ந்த 75 நாட்களின் மர்மம் இன்னும் விலகவில்லை. அப்பல்லோவில் ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையையும் மர்ம மரணத்தையும்பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம் இப்போது ஜெ.-சசி உறவுபற்றி விசாரிக்கும் ஆணையமாக மாறிவிட்டது என்கிறது விசாரணை ஆணைய வட்டாரம்.

jaya-sasi

விசாரணை ஆணையத்தில் சசிகலா 55 பக்க ஆவணம் ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். அதில் "ஜெ.வை எப்படி சந்தித்தேன். அவருடன் நிழலாக எப்பொழுது முதல் வாழத் தொடங்கினேன். எப்படி ஜெ.வுக்காகவே தன் வாழ்க்கையை ஒப்படைத்தேன்' என உருக்கமாக எழுதியிருக்கிறார் சசிகலா. கூடவே "குணா' படத்தில் கமல் சொல்வதுபோல "மானே தேனே' எல்லாம் போட்டிருக்கிறார். அந்த "மானே தேனே' போலத்தான் ஜெ.வுக்கு அப்பல்லோவில் அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் பற்றிய விவரங்களும் இடம் பெற்றிருக்கிறது.

rama

Advertisment

சசிகலா சமர்ப்பித்த ஆவணங்களில் ஏதாவது கிடைக்கும் என காத்திருந்த நீதிபதி ஆறுமுகசாமிக்கு ஒன்றும் கிடைக்காததால் விரக்திதான் வெளிப்பட்டிருக்கிறது என்கிறார்கள் ஆணைய அதிகாரிகள். போதாத குறைக்கு ஜெ.வுக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு முன்பே... இரவு 9 மணிக்கே தூங்கிவிட்ட வேலைக்காரப் பெண் ராஜம்மா, மாலை 6 மணிக்கு முன்பே போயஸ் கார்டனை விட்டு கிளம்பிப் போனதாக சொன்ன ஐயப்பன் ஆகியோர் அளித்த ஏடாகூடமான சாட்சியங்கள் போகாத ஊருக்கு வழிகாட்டுவதாகவே அமைந்துவிட்டன.

அத்துடன் "ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்த 2000 பக்க ஆவணங்களில் உள்ள மருத்துவத்துறை சார்ந்த வார்த்தைகளை தெளிவாக எடுத்துச் சொல்ல ஆள் இல்லை. அந்த நோக்கத்திற்காக மருத்துவர்கள் அடங்கிய குழுவை நியமியுங்கள்' என நீதிபதி ஆறுமுகசாமி அனுப்பிய கடிதத்தை தமிழக அரசு ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இதனால் ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22 முதல் ஜெ. இறந்த டிசம்பர் 5-ம் தேதிவரை நடந்தவற்றை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம் தன் இலக்கை அடைய முடியாமல் தவிக்கிறது.

tripathiஇந்நிலையில், 2011-ம் ஆண்டு போயஸ் கார்டனிலிருந்து சசிகலா வெளியேற்றப்பட்டபோது என்ன நடந்தது என்கிற புதிய நிகழ்ச்சி நிரலை ஆணையம் விசாரித்துக் கொண்டிருக்கிறது. அதன்படி ஆணையத்தால் விசாரிக்கப்பட்ட முதல் நபர், 2011-ல் சசிகலா போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முக்கிய காரணமான போலீஸ் அதிகாரி என வர்ணிக்கப்படும் முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம்.

Advertisment

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு வழக்கில் ஜெ. தண்டிக்கப்படுவார் என்பதால், அவருக்கு பதிலாக சசிகலாவின் கணவர் நடராஜனை முதல்வராக்க சசிகலாவின் சொந்தங்கள் முடிவு செய்தன. பெங்களூரு நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் இதற்கான ஆலோசனை நடைபெற்றதாக செல்போன் டேப் ஆதாரங்களை ராமானுஜம் ஜெ.விடம் வழங்கினார். அதனடிப்படையில் ஜெ., amrashpuriசசிகலாவை போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றினார். அத்துடன், சசிகலாவின் உறவினர்கள் மீது வழக்குகளைப் போட்டு, கடுமையான விசாரணைகளுடன் சிறையில் அடைத்து வைத்தார். சசிகலாவையும் ஒரு வீட்டில் அடைத்து வைத்தார். இதையெல்லாம் மனதில் வைத்துதான், "உடல்நலம் சரியில்லாத ஜெ.வை சசிகலாவின் குடும்பம் பழிவாங்கியதா?' என்கிற கேள்வியுடன் ராமானுஜத்திற்கு சம்மன் அனுப்பினார் நீதிபதி ஆறுமுகசாமி.

