மூன்று கடல்கள்... முன்னூறு பிரச்சினைகள்... இதுதான் குமரி மாவட்டத்தின் நிலைமை. மீனவ கிராமங்களை ஓகி புயல் தாக்கியது. அந்தப் பாதிப்பு அகலுமுன், வர்த்தக துறைமுகத்திற்கு எதிரான போராட்டங்கள். இவற்றோடு குழந்தை கடத்தல் பதட்டங்களும் சேர்ந்துகொண்டுவிட்டன.
வடமாநிலத்தவர்கள் குழந்தைகள் உள்ள வீடுகளில் கறுப்பு ஸ்டிக்கர்களை ஒட்டி, சவால்விட்டு குழந்தைகளைக் கடத்துகிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் பூதாகரமாய் பரவிய செய்தி பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் கன்னியாகுமரி அருகே கோவளம் மீனவ கிராமத்தில் ஜோசப்ராஜ் என்பவருடைய வீட்டில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. அங்கு மூன்று வயதிற்குட்பட்ட இரண்டு குழந்தைகளும் உள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த ஜோசப்ராஜ் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் விசாரித்து அந்த ஸ்டிக்கர் குழந்தைகள் விளையாட்டுக்காக ஒட்டப்பட்டது என்றார்.
ஆனால் இதேபோல் கறுப்பு ஸ்டிக்கர் அடுத்த சிலநாட்களில் குளச்சல் தூய அந்தோணியார் தெருவில் இரண்டு வீடுகளிலும்; மிடாலம் மற்றும் மேலமணக்குடியில் அடுத்தடுத்து மூன்று வீடுகள
மூன்று கடல்கள்... முன்னூறு பிரச்சினைகள்... இதுதான் குமரி மாவட்டத்தின் நிலைமை. மீனவ கிராமங்களை ஓகி புயல் தாக்கியது. அந்தப் பாதிப்பு அகலுமுன், வர்த்தக துறைமுகத்திற்கு எதிரான போராட்டங்கள். இவற்றோடு குழந்தை கடத்தல் பதட்டங்களும் சேர்ந்துகொண்டுவிட்டன.
வடமாநிலத்தவர்கள் குழந்தைகள் உள்ள வீடுகளில் கறுப்பு ஸ்டிக்கர்களை ஒட்டி, சவால்விட்டு குழந்தைகளைக் கடத்துகிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் பூதாகரமாய் பரவிய செய்தி பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் கன்னியாகுமரி அருகே கோவளம் மீனவ கிராமத்தில் ஜோசப்ராஜ் என்பவருடைய வீட்டில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. அங்கு மூன்று வயதிற்குட்பட்ட இரண்டு குழந்தைகளும் உள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த ஜோசப்ராஜ் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் விசாரித்து அந்த ஸ்டிக்கர் குழந்தைகள் விளையாட்டுக்காக ஒட்டப்பட்டது என்றார்.
ஆனால் இதேபோல் கறுப்பு ஸ்டிக்கர் அடுத்த சிலநாட்களில் குளச்சல் தூய அந்தோணியார் தெருவில் இரண்டு வீடுகளிலும்; மிடாலம் மற்றும் மேலமணக்குடியில் அடுத்தடுத்து மூன்று வீடுகளிலும் ஒட்டப்பட்டது.
மேலும் சில கிராமங்களில் குழந்தைகளைக் கடத்திச் சென்றிருப்பதாகவும் அதில் ஒன்றிரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டிருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வந்துகொண்டிருந்ததால் ஆரோக்கியபுரம் முதல் நீரோடிவரை உள்ள 43 மீனவ கிராமங்களிலும் பெற்றோர்கள் பதட்டம் அடைந்தனர்.
இதனால் குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு கொண்டுவிட்டுக் காத்திருந்து அவர்களை அழைத்து வரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். அதேபோல் குழந்தைகளை விளையாடுவதற்குக்கூட வீட்டு முற்றத்தில் கூட அனுமதிக்காமல் உள்ளனர்.
திருவனந்தபுரம் தைக்காட்டிலிருந்து வட மாநில பெண் ஒருவர் ஒருவயது பெண் குழந்தையை கடத்தி வந்தபோது மார்த்தாண்டத்தில் வைத்து பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவமும் சமூக வலைத்தளத்தில் பரவியதால் மீண்டும் பதட்டமானார்கள் குமரி பெற்றோர்கள்.
