மிழகத்தையே சோகத்திலும் கோபத்திலும் ஆழ்த்தியது கர்ப்பிணி உஷாவின் உயிரைப் பறித்த போலீஸின் செயல்பாடு. திருச்சி ஆர்.ஐ. காமராஜின் காக்கி வெறித்தனத்துக்குப் பலியானார் உஷா.

தஞ்சையை அடுத்த பாபநாசம் அருகேயுள்ள சூலமங்கலத்தைச் சேர்ந்தவர் தர்மராஜா. மருத்துவமனையில் தன் மனைவி உஷாவின் உடலைப் பார்த்து அழுதுகொண்டிருந்த ராஜாவிடம் பேசினோம். ""நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி துறையில் எம்.ஏ. படித்தேன். படிக்கிறப்ப குண்டூர் பகுதியில் மானஸா மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் பேச முடியாத குழந்தைகளுக்கு ஸ்பீச் தெரபி கொடுத்துக்கிட்டிருந்த உஷா அறிமுகமானா. ரெண்டுபேரும் வெவ்வேற மதம்கிறதால, வீட்டில் எங்க காதலுக்கு எதிர்ப்பு இருந்தது. எதிர்ப்பை மீறி திருமணம் நடந்துச்சு.

usha

உஷாவுக்கு மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பேச சொல்லிக்கொடுக்கும் வேலை பிடிச்சதால, தஞ்சை எம்.ஆர்.எம். பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தார். நானும் தஞ்சாவூர்ல எஸ்.எம்.ஐ. ரெக்கவரி ஏஜென்ஸியில வேலைபார்த்து வந்தேன்.

Advertisment

மனைவி முதல்முறை கர்ப்பம்தரிச்சு கொஞ்சநாளிலே கலைஞ்சுபோச்சு. மறுபடி இப்பதான் அவ கருத்தரிச்சிருந்தா. உஷாவோட பிரண்டுக்கு காரைக்குடியில திருமண நிச்சயதார்த்தம் இருந்துச்சு. திருச்சி போய் அவங்கம்மா வீட்டுல தங்கிட்டு, அடுத்தநாள் நிகழ்ச்சிக்குப் போகலாம்னு வண்டியில கிளம்பினோம். துவாக்குடியில போக்குவரத்து போலீசார் என் வண்டியை மறிச்சாங்க. உஷாவோட பிரண்டுக்கு பரிசா வாங்கியிருந்த டேபிள்டாப் கிரைண்டரும் வண்டியில இருந்ததால, சொன்ன இடத்துல நிறுத்தமுடியாம கொஞ்சம் தள்ளி நிறுத்தினேன். அதுக்குள்ள காமராஜ் என் சட்டையைப் பிடிச்சு இழுத்து வண்டியை நிறுத்தி, சாவியைப் பிடுங்கினார். எனக்கு கோபம் வந்து, "நான் என்ன திருடனா சார்? அவசரமா ஊருக்குப் போயிக்கிட்டிருக்கோம்'னு சொன்னேன். ஏன் ஹெல்மெட் போடலைன்னு கன்னா பின்னான்னு பேசுன காமராஜ், என்ன நினைச்சாரோ… வண்டியிலயே சாவியை விட்டுட்டுப் போயிட்டாரு.

மனைவியோட இருக்கிறதால விட்டுட்டாருன்னு நினைச்சு, கிளம்பிவந்துட்டேன். ஆறு கிலோமீட்டர் தொலைவு தாண்டிட்டேன். பாய்லர் தொழிற்சாலைகிட்ட கணேஷா வளைவுல வந்துக்கிட்டிருக்கோம்... என் மனைவி, "இங்க பாருங்க அந்த போலீஸ்காரர் ஸ்கூட்டில வேகமா விரட்டி வந்துக்கிட்டிருக்கார்'னா. நான் திரும்பிப் பார்க்கிறதுக்குள்ள நெருங்கிவந்த அவர் என் வண்டிய எட்டி உதைச்சார். நான் நிலை தடுமாறிட்டேன்.

dharmarajவண்டிய நிறுத்தலாம்னு நினைச்சு ஓரம்கட்டுறதுக்குள்ள திரும்ப ஒருமுறை உதைச்சார். நிதானிக்குறதுக்குள்ள மூணாவது முறையா உஷாவோட தொடைமேலயே உதைச்சார். நானும் உஷாவும் நிலைதடுமாறி ரோட்டுல விழுந்தோம். அப்புறம் நடந்ததுதான் தமிழ்நாட்டுக்கே தெரியுமே… எங்களுக்காகப் போராட வந்த மக்கள் கூட்டத்தை தடியடி நடத்திக் கலைச்சாங்க. கல்லூரி மாணவர்கள் சிலரையும் சிறையில அடைச்சிருக்காங்க''’என்றார் குரலில் சோகம் கம்ம.

