isha

"தமிழகம் இதுவரை அறிந்த சிவராத்திரி நடைமுறைகளை, பக்தியை கேலிக்கூத்தாக்கி கும்மாளம் அடித்திருக்கிறார் ஈஷா மையத்தின் ஓனர் ஜக்கி வாசுதேவ்' என்று புலம்பித் தவிக்கிறார்கள் சிவ பக்தர்கள்.

வெள்ளியங்கிரி மலையே அதிரும் வகையில் இரவு முழுவதும் மேற்கத்திய இசைக்கருவிகள் உள்பட பலவற்றையும் அதிரச் செய்தது ஈஷா நிறுவனம். லட்சக்கணக்கான வாகனங்களின் கரும்புகை வெள்ளியங்கிரி மலைமீது படியவும், அந்த வாகனங்களில் வந்த மேட்டுக்குடியினர் ஆட்டம் போடவும், இந்த கண்ராவிகளுக்கெல்லாம் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜு, வேலுமணி ஆகியோரும், அதிகாரிகளும் சாட்சியாக அமர்ந்து ரசிக்கவுமாக சிவராத்திரிக் கொண்டாட்டங்களை நடத்தி முடித்திருக்கிறார் ஜக்கி.

தமிழகத்தின் கிராமங்களில் "நமச்சிவாய வாழ்க' என்ற மந்திரங்களுடன் சிவராத்திரியை கொண்டாடுவது வழக்கம். விடிய விடிய விழித்திருக்கும் பக்தர்களுக்கு ஒவ்வொரு காலபூஜைக்கும் பொங்கல்-சுண்டல் என எளிமையான பிரசாதம் வழங்கப்படும். திருநீறு தயாரிப்பதற்காக காய்ந்த பசுஞ்சாண உருண்டைகளை மூட்டம் போட்டு எரிப்பார்கள். சாமி ஊர்வலம் நடைபெறும் கோயில்களில், வீதியுலா முடியும்வரை மக்கள் விழித்திருப்பார்கள். இவையெல்லாமே எளிமையாக நடக்கும் விழாக்கள். ஆனால், கோடிக்கணக்கான ரூபாயை விளம்பரங்களுக்காகச் செலவு செய்து அந்த பக்தி ததும்பும் பாரம்பரிய நிகழ்ச்சியை ஆடம்பரப் பெருவிழாவாக நடத்தியிருக்கிறது ஈஷா.

Advertisment

isha1

தமன்னா உள்ளிட்ட சினிமா பிரபலங்களையும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களையும் தனக்கு துணையாக வைத்துக்கொண்டு, மிகப்பெரிய வசூல் கொள்ளையையும் நடத்தியிருக்கிறார். சிவன் சிலை அருகே அமர ரூ.50 ஆயிரம் என்றும், தன்னுடன் நடனமாடவும், புகைப்படம் எடுக்கவும் விதவிதமாக கட்டணம் நிர்ணயித்திருக்கிறார்.

கடவுள் வழிபாட்டை கார்ப்பரேட் மயமாக்கியதுடன், வனத்தின் அமைதியையும், வனவிலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்க்கையையும் சீரழித்திருக்கிறார்.

Advertisment

ishadanceஈஷா மையத்தில் எழுப்பப்பட்ட அதிர்வோசைகளால் மான்கள் தெறித்து ஓடி, வழி தெரியாமல் ஊருக்குள் நுழைந்திருக்கின்றன. கிணத்துக்கடவு மயிலேறிபாளையத்திற்குள் நுழைந்த ஒரு மானை நாய் துரத்த, பொதுமக்கள் பதறிப்போய் வனத்துறைக்கு தகவல் சொன்னார்கள். யானைகளும் அதிரடி ஓசையால் தங்கள் பாதையைவிட்டு விலகி திசைமாறியிருக்கின்றன. இரைதேடச் சென்ற தாய்ப்பறவையின் வரவுக்காக குஞ்சுகள் பசியோடு தவித்திருக்கின்றன. அதேநேரத்தில், வணிக நோக்கில் நடத்தப்பட்ட ஈஷாவின் சிவராத்திரி கூத்தில் குவிந்த கூட்டம் தின்ற தீனியால் சுற்றுச்சூழல் பெருமளவில் மாசுபட்டுள்ளது. இத்தனை நடந்தாலும், அரசாங்கமே தேடிவரும் ஈஷா நிறுவனத்தை வனத்துறையின் கீழ்நிலை அதிகாரிகளால் என்ன செய்யமுடியும்?

