லைஞர் பங்கேற்காத தி.மு.க.வின் முதல் மாநாடு. தமிழக அரசியல் அரங்கில் கலைஞர் ஆக்டிவாக இல்லாத நிலையில் தி.மு.க.வின் செயல்பாடுகள் மீது மக்களுக்கு இருக்கும் ஒருவித அதிருப்தி, இப்போது கிளம்பியுள்ள புதுப்புதுக் கட்சிகளால் தி.மு.க.வின் ஓட்டு வங்கியில் ஏற்படக்கூடிய சேதாரம், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டெபாசிட்டை பறிகொடுத்த பரிதாபம், ஓராண்டை கடத்திவிட்ட எடப்பாடி ஆட்சியை அசைக்கும் முயற்சி கூட இல்லையே என்கிற சலிப்பு, தி.மு.க. பலகீனமாக இருக்கும் மேற்கு மண்டலமான கொங்கு பெல்ட் மாவட்டங்களின் மா.செ.க்கள், நிர்வாகிகள் கட்சியை வளர்க்காமல் தங்களை மட்டுமே வளம் கொழிக்க வைத்துக் கொள்வதாக எழுந்துள்ள புகார்கள் என ஏராளமான மைனஸ் பாயிண்டுகள் உள்ள மேற்கு மண்டலத்தின் ஈரோடு நகரைத்தான், தி.மு.க.வின் மண்டல மாநாட்டுக்குத் தேர்ந்தெடுத்தார் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். சவாலான இடத்தில் மார்ச் 24, 25 தேதிகளில் நடந்த ஈரோடு மண்டல மாநாடு, கலைஞர் ஆக்டிவாக இல்லாத நேரத்திலும் தி.மு.க. என்கிற அரசியல் அமைப்பு பலமாகவே இருக்கிறது என்பதை வெற்றிகரமாக நிரூபித்திருக்கிறது.

dmk-conference

தந்தை பெரியாரின் சொந்த மண், அறிஞர் அண்ணாவும் கலைஞரும் பெரியாரிடம் பயிற்சி பெற்று வளர்ந்த மண். இந்த முப்பெரும் திராவிட இயக்கத் தலைவர்களுக்கு அடுத்தபடியாக, நான்காம் தலைவர் என்ற பெருமித அடையாளத்துடன் தி.மு.க.வை ஸ்டாலின் முன்னெடுப்பதற்கான அடையாளமாக ஈரோட்டில் மாநாடு நடந்துள்ளது.

மேற்கு மண்டலத்திற்குட்பட்ட தி.மு.க.வில் 15 மாவட்டங்கள், இந்த மாவட்டங்களைத் தொட்டுக் கொண்டும், அதற்கு அருகாமையிலும் இருக்கும் வேலூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருச்சி, அதற்கடுத்ததாக சென்னை, காஞ்சிபுரம் மா.செ.க்கள் அதிக ஆர்வத்துடனும் உத்வேகத்துடனும் உ.பி.க்களைத் திரட்டி வந்திருந்தனர். மண்டல மாநாடு தானே என தென்மாவட்ட மா.செ.க்கள் அவ்வளவாக ஆர்வமும் காட்டவில்லை, செலவும் பண்ணவில்லை.

Advertisment

ஈரோடு-பெருந்துறை அருகே சரளை என்ற இடத்தில் மாநாட்டுத்திடல், வாகனங்கள் நிறுத்த என மொத்தம் 600 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்திருந்தது தந்தை பெரியார் திடல் அறிஞர் அண்ணா நகர் மண்டல மாநாடு. தி.மு.க.வின் முன்னோடிகளான மறைந்த கோ.சி.மணி பெயரில் மாநாட்டு மேடை, தூத்துக்குடி என்.பெரியசாமி பெயரில் பந்தல், சற்குண பாண்டியன் கொடி மேடை, முனைவர் மா.நன்னன் உள்முகப்பு, எவரெஸ்ட் கணேசன் முன்முகப்பு, ஈரோடு மா.சுப்பிரமணியன் நுழைவுவாயில், முன்னாள் எம்.பி. பி.எஸ்.சாமிநாதன் அரங்கம் என எல்லாவற்றிலும் கலைஞர் பாணி முத்திரைகள்.

