"நானும் ரவுடின்னு ஃபார்மாயிட்டேன்' என்கிற வடிவேலுவின் காமெடியைவிட, "நானெல்லாம் அந்தளவுக்கு பெரிய ரவுடி இல்லீங்க'’ என அரிவாளில் பர்த்டே கேக் வெட்டி மிரளவைத்த ரவுடி பினு, படுகெஞ்சலாகப் பேசிய கதறல் வீடியோ அதிகளவில் வைரலாகி வருகிறது.

புலி என சித்தரிக்கப்பட்ட ரவுடி பினு (எ) பென்னி ஒரு சாதாரண வெள்ளாடுபோல் சரணடைந்தது சென்னை நகரில் ரவுடிகள் மத்தியில் நடந்துவரும் ஒரு பெரிய யுத்தத்தின் தொடர்கதை என்கிறது காவல்துறை வட்டாரம். ""கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து சென்னைக்குப் பிழைக்க வந்த மலையாளி கிருத்துவர் பாப்பச்சனின் மகன்தான் பினு. சிறு வயதிலேயே குடும்பத்திற்கு அடங்காமல் வளர்ந்த பினு, 1988-ல் சூளைமேட்டில் டீக்கடையை ஆரம்பிக்கிறான். ஏரியாவில் ஓரளவு முகம் தெரிய ஆரம்பித்ததும், சின்னச் சின்ன கிரிமினல் வேலைகளிலும் மாமூல் வசூலிலும் இறங்குகிறான். இதனால் ஏரியாவில் ரவுடியாக ஃபார்மாகி, மற்ற கிரிமினல் ரவுடிகளுடன் நட்பாகி, அதன் மூலம் நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்துகள் என கலக்க ஆரம்பிக்கிறான்.

benu

போட்டி ரவுடிக் கும்பலில் இருந்த மூன்று பேரின் தலையை வெட்டிய பின், ’தலைவெட்டி’ பினுவாக அவதாரம் எடுக்கிறான். தென்சென்னையின் பிரபல ரவுடியான சி.டி.மணியுடன் சிநேகமானான் பினு. ஒருமுறை மீடியா நிறுவனத்தை சேர்ந்த கார் டிரைவர் ஒருவரைப் போடுவதற்காக, மீடியா வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்த பினு டீம், அந்த வாகனம், ஒரு பெரிய கட்சி ஆபீசின் வாசலுக்குள் நுழைந்ததால் மிரண்டுபோய் திரும்பியது. 2013-ல் பூந்தமல்லியில் ஒருவனை போட்டுத் தள்ளியதோடு தலைமறைவானவன்தான், இப்போது 2018-ல் அரிவாளால் கேக் வெட்டி, போட்டோவுக்கு போஸ் கொடுத்து சீனுக்கு வந்திருக்கிறான். அவன்மீது 27 வழக்குகள் பதிவாகின. அதில் ஒன்று மட்டும் கொலை வழக்கு.

Advertisment

பினு, அவனது கூட்டாளிகள் கனகு, ராதா, விக்கி ஆகிய நால்வருக்கும் பொதுவான ஒரு நண்பன் உண்டு. அவன் பெயர் பாபு. பாபுவுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவன் பெயர் உமர். அந்த உமருக்கும் பாபுவுக்கும் சண்டைவர... ராதா என்கிற ரவுடி மூலம் உமர், பாபுவை கொலை செய்துவிடுகிறான். அதுவரை ராதாவும் பினுவும் தொழில்ரீதியான நண்பர்களாகத்தான் இருந்தார்கள். "எங்களது நெருங்கிய நண்பனான பாபுவை ஏன் கொன்றாய்? பாபுவுடன் சண்டை போட்ட உமரை நாங்கள் கொலை செய்கிறோம். நீ ஒதுங்கிவிடு' என பினுவும் கனகுவும், ராதாவிடம் சண்டைபோட, ராதா (எ) அரும்பாக்கம் ராதாவும் பினுவும் விரோதிகளாகிவிட்டார்கள்.

madanராதா-பினு சண்டையில் ராதாவுக்கு ஆதரவாக குதிக்கிறார் சிறையிலிருக்கும் ரவுடியான நாகேந்திரன். ஏற்கெனவே பினுவுடன் கருத்து மோதலில் இருந்த பழைய கூட்டாளியான சி.டி.மணி என்கிற ரவுடியும் நாகேந்திரன் தலைமையில் சென்னை நகரில் உள்ள அனைத்து விவகாரங்களிலும் தலையிடுகிறார்கள். அதே நேரத்தில் பினுவுக்கும் குறிவைக்கப்படுகிறது.

