முக்கியமான சிலரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளது நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன்.

ஜெயலலிதாவுக்கு 16 வயது இருக்கும்போது துணியில் பட்டன் தைப்பது, ஓரம் அடிப்பது என டெய்லராக கார்டனுக்குள் நுழைந்த ராஜம்மாள்... பிறகு வீட்டை சுத்தம் செய்வது,… ஜெ.வுக்கு டீ, காஃபி போட்டுக் கொடுப்பது என ஆரம்பித்து முழுநேர சமையல்காரராக 50 வருடங்களுக்கு மேலாக ஜெ.வுடன் இருந்திருக்கிறார். ஒருகட்டத்தில், ராஜம்மாளுக்கு வயதாக, ""ராஜம்… நீங்க எந்த வேலையும் செய்யவேணாம்... சூப்பர்வைஸ் பண்ணினா போதும்''’என்று அன்புக் கட்டளையிட்டார் ஜெ.

jaya

ஜெ. ஒருமுறை விமானத்தில் ஹைதராபாத் செல்ல, சசிகலா காரில் செல்ல... ஜெ.வின் செல்ல நாய்க்குட்டியான ஜூலியை ட்ரெயினில் எடுத்துச்சென்றார் ராஜம்மாள். போகும் வழியிலேயே ஜூலி இறந்துவிட, சசியின் பயணம் ரத்தாகி டெல்லியிலிருந்து சென்னைக்கு பறந்துவந்த ஜெ., "உன்னோட அலட்சியத்தாலதான் ஜூலி செத்துப்போச்சு'’என்ற கோபத்தில் ராஜம்மாளை கார்டனிலிருந்து விரட்டினார். பிறகு, சில வருடங்கள் கழித்து மீண்டும் என்ட்ரி ஆன ராஜம்மாள், ஜெ.வின் மரணத்திற்குப் பிறகுதான் கார்டனிலிருந்து வெளியேறினார்.

Advertisment

சசிகலா வருவதற்கு முன்பிருந்து கிட்டத்தட்ட 50 வருடங்களாக வீட்டுவேலை செய்துகொண்டிருப்பவர் ராஜம்மாள். அவரை தங்கள் பக்கம் வைத்துக்கொண்டது சசிகலா தரப்பு. ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ராஜம்மாளுக்கு மருத்துவ ரீதியாக தெரியவில்லை என்றாலும்கூட ஜெ.வின் உணவுப் பழக்கவழக்கம், உடல்... மனரீதியான வலி வேதனைகளை நன்கறிந்திருப்பவர் ராஜம்மாள்.

ஜெயலலிதா என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிடுவார்? அவரது உணவுப் பழக்கவழக்கத்தை கண்ட்ரோலில் வைத்திருந்தது யார்? எந்தெந்த மருத்துவர்கள் என்ன மாதிரியான உணவு வகைகளை சாப்பிடச் சொன்னார்கள்? எப்போது முதல் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார்? அவருக்கு, மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொடுப்பது யார்? என பல்வேறு கேள்விகளை கேட்டிருக்கிறார் நீதிபதி.

jaya

Advertisment

ஜிலேபி, நெய்தோசை என பிடித்த உணவு வகைகளை இஷ்டத்துக்கு சாப்பிடுவார் ஜெ. "மேம்...… நீங்க சாப்பிடக்கூடாது' என்று அன்பாக நர்ஸ்கள் எடுத்துச்சொன்னால், ""பார்த்தியா சசி,… இவளுங்ககிட்ட புடிங்கிதான் தின்னவேண்டியதா இருக்கு. எதுவும் சாப்பிடக் கொடுக்கமாட்டேங்குறாங்க'’என்று செல்லமாக கோபித்துக்கொள்கிற ஜெ., ‘""எனக்கென்ன பிள்ளையா குட்டியா? நான், இன்னும் எத்தனை வருஷம் உயிரோட இருப்பேன்னு தெரியல. எனக்கு பிடிச்சது சாப்பிடுறதுதான். அதையும் ஏன் தடுக்கிறீங்க?''’என்று அடிக்கடி எமோஷனல் அட்டாக் செய்து விரும்பிய உணவுகளை சாப்பிட்டுவிடுவார் ஜெயலலிதா. இதையும் வெளிப்படுத்தியிருக்கிறார் ராஜம்மாள். "ஜெ.வுக்கு பிடித்த உணவுவகைகளை கொண்டுபோய் கொடுப்பதில் சசிகலா ஆர்வம் காட்டுவாரே தவிர, மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொடுப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டமாட்டார். இளவரசி, இளவரசியின் மகள்கள் பிரியா, ஷகிலா உள்ளிட்டவர்கள்தான் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொடுப்பார்கள்' என்றும் ஆணைய விசாரணையில் சொல்லியிருக்கிறார் ராஜம்மாள்.