சட்டமன்றத்தில் கலைஞரின் 60 ஆண்டுகள், முரசொலி பவள விழா ஆகியவற்றிற்கு தேசியக் கட்சித் தலைவர்கள் பலரை அழைத்திருந்தது தி.மு.க. ஆனால் இந்த மண்டல மாநாடு முழுக்க முழுக்க தி.மு.க. தொண்டர்களின் எழுச்சியைக் காட்டும் மாநாடாக இருக்க வேண்டும் என்பதற்காக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாரையும் அழைக்கவில்லை.

dmk-conference

Advertisment

ஈரோடு நகரிலிருந்து 25 கி.மீ. தொலைவிலான மாநாட்டுத் திடல் வரையான ஈரோடு-கோவை நான்கு வழிச்சாலை உ.பி.க்களால் விழி பிதுங்கியது. 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு பேராசிரியர் அன்பழகன், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சிக் கொடி ஏற்றினார் திருவிடைமருதூர் எம்.எல்.ஏ.கோவி.செழியன். சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை ஏற்க, மாநாட்டைத் திறந்து வைத்தார் திருச்சி சிவா எம்.பி.

முதலில் வரவேற்புரை ஆற்ற வந்தார் மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் சு.முத்துசாமி. மாநாடு நடப்பதற்காக இடம் கொடுத்த 300 பேர், 15 மாவட்டங்களின் செயலாளர்கள், எந்தப் பதவியிலும் இல்லாவிட்டாலும் களப்பணியாற்றிய கட்சிக்காரர்கள், வெள்ளை மாளிகை பாணியில் அசத்தலான மாநாட்டு பந்தல் அமைத்த சிவா, மேடை அமைத்த ஜெ.பி., மைக்செட் அமைத்த வேலூர் கார்த்தி, முன்முகப்பு அமைத்த செல்வம் ஆகியோருக்கு மறவாமல் நன்றி சொன்ன முத்துசாமி, ""தேர்தல் எப்போது வந்தாலும் கொங்குமண்டலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க.வை வெற்றி பெற வைப்போம்'' என உற்சாகமாகப் பேசினார்.

திராவிட இயக்கத்தின் லட்சியம், தி.மு.க.வின் கொள்கை, ஸ்டாலினின் செயல்பாடுகள், எதிர்காலத் திட்டம் என 50 தலைப்புகளில் சிறப்புப் பேச்சாளர்கள் பேசினார்கள். கட்சியின் சீனியர்களான துரைமுருகன், ஐ.பெரியசாமி, டி.ஆர்.பாலு, வி.பி.துரைசாமி, பொன்முடி, எ.வ.வேலு, ஆ.ராசா, கே.பி.ராமலிங்கம், கனிமொழி என சீனியர்களுக்கும் ஜூனியர்களான அசன் முகமது ஜின்னா, தமிழன் பிரசன்னா வரை அனைத்துப் பேச்சாளர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது.

dmk-conference

கோவி.செழியன் பேசிய போது, ""தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த எனக்கு இந்த மண்டல மாநாட்டின் கொடி ஏற்றும் வாய்ப்பு கிடைத்தது பெரும்பேறு. திராவிட இயக்கத்தில், அதுவும் தி.மு.க.வில் மட்டும்தான் சாமானியனான என்னைப் போன்றவர்கள் இது போன்ற மேடைகளில் ஏற முடியும்'' என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தி.மு.க.வில் இளைஞரணி ஆரம்பிக்கப்பட்ட போதிலிருந்தே ஸ்டாலினுடன் பயணித்து வரும் திருச்சி சிவா, ""இந்த தமிழகமும் தி.மு.கழகத்தின் தொண்டர்களும் ஸ்டாலினுக்கு இரு கண்கள் போன்றது. இரண்டிலிருந்தும் நீர் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. அதற்கு நாங்கள் குருதியையும் வியர்வையையும் தருவோம்'' என்றார். மு.க.ஸ்டாலினை உயர்த்தியும் அவர் ஆற்ற வேண்டிய பணிகளை உணர்த்தியும் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார் திருச்சி சிவா.