பினு தலைமறைவாகி கரூருக்கு சென்று தங்கிவிடுகிறான். அங்கிருந்தபடியே ராதாவை கொலை செய்ய முயற்சிசெய்து வருகிறான். அவனது நண்பர்களான கனகு, விக்கி, சங்கர், சித்தார்த், சரத், பினு நடத்திய பிறந்தநாள் விழாவைக் காட்டிக்கொடுத்த பல்லுமதன் ஆகியோர் தலைமறைவாக இருந்த பினுவுக்கு அவ்வப்போது பணம் வழங்கி அவனை உற்சாகமாக வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் சென்னையில் பினுவுக்கு 50-ஆவது பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டு, பல்லுமதன் மூலம் போலீஸிடம் விஷயம் லீக்காகி, ரவுடிகள் மொத்தமாகச் சிக்கினர்.

Advertisment

அந்த பரபரப்பு நேரத்தில், அடர்ந்த முட்பாதை வழியே தப்பித்த பினு திருவள்ளூருக்கு லாரியில் போனான். அவனது மனைவி மினி, ஒரே மகன் அபியை போலீசார் கஸ்டடிக்கு கொண்டுவர... திருவள்ளூருக்கு ஓடிப்போன பினு, அம்பத்தூர் டி.சி. சர்வேஷ் முன்பாக சரண்டரானான். சிட்டி கமிஷனர் விஸ்வநாதன் தொடங்கி, ஆவடி ஏ.சி. நந்தகுமார்வரை பல போலீஸ் அதிகாரிகள் இந்த ஆபரேஷனை கண்ணும் கருத்துமாக மேற்கொண்டார்கள். ரவுடி ராதாவையும் சி.டி.மணியையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது'' என்று பினு பிடிபட்டதை விவரிக்கிறது காவல்துறை வட்டாரம்.

barதாதாக்களின் நிழல் உலகில் விசாரித்தால், பினுவின் பின்னணி குறித்து கூடுதல் தகவல்கள் கிடைக்கின்றன. “""கொஞ்ச காலமாகவே பினு எந்த ரவுடியிசத்திலும் ஈடுபடாமல் ஒதுங்கி, தலைமறைவா இருந்தது உண்மைதான். ஆனால், அப்பப்ப சென்னைக்கு வருவதும், வரமுடியாவிட்டால் தன் ஆட்கள் மூலம் நினைத்த வேலைகளை செய்வதும் நடந்துகொண்டுதான் இருந்தது. இதில் அரசியல் தொடர்புகளும் நிறைய உண்டு.

2013-ஆம் ஆண்டு தலைமறைவுக்குப் பின், அ.தி.மு.க., தி.மு.க. உட்பட அனைத்து பெரிய கட்சிகளின் பெரியபுள்ளிகளுடன் நெருக்கமானான் பினு. பெரிய புள்ளிகளுடன் நெருக்கமாவதற்கு பெட்டி, புட்டி, குட்டி இந்த மூன்றும்தான் துருப்புச்சீட்டு. இதில் மூன்றாவது சீட்டு மூலம் அ.தி.மு.க. கேபினட்டில் உள்ள இப்போதைய சீனியர் அமைச்சர் ஒருவரை நெருங்கினான் பினு. அந்த சீனியர் வழியாக சில அமைச்சர்கள், அவர்கள் வழியாக சில நிர்வாகிகள், அவர்கள் மூலமாக பிரபலங்கள் என பினுவின் கிளுகிளு ராஜ்ஜியம் விரிவடைந்து கொண்டே போனது.

2016 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. தரப்பில், சென்னையின் ஒரு சில தொகுதிகளுக்கு பணப்பட்டுவாடா பண்ணும் வேலை பினுவிடம் ஒப்படைக்கப்படும் அளவுக்கு தி.மு.க. நிர்வாகிகளிடமும் செல்வாக்கு வளர்ந்திருந்தது. சென்னையில் அ.தி.மு.க. அமைச்சரைத் தோற்கடித்து எம்.எல்.ஏ. ஆனவர், சென்னையை ஒட்டியுள்ள மாவட்ட செயலாளர். இப்படி தி.மு.க. தரப்பிலும் பலரிடம் பினு நல்ல நெருக்கம் காட்டினான். இரண்டு பெரிய கட்சிகளின் தொடர்பால் தேசிய கட்சிகள்-மாநிலத்தில் உள்ள சிறிய கட்சிகள் ஆகியவற்றில் உள்ள பெருந்தலைகள், போலீஸ் அதிகாரிகள் என நெருக்கம் வளர்ந்து அது சினிமாவுலகத் தொடர்பு வரை கொண்டு சென்றது.

