ம்ம எடப்பாடி அரசு நடத்தும் அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில்கூட இந்தி வாலாக்கள் தமிழில் பதில் எழுதி உயர்நீதிமன்றத்தையே ஆச்சர்யப்பட வைத்தார்கள். மத்திய அரசுக்குச் சொந்தமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்.எல்.சி.) நிறுவனத்தில் மட்டும் வட மாநிலத்தவர்களை அதிக அளவில் நியமிக்காமல் விட்டு விடுவார்களா என்ன? என்.எல்.சி.யில் இருக்கும் மிகவும் வலிமையான தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச.வில் அமைதி நிலவுவதால் நிலக்கரி நிர்வாகம், தமிழர்களுக்கு எதிராக கக்கும் கரிப்புகையின் அளவு கூடிக்கொண்டேதான் போகிறது.

nlc

14 தொழிற்சங்கங்கள் இருந்தாலும் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக என்.எல்.சி தொழிலாளர்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்தது தொ.மு.ச. மட்டுமே. மத்தியில் இருக்கும் கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம் வகித்தபோதும், என்.எல்.சி. தொழிலாளர்களின் உரிமையை விட்டுக் கொடுக்காமல் போராடிவந்த தொழிற்சங்கம்தான் தொ.மு.ச. "தொழிலாளர்களில் 51% ஆதரவு இருக்கும் தொழிற்சங்கத்துடன் மட்டுமே ஊதிய உயர்வு, போனஸ், உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்துப் பேச முடியும்' எனக்கூறி 2008-ல் ரகசிய வாக்கெடுப்பு நடத்தியது நிர்வாகம்.

இதில் தொ.மு.ச. முதல் இடத்தையும் பா.ம.க. வின் தொழிற்சங்கமான பி.டி.எஸ். இரண்டாம் இடத்தையும் பிடித்தன. அந்த வெற்றிக்குப் பின் தொழிலாளர்களின் நீண்டகாலக் கோரிக்கையான 60% ஊதிய உயர்வு, இரண்டு இன்செண்டிவ் உள்ளிட்ட பல சலுகைகளைப் பெற்று சாதித்துக் காட்டியது. தொ.மு.ச. அதேபோல் ஜெயலலிதா ஆட்சியின்போது என்.எல்.சி. பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முயன்றபோது, கடுமையான போராட்டத்தை நடத்தியது தொ.மு.ச. இதனால் "மாநில அரசே அந்த பங்குகளை வாங்கும்' என அறிவித்தார் ஜெயலலிதா.

Advertisment

அப்படிப்பட்ட தொ.மு.ச.வில் இப்போது ஏற்பட்டிருக்கும் சலசலப்பு குறித்து பெயரைக் குறிப்பிடாமல் பல தொழிலாளர்கள் பேசினர்.

d

""தொ.மு.ச.வின் மாநிலத் தலைவராக குப்புசாமி இருந்தபோது, இம்மாவட்டத்தின் ஒருங்கிணைந்த மா.செ.வாக எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இருந்தார். இருவரின் வழிகாட்டுதல், ஆலோசனைகளின்படி வலுவாகப் போய்க் கொண்டிருந்தது சங்கம். 2012-ல் ஜெ. ஆட்சியில் தொழிலாளர்களிடையே ரகசிய வாக்கெடுப்பு நடந்தபோது, அமைச்சர்கள் இங்கே டேரா போட்டு பணத்தை வாரியிறைத்து, அண்ணா தொழிற்சங்கத்தினை இரண்டாம் இடத்தில் வெற்றிபெற வைத்தனர். ஆனால் அவர்களால் உருப்படியான எதையும் நிர்வாகத்திடம் சாதிக்க முடியவில்லை. 2016-ல் நடந்த தொழிற்சங்கத் தேர்தலில் சி.ஐ.டி.யு. முதல் இடத்திற்கும் தொ.மு.ச. இரண்டாம் இடத்திற்கும் வந்தது. அன்றிலிருந்தே சிக்கல்கள் தான்''’என்கின்றனர்.

Advertisment

இன்னொரு தரப்போ, ""2016-ல் நடந்த தொ.மு.ச. தேர்தலில் தலைவராக வீரராமச்சந்திரன், பொ.செ.வாக சுகுமாரன், பொருளாளராக குருநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், நிர்வாகத்துடன் நடக்கும் அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் மந்தம் ஏற்பட்டது. மேலும் கடந்த எட்டு வருடங்களாக சங்கத்திற்கு தேர்தல் நடத்தாதது உட்பட 30 கோரிக்கைகளை தொ.மு.ச. தலைமைக்கும் கட்சித் தலைமைக்கும் அனுப்பினோம். இதுகுறித்து விசாரிக்க மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். ஆனாலும் இதுவரை தேர்தல் நடக்க வில்லை.

தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் தொ.மு.ச.வின் மாஜி பொ.செ. கோபால், "திராவிட தொழிலாளர் ஊழியர் சங்கம்' என்ற ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதற்குக் காரணம் சமீபத்தில் கலைஞர் சிலையை தி.மு.க தலைவர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்துவைத் தார். அதற்கு கோபாலை அழைக்காமல் புறக்கணித்தார் இப்போதைய பொ.செ.சுகுமாரன்'' என்கின்றனர்.

இதுகுறித்து கோபாலிடம் நாம் பேசியபோது, ""சங்கத்தின் சர்வாதிகாரப் போக்கை தட்டிக் கேட்டதால் என்னைப் புறக்கணிக்கிறார்கள். அதனால் கட்சி சார்பற்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளேன்''’என்றார்.

இப்போதைய பொ.செ.சுகுமாரனோ, ""தொ.மு.ச. மிகவும் வலுவாக உள்ளது. அதை யாராலும் சேதப்படுத்த முடியாது. கொரோனா காலம் என்பதால்தான் தொ.மு.ச.வுக்கு தேர்தல் நடக்கவில்லை. தலைமை எந்த உத்தரவு போட்டாலும் கட்டுப்படுவோம்''’என்கிறார்.

என்.எல்.சி. தொழிலாளர்களின் நம்பிக்கையை மீட்கும் வகையில் தொ.மு.ச. சலசலப்புகளை தலைமை சரி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி தொழிலாளர்களிடம் உள்ளது.

-எஸ்.பி.எஸ்.