கிராமப்புற பெண்கள் பொருளா தாரத்தில் மேம்படவேண்டும், வெளி உலக அனுபவம் பெறவேண்டும், சுயமாக சொந்தக் காலில் நிற்கவேண்டும் என்கிற உயரிய சிந்தனையோடு கலைஞரால் உருவாக்கப்பட்ட சுயஉதவிக் குழு பெண்கள் அனைவரும் தற்போது (மைக்ரோ பைனான்ஸ்) நுண்கடன் நிதி நிறுவனங்களின் பிடியில் சிக்கி வாழ்க்கையைத் தொலைத்து, தற்கொலைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

mm

தஞ்சை, நாகை, திருவாரூரை உள்ளடக் கிய நெற்களஞ்சிய மாவட்டங்களின் பிரதான தொழில் விவசாயம். அந்த விவசாயம் சில ஆண்டுகளாக அழிந்துகொண்டே வருகிறது. முப்போகம் நடந்த விவசாயம் இன்று ஒருபோகத்திற்கே வழியற்றுப் போய்விட்டது. ஒருபுறம் ஓ.என்.ஜி.சி.யால் கருவேலங்காடுகளான நிலங்கள், மறுபுறம் பருவமழை பொய்த்தும், கர்நாடக அரசின் வஞ்சகத்தாலும் காவிரியில் வரும் தண் ணீர் குறைந்துபோனதை சாதகமாக்கிக் கொண்ட மணல் மாஃபியாக்கள், சவிடுமண் எடுக்கிறோம் என்கிற பெயரில் அனுமதி வாங்கி படுபாதாளத்திற்கு நிலத்தைத் தோண்டி மிஞ்சியிருந்த நிலத்தடி நீராதாரத்தையும் அழித்துவிட்டனர்.

இயந்திரங்களின் வரவால் விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த விவசாய தினக்கூலிகள் இன்று வேலையின்றி தினசரி குடும்பம் நடத்தவே படாதபாடுபடுகின்றனர். இந்தச் சூழலில்தான் (மைக்ரோ பைனான்ஸ்) நிறுவனங்களிடம் கடன்பெற்று அதனை அடைக்கவழியின்றி பிள்ளைகுட்டிகளோடு ஊரைவிட்டே தலைமறைவாவதும், தற்கொலைக்குப் போவதும் என கிராமப்புற பெண்களின் அவலத்தைப் பார்க்கமுடிகிறது.

Advertisment

திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுயஉதவிக்குழு பெண்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் கொடுமைகளால் முதல்வருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும், ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் புகார் மேல் புகாராக அனுப்பிவருகின்றனர்.

இதுகுறித்து கூத்தாநல்லூரைச் சேர்ந்த ஷபானா பேகம் கூறுகையில், "நாங்க கடன் வாங்கிட்டு கட்டலைன்னு சொல்லல, கடனை வாங்கிட்டு வேற நாட்டுக்கு ஓடிடல. கடனைக் கட்ட ஒருநாள் அவகாசம் கேட்டாக்கூட ஈவு இரக்கமில்லாமல் தரக்குறைவா பேசுறாங்க. அதைவிடக் கொடுமை குழுவில் இருக்கிற மற்ற பெண்களை ஏவிவிட்டு கட்டாத பெண்களை தரக்குறைவா பேசவைத்து அடிச்சிக்கவிட்டுடுறாங்க. எங்களிடம் மிஞ்சியிருப்பது தன்மானம் மட்டும்தான். அதுவும் மைக்ரோ பைனான்ஸ் காரவுங்களால போகுது. ஒருத்தர் போய் நான்குபேர கூட்டிட்டு வந்து இரவு 10 மணிவரைக்கும் வீட்டு வாசல்ல நின்னு பிரச்சனை செய்யுறாங்க. வயசுக்கு வந்த பிள்ளைங்க வீட்டுல இருக்காங்க. மானம் போகுது. எப்படியும் இந்த பணத்தை வட்டியோட நாங்கதான் கட்டப் போறோம். வீதியில் நின்னு கத்தி அசிங்கப் படுத்தியதால வட்டிய குறைக்கப்போறாங்களா, இல்ல கடனைத் தள்ளுபடி செய்யப்போறாங்களா… எதையாவது அடமானம்வச்சி கொடுத்தாத்தான் போவாங்க'' என்கிறார் ஆத்திரத்துடன்.

