""கேரளாவுக்கோ கர்நாடகாவுக்கோ தேயிலைத் தோட்டத்துல வேலைக்குப் போறதாத்தானே சொல்லிட்டுப் போனாரு. இப்போ இப்புடி பொணமா ஆக்கிட்டாங்களே. என் புள்ளைகள எப்புடி வளர்க்கப் போறேன்''’என்று கதறுகிறார் சின்னப்பையன் என்பவரின் மனைவி கண்ணம்மாள்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை ஒட்டிய மலைக் கிராமங்களான கிரண்காடு, அடியனூர், கீழவரை ஆகிய ஊர்களைச் சேர்ந்த சி.முருகேசன், சி.ஜெயராஜ், ஏ.முருகேசன், சின்னப்பையன், கருப்பணன் ஆகிய 5 பேர் 25 நாட்களுக்கு முன் ஏஜெண்ட் ஒருவருடன் வேலை தேடிச் சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் 5 பேரும் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள வொண்டிமிட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியில் அழுகிய நிலையில் மிதந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

tamilpeople

2 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் 21 பேரை செம்மரம் கடத்தியதாக ஆந்திரப் போலீஸ் சுட்டுக்கொன்றது. அது இன்றுவரை நீதிமன்றங்களில் இழுபட்டுக் கொண்டிருக்கிறது. மனித உரிமை ஆணையத்தின் கண்டனத்துக்கு ஆளான பிறகு, ஆந்திரப் போலீஸ் புதிய வழிகளில் தமிழர்களை பழிதீர்க்கிறது. செம்மரம் வெட்டுவதற்காகத்தான் வந்தார்கள் என்று தடாலடியாகத் தமிழர்களை கைது செய்து துன்புறுத்துவதை வாடிக்கையாக்கியது.

Advertisment

இந்நிலையில்தான், தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் ஏரியில் பிணமாக மிதந்துள்ளனர். சுய உணர்வு உள்ள யாரும் மூழ்கிச் சாகுமளவுக்கு அந்த ஏரி ஆழமானது அல்ல என்கின்றன ஆந்திராவின் மனித உரிமைக் குழுக்களே. ""தாக்கப்பட்டார்களா என்பதற்கான காயங்கள் தெரியாத அளவுக்கு 5 உடல்களும் அழுகியிருக்கின்றன. கொடூரமாக தாக்கிக் கொன்று ஏரியில் வீசியிருக்க வேண்டும்'' என்று அவர்கள் சொல்கிறார்கள்.

""எங்களுடைய உண்மை கண்டறியும் குழுவினர் ஏரிக்குச் சென்று ஆய்வு நடத்தினார்கள். அந்த ஏரி 6 அடிக்கும் குறைவான ஆழம் கொண்டது. நினைவிழந்த நிலையில் வீசப்பட்டிருந்தால்தான் அவர்கள் இறந்திருக்க வாய்ப்பு உண்டு. அதாவது அவர்களை தாக்கி, கொன்று ஏரியில் வீசியிருக்க வேண்டும். எனவே, நிபுணர்குழுவின் உதவியோடு மீண்டும் பிரேத பரிசோதனையை நடத்த வேண்டும். பரிசோதனையை முழுமையாக வீடியோ எடுக்க வேண்டும்''’என்கிறார் மனித உரிமை ஆர்வலர் சைதன்யா.

tamilpeople

Advertisment

""உயிரிழந்த 5 பேரும் மரம் வெட்ட வந்தவர்கள்தான் என்பதற்கு எதுவுமே ஆதாரம் இல்லை. இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரித்தால்தான் உண்மை வெளிவரும்''’என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

கடப்பா போலீஸ் கூறுவது வேறுவிதமாக இருக்கிறது. இந்த 5 பேரும் சித்தூரில் இருந்து கடப்பாவுக்கு லாரியில் சென்றதாகவும், அங்குள்ள வொண்டிமிட்டா வனத்துக்கு லாரியில் செல்லும்போது கடப்பா செம்மர தடுப்பு போலீஸ் பிரிவு தடுத்து நிறுத்தியதாகவும் கூறுகிறார்கள். தடுக்கப்பட்டவுடன், "எல்லோரும் குதித்து ஓடுங்கள்' என்றபடி 5 பேரும் தப்பி ஓடியதாகவும், அப்போது ஏரிக்குள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து சகதியில் சிக்கி இறந்திருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஆந்திர போலீஸை பற்றி தெரிந்தவர்கள் இதை நம்பத் தயாராக இல்லை.

ஏரியில் மிதந்த உடல்களை கைப்பற்றி, அடையாளம் தெரிந்தவுடன் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்களுடைய கிராமங்களை சோகம் அப்பிக்கொண்டது. அழுகுரல் நெஞ்சைப் பிளப்பதாக இருந்தது.

ashirvatham

இறந்த முருகேசனுக்கு உண்ணாமலை என்ற மனைவியும், பழனியம்மாள், மீனா, ரோஜா என்கிற மகள்களும் உள்ளனர். இவர்களில் ரோஜாவுக்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகவில்லை. கோவிந்தராஜுக்கு கருயா என்கிற மனைவியும், வனிதா என்ற 3 வயது பெண் குழந்தையும், தினேஷ் என்கிற 5 மாத கைக்குழந்தையும் உள்ளனர். முருகேசனுக்கு பழனியம்மாள் என்ற மனைவியும் மணிகண்டன், அசோக், ஐஸ்வர்யா என 3 குழந்தைகளும் உள்ளனர். கருப்பணனுக்கு 23 வயதாகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. அம்மா பார்வதி, செல்வி, மணி என உடன் பிறந்தவர்கள் உள்ளனர். சின்னப்பையன் என்பவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவியும், சந்தோஷ், சதீஷ், சிவனேசன் என்ற மகன்களும் உள்ளனர்.

""பிரேதப் பரிசோதனை முடிவு வர இரண்டு மாதமாகும். அவை வந்தபின்னரே முழுவிவரம் தெரியவரும்'' என்றார் கடப்பா ராஜீவ்காந்தி மருத்துவமனை மருத்துவர் அனந்தகுமார்.

அதேசமயம், ""போலீஸ் தாக்கியதால்தான் இவர்கள் இறந்துள்ளதாகவும், தாக்குதலில் ஒருவர் உயிர் தப்பியிருப்பதாகவும், அவர் வெளியே வந்தால் உண்மைகள் தெரியவரும்'' என்றும் மக்கள் கண்காணிப்பக தமிழ் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே இதுபோல அங்கு சென்று தப்பி வந்த தொழிலாளி ஒருவர், ""கட்டிட வேலைன்னு சொல்லித்தான் ஏஜெண்ட்டுகள் கூட்டிக்கிட்டுப் போறாங்க. பொழைப்புக்காக போனதும்தான் செம்மரம் வெட்டுறது மாதிரியான சட்டவிரோத வேலைன்னு தெரியுது. உசுரு பொழைச்சுத் திரும்புறதே சிரமம்தான்'' என்றவர், தன் பெயரையும் குறிப்பிடவில்லை... தன்னை அழைத்துச் சென்றவர்களையும் காட்டிக் கொடுக்கவில்லை.

தமிழக முதல்வரின் மாவட்டத்திலிருந்தே மோசடி ஏஜெண்ட்டுகளால் அப்பாவித் தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டு அநியாயமாக கொல்லப்படுகிறார்கள். இதைத் தடுக்க முதல்வர் கையில் உள்ள காவல்துறை எதுவும் செய்யவில்லை. தன் மாவட்டத்தில் பலியானவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம் என "ரேட்' போட்டு முடித்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.