dsp

ரு டி.எஸ்.பி. கைது செய்யப்பட்டதற்கு ஆம்பூர் நகரமே பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி ஆனந்தக் கூத்தாடியதைப் பார்த்து, ஒட்டுமொத்த காவல்துறையே அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளது. அந்த ஆனந்தத்திற்கும் அதிர்ச்சிக்கும் சொந்தக்காரர் ஆம்பூர் சரக டி.எஸ்.பி. தன்ராஜ்.

இந்த தன்ராஜுக்கு சொந்த ஊர் தேனி மாவட்டம். இவரது குடும்பம் இருப்பதோ சென்னை ஆழ்வார்பேட்டையில். விருதுநகர் மாவட்ட மதுவிலக்குப் பிரிவு டி.எஸ்.பி.யாக இருந்து, டிரான்ஸ்பரில் ஆம்பூர் வந்தார் தன்ராஜ். ஆம்பூரில் இவருக்கு அரசு ஒதுக்கிய வீடு இருந்தும், செம்மரக் கடத்தல் புள்ளி நடத்தும் ஓட்டல் ஒன்றின் 408-ஆம் எண் அறையைத்தான் சகலவாசத்திற்கும் சகவாசத்திற்கும் பயன்படுத்துவார் தன்ராஜ். எல்லா டீலிங்குகளும் வருமானமும் இங்கேயே முடிந்துவிடும். கையில் ரொக்கம் வந்ததுமே தனது நம்பிக்கையான உறவினர்களின் அக்கவுண்டில் டெபாசிட் செய்து, அவர்களின் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் எடுக்கச் சொல்லி, குடும்பத்திற்கு பணம் போய்ச்சேருமாறு செய்துவிடுவார்.

தமிழகம் முழுக்க இருக்கும் மணல் குவாரிகளை மூடச்சொல்லி ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்ததும் ரொம்பவே கவலைப்பட்டனர் முதல்வரும் துணைமுதல்வரும். ஆனால் கவலையேபடாத டி.எஸ்.பி. தன்ராஜ், எஸ்.ஐ. லூர்து ஜெயராஜ் மூலமாக ஆம்பூரில் இருக்கும் மணல் வியாபாரியான பன்னீர்செல்வத்தை அழைத்தார். “""குவாரியை மூடிட்டாங்க, தொழில் போச்சேன்னு கவலைப்படாதே, நான் இருக்கேன், தைரியமா மணல் அள்ளிட்டுப் போ, ஒன்னோட ஆளுங்ககிட்டயும் சொல்லிரு. மாதம் ஒன்றுக்கு ஒரு லாரிக்கு 20 ஆயிரம்னு வாங்கிக் கொடுத்துரு. எஸ்.ஐ. லூர்து ஜெயராஜை தனியா கவனிச்சிரு''ன்னு பேச்சு பேரத்தை நடத்தியிருக்கிறார்.

Advertisment

dsp2

பொழப்பு நடக்கணுமேன்னு சொல்லிட்டு, பன்னீர்செல்வம், அவரது நண்பர்களான சானாங்குப்பம் லாரி உரிமையாளர்களான சேகர், ஜெயபால், சுதாகர், பாபு, ராஜி ஆகியோர் மாதம்தோறும் தன்ராஜுக்கு கப்பம் கட்டிவிட்டு, மணலை அள்ளி ஜரூராக விற்று கல்லாகட்டி வந்துள்ளனர். ஆசை அடங்காத தன்ராஜோ, கப்பத் தொகையை பல மடங்கு ஏற்றியதோடு, பொங்கல் முடிந்தாலும் பொங்கல் போனஸ் கேட்டு நச்சரிக்கவே... பன்னீர்செல்வம் ஆட்களால் பொறுக்க முடியவில்லை. வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியை அணுகி விஷயத்தைக் கூறியுள்ளனர்.

மேலிட அனுமதி கிடைத்ததும் ஆக்ஷனில் இறங்கிய ஏ.டி.எஸ்.பி. பாலசுப்பிரமணி தலைமையிலான டீம், பன்னீர்செல்வத்தின் மூலமே தன்ராஜுக்கும் அவரது கட்டிங் பார்ட்னரான எஸ்.ஐ. லூர்து ஜெயராஜுக்கும் சேர்த்து பொறிவைத்து, இருவரையும் அதிரடியாக கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தது. "மணல் அள்ளும் மாட்டு வண்டின்னா வாரம் 10 ஆயிரம், சின்ன லாரின்னா மாதம் 15 ஆயிரம், டிப்பர், டாரஸ் லாரின்னா 20 ஆயிரம்'னு டார்கெட் வைத்துள்ளார்கள். காவல்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை இந்த மூணு துறைகளும் ஒண்ணா சேர்ந்து ஒரு டீம் ஃபார்ம் பண்ணியிருக்கிறார்கள். ஆம்பூர், வாணியம்பாடி, பள்ளிகொண்டா, மாதனூர் என பாலாற்று மணல் அள்ளும் ஏரியாக்களில் வசூலாகும் கப்பத்தை மாதம்தோறும் பங்கு போட்டுக்கொள்ளும் இந்த டீம். இப்ப மாட்டியிருப்பது டி.எஸ்.பி. தன்ராஜ் மட்டும்தான். இன்னும் தீவிரமாக வலைவீசினால்... பல திமிங்கலங்கள் சிக்கும்''’என்கிறார் வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பிரபு.

Advertisment

வேலூர் எஸ்.பி. அலுவலக சோர்ஸ் ஒருவரோ, ""முதன்மை, துணைமுதன்மை ஆசியோடு 50 லாரிகளில் மணல் லோடு அடித்தார் அமைச்சர் ஒருவர். அவர் லெவலுக்கு டி.எஸ்.பி.யையும் கவனிக்கத்தான் செய்தார். ஆனா அங்கேயும் கட்டிங் ரேட்டை ஏத்துனதும் அமைச்சருக்கு பல்ஸ் ரேட் ஏறிப்போச்சு. அதனால டி.எஸ்.பி. தன்ராஜ் கம்பி எண்ணும்படி ஆகிப்போச்சு''’என்றார்.

பின்ன அடிமடியில கையவச்சா அமைச்சர் சும்மா இருப்பாரா?

-து.ராஜா