மன அமைதிக்காக இமயமலைக்குச் சென்றுவிட்டு சென்னை திரும்பிய ரஜினியை சற்றே மனச்சங்கடத்துக்குள்ளாக்கியுள்ளனர் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள். கடந்த 21-ஆம் தேதி, ரஜினி சென்னை திரும்பியபின், வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, நாமக்கல் மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் ராகவேந்திரா மண்டபத்தில் நடந்தது. இதில் நாமக்கல் மாவட்டத்திற்கு மட்டும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் வட்டச் செயலாளர், பகுதிச் செயலாளர், பூத் கமிட்டிச் செயலாளர் பதவிகளுக்கு லட்சக்கணக்கில் வசூல் வேட்டை நடந்த தகவல் கிடைத்ததால், நிர்வாகிகள் நியமனத்தை பெண்டிங் வைத்துள்ளதாம் ரஜினி மக்கள் மன்றத் தலைமை. என்.எஸ்.ராமதாஸ், சூர்யா, ஓம்சேகர் அடங்கிய மூவர் அணி மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள் சாதாரண நிலையில் இருக்கும் மன்ற நிர்வாகிகள்.
இந்த நிலையில்தான் திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து அதிருப்தி குண்டு வெடித்து, ரஜினியை டென்ஷனாக்கியுள்ளது. ரஜினி ரசிகர் மன்றமாக இயங்கியபோதே மாவட்டத் தலைவர் எஸ்.டி.பாணிக்கும் செயலாளர் தம்புராஜுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். மக்கள் மன்றம் ஆனபின்பு, மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அரசு வேலையை ராஜினாமா செய்தார் தம்புராஜ். அவர் எதிர்பார்த்தது போலவே மா.செ.வாக நியமிக்கப்பட்டார். மா.செ.வாக நியமிக்கப்பட்ட எட்டே நாளில், தம்புராஜின் பதவி பறிக்கப்பட்டு, மாவட்டப் பொறுப்பாளரான அரவிந்த் என்பவருக்கு கூடுதல் பொறுப்பாக மா.செ. பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதைக் கண்டித்து தம்புராஜின் ஆதரவாளர்கள் 146 பேர் ராஜினாமா கடிதத்தை ரஜினியிடம் கொடுக்கப் போவதாக, பத்திரிகையாளர்களிடம் கூறினார்கள். இது தலைமையை மேலும் டென்ஷனாக்க, தம்புராஜ் மீது எதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தெளிவான அறிக்கை வெளியிட்டார் தலைமை நிர்வாகி வி.எம்.சுதாகர். நடுநிலையான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோ, ""மா.செ.வாக அறிவிக்கப்பட்ட அடுத்தநாளிலிருந்தே தம்புராஜின் போக்கே மாறிவிட்டது. தலைமையிலிருந்து அழைப்பு வந்தும் அலட்சியப்படுத்தினார். சுதாகரும் ராஜூமகாலிங்கமும் அனைத்துத் தரப்பு கருத்துகளையும் பொறுமையாக கேட்கக்கூடியவர்கள். ஆனால் தம்புராஜுக்கு பொறுமையும் இல்லை நிதானமும் இல்லை. அதனால் இந்த நடவடிக்கை''’என்கிறார்கள்.
திண்டுக்கல் மாவட்ட நிலவரம் இப்படி என்றால், சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட இருவரில் ஒருவரான கல்லல் ரவிக்குமார் மீதும் பகீர் புகார்கள் கிளம்பத் தொடங்கியுள்ளன.
-ஈ.பா.பரமேஷ்வரன் & சக்தி