சுதந்திர போராட்டத்தை புரட்சியின் மூலம் முன்னெடுத்த மண், தூத்துக்குடி. கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., தூத்துக்குடியில் ஆலை நிர்வாகத்துக்கு எதிராக மூட்டிய கிளர்ச்சித் தீ இன்னும் அணையவில்லை என்பதைக் காட்டும் வகையில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு எதிராக பெருங்கூட்டமாய் மக்கள் திரண்டு போராட இருக்கிறார்கள்.
""முத்துக்குளித்த தூத்துக்குடி கடலில் இன்றைக்கு இறாலும், நண்டும் கூட அகப்படுவதில்லை. தூத்துக்குடி மக்கள் நச்சுக் காற்றை சுவாசிக்கிறார்கள். மீளவிட்டானில் ஆடுகள் செத்து விழுந்ததும், சில்வர்புர மக்கள் மலடுகளாய் மாறிக்கொண்டிருப்பதும், வீரபாண்டிபுரத்தில் பலரின் சிறுநீரகம் செயல் இழந்து போனதும், புதியம்புத்தூரில் குழந்தைகளின் சிறுநீரகத்திலும் கற்கள் விளைந்திருப்பதும், காலாங்கரை பெரியநாயகிபுரத்தில் புற்றுநோய் தொற்றுவதும், மில்லர்புரம் காய்கறிச் சந்தை தொடங்கி ரோச் பூங்காவரை மூச்சுத் திணறலால் தடுமாறிக்கொண்டிருப்பதும், முப்போகம் விளைந்த தாமிரபரணி பாசன விளைச்சல் இன்றைக்கு ஒரு போகத்திற்கே வக்கற்றுப் போனதும் எதனால்?
தாமிர உருக்காலையான ஸ்டெர்லைட்டின் நச்சுக் கழிவுகளால்தானே? இந்த நச்சாலையை வேரடி மண்ணோடு அப்புறப்படுத்த வேண்டாமா?''
இப்படிப்பட்ட தாக்கங்களால்தான் தூத்துக்குடி மக்கள் ஒன்றுதிரளத் தொடங்கினார்கள். இந்த ஆலைக்கு எதிராக ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுப்பவர் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ.
""இதுதான் நமக்கான தருணம். நமக்கென்ன என்று நாம் ஒதுங்கி நின்றால், நமது சந்ததிகள் வாழத் தகுதியில்லாத பூமியாகிவிடும் நம் தூத்துக்குடி. வாருங்கள் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமெனப் போராடுவோம்'' -தூத்துக்குடி தன்னார்வலர்கள் அழைப்பு விடுத்தனர்.
24-03-18 சனிக்கிழமை ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கடையடைப்பு என்று அறிவித்தார்கள் வியாபாரிகள். மாலையில் கண்டனப் பொதுக்கூட்டத்திற்கு நீதிமன்றத்தில் அனுமதி வாங்கியிருந்தனர் தூத்துக்குடி மாநகர மக்கள்.
தூத்துக்குடி காமராஜர் காய்கனி மார்க்கெட் காலையிலேயே மூடப்பட்டு விட்டது. தூத்துக்குடி மாநகரில் மட்டுமின்றி, சிவத்தையாபுரம், முத்தையாபுரம், ஸ்பிக்நகர், முள்ளக்காடு, திருவைகுண்டம், புதியம்புத்தூர் உள்பட பல ஊர்களிலும் வியாபாரிகள் தாங்களாகவே கடைகளை அடைத்தனர். மீனவர்கள் கடலுக்குப் போகவில்லை.
மாணவர்களும் இளைஞர்களும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான கண்டன வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை டூவீலர்களிலும் கார்களிலும் ஒட்டி, கண்டனக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அவசியத்தை உணர்த்தினர்.
மதுரை மீனாட்சி, மதுரை குரு, சென்னை அடையாறில் உள்ள கேன்சர் இன்ஸ்டிடியூட், திருவனந்தபுரம் புற்றுநோய் மருத்துவமனைகள் சிகிச்சை பெறும் புற்று நோயாளிகளில் அதிகம் தென்படுபவர்கள் தூத்துக்குடி மக்கள்தான் என்பதையெல்லாம் தூத்துக்குடி இளைஞர் துண்டறிக்கைகள் மூலம் வெளிப்படுத்தினர்.