"நான் விசாரணைக்கு வருவதையே ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும்' என நீதிபதிக்கே வேண்டுகோள் வைத்து விசாரணைக் கமிஷனுக்கு வந்தார் ராமானுஜம். அவர் என்ன சொன்னார் என்பது இன்றுவரை ஆணைய வட்டாரத்திலிருந்து கசியவில்லை. அடுத்தபடியாக உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த அமரேஷ் பூஜாரிக்கு சம்மன் அனுப்பியது. ஆணையத்திற்கு விசாரணைக்கு வந்த அமரேஷ் பூஜாரி, ""சசிகலா போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டபோது நான் உளவுத்துறை அதிகாரியாக பணிபுரியவில்லை. எனக்கு எதுவும் தெரியாது'' என சொல்லிவிட்டார்.

venkatraman

அமரேஷ் பூஜாரியைத் தொடர்ந்து சசிகலாவின் உறவினரும் உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்தவருமான தாமரைக்கண்ணன் அழைக்கப்பட்டார். அவர் தன்னை விட அப்பொழுது உளவுத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த பொன்மாணிக்கவேலுவுக்குதான் அனைத்தும் தெரியும் என்று கூற, "சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் தேர்தலில்கூட சசிகலா குடும்பத்துக்கு ஆதரவாக டி.டி.வி. தினகரனுடன் இணைந்து செயல்பட்டீர்களா?' என எழுதி வைத்த கேள்வி ஆணையத்தால் முன்வைக்கப்பட, ""எனக்கு எதுவும் தெரியாது'' என நழுவியிருக்கிறார் தாமரைக்கண்ணன்.

அதேபோல் 2011-ம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த திரிபாதி, ""எனக்கு போயஸ் கார்டன் உள்ளே நடப்பதெல்லாம் தெரியாது. முதலமைச்சரின் செயலாளர் வெங்கட்ரமணனிடமிருந்து எனக்கு உத்தரவுவரும் "அதை மட்டும் செய்வேன்' என சொல்லிவிட்டார்'' என்கிறார்கள் ஆணைய வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

thamaraikannan

""ஜெ. மரணத்தின் உண்மைகளை வெளிக்கொண்டு வந்து, அ.தி.மு.க. தொண்டர்களின் மனதில் உள்ள கேள்விகளுக்கு விடை கிடைக்க வைப்போம் என்றுதான் ஆணையத்தை நியமித்தது எடப்பாடி அரசு. அதேபோல இதில் நடப்பவற்றை பத்திரிகையாளர்கள் நேரில் பார்க்கலாம் என்ற நோக்கத்துடன்தான் இந்த ஆணையம் தொடங்கப்பட்டது. ஆனால் இன்று ஆணையத்தில் நடப்பது எதுவுமே வெளியே தெரிய மாட்டேன்கிறது. ஆணையத்தில் நீதிபதி ஆறுமுகசாமிக்கு உதவியாளராக செயல்படும் கோமளா என்பவர் ஓ.பி.எஸ். சிபாரிசுடன் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆணையம் முதன்முதலில் அமைக்கப்பட்டபோது உதவியாளராக பணிபுரிந்த பன்னீர்செல்வத்திற்கு பதில் பொறுப்பேற்றுள்ளார்.

