எடப்பாடி ஆட்சியின் ஓராண்டு "சாதனை'க்கு சாட்சியாக இருக்கிறார்கள் பெண்களைத் துரத்தும் கிரிமினல்கள். பிப்ரவரி 11-ஆம் தேதி நகைப் பறிப்பு திருடர்கள், அரும்பாக்கத்தில் நகைக்காக மேனகா என்பவரைத் தரதரவென்று இழுத்துச்சென்ற வீடியோ காட்சி பரபரப்பானது. அதே தினத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், குன்றத்தூரைச் சேர்ந்த ஜெயஸ்ரீ நிலைதடுமாறி விழும்படி நகையைப் பறித்துச்சென்றது பரபரப்புக்குள்ளானது.
இந்நிலையில்... ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த பிர்காரெட்டியின் மகள் லாவண்யா. சென்னை நாவலூரிலுள்ள நியூ குளோபல் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சிறுசேரி தொழில்நுட்ப பூங்காவின் பின்புறமுள்ள சபரி அபார்ட்மெண்ட்டில் தோழிகளுடன் தங்கியிருந்தார்.
சம்பவத்தன்று கிண்டியிலுள்ள தலைமை அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு, இரவு வெகுதாமதமாக வீடு திரும்பியிருக்கிறார். அலுவலகத்தில் வாடகைக் கார் ஏற்பாடுசெய்து தருவதாகக் கூறியும், பைக்கிலேயே சென்றுவிடலாம் என்று கிளம்பியுள்ளார். சித்தலப்பாக்கம் வழியாக அரசன்கேணி டி.எல்.எஃப். சாலையில் அவர் வந்துகொண்டிருந்தபோது, அவரைப் பின்தொடர்ந்துவந்த மர்ம நபர்கள் இரும்பு ராடால் தாக்கியிருக்கிறார்கள்.
நிலைகுலைந்து விழுந்த லாவண்யாவின் ஐபோன், நகைகளைப் பறித்துக்கொண்டதுடன், அவரது இருசக்கர வாகனத்தையும் பறித்துக்கொண்டு, அவரைக் காயப்படுத்தி முட்புதருக்குள் வீசிவிட்டுச் சென்றிருக்கின்றனர். காயங்களுடன் ஊர்ந்து பிரதான சாலைக்கு வந்தவரைப் பார்த்தவர்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்தர பள்ளிக்கரணை போலீசார் மீட்டு பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அவரிடமிருந்த ஐ.டி. கார்டின் துணையுடன் விசாரித்து பெற்றோருக்கு தகவல் தரப்பட்டிருக்கிறது. லாவண்யாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் ஸ்ரீதர், “""தலை, முகம் உட்பட மூன்று இடங்களில் கூர்மையான கத்தியால் தாக்கப்பட்டிருக்கிறார். நினைவு திரும்பிய பின்தான் பிற விவரங்களைச் சொல்லமுடியும்''’என்கிறார்.
சேலம் ஆத்தூரைச் சேர்ந்த பெண் ஐ.டி. ஊழியர் உமாமகேஸ்வரி, 2013-ல் வேலையை முடித்துத் திரும்பும்போது பாலியல் கொடூரத்துக்குள்ளாகி கொல்லப்பட்டார். அந்த சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில்தான் லாண்யாவும் தாக்கப்பட்டிருக்கிறார்.
செம்மஞ்சரி குடிசைமாற்று வாரியம் அருகேயுள்ள டாஸ்மாக் கடைவாசலில் லாவண்யாவின் ஹோண்டா ஆக்டிவா கிடைத்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வெறும் கொள்ளை மட்டும்தானா? பாலியல் வல்லுறவு முயற்சியேதும் நடந்ததா? என போலீஸ் தெளிவுபடுத்த மறுக்கிறது. பரபரப்பான அண்ணாசாலையிலேயே பஸ் ஸ்டாப்பில் இளம்பெண்களிடம் செல்போன் பறிக்கப்படுவது இயல்பாகிவிட்டது.
கொள்ளையர்களின் கூடாரமாகிறது சென்னை.
-அரவிந்த்