இணையதள வருகைக்குப் பின் உலகம் மிகவும் சுருங்கிவிட்டது. இருந்த இடத்திலிருந்தே மின் கட்டணம் முதல் சகல கட்டணத்தையும் செலுத்திவிடலாம். வங்கியில் பணம்போடுவதும் எடுப்பதும்கூட மொபைலிலேயே சாத்தியமாகிவிட்டன. ஒருசில க்ளிக்குகளில் உங்கள் கணினி, மொபைல் திரைகளில் படத்தைப் பார்த்துவிடலாம்.
தொழில்நுட்பத்தின் இந்த சாத்தியத்தை, பாலியல் வியாபாரிகள் கவனிக்காமல் இருப்பார்களா? இனி, பாலியல் சேவையைத் தேடி நீங்கள் எங்கும் அலையவேண்டியதில்லை. ஊர்வாரியாகவும், பெருநகரங்களில் ஏரியாவாரியாகவும் சேவையை விஸ்தரித்திருக்கிறார்கள் இந்த "சிவப்பு' விளக்குச் சிந்தனையாளர்கள்.
இந்தச் சேவையை "லோகான்டோ' எனும் வலைத்தளம் வழங்குகிறது. சென்னையை எடுத்துக்கொண்டால் வேளச்சேரி, அண்ணாநகர், தி.நகர் என ஏரியாவாரியாக சேவையளிப்பதாகச் சொல்கிறார்கள். அடிக்கடி இணையதள பெயரை டைப்செய்ய சிரமமாக இருக்கிறது, இணையதள பெயர் மறந்துவிடுகிறது என்பவர்களுக்கு, இதனை மொபைல் ஆப் ஆக தரவிறக்கிக் கொள்ளவும் வழிசெய்திருக்கிறார்கள்.
"மசாஜ் -மணிக்கு 3000 ரூபாய்' என விளம்பரம் செய்யப்பட்டாலும், அது மசாஜ் சேவை மட்டுமல்ல... அதற்கும் மேலே. கொடுக்கப்பட்ட புகைப்படங்களிலிருந்து நீங்கள் விரும்பும் அழகிய இளம்பெண்களைத் தேர்வுசெய்து சேவையைப் பெற்றுக்கொள்ளலாம். அவர்களைத் தொடர்புகொள்வதற்கு வசதியாக தொலைபேசி எண்ணும் வலைத்தளத்திலே இடம்பெற்றிருக்கிறது.
இந்த வலைத்தளங்களின் முக்கிய இலக்கு காசுள்ள இளைஞர்கள். வட இந்தியாவில் இருக்கும் இந்த குரூப், ஆன்லைன் மூலமாகத் தொடர்புகொள்பவர்களை நாடிபிடித்து பசையுள்ள பார்ட்டியென்றால் தமிழ்நாட்டிலுள்ள த்ரீ ஸ்டார், பைவ் ஸ்டார் ஓட்டல்களில் ரூம் போட்டு, விபச்சாரத்துக்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். ஸ்டார் ஓட்டல்களில், பெரிய அளவு ரெய்டு தொல்லை இருக்காது என்பதால், இத்தகைய காஸ்ட்லியான ஹோட்டல்களைத் தேர்வுசெய்கிறார்கள்.
அவர்கள் கொடுத்த எண்ணுக்குத் தொடர்புகொண்டால் உடனே உங்களுக்கு சேவை அளித்துவிடமாட்டார்கள். முதலில் உங்கள் பெயர், தொலைபேசி எண்ணைவைத்து உங்களைப் பற்றி ஒரு ஜட்ஜ்மெண்ட்டுக்கு வருவார்கள். முடிந்தால், உங்கள் பேஸ்புக்வரை போய் நோண்டி பிரச்சினையில்லாத பார்ட்டியா என பார்ப்பார்கள். திருப்தியானதும்தான் அடுத்தகட்ட நகர்வுக்குச் செல்வார்கள்.
சென்னையில் துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், ஈ.சி.ஆர். ரோடு, கோயம்பேடு, அண்ணாநகர், கோடம்பாக்கம், மாங்காடு, திருவேற்காடு, அடையாறு, வால்டாக்ஸ் ரோடு என பலபகுதிகளில் இந்த ஆன்லைன் விபச்சாரம் பிஸியாக நடக்கிறது.
சரி, இதையெல்லாம் காவல்துறை கண்டுகொள்வதில்லையா?
சென்னையில் விபச்சாரத் தடுப்புப் பிரிவுக்கென்று ஒரு அசிஸ்டென்ட் கமிஷனரும், அவருக்குக் கீழ் ஏ1, ஏ2 என இரு இன்ஸ்பெக்டர்களும் உண்டு. சென்னைக்கு உட்பட்ட பகுதிகள் ஏ1-ன் கீழும், சென்னைக்கு வெளியேயுள்ள பகுதிகள் ஏ2-ன் கீழும் வரும்.
கொஞ்சகாலம் காவல்துறையில் விபச்சார தடுப்புப் பிரிவு ஏ.சி. பணியிடம் காலியாக இருந்தது. ஏ1 இன்ஸ்பெக்டர் முனுசாமியும் மாற்றப்பட, சென்னை -நந்தம்பாக்கம் இன்ஸ்பெக்டராக இருந்து, பனிஷ்மெண்ட் டூட்டியாக நான்காண்டு காலம் சென்னைக்கு வெளியே பணிகொடுக்கப்பட்ட சரவணன் ஏ1-ஆக அந்த இடத்திற்கு வந்துள்ளார். கொங்கு மண்டலத்தின் தமிழக "மணி'யான அமைச்சரொருவரை கனமாகக் கவனித்தே இந்த போஸ்டிங்குக்கு வந்துள்ளாராம்.
செலவழித்த தொகையை அப்படியே விட்டுவிட முடியுமா? மசாஜ் பார்கள், லாட்ஜுகளுக்கு அடிக்கடி ரெய்டுவிட்டார். அதில் தேவையானவை தேறியதும், பாலியல் பிசினஸ் தரப்புடன் உடன்பாடுக்கு வந்துவிட்டாராம். இதனால் தொழிலும் தெளிவாக நடக்கிறது. வரவும் அமோகமாக இருக்கிறதாம்.
இந்தக் குற்றச்சாட்டுகளுடன் சென்னையில் தொய்விலிருந்த விபச்சாரம் மீண்டும் சூடுபிடித்திருக்கிறதே என்று சரவணனிடம் கேட்டபோது, “"நான் பணிக்கு வந்தே 10 நாட்கள்தான் ஆகிறது. கமிஷனர் உத்தரவின்பேரில் ஸ்ட்ரிக்டாக ரெய்டு நடத்தி வழக்குப் போட்டேன். அதனால் என் பெயருக்குக் களங்கம் விளைவிக்க போலிப் புகார்களையும் புரளிகளையும் கிளப்பிவிடுகிறார்கள்'’என விளக்கமளித்தார்.
ஆரணியில், அறுவடைக்குக் காத்திருந்த நிலத்தில் ட்ராக்டரை ஓட்டி, நீதிபதியின் கண்டனத்துக்கு ஆளாகி பணி மாறுதல் பெற்ற ஜெரினாபேகம் சென்னை விபச்சார தடுப்புப் பிரிவு ஏ.சி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆன்லைன் விபச்சாரம், ஆப் லைன் விபச்சாரம் எனும் அபரிமித விளைச்சல் காட்டும் களைகளின்மீது கடமை எனும் ட்ராக்டரை ஜெரினா ஓட்டுகிறாரா… பார்க்கலாம்.
-அ.அருண்பாண்டியன்