தமிழகத்தில், கூட்டுறவுத்துறை, பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை, மீன் வளத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, கூட்டுறவு வீட்டுவசதித் துறை, பனைபொருள் வளர்ச்சி வாரியம், கதர் கிராம தொழில் வாரியம், தொழில் மற்றும் தொழில் வணிகத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை, வேளாண்மைத் துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சி பஞ்சாயத்துராஜ் துறை, பட்டு வளர்ச்சித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, சர்க்கரைத்துறை ஆகிய 15 அரசுத்துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ்வரும் 18,775 சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
வேட்புமனு தாக்கலின்போதே ஆளுந்தரப்பினரின் அத்துமீறலால் எங்கு பார்த்தாலும் அடிதடி, முட்டல் மோதல்கள் அரங்கேறின.
விவசாயத்திலும், தொழிலிலும் மேம்பாடு காண்பதற்கும், உறுப்பினர்களின் சமூக, பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் வழிவகை செய்கிறது கூட்டுறவு சங்கம்.
தமிழகத்தில், கூட்டுறவுத்துறை, பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை, மீன் வளத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, கூட்டுறவு வீட்டுவசதித் துறை, பனைபொருள் வளர்ச்சி வாரியம், கதர் கிராம தொழில் வாரியம், தொழில் மற்றும் தொழில் வணிகத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை, வேளாண்மைத் துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சி பஞ்சாயத்துராஜ் துறை, பட்டு வளர்ச்சித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, சர்க்கரைத்துறை ஆகிய 15 அரசுத்துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ்வரும் 18,775 சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
வேட்புமனு தாக்கலின்போதே ஆளுந்தரப்பினரின் அத்துமீறலால் எங்கு பார்த்தாலும் அடிதடி, முட்டல் மோதல்கள் அரங்கேறின.
விவசாயத்திலும், தொழிலிலும் மேம்பாடு காண்பதற்கும், உறுப்பினர்களின் சமூக, பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் வழிவகை செய்கிறது கூட்டுறவு சங்கம். குறிப்பாக, ஒவ்வொரு கிராமத்திலும், வேளாண்துறை சார்ந்த சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் விவசாயிகள் பெற வேண்டும் என்பதுதான் கூட்டுறவுத்துறையின் முக்கிய நோக்கம். அதனை சிதைக்கும் வகையில் தேர்தலில் ஆளுங்கட்சி வரிந்துகட்டுகிறது.
விருதுநகர் மாவட்ட தி.மு.க. முன்னாள் துணைச்செயலாளரும், எஸ்.பி., எஸ்.பி.எல். 64 கட்டளைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவருமான என்.ஜி.முத்துராமலிங்கத்திடம், "கூட்டுறவு சங்கத் தேர்தலில் ஆளும் கட்சியினர் இத்தனை தீவிரம் காட்டுவது ஏன்?'’என்று கேட்டோம்.
""பொதுவான நடைமுறையைச் சொல்கிறேன்''’என்றவர், ""தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, நிலவள வங்கி, பண்டகசாலை, அக்ரோபெட் என ஏழு வகையான சங்கங்கள் இருக்கின்றன. பயிர்க்கடன், நகைக்கடன், தானிய ஈட்டுக்கடன், இயந்திரங்களுக்கான கடன், தொழில் முனைவோர் கடன், சிறுகடன் என, பல நூறு கோடிகளில், பலவகைக் கடன்கள் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. மண்டல இணை பதிவாளர், மேலாண்மை இயக்குநர் ஆகியோரோடு இணைந்து, கடன் கேட்பவர்களுக்கு நிதியைப் பகிர்ந்து கொடுக்கும் அதிகாரம், நிர்வாகக் குழு உறுப்பினர்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் கூட்டுறவு சங்கத் தலைவருக்கு உண்டு.