தலைமறைவு வாழ்க்கையில் சென்னைக்கு வந்து செல்லும்போது பினுவின் லைஃப் ஸ்டைலும் மாற்றம் கண்டிருக்கும். சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம் (எம்.ஆர்.சி. நகரில்) உள்ள சோமர்செட் ஹோட்டலும் அங்குள்ள ரேடியோ ரூம் என்கிற பெயரிலான பாரும்தான் பெரும்புள்ளிகளை சந்திக்கும் மீட்டிங் பாயிண்ட். சினிமா நடிகர்-நடிகைகளின் வருகை இங்கே சகஜம் என்பதால், தேவைப்படும் அமைச்சர்களுக்குத் தேவைப்படும் வசதிகளை செய்துகொடுக்கும் "பிம்ப்' வேலையில் கைதேர்ந்தவனானான் பினு.

பினு தன் வாயிலிருந்து முழு உண்மைகளையும் கொட்டினால் என்னாகுமோ என்று அதிர்கின்றன அ.தி.மு.க-தி.மு.க. பெருந்தலைகள். பினுவுக்கோ என்கவுண்ட்டர் பீதி. அதிர்ச்சியும் பீதியும்தான், "நான் அவ்வளவு பெரிய ரவுடி இல்லை. 50 வயசான சுகர் பேஷண்ட்' என அடக்கி வாசித்து அலற வைத்திருக்கிறது'' என்கிறார்கள் நிலவரம் அறிந்த ரவுடிகள் வட்டாரத்தினர்.

நிழலும் இருளும் வெளியே தெரியாதபடி மின்மினி வெளிச்சம் பாய்ச்சும் சினிமாத்துறையில் பினு பற்றி விசாரித்தோம். ""கமல்ஹாசன், அமலாபால் எனப் பல நட்சத்திரங்களுக்கும் ஸ்பெஷல் சூட் இருக்கும், சோமர்செட் ஓட்டல் அடிதடி ரகளைகளுக்கும் பஃப் சமாச்சாரத்துக்கும் பிரசித்தமானது. தனது தொழிலை மேம்படுத்த இந்த சோமர்செட் ஓட்டலைத்தான் மீட்டிங் பாயிண்டாகப் பயன்படுத்த ஆரம்பித்தான் பினு. இந்த ஓட்டலில் அடிதடி ரகளை நடத்திய நடிகர் கருணாசின் டிபெண்டர் குரூப் ஆட்களுடனும், அவர்கள் மூலம் ஒரு சாதிக்கட்சியின் மாநில மகளிரணித் தலைவியான பூனை நடிகையின் கூடாரத்திற்குள்ளும் ஐக்கியமானான் பினு'' என்றனர்.

இந்த சோமர்செட் ஓட்டலில் இப்போது ரூம் எடுத்து தங்கியிருக்கும் புதிய வாடிக்கையாளர் நடிகர் சிம்பு. பெர்மனெண்ட் ரூம் இங்கே என்றாலும், மணிரத்னம் டைரக்ஷனில் "செக்கச் சிவந்த வானம்' படத்தில் கமிட் ஆகியிருப்பதால், உடலைக் குறைப்பதற்காக அருகில் உள்ள லீலாபேலஸ் ஓட்டல் ஜிம்முக்குப் போய் ஒர்க் அவுட் செய்து ஸ்லிம்மாகி வருகிறார் சிம்பு. சோமர்செட் ஓட்டலில் உள்ள "ரேடியோ ரூம்' என்கிற பப் ஹால் செம பாப்புலர். சென்னையின் பல ஸ்டார் ஓட்டல் பப்களுக்கும் பார்களுக்கும் நுழைவுக் கட்டுப்பாடுகள் அதிகம். ஷூ அணியாவிட்டால் அனுமதிக்க மறுக்கும் பார்கள் உண்டு. ரேடியோ ரூமில் ரொம்ப கெடுபிடி செய்யாமல் தாராளம் காட்டுவார்கள். சினிமா பிரபலங்கள், இளம் தொழிலதிபர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகளின் கூட்டத்தால் நிரம்பி வழியும் ரேடியோ ரூம். ஹீரோயின்களுடனான டிஸ்கஷனுக்கான டீலிங்குகள் இங்கே நடத்தி முடிக்கப்படுவது வழக்கம். இதில் பினு போன்ற பலர் மீடியேட்டர்களாக இருக்கிறார்கள்.

