"பேங்குகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஆட்டையப் போட்டவனையெல்லாம் வெளிநாட்டுக்குத் தப்பவிட்ருங்க. சந்து பொந்து இண்டு இடுக்குகளில் நின்னுக்கிட்டு, ஹெல்மெட் போடாம வர்றவனை பத்து பேர் சுத்தி வளைச்சு பாடாப்படுத்துங்க".’ கடந்த வாரம் வாட்ஸ்-அப்களில் வலம் வந்தது இது. அது இந்த வாரம் உண்மையாகி, ஒரு பெண்ணின் உயிரையே பறித்துவிட்டது, அதுவும் கர்ப்பிணியை.

usha-death

சாலை விபத்துக்களால் உயிரிழப்பைத் தடுக்கும்விதமாக கொண்டு வரப்பட்டதுதான் ஹெல்மெட் அணியும் கட்டாயச் சட்டம். மாநகரங்களில் இருந்து சிறு நகரங்கள் வரை, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவோரைப் பிடித்து ஃபைன் போடுகின்றனர் போக்குவரத்துப் போலீசார். ஆனால் திருச்சியிலோ, ஃபைன் போட்டால் மட்டும் போதாது, மாதம்தோறும் 50 வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்பது, கமிஷனர் அமல்ராஜின் உத்தரவாம். இதனால் திருச்சி நகரின் அனைத்து சிக்னல்களிலும் நின்று கொண்டு, ஹெல்மெட் அணியாமல் வரும் டூவீலர்காரர்களை நோக்கி சீறிப்பாய்ந்து வருவார்கள் போக்குவரத்து போலீசார்.

RI-Kamarajஅப்படித்தான் கடந்த 07-ஆம் தேதி இரவு 8.30 மணியளவில், தனது 4 மாத கர்ப்பிணி மனைவி உஷாவுடன் தஞ்சையிலிருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார் ராஜா. துவாக்குடி டோல்பிளாசா அருகே வந்து கொண்டிருந்த போது, ராஜா ஹெல்மெட் போடாமல் வருவதைப் பார்த்த டிராபிக் ஆர்.ஐ. காமராஜ், வண்டியை மறித்த போது, வேகத்தைக் குறைத்திருக்கிறார் ராஜா. ஆனாலும் காமராஜ், ராஜாவின் சட்டையைப் பிடித்திழுக்க, இதனால் மேலும் பயந்து போய், வண்டியை வேகமாக ஓட்டி, நிற்காமல் சென்றுவிட்டார்.

Advertisment

இது மேலும் ஆத்திரத்தைக் கிளப்ப, தனது டூவீலரை காட்டுத்தனமாக ஓட்டிச் சென்றபடி விரட்டியிருக்கிறார். திருவெறும்பூர் பாய்லர் தொழிற்சாலை கணேசா ரவுண்டானாவில் ராஜா வண்டியை நிறுத்த முயற்சித்த போது, வெறித்தனமாக, ராஜாவின் வண்டியை காலால் எட்டி உதைத்திருக்கிறார் காமராஜ். இந்த அதிர்ச்சியில் நிலைகுலைந்த தம்பதியினர் அப்படியே ரோட்டில் மயங்கி விழுந்துவிட்டனர். இதைப் பார்த்து அலறியபடி ஓடி வந்த பொதுமக்கள் 108-க்கு போன் செய்து ஆம்புலன்ஸில் ஏற்றி, கணவனையும் மனைவியையும் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

trichy-incident

ஆனால் வரும் வழியிலேயே உஷா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததும் ஆத்திரமான மக்கள் திருச்சி-தஞ்சை சாலையில் மறியலில் குதித்துவிட்டனர். ஆறு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்ததால், எட்டு அடி, பத்து அடி கம்புகளுடன் களத்தில் குதித்த போலீஸ் அதிரடிப்படை, பொதுமக்களை விரட்டி விரட்டி அடித்தது. இந்த கம்படியில் ஐந்து பேருக்கு மண்டை உடைந்தது. ஆர்.ஐ. காமராஜை கைது செய்வதாகச் சொல்லி, மறியலைக் கைவிட சமாதானம் பேசினார் மாநகர டி.சி.சக்தி கணேசன்.

Advertisment

மக்களின் கோபாவேசத்திற்குப் பயந்த காமராஜ், தப்பி ஓடிவிட்டார்.

-ஜெ.டி.ஆர்