ஓ.பி.எஸ். அணியில் இருந்தபோது பி.ஹெச்.பாண்டியனும் அவரது மகன் மனோஜ்பாண்டியனும் ஜெ. மரணத்தில் உள்ள சந்தேகங்களை பிரஸ்மீட்டில் ஓப்பனாகப் பேசியிருந்தார்கள். இந்நிலையில், மனோஜ்பாண்டியனுக்கு விசாரணைக் கமிஷனிலிருந்து சம்மன் வந்ததையடுத்து பிப்ரவரி 21-ந் தேதி நேரில் ஆஜரானார். ஜெ. மரண சந்தேகம் தொடர்பான தன் வசமிருந்த ஆதாரங்களை சமர்ப்பித்ததுடன், நமது நக்கீரன் இதழில், "படம் இங்கே? கால்கள் எங்கே? விசாரணை ஆணையத்தின் பார்வைக்கு!' என்ற அட்டைப்படச் செய்திக் கட்டுரையையும் நீதிபதியிடம் காட்டினார். அத்துடன், "அப்பல்லோவில் ஜெ.' என நக்கீரன் வெளியிட்ட புத்தகத்தையும், ஜெ. மரண சர்ச்சை தொடர்பாக யூ-டியூப்பில் நக்கீரன் ஆசிரியர் பேசியதன் இணைப்பையும் கொடுத்தார். "இதில் உள்ள தகவல்கள் மிக முக்கியமானவை. குறிப்பாக, கால் குறித்த சந்தேகம் பொதுமக்களுக்கும் உள்ளது. அதை, விசாரித்து உண்மையறிய வேண்டும்' என மனோஜ்பாண்டியன் தெரிவித்தபோதும் நீதிபதி, டாக்டர் சுதாசேஷய்யன் வாக்குமூலம் அளித்தபோது, எம்பாமிங் சமயத்தில் கால்களைப் பார்த்ததாகக் கூறியுள்ளார். இருப்பினும் முழுமையாக விசாரித்து உண்மை அறியப்படும் என உறுதியளித்துள்ளார்.

ராமானுஜம் உளவுப்பிரிவு டி.ஜி.பி.யாக இருந்தபோதுதான் சசிகலா தரப்பில் சதிவலைகள் பின்னுவதாக, ஜெ.வுக்கு புகார் போய், சசிகலா கார்டனிலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும், தமிழக அரசின் ஆலோசகராகவும் ஜெ.வின் நம்பிக்கைக்குரிய ஸ்லீப்பர்செல்லாகவும் இருந்ததால் முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜத்திடமும் 22-ந்தேதி விசாரித்துள்ளது ஆணையம். 25 வருடங்களுக்கும் மேலாக ஜெ.வுக்கு டிரைவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்த ஐயப்பன் 23-ந் தேதி ஆஜரானார். இவர், லீவு போட்டால் மட்டுமே டிரைவர் கண்ணன் கார் ஓட்டுவார். அதிர்ந்துகூட பேசாத ஐயப்பன், உதவியாளர் பூங்குன்றனைப்போன்று சசிகலாவின் குடியிருப்பில்தான் வசித்துவருகிறார். 23-ந்தேதி ஆஜரான ஐயப்பனிடமும் ஜெ.வின் உடல்நலம் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டிருக்கிறது ஆணையம். ஆனால், பெரும்பாலானவர்கள் சசிகலாவின் கண்ட்ரோலில் இருப்பதால் முழுமையான உண்மைகள் கிடைக்காமல் தவிக்கிறது ஆணையம். ஆனால், அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து பல வருடங்களாக ஜெ.வின் ரத்த மாதிரிகளை எடுத்துச் சென்ற ஜோசப்பிடம் ஆணையம் இன்னும் விசாரணை நடத்தவில்லை.

இந்நிலையில், "ஜெ.வின் மகள்' என்று சொல்லிக்கொண்டு வழக்கு தொடுத்த அம்ருதா, டி.என்.ஏ. பரிசோதனைக்கு உத்தரவிடக்கோரியதால், ஜெ.வின் ரத்த மாதிரிகள் உள்ளிட்டவைகளை அப்பல்லோவிடம் கேட்டிருக்கிறது நீதிமன்றம்.

-மனோசௌந்தர்

படங்கள்: எஸ்.பி.சுந்தர் & குமரேஷ்……