"வனத்தின் பூர்வகுடிகளான தங்களுடைய நிலத்தை ஜக்கி அபகரித்துக்கொண்டது குறித்து எத்தனையோமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும், அந்த மனுக்கள் கண்டுகொள்ளப்படவில்லை' என்று குமுறுகிறார் முத்தம்மாள். பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த இவர் "சிவன் பேரில் ஜக்கி வாசுதேவ் நடத்தும் அத்தனை அசிங்கக் கூத்துக்களுக்கும் அந்த சிவன் ஒருநாள் முடிவுகட்டுவான்' என்று சாபம்போல சொல்கிறார்.

சமூக ஆர்வலர்களான வழக்கறிஞர் பன்னீர் செல்வமும், கிணத்துக்கடவு செந்தில் குமாரும் நக்கீரனிடம் பேசும்போது,…"“"சிவனுக்குரிய சிவராத்திரி அன்று தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்கள் அனைத்திலும் பக்தர்கள் கூடுவார்கள். இரவு முழுவதும் கண்விழித்து சிவபுராணம் பாடுவார்கள். "ஓம் நமசிவாய' என்ற மந்திரத்தை ஓதுவார்கள். அன்னதானம் வழங்குவார்கள். தென் கயிலாயம் என்று கருதப்படும் வெள்ளியங்கிரி மலையிலும் சிவபக்தர்கள் குவிவார்கள். ஆனால், ஈஷா மையம் அமைந்தபிறகு அந்த பக்தர்கள் தடுக்கப்படுகிறார்கள். கோடீஸ்வரக் கூட்டத்தையும் சினிமாக்காரர்களையும் அழைத்துவந்து கூத்துக்காட்டத் தொடங்கிவிட்டார்''’என்றார்கள்.

தன்னையே கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் போக்கு இந்து மதத்தில் பரவத் தொடங்கியிருக்கிறது. மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எதிராக பொங்கும் இந்துத்வா குழுக்களும் தலைவர்களும், சிவராத்திரியையே மேற்கத்திய கலாச்சாரத்துக்கு மாற்றியிருக்கிற ஜக்கி வாசுதேவின் இந்த நடவடிக்கையை கண்டுகொள்வதில்லை. மவுனமாக இருப்பதன் மர்மமும் புரியவில்லை.

கர்நாடகத்திலிருந்து வந்த ஜக்கி வாசுதேவ், இப்போது பல்லாயிரம் கோடி சொத்துகளுக்கு எப்படி அதிபரானார். இந்தச் சொத்துகளுக்கு வரி செலுத்துகிறாரா? அதிகாரிகள் யாரிடமாவது கணக்கு இருக்கிறதா? என்று அவருக்கு நெருக்கமான ஆட்களே கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஆன்மிகம் போதிப்பவர் எளிமையாக இருக்கவேண்டும். ஆனால், ஆடம்பரத்தையே அடிப்படையாக போதிக்கும் ஜக்கியைப் போன்றவர்கள் ஆன்மிகத்தை வியாபாரமாக்கி லாபம் பார்க்கிறார்கள்.

ஆட்டைக்கடித்து மாட்டைக் கடித்து ஆளையே கடிக்கும் நிலை என்பதைப்போல, மலையடிவாரத்தில் ஈஷா மையம் அமைத்துவிட்டு, இப்போது, வெள்ளியங்கிரி மலை ஏறிச் செல்லும் சிவ பக்தர்களையே தடுக்கும் நிலை உருவாகி இருக்கிறது. "ஏழை பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பறிக்க ஜக்கி வாசுதேவுக்கு யார் உரிமை கொடுத்தது?' என்று கொந்தளிக்கிறார்கள் பக்தர்கள்.

-அருள்குமார்