தூத்துக்குடி மாநகரும் புறநகரும் சனிக்கிழமை மாலையில் கண்டனப் பொதுக்கூட்டத்திற்கு தயாராயின. இக்கண்டனக் கூட்டத்தை, கடையடைப்பை, மக்கள் எதிர்ப்பைக் குலைப்பதற்காக, ஒரு வாரமாகவே சில தனியார்களும் மாவட்ட நிர்வாகமும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும் திட்டமிட்டு செயலாற்றின.
""சனிக்கிழமை அனைத்து லாரிகளும் வழக்கம் போல இயங்கும்'' என்று தி.மு.க. முன்னாள் மா.செ. பெரியசாமியின் மகன் ஜெகன் வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்தார். "ஸ்டெர்லைட்டால் நாம் பெற்றுக் கொண்டிருக்கும் நன்மைகள்' என்று சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது டி.டி.வி. தினகரனின் பெருமாள்சாமி அணி.
"சனியன்று (24-03-18) பழைய பேருந்து நிலையம் அருகில் இந்திய வாலிபால் போட்டி, கடற்கரையில் உணவுத் திருவிழா, நாய்கள் கண்காட்சி, திருச்செந்தூரில் வேலைவாய்ப்பு முகாம்' என்று மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி மக்களை திசை திருப்பிக்கொண்டிருந்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடும் மக்களைத் திரட்டிக்கொண்டிருந்ததாக மகேஷ், முருகன், வக்கீல் விமல் ராஜேஷ்ராஜ், துரைப்பாண்டியன், வேல்ராஜ், ஆல்பர்ட் சாமுவேல், சுஜித், பேராசிரியர் பாத்திமாபாபு ஆகிய எட்டு பேர் மீதும் வழக்குப் பதிந்த தென்பாகம் காவல்துறை சனிக்கிழமை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சம்மன் கொடுத்தது. ஆனால், இந்தக் குறுக்குச் சால்கள் எதுவும் ஸ்டெர்லைட் நச்சாலைக்கு எதிரான மக்கள் மனநிலையை குலைத்து விடவில்லை.
தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே நடக்கும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு மாலை 3 மணிக்கே மக்கள் வருகை தொடங்கியது. 5 மணிக்கெல்லாம் முப்பதாயிரத்தை தாண்டியது மக்கள் கூட்டம். தமிழ்நாட்டில் எந்த ஒரு ஆலைக்கு எதிராகவும் இவ்வளவு பெரிய கூட்டம் திரண்டதில்லை.
அ.குமாரரெட்டியாபுரம் மக்கள் தலைமையேற்ற இக்கண்டனக் கூட்டத்தில் ஒவ்வொருவர் பேச்சும் உணர்ச்சிப் பிழம்பாகக் கிளம்பியது. பலருக்குப் பின் மேடையேறிய வணிகர் சங்க வெள்ளையன் தன் பங்கிற்கு ஆளும் அரசை சாடினார்.
வீட்டிற்கு இருவர் என்ற ரீதியில், கண்டனக் கூட்டத்திற்கு வந்திருந்த மீனவர்கள், ""மன்னார் வளைகுடா தேசியக் கடல்வளப் பூங்காவில் இருந்து 25 கி.மீ. தொலைவிற்கு அப்பால்தான் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது விதி. ஆனால் ஆறு கி.மீ. தொலைவில் ஸ்டெர்லைட் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஸ்டெர்லைட்டின் நச்சுக் கழிவுகள் தூத்துக்குடி மக்களை, சுற்றுப்புற விவசாயத்தை, கடலைக் கடுமையாக பாதித்துக்கொண்டிருக்கிறது. மக்களின் ஆரோக்கியத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறது ஸ்டெர்லைட். இதை நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும்'' என்றனர்.
""நல்ல நிலத்தை இழந்து, நல்ல நீரை இழந்து, நல்ல காற்றை இழந்து உயிர் வாழ்வதற்குப் போராடும் சூழலை உருவாக்கிவிட்டது ஸ்டெர்லைட். இந்த நச்சு ஆலையை மூடியாக வேண்டும்'' மக்கள் நெஞ்சில் பசுமரத்து ஆணியாய் பதித்தது தூத்துக்குடி மக்களின் கண்டனப் பொதுக்கூட்டம்.
-நாகேந்திரன்