துரைமுருகன் பேச மைக் முன் வந்ததுமே கூட்டத்தில் ஆரவாரம் கிளம்பியது. ""என்னய்யா பண்றீங்க, இந்த எடப்பாடி ஆட்சியை இன்னும் ஏன் விட்டு வச்சிருக்கீங்கன்னு மக்கள் கேட்கத் தான் செய்கிறார்கள். தானா போய்த் தொலையட்டும்னு காத்திருக்கோம். ஏன் ஸ்டாலினால் முதல்வர் ஆகமுடியலைன்னு கேட்கிறார்கள். ஜெயலலிதா ஆஸ்பத்திரியிலிருந்தப்ப, அவர் சீக்கிரம் குணம் அடைஞ்சு வரணும்னு அறிக்கை கொடுத்தார் நம்ம தலைவர். ஒரு முறை எங்களிடம் தலைவர் பேசிக் கொண்டிருந்த போது, ஜெயலலிதாவிற்குப் பின் அ.தி.மு.க. இரண்டாக உடைந்துவிடும், கொஞ்ச நாளில் அந்தக் கட்சியே அழிந்துவிடும். அதனால் ஏதாவது ஒரு அணிக்கு ஆதரவு கொடுத்து அ.தி.மு.க.வுக்கு வாழ்வு கொடுத்துவிடாதீர்கள். இதெல்லாம் நடந்தாத்தான் நீங்கள் எதிர்பார்க்கும் மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியும். அதனாலதான் நாங்க பொறுமையா இருக்கோம்'' என தனக்கேயுரிய பாணியில் வெளுத்துக் கட்டினார் துரைமுருகன்.

dmk-conference

நடிகர் வாகை சந்திரசேகர், திண்டுக்கல் லியோனி ஆகியோர் பேசும் போது ""தமிழ்நாட்டுல வெற்றிடம் இருப்பதாக சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நினைப்பது போல இங்கே வெற்றிடம் எதுவும் இல்லை'' என ரஜினியை மறைமுகமாகவும் சிலர் நேரடியாகவும் அட்டாக் பண்ணினார்கள்.

25-ஆம் தேதி காலை மாநாட்டு நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்திலேயே, "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு தி.மு.க.போராட்டம் நடத்தும்'’ என்ற சிறப்புத் தீர்மானத்தை வாசித்தார் மு.க.ஸ்டாலின். முதல் நாள் 3 லட்சமாக இருந்த மாநாட்டு வருகையாளர்களின் எண்ணிக்கை, இரண்டாம் நாள் இருமடங்காகி வெற்றிடமே இல்லாமல் பந்தலையும் வளாகத்தையும் மூச்சுத் திணற வைத்தது.

25-ஆம் தேதி இரவு 7.25 மணிக்கு பேச ஆரம்பித்த தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், 10 நிமிடத்தில் தனது பேச்சை முடித்துக் கொண்டார். கலைஞர் பேசும் போது உதவுவது போல் பேராசிரியருக்கும் உதவினார் மு.க.ஸ்டாலின்.

கலைஞர் கலந்து கொள்ள இயலாத மண்டல மாநாட்டில் நிறைவுப் பேருரை ஆற்றிய தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கலைஞரைப் பற்றி உருக்கமாகவும் தி.மு.க.வின் கொள்கைகளைப் பற்றி உணர்வுப்பூர்வமாகவும் பேசியவர், கலைஞர் பாணியில் ஐந்து முழக்கங்களை (இது குறித்து கடந்த நக்கீரன் ராங்-கால் பகுதியில் எழுதியுள்ளோம்) வெளியிட்டு தேர்தலுக்குத் தயாராகுமாறு கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

