடுவரும் என்பதைப் பார்த்த காதலன் என்னிடமிருந்து திமிறிவிட்டு போய் கார்த்தியோடு சண்டை போட்டான். அப்போது கார்த்தி வைத்திருந்த கத்தியைப் பிடுங்கி கார்த்தியை தொடையில் குத்தினான். பல இடங்களில் குத்தியதில் ரத்தவெள்ளத்தில் கார்த்தி துடிக்க... அதைப் பார்த்துப் பயந்துபோன நான் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்'' என்று நடந்த சம்பவத்தைச் சொன்னான். அத்துடன் பலரையும் மிரட்டி பணம், நகை பறித்த விவரங்களையும் அவன் சொல்ல... மாரியை வைத்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை ரெக்கவரி செய்கிறது போலீஸ் ஒருபக்கம்.
கல்லூரி மாணவர்கள் அந்தக் காதலனிடம் செல்போனில் பேசச்சொல்லி எடுத்த வீடியோ மூலம் போலீஸ் தேடிப் போனபோது, கடலூர் மாவட்டம் வேப்பூரைச் சேர்ந்த தமிழரசன் தொழுதூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறான் என்பதைக் கண்டுபிடித்தது. அதே கல்லூரியில் அவனோடு படிக்கும் காதலியையும் போலீஸார் கண்டுபிடித்தனர். அவர்களை கொண்டுவந்து விசாரித்தபோது இருவரும் டூவீலரில் சென்னிமலை கோயிலுக்கு வந்ததையும், காதலியைக் காப்பாற்றுவதற்காக ரவுடியோடு சண்டையிட வேண்டியதாகிவிட்டதையும் ஒப்புக் கொண்டார்கள்.
இதையடுத்து போலீஸ், காதலர்கள் இருவரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு "சண்டையின்போது ரவுடி கார்த்தி வைத்திருந்த கத்தியால் அவனே குத்திக்கொண்டான்' என்று வழக்குப் போட்டு காதலர்கள் இருவரையும் அனுப்பிவிட்டது. மாரிமுத்துவை திருட்டு நகைகளை ரெக்கவரி செய்ய ஊர் ஊராக அழைத்துப் போய்க்கொண்டுள்ளனர்.
""வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் கோயில் சிறிய மலை மீது உள்ளது. இங்கு வழிபட வரும் காதலர்கள், கணவன்-மனைவி ஆகியோர் தனியாக வரும்போது கார்த்திகேயன், மாரிமுத்து போன்ற 10-க்கும் மேற்பட்ட ரவுடிகள் அவர்களை வழிமறித்து பணம், நகை, செல்போன்களை பிடுங்கியதோடு பல பெண்களின் கற்பையும் சூறையாடியுள்ளனர். வெளியே சொன்னால் அவமானம், போலீசுக்குப் போனால் கோர்ட், கேஸ் என்று அலையவேண்டும் என்று பலர் வெளியே சொல்லாமலே போய்விட்டனர்'' என்கிறார்கள் அப்பகுதி மக்கள். திருவிழா நாட்களைத் தவிர மற்ற நாட்களில் அமைதியாகவே இருப்பதால் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திவருகிறார்கள் ரவுடிகள்.
இது சம்பந்தமாக தலைவாசல் காவல்துறை என்ன சொல்கிறது என இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியனிடம் கேட்டோம்.
""தமிழரசன் தனது காதலியை காப்பாற்றும்போது நடந்த சம்பவத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது'' என்கிறார்.