mm

Advertisment

அதங்குடி ஜெயம் கூறுகையில், "பத்து வருஷத்துக்குமேல இந்த பாழாப்போன குழு கடனை வாங்கிக் கட்டிட்டு வர்றோம். இந்தக்குழு என்னைக்கு கிராமத்துக்குள்ள புகுந்துச்சோ அன்னியில இருந்து கிராமமே விடியாம இருண்டுபோச்சு. பொண்ணுங்க வாழ்க்கையை தொலைச்சாங்க. நாங்க நிம்மதியா சாப்பிட்டு பல வருஷமாச்சு. அந்தக் கடனை அடைக்க அடுத்த குழுவில் கடன், இரண்டு குழு கடனையும் அடைக்க மூன்றாவதா ஒரு கடன்னு 10 குழுவுல கடன்வாங்கி வச்சிருக்கோம். பத்து வருசத்துக்கு முன்னாடி கடன்னா என்னான்னே தெரியாம வாழ்ந்தோம். இவ்வளவு கடன் வாங்கி எந்த முன்னேற்றமும் இல்ல. குண்டுமணி நகைகூட இல்ல, எல்லாம் குழுவுக்குக் கட்ட மார்வாடிக் கடைகளில் முழுகிப்போச்சி. இது எங்க பிள்ளைங்க காலத்துலயும் தொடருமோங்கிற பயம் தூங்கவிடாம பண்ணுது'' என்று கலங்கு கிறார்.

ரஜபு நிஷா, "எங்களோட நிலைமை, கடனை வாங்கிட்டோம். "கடனைக் கட்ட முடியலன்னா செத்துத் தொலைங்க. இன்சூரன்ஸ் க்ளைம்பண்ணி கடனை முடிச்சிக்கிறோம்'னு இரக்கமே இல்லாம சொல்றாங்க. கந்து வட்டியவிட அதிக வட்டி. வாங்கினதால இப்ப அனுபவிக்கிறோம்'' என்கிறார்.

ss

ஜீவா நகரைச் சேர்ந்த செண்பகமும், மீனாவும் கூறுகையில், "எங்களிடம் மிஞ்சி யிருப்பது உசுரு மட்டும்தான். ஒருகாலத்துல எங்க பகுதியில மூணு போகம் விளைஞ்சது. கை நிறைய காசிருக்கும். இன்னைக்கு விவசாயம் ஏதோ நடக்குது. 100 நாள் வேலையை நம்பி குடும்பம் போகுது. மிஞ்சி இருப்பதையும் டாஸ்மாக் பிடுங்கிடுது. எங்க ரத்தத்தை வித்தா காசு கிடைக்கும்னா அதைக்கொண்டு வாரா வாரம் கடனை அடைக்கத் தயாரா இருக்கோம்'' என்கிறார்கள் விரக்தியின் உச்சத்திற்கு சென்றவர்களாக.

தற்கொலைக்குச் சென்று மீண்டுவந்த பொதக்குடி பர்ஜானா கூறுகையில், "முஸ்லிம் பெண்கள்னாலே வெளியுலகமே தெரியாம இருந்தாங்க. இந்த குழுவால அசிங்கப்பட்டு நிற்கிறோம். இந்த கடன் துவக்கத்தில் உதவியா இருந்துச்சு. இப்ப அதுதான் எங்க உயிருக்கு உபத்திரவமா இருக்குது. செத்துடலாம்னு முயற்சிசெஞ்சும் காப்பாத்திட்டாங்க. ஒரு கடனை அடைக்க அடுத்த கடன். அந்த கடனை அடைக்க வட்டிக்கு வட்டி என வாழ்க்கை நிரந்தரமா முடிஞ்சிடுச்சு. நிறைய பெண்கள் தூக்குல தொங்குறாங்க, அவ மானம் தாங்காம கழுத்தை அறுத்துக்கிறதும், கைய அறுத்துக்கிறதுமா இருக்காங்க. எங்க நிலமை வெளியே பெருசா தெரியறது இல்ல''’என்கிறார்.

நுண்கடன் நிறுவனத்தில் பணியாற்றி அங்கு நடக்கும் கெடுபிடிகளால் மனம்நொந்து வெளியேறிய ஒருவர் கூறுகையில், "ஒரு காலத்தில் குழு என்பது கிராமங்களில் பெண்களை ஒற்றுமை யாக இருக்கவைத்து வெளி உலகத்தைப்பற்றி சிந்திக்கவைத்தது. பெண்களுக்கான குழுக்களை அரசே உருவாக்கி அதற்கு அரசு வங்கிகள் மூலம் கடன்கொடுத்தது. அதுவரை இந்தக் குழு பெண்களின் வாழ்வில் நன்றாக இருந்தது. அந்த குழுக்களை எப்போது தனியார் நுண்கடன் நிறுவனங்கள் கைப்பற்றியதோ அன்று முதல் பெண்களின் நிம்மதி தொலைந்துவிட்டது. பெரிய பெரிய அரசு வங்கிகள் தனியாரிடம் மொத்தமாகக் கொடுத்து, அவர்கள் மூலம் குழுக்களுக்கு கொடுக்கவைக்கின்றனர்.