சமூகநீதி, மதநல்லிணக்கம், மாநில சுயாட்சி இதுதான் ஈரோடு மண்டல மாநாட்டின் நோக்கம். அதையும் தாண்டி கொங்கு பகுதியான மேற்கு மண்டலத்தில் உதயசூரியன் உதிக்கும் என்ற நம்பிக்கையை உடன்பிறப்புகள் மத்தியில் விதைத்திருக்கிறது மண்டல மாநாடு. மேற்கில் சூரியனை உதிக்க வைப்பது பெரும்பாடு. உடன்பிறப்புகளின் நம்பிக்கையை செயலில் காட்டி, சட்டமன்றத் தேர்தலில் கோட்டை விட்டதை மீட்டு, கோட்டைக்கு முதல்வராக ஸ்டாலினை அனுப்ப வேண்டியது கொங்கு மண்டல தி.மு.க. நிர்வாகிகளின் கைகளில் இருக்கிறது.

-ஜீவாதங்கவேல்

உணவுப் பொட்டலமும் நுழைவுக் கட்டணமும்!

தி.மு.க. தொண்டர்களுக்கு எலுமிச்சை, தக்காளி, தயிர்ச் சோறு வகைகளை பாக்கெட் செய்து இலவசமாக வழங்குவதற்கு பக்காவான ஏற்பாடுகளைச் செய்திருந்தார் சு.முத்துசாமி. இது போக தொண்டர்கள் விரும்பும் உணவை வாங்கிச் சாப்பிட ஓட்டல்களும் இருந்தன. ஆண்கள்-பெண்களுக்கென தனித்தனி டாய்லெட்டுகள், குளியலறைகள், ஆங்காங்கே குடிநீர்க் குழாய்கள் என முடிந்த அளவு ஏற்பாடுகள் நடந்திருந்தன. அண்ணா காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்படும் மாநாட்டு நுழைவுக்கட்டணம் இம்முறை ரூ.50 என்றாலும் பல மா.செ.க்கள் தங்கள் செலவிலேயே டிக்கெட்டுகளை வாங்கி, தங்களது மாவட்டத்து உ.பி.க்களுக்கு வழங்கிவிட்டனர். சில மா.செ.க்கள் இதில் கவனம் செலுத்தாததால் தொண்டர்களே கைக்காசு கொடுத்து டிக்கெட் வாங்கினர்.

சுறுசுறுப்பும் மந்தமும்!

பெரும்பாலான மா.செ.க்கள் தங்களது மாவட்டத்தைச் சேர்ந்த கட்சிக்காரர்கள் தங்குவதற்கு ஈரோடு மற்றும் அதன் சிற்றூர்களில் திருமண மண்டபத்தை வாடகைக்குப் பிடித்திருந்தனர். இரண்டு நாட்கள் இலவச உணவுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். வேலூர் மா.செ.க்களான ராணிப்பேட்டை காந்தி, முத்துசெல்வி, நந்தகுமார், காஞ்சிபுரம் மா.செ.க்களான தா.மோ.அன்பரசன், க.சுந்தர் ஆகியோர் அமர்த்தியிருந்த திருமண மண்டபங்களில் தங்குவதற்கு இடம் இல்லாமல் ஏராளமான உ.பி.க்கள் சாலைகளில் படுத்துறங்கினர். ஆனால் இராமநாதபுரம் மா.செ. சுப.த.திவாகரன் ஏற்பாடு செய்திருந்த ஆனைக்கல் பாளையம் என்.ஆர்.கல்யாண மண்டபம் ஆட்கள் குறைவால் வெறிச்சோடிக் கிடந்தது. மா.செ. கண்டுகொள்ளாததால், ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் 25-ஆம் தேதி காலையிலேயே ஊர்களுக்கு கிளம்பிவிட்டனர்.

"நடிகர்' உதயநிதி!

22-ஆம் தேதியே ஈரோட்டுக்கு வந்துவிட்டார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். தனது தாயார் துர்கா ஸ்டாலின் சகிதம் மாநாட்டு அரங்கில் இருந்த திராவிட இயக்க புகைப்படக் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டார். அதே போல் மாநாட்டின் முன் வரிசையில் அமர்ந்திருந்த உதயநிதி, பேராசிரியர் அன்பழகன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி காலில் விழுந்து வணங்கினார். பேசிய அனைவரும் தம்பி, நடிகர் உதயநிதி என்றே அழைத்தனர்.