கூட்டுறவுத்துறையில் வேலை, ரேசன் கடையில் எடையாளர், விற்பனையாளர் வேலை என அனைத்திலும் தலைவரின் சிபாரிசுக்கு மதிப்பு கிடைக்கும். ஒவ்வொரு போஸ்டிங்குக்கும் தனித்தனி ரேட். மண்ணெண்ணெய் விநியோகம் எப்படி நடக்கிறது தெரியுமா? விநியோகத்துக்கு 4000 லிட்டர் மண்ணெண்ணெய் வருகிறதென்றால், பாதியை வெளிமார்க்கெட்டில் விற்றுவிடுவார்கள். மீதியைத்தான் மக்களுக்கு விநியோகம் செய்வர். வெளி மார்க்கெட் விற்பனையில் கிடைக்கும் தொகையில் குறிப்பிட்ட பங்கு தலைவரிடம் போய்ச் சேர்ந்துவிடும். அரிசி விநியோகமும் அப்படித்தான். நல்ல அரிசி மூட்டைகள் வியாபாரிகளின் கைக்குப் போய்விடும். அவர்கள் ஒதுக்கிய, மட்ட ரகமான அரிசிதான் ரேசன் கடைகளில் மக்களுக்குக் கிடைக்கும். தலைவரை அரிசி வியாபாரிகள் சிறப்பாக கவனித்துவிடுவார்கள்.
அரிசி சாக்கு, சீனி சாக்கு என எல்லா வகையான சாக்குகளையும் விலை வைத்து விற்றுவிடுவார்கள். இதிலும் ஒரு பங்கு தலைவருக்கு உண்டு. நகைக் கடன் வழங்கும்போது, மக்கள் அடகு வைத்த நகைகளை உடனே கணக்கில் காட்டிவிடமாட்டார்கள். ஆடிட்டிங் வரும்போது, அவசர அவசரமாக நகைக்கடன் விவரங்களைப் பதிவு செய்வார்கள். அதுவரையிலும், அந்த நகைக்கடனுக்கு கிடைத்த வட்டியை தலைவர் உள்ளிட்டோர் பகிர்ந்துகொள்வார்கள். கூட்டுறவு சங்கத் தேர்தலில் போட்டியிட்டு, நிர்வாகக் குழு உறுப்பினர் ஆனவர்களுக்கு, ஒவ்வொரு கூட்டத்திலும் சிட்டிங் ஃபீஸ் கிடைத்துவிடும். மேலும், இருப்பில் உள்ள புண்ணாக்கு மூட்டைகள், உர மூட்டைகளை இலவசமாக எடுத்துச் செல்ல முடியும்.
இதனால்தான் தேர்தல் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், மற்றவர்கள் போட்டியிடுவதை ஆட்சி அதிகாரத்தின் மூலம் தடுத்துவிட்டு, போட்டியே இல்லை என்று அறிவிக்கச் செய்து, நிர்வாகக்குழு உறுப்பினர் ஆகிறார்கள். கூட்டுறவு அமைப்புக்குள், அரசியல் முகமூடி அணிந்த போலிகள் ஊடுருவுகிறார்கள். ஆளும் கட்சியின் மாவட்ட செயலாளர்களிலிருந்து, அமைச்சர்கள் வரையிலும், கூட்டுறவுத் தேர்தலில், தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கு வலுவான ஒரு காரணம் உண்டு. கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள், ரேசன் கடைகள் ஆகியவை பொதுமக்களோடு நேரடி தொடர்புடையவை என்பதால், சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களின்போது, ஆளும் கட்சியைச் சேர்ந்த, கூட்டுறவு அமைப்பில் உள்ள தலைவரிடம், வாக்காளர்களுக்குப் போய்ச் சேர வேண்டிய ஓட்டுக்கான மொத்த பணத்தையும் கொடுத்துவிடுவார்கள். ஒரு வீடு விடாமல், பண விநியோகம் கச்சிதமாக நடந்துவிடும்.
பெரும்பாலான கூட்டுறவு அமைப்புகளில் அதிகாரிகளோடு கைகோர்த்துக்கொண்டு, முடிந்த மட்டிலும் பணம் சம்பாதித்துவிடுகிறார்கள் தலைவர்கள். இந்த நிலை மாறவே இல்லை. விதிவிலக்காக, நல்ல முறையில் இயங்கும் கூட்டுறவு சங்கங்களும் இல்லாமல் இல்லை'' என்று ஒளிவு மறைவின்றிப் பேசினார். அதனைத் தெளிவாகவே களத்தில் காட்டிவருகிறார்கள் ஆளுந்தரப்பினர்.