இதைத் தொடர்ந்துதான் குமரி மாவட்டத்தில் எந்தப் பகுதியிலும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்தால் அவர்களை பொதுமக்கள் பிடித்து, கட்டி வைத்து அடிக்கும் பல சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
இதில் உதயமார்த்தாண்டம் அருகே மிடாலத்தில் புனித சேவியர் தொடக்கப்பள்ளியின் காம்பவுண்ட் அருகில் நின்றுகொண்டு பள்ளிக் குழந்தைகளை உற்று நோக்கிக்கொண்டிருந்ததாக வட மாநிலத்துக்காரர் ஒருவரை ஆசிரியர்கள் பிடித்து பொதுமக்களிடம் கொடுத்தனர். அவரை பொதுமக்கள் கை, கால்களை கட்டி அடித்து உதைத்து பின்னர் கருங்கல் போலீசில் ஒப்படைத்தனர்.
அதேபோல் மணக்குடி கிராமத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 3 பேரையும் பிடித்து மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்து உதைத்தபோது அதில் பெண்வேஷத்தில் இருந்த இரண்டு பேர் ஆண்கள் என தெரியவந்தது. இதனால் அவர்கள் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள்தான் எனக்கூறி சுசீந்திரம் போலீசில் ஒப்படைத்தனர்.
இதேபோல் வாணியக்குடியில் அங்கன்வாடி மையம் அருகில் மதியம் வடமாநில வாலிபர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்தனர். அந்த வாலிபரைக் கண்டு பயந்துபோன அங்கன்வாடி ஆசிரியை ரெஞ்சிதம் சத்தம் போடவே... பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர்.
குளச்சல் போலீசார் அந்த வாலிபரை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அந்த வாலிபர் கொஞ்சநேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அதுபோல் மண்டைக்காடு புதூரில் ஒரே தெருவில் நான்கு வீடுகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. அந்தத் தெருவில் உள்ள சர்ச் வளாகத்தில் குழந்தைகள் சிலர் விளையாடிக்கொண்டிருந்தனர். அந்தக் குழந்தைகளை குப்பைகள் பொறுக்குவதுபோல் நோட்டமிட்டு வட மாநில வாலிபர் ஒருவர் உற்று நோக்கிக்கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த அந்த சர்ச் பாதிரியார் மண்டைக்காடு போலீசுக்கு தகவல் கொடுத்தார். ஆனால் போலீஸ் வருவதற்குள் பொதுமக்கள் அந்த வாலிபரை கட்டிவைத்து வெளுத்துவாங்கிவிட்டார்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய மா.கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதி அந்தோணி, ""கடந்த சில மாதங்களாக கேரளாவில் இதேபோல் வடமாநில கும்பல் ஊடுருவி அங்குள்ள வீடுகளில் சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டி குழந்தைகளை கடத்துவதாக தகவல் பரவியது. உடனே உஷாரான கேரள போலீசார் அவர்களைத் துரத்தியடித்ததால், அந்தக் கும்பல் குமரி மாவட்டத்தில் தஞ்சம் அடைந்துள்ளது.
அந்தக் கும்பல் குப்பைகள் பொறுக்குவது போலவும் வியாபாரிகள் போலவும் வீடுகளில் நோட்டமிட்டு குழந்தைகளை கடத்திச்சென்று அவர்களின் கண்களை எடுத்தும், ஊனமாக்கி வட மாநிலங்களில் பிச்சையெடுக்க வைக்க இதற்காக அங்குள்ள ஒரு கும்பலிடம் விற்பதாகவும் தகவல் வருகிறது. எனவே இந்த விசயத்தில் போலீசார் மெத்தனமாக இல்லாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
இது குறித்து மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாத்திடம் கேட்டபோது, ""வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் வரும் தகவல்களை நம்பி மக்கள் அச்சப்பட வேண்டாம். கடந்த சில வாரங்களாக குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக எந்த வழக்குப்பதிவும் செய்யப்படவில்லை. மேலும் வீடுகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் உடனடியாக தனிப் பிரிவுக்கு பொதுமக்கள் புகார் செய்ய செல் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகப்படும்படியாக பொதுமக்கள் பிடித்துக்கொடுத்த நபர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். பொதுமக்கள் தாக்கியதில் இரண்டுபேர் உள்ளூரைச் சேர்ந்த வியாபாரிகள். இது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபடவேண்டாம்'' என கேட்டுக்கொண்டார்.
நடவடிக்கை கடுமையாகவும் முறையாகவும் இருந்தால் பொதுமக்களிடம் பீதியும் பதட்டமும் குறையும்.
-மணிகண்டன்