சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்கள் இருதரப்பாக பிரிந்து அடிக்கடி மோதிக்கொள்வதால், கல்லூரி அமைந்திருக்கும் பாரிமுனை பகுதியே பதட்டப் பரபரப்புக்குள்ளாகும். மாணவர்களுக்கிடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிமுறைகள் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பல்வேறு தரப்பிடமும் விசாரித்த நீதிபதிகள் குழுவினர், ‘உயர்நீதிமன்றமும் சட்டக் கல்லூரியும் ஒரே இடத்தில் அமைந்திருப்பதால், மாணவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு அதிகரிக்கின்றது. எனவே சட்டக் கல்லூரியை மட்டும் தனியே வேறு இடத்தில் நிறுவலாம் என அரசுக்குப் பரிந்துரை செய்தனர்.

lawcollege-student

இதையடுத்து ஐந்து வருட சட்டப்படிப்புக்கான கல்லூரியை திருவள்ளூர் மாவட்டத்திலும், மூன்று வருடப் படிப்புக் கல்லூரியை காஞ்சிபுரம் மாவட்டத்திலும் அமைக்கும் பணிகளில் தீவிரம் செலுத்தியது அரசு. முதல்கட்டமாக சென்னை புறநகர்ப்பகுதியான கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கம் கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் 57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சட்டக்கல்லூரியின் கட்டுமானப் பணி முடிவடைந்துள்ளது.

மாதிரி நீதிமன்றம், தேர்வு அறைகள், கேள்வித்தாள் பாதுகாப்பு அறைகள், ஒரு லட்சம் புத்தகங்கள் கொண்ட சட்டநூலகம் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளதால், வரும் மே மாதத்திலிருந்து, இங்கு வகுப்புகள் செயல்படத் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்திற்குத் தயாராகிவிட்டனர் சட்டக் கல்லூரி மாணவர்கள்.

Advertisment

lawcollege-studentமுதுகலை மாணவர் திலகராஜ் இதுகுறித்து நம்மிடம் பேசியபோது, ""அரசு மருத்துவமனை இருக்கும் அதே வளாகத்தில்தான் மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இதுதான் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். எங்களுக்கும் அதே நிலைதான். ஆனால் இப்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள சட்டக்கல்லூரியில் எந்த வசதிகளும் கிடையாது''’என்கிறார்.

முதலாம் ஆண்டு மாணவியான காவியா, ""ஹைகோர்ட் கேம்பஸில் எங்கள் காலேஜ் இருப்பதாலேயே எங்களுக்கென்று தனி இமேஜ் இருக்கிறது. சிட்டியைவிட்டு 40 கி.மீ.க்கும் அந்தப் பக்கம் போனா, பத்தோடு பதினொண்ணுதான். எங்கள் தரப்பு கோரிக்கைக்கு செவி சாய்க்காவிட்டால், முன்னாள் சட்டக் கல்லூரி மாணவர்களையும் ஒன்றுதிரட்டிப் போராடுவோம்''’என்கிறார்.

வழக்காடப் போகிறவர்களின் வழக்கில் என்ன தீர்ப்பு கிடைக்கப்போகிறதோ?

Advertisment

-அருண்பாண்டியன்

படங்கள்: குமரேஷ்