தாதாத்தனமும் அதன்பிறகு மாமாத்தனமும் பினுவின் செல்வாக்கை உயர்த்தியபோதும், அவனது மனைவி மினி, பினுவின் தொல்லையும், போலீஸ் தொல்லையும் தாங்க முடியாமல் புறநகர்ப் பகுதி ஒன்றில் பதுங்கி வாழ்கிறார். பினுவின் ஒரே மகனான அபிக்கு வயது 20. அதிகம் படிக்காத அபி, ஆட்டோ ஓட்டி அம்மாவை காப்பாற்றிவருகிறார். பினு போன்ற ரவுடிகளால் சமூகத்திற்கு மட்டுமல்ல... சொந்தக் குடும்பத்திற்கும் எந்தப் பயனுமில்லை. ஆனால், அரசியல்வாதிகள்-தொழிலதிபர்கள்-சினிமாக்காரர்கள்-உயரதிகாரிகள் பலரும் கிவ் அண்ட் டேக் பாலிசியில் பலனடைந்துள்ளனர்.

-கீரன், தாமோதரன் பிரகாஷ், பரமேஷ்

ஸ்பெஷல் டின்னர் வில்லங்கம்!

amalapal

சோமர்செட் ஹோட்டல் நடிகர்-நடிகைகளின் மேனேஜர்கள் புழங்குகிற இடம் என்பதால் பிரதீப் என்கிற சினிமாவுலக மேனேஜரைப் பலருக்கும் தெரியும். அமலாபால், ஹன்ஸிகா, இனியா, நிவேதா பெத்துராஜ், ரம்யா நம்பீசன், ‘"மேயாத மான்'’ இந்துஜா, ராய்லட்சுமி ஆகிய ஏழு ஹீரோயின்களுக்கும் மேனேஜராக இருப்பவர் பிரதீப். போலீசில் அமலாபால் தந்திருக்கும் பாலியல் தொல்லை புகாரில் சம்பந்தப்பட்டவர்களுடன் பிரதீப்புக்கு அறிமுகம் உண்டு என்கிறது சினிமா வட்டாரம். ஆனால், பிரதீப்புக்கு இதில் எந்தத் தொடர்புமில்லை என இரண்டு முறை ஸ்டேட்மெண்ட் தந்திருக்கிறார் அமலாபால்.

டான்ஸ் பயிற்சியின் போது அமலாபாலிடம் மலேசியா ஸ்டார் நைட் ஸ்பெஷல் டின்னர் பற்றி பேசியவர் அழகேசன். இவர் மீதுதான் அமலாபால் முதலில் புகார் தந்தார். ஹோட்டல்களில் ஈவென்ட் நடத்துபவரான அழகேசனுக்கு, கானாத்தூரில் நிலம் வைத்துள்ள சையது இப்ராகிமின் மகன் ரசாக் அகமதுவும் அவரது நண்பர் சைதை டேனியல் பாஸ்கரும் நட்பாகிறார்கள். ஈ.சி.ஆரில் வைபவ் என்கிற நிகழ்ச்சியை அழகேசன் நடத்தியபோது, தனது நட்பு வட்டத்தின் மூலமாக தி.நகரில் டான்ஸ் ஸ்கூல் நடத்தும் ஸ்ரீதர் அறிமுகமாகி, நெருக்கமாகிறார். அதனால்தான், ஸ்ரீதரின் டான்ஸ் ஸ்கூலுக்கு வந்த அமலாபாலிடம் சென்று, மலேசியா பார்ட்டியின் ஸ்பெஷல் டின்னருக்கு உரிமையுடன் அழைப்பு விடுத்திருக்கிறார். இப்ராகிம் அழைத்தார் என்று அழகேசன் சொன்னாலும், உண்மையில் டின்னருக்கு ஆசைப்பட்டவர் மலேசியாவை சேர்ந்த மாலிக். இவரும் சோமர்செட் மற்றும் லீலாபேலஸ் ஹோட்டல்களில் அடிக்கடி தங்குபவராம். மாலிக்கிற்காகப் பேசிய அழகேசனின் லிங்க் வேறு ரூட் என்பதால்தான், மேனேஜர் பிரதீப் குற்றமற்றவர் என அமலாபால் தொடர்ந்து வலியுறுத்துகிறாராம்.

-பரமு, அரவிந்த்