வெளிப்படையான மனிதராக இருந்த பன்னீர்செல்வம் போன பிறகு ஆணையமும் அப்பல்லோ மருத்துவமனை மாதிரி மர்மமாகவே போய்விட்டது என வருத்தப்படுகிறார்கள் ஆணையத்தில் சுற்றித் திரியும் பத்திரிகையாளர்கள்.

dr.shivakumar

இதற்கிடையே ஜெ.வை மருத்துவ சிகிச்சையில் நோய்த்தொற்று காரணமாக மத்திய மந்திரிகள், தமிழக கவர்னர் மற்றும் அமைச்சர்கள் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது என அப்பல்லோ மருத்துவமனை சொன்னதை மீறி "நான் இரண்டுமுறை ஜெ.வை பார்த்தேன்' என சாட்சி சொல்லி ஜெ.வின் வேலைக்காரர்கள் பாணியில் அதிர வைத்திருக்கிறார் ஜெ. ஆட்சியில் முதல்வரின் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வெங்கட்ரமணன்.

அப்பல்லோவில் அட்மிட்டாவதற்கு முன்பாக ஜெ.வின் உடல்நலம் பாதித்திருந்ததா, அதில் சசி குடும்பத்தின் பின்னணி இருக்கிறதா என விசாரணை போய்க் கொண்டிருக்கும் நிலையில், ஜெ.வின் பர்சனல் மருத்துவராக இருந்த சசி குடும்பத்தின் டாக்டர் சிவக்குமார் அளித்த சாட்சியத்தில், ஜெ. மயங்கி சுயநினைவிழந்ததையும், அதற்கு இரண்டு நாள் முன்பே அவருக்கு காய்ச்சல் இருந்தது என்றும், தோல் நோய்க்காக ஸ்டீராய்டு மருந்துகளை சாப்பிட்டு வந்தார் என்றும் தெரிவித்திருப்பது நக்கீரன் ஏற்கனவே வெளியிட்ட செய்திகளை உறுதிப்படுத்துகிறது.

-தாமோதரன் பிரகாஷ்

----------------------------------------------------------------

இறுதிச் சுற்று!

ரத யாத்திரைக்கு எதிர்க்குரல்!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமருக்கு கோவில் கட்ட வலியுறுத்தி வி.எச்.பி.யின் ரத யாத்திரை, பிப்ரவரி 13 ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் தொடங்கியது. மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக வரும் அந்த யாத்திரை மார்ச் 25 ஆம் தேதி ராமேஸ்வரத்தை அடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரை கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் நுழைவதை எதிர்த்து, "பாசிசத்துக்கு எதிரான மக்கள் மேடை' என்ற அமைப்பு ஒரு அணிவகுப்பை ஏற்பாடு செய்துள்ளது. மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்பினர் பங்கேற்கும் மதச்சார்பின்மைக்கான அணிவகுப்பு 10 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிவகுப்புக்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்து வருவதுடன், இதுபோன்ற முன்னெடுப்புகள் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காவி பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு தமிழக எல்லையான செங்கோட்டையில் தடுப்பு மறியலுக்குத் திட்டமிட்டுள்ளது. வி.எச்.பி.யின் யாத்திரைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் கூட்டாக செயல்படும் உறுப்பினர்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகிய மூவரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மறுக்கும் மத்திய அரசு!

ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் தலைமையகம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ளது. இங்கு பல அமைப்புகளும் மனித உரிமைகள் குறித்த பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. அதில், இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் குறித்த அரங்கில் பேசுவதற்காக தமிழகத்திலிருந்து தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவை அழைத்திருந்தார்கள். அவர் நாடாளுமன்றத்திலேயே ஈழப் பிரச்சினைகள் குறித்து பல முறை பேசியிருக்கிறார். எனினும், அவர் ஜெனீவா செல்வதற்கான க்ளியரன்ஸை இந்திய வெளியுறவு அமைச்சகம் கடைசி நேரம் வரை வழங்கவில்லை. இது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் நம்மிடம், ""இலங்கைப் பிரச்சினையில் மோடி அக்கறை செலுத்துகிறார் என்று பா,ஜ.க.வினர் சொல்கிறார்கள். ஆனால், ஒரு எம்.பிக்கான க்ளியரன்ஸை அவரது அரசு வழங்க மறுக்கிறது என்பதுதான் உண்மை நிலவரம்'' என்கிறார்கள் வேதனையுடன்.

-கீரன்