Advertisment

பாய்லர் ஆலை போலீசார், இன்ஸ்பெக்டர் காமராஜ் மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்து மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி, திருச்சி சிறைக்குக் கொண்டுசென்றனர். சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள அவரை, சக கைதிகள் யாரும் கோபத்தில் தாக்கிவிடக்கூடாது என்பதற்காக, பாதுகாப்பான அறையில் வைத்துள்ளனர்.

பிரச்சினையில் சிக்கிக்கொள்வது ஆர்.ஐ.காமராஜுக்கு புதிதல்ல என்கின்றனர் திருச்சி காவல்துறையைச் சேர்ந்தவர்கள். சில வருடங்களுக்கு முன்பு திருவெறும்பூர் பகுதியில், விரட்டி விரட்டி கேஸ் போடுவதாகச் சொல்லி, கைநீட்டிப் பணம் பறித்தவரை பத்திரிகையாளர்கள் ஆன்லைனில் புகார் கொடுத்து ட்ரான்ஸ்பர் செய்தார்கள்.

கடந்த 2002-ல் அவரின்கீழ் பணிபுரிந்த காவலர், அவசரத் தேவைக்காக விடுப்புக் கேட்டுள்ளார். அவரைக் கெட்டவார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார். இதனால் கோபமடைந்த காவலர் துப்பாக்கியை எடுத்து காமராஜை நோக்கிச் சுட்டுள்ளார். அதில் அதிர்ஷ்டவசமாகத் தப்பினார் காமராஜ். ஆனால் சிறிதுகாலத்திலேயே அந்தக் காவலர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தப் பிரச்சினையால் நீண்ட காலம் பணி உயர்வு பெறாமலிருந்த காமராஜ் சமீபத்தில்தான் திருச்சி வந்தார். மீண்டும் தன் திருவிளையாடலை நிகழ்த்திவிட்டார்.

இது ஒருபுறமிருக்க, ஹெல்மெட்டை காரணம் காட்டி, தமிழகம் முழுக்க வசூல் நடக்கிறதென்கிறார்கள் காவல்துறையினர். தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியிலிருக்கிறது. நெடுஞ்சாலைகளையொட்டி உள்ள டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால், மதுபான விற்பனை வருமானமும் குறைந்துள்ளது. இந்நிலையில், முறையாக வருவாயை உயர்த்த வழி தெரியாமல், இந்த கட்டாய வசூல் கெடுபிடியை காவல்துறைமீது விதித்திருக்கிறார்களாம்.

kamarajதிருச்சி புறநகர் மற்றும் மாநகரில் மட்டும் 45 காவல் நிலையங்கள். ஒரு நாளைக்கு 25 ஹெல்மெட் வழக்கு கட்டாயம். திருச்சியின் 90 எஸ்.ஐ.க்களும் இதில் இறங்கினால் ஒரு நாளைக்கு 2,25,000. மாதத்துக்கு 20 நாட்கள் சோதனை கட்டாயம். திருச்சியின் போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் வந்ததிலிருந்து சந்துபொந்துகளிலெல்லாம் வசூலும் வழக்குப்பதிவும் தாறுமாறாக எகிறியிருக்கிறது.

மாநிலம் முழுவதும் இதேபாணியில் கணக்குப்போட்டு கோடிக்கணக்கில் வசூலைக் குவிக்க அரசும் காவல்துறையும் இணைந்து செயல்படுகிறது. "காசே குறியாக இருப்பதால்தான் கர்ப்பிணிப்பெண்ணை எட்டி உதைத்து கொலை செய்திருக்கிறார்கள்' என கோபம் குறையாத குரலில் சொல்கிறார்கள் இந்த ஹெல்மெட் வசூலின் சூட்சுமம் தெரிந்தவர்கள்.

-ஜெ.டி.ஆர்.