அவர்கள் கந்துவட்டிக்காரர்களைவிட கொடுமைக்காரர்களாக நடந்துக்குவாங்க. வேலையில்லாத படித்த இளைஞர்களை சொற்ப சம்பளத்தில் அடியாட்களைப்போல அனுப்பி அவர்களின் அக்கா, அம்மா, தங்கை உள்ளிட்ட உறவு கொண்டவர்களை மிரட்டி வசூலிக்க வைக்கிறதுதான் அவர்களின் வெற்றிக்கு காரணம். விடியல் என்கிற பெயரில் ஒரு நுண்கடன் நிறுவனம் இருக்கு. அந்த ஊழியர்கள் ஒவ்வொரு கிராமத் திற்கும் விடிவதற்குள் போய் வீட்டுவாசலில் நின்றுவிடுவார்கள். வீட்டு வாசலைக்கூட கூட்ட முடியாமல், காலை கடனைக்கூட கழிக்கமுடியாமல், பத்து பெண்களையும் ஒரு வீட்டு வாசலில் கூட்டி உட்காரவைத்து விளக்கேற்றி சத்திய தீர்மானம் வாங்குவாங்க. இந்த மாதிரி நிறு வனங்கள் என்னைக்கு புகுந்துச்சோ அன் றைக்கே கிராமங்கள் இருண்டுபோச்சி.

கொரோனா ஊரடங்கு பல குடும் பங்களையும், நிறுவனங் களையும் வீதிக்குவர செய்தது. மக்களின் அன்றாட பொருளா தாரமே ஆட்டம் கண்டது. அந்த நேரத்தில் வேலை இழந்த பலரும் நாடியது, நுண்கடன் எனப்படும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களைத்தான். கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் கடுமை காட்டுவாங்க. அவர்களின் கெடுபிடிகளும், நெருக்கடிகளும் எமர்சென்சி காலத்தையே மிஞ்சிடும். கடன் வாங்கியவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் ஏராளம். இழவு வீட்டில் நின்றுகொண்டு கடனுக்காக டாக்குமெண்ட் தேடுவார்களே, அதைவிடக் கொடுமை உலகத்தில் இருக்கவே முடியாது. அடாவடியாக இறங்கும் நுண்கடன் நிறுவன ஊழியர்கள் குறித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. ஆனால் நிறுவனத்திற்கு சாதகமா நடவடிக்கை எடுக்காமல் கடந்துவிடுவது அவர்களுக்கு சாதகமாகிடுது. சில இடங்களில் அனுமதி பெறாமலேயே சில கடன் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.

திருவாரூர் நாகை மாவட்டங்களில் மட்டும் 6000 குழுக்கள் மூலம் ஒரு லட்சம் பெண்களை தங்களது கடன் வலையில் சிக்கவைத்துள்ளனர் இந்த நுண்கடன் நிறுவனங்கள். சிறு விவசாயி களுக்கு 8000 ரூபாய்க்கு மேல் பயிர்க்கடன் தரமறுக்கும் பொதுத்துறை வங்கிகள், இந்த தனியார் நிறுவனங்களில் பலநூறு கோடி களை முதலீடு செய்துள்ளனர். அதிக வட்டியும் அசல் உத்தரவாதம் இருப்பதுதான் இந்த முதலீட்டுக்கான முதல் காரணம். அரசு இதனை ஆய்வுசெய்து கிராமங்களை மீட்க முன்வர வேண்டும்''’என்கிறார்.

சமீபத்தில் டெல்டா மாவட்ட வறட்சி, விவசாய மரணங்கள் குறித்து ஆய்வுசெய்த உண்மை கண்டறியும் குழு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இறந்துபோன ஒவ்வொரு விவசாயியும் நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து 120 சதவீத வட்டிக்கு கடன் வாங்கியிருக்கிறார்கள்'’என கூறியுள்ளனர். கூட்டுறவு வங்கிகள், வணிக வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை மத்திய கால கடன்களாக மாற்றுவதாக அறிவித்த தமிழக அரசு, நுண்கடன் நிறுவனங்கள் உள்ளிட்ட தனியாரிடம் பெண்கள் பெற்றுள்ள கடன்கள் குறித்து ஆய்வுசெய்து உதவிட தமிழக முதல்வர் முன்வரவேண்டும்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

-க.செல்வகுமார்