து பெரியார் மண்ணா என்று கேட்ட பா.ஜ.க.வுக்கு ""ஆம்... அவர் மண்தான்...'' என அதே பா.ஜ.க.வின் எச்.ராஜா தனது முகநூல் பதிவின் மூலம் நிரூபித்திருக்கிறார்.

periyar

தந்தை பெரியாருக்கும் திராவிட இயக்கத்திற்கும் எதிராக ஆத்திரமூட்டும் கருத்துகளை அவ்வப்போது வெளியிடுவது பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவின் வழக்கம். சர்ச்சைக்குரிய அவருடைய கருத்துகளுக்கு தமிழகத் தலைவர்கள் யாரும் அரசியல் ரீதியாக வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்தாமல் உதாசீனப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில்தான் திரிபுராவில் பா.ஜ.க. வெற்றிபெற்றதன் எதிரொலியாக, புரட்சியாளர் லெனின் சிலை தகர்க்கப்பட்ட படத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட எச்.ராஜா, ""திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்படுவதைப் போல, நாளை தமிழகத்தில் ஈ.வே.ரா.ராமசாமி சிலையும் அகற்றப்படும்'' என்று பதிவிட்டிருந்தார். எச்.ராஜாவின் இந்த "திருப்பணி'தான் இது பெரியார் மண் என்பதை டெல்லிவரை உணர்த்தியது.

Advertisment

கட்சி வேறுபாடின்றி மக்கள் போராட்டம் வெடித்தது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் "எச்.ராஜாவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும்' என்று கருத்துத் தெரிவித்தார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆவேசத்துடன், "பெரியார் சிலையில் கை வைத்தால் கைகள் துண்டு துண்டாகும்' என்று மிகக்கடுமையான வார்த்தைகளால் கண்டித்தார்.

இதையடுத்து, எச்.ராஜா தனது பதிவை நீக்கினார். ஆனாலும், "எச்.ராஜா மன்னிப்புக் கோரவேண்டும்' என்ற கோரிக்கை வலுப்பெற்று வந்தது. இந்நிலையில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தந்தை பெரியாரின் மார்பளவு சிலையை இரவு 9 மணிக்கு சுத்தியலால் ஒருவன் உடைத்தான். சாலையில் போன ஒருவர் இதைப்பார்த்து “"யார்டா அய்யா சிலையை உடைக்கிறது?'’என்று குரல் எழுப்பினார். குரல்கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிலையை நோக்கி ஓடி வந்தனர். உடனே அவன் பீடத்திலிருந்து குதித்து தனது கூட்டாளியுடன் தப்பினான். ஆனால், அவர்கள் இருவரையும் விரட்டிப் பிடித்து வெளுத்த பொதுமக்கள், போலீஸில் ஒப்படைத்தனர்.

protest

Advertisment

சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலை தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் திறந்து வைத்தது ஆகும். பெரியார் சிலையைச் சேதப்படுத்திய பா.ஜ.க.வைச் சேர்ந்த முத்துராமன் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக தமிழிசை அறிவித்தார்.

வேலூர் -திருப்பத்தூர் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தந்தை பெரியார் சிலைகளுக்கும் பா.ஜ.க. அலுவலகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஆனால், 7-ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் கோவையில் உள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகத்தில் சில மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக பா.ஜ.க.வினர் போலீஸில் புகார் கொடுத்தனர்.

velmurugan-protest

இந்நிலையில் 7-ஆம் தேதி காலை தமிழகம் முழுவதும் தி.மு.க., தி.க., கம்யூனிஸ்ட், வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டன. ஏராளமான பெண்களும் குழந்தைகளுடன் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினருக்கு ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

இந்தப் பரபரப்புக்கு இடையே, எச்.ராஜாவின் பதிவுகளால் கட்சிக்கு ஏற்படும் எதிர்விளைவுகளை இல.கணேசன், தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா வின் கவனத்துக்குக் கொண்டுசென்றனர். பெரியார் ஈ.வெ.ரா. எனக் குறிப்பிட்டு தமிழ்நாடு பிராமணர் சங்கமும் ஹெச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

""ஆன்மிகத்துக்கு எந்த அளவு தமிழகத்தில் இடம் இருக்கிறதோ, அதே அளவுக்கு பகுத்தறிவு கொள்கைக்கும் இடமிருக்கிறது. அதை உரசிப் பார்ப்பது பா.ஜ.க.வுக்கு நல்லதல்ல. எச்.ராஜாவின் பேச்சுகளும் பதிவுகளும் பா.ஜ.க.வின் வளர்ச்சியை தடுப்பதாக இருக்கிறது''’என்று அவர்கள் அமித்ஷாவிடம் கூறினார்கள். இதை மோடியின் கவனத்துக்கு கொண்டுசென்றார் அமித்ஷா.

vaiko-speech

அதேசமயம், தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கும். அவை பிரதமர் மோடிக்கு எதிராக திரும்பும் ஆபத்து இருக்கிறது என்று மத்திய உளவுத்துறையும் எச்சரித்தது. உடனே, மோடி அட்வைஸ்படி எச்.ராஜாவை டெல்லிக்கு அழைத்த அமித்ஷா கடுமையாக கண்டித்துள்ளார். இதைத் தொடர்ந்து, "டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த எச்.ராஜா, பெரியார் பற்றிய தனது பதிவுக்காக ஆங்கிலம் -தமிழ் -இந்தி என மூன்று மொழிகளில் வருத்தம் தெரிவித்து, எல்லாப் பழியையும் அட்மின் மீது போட்டார்' என்கிறார்கள்.

அப்படியும் இந்தப் பிரச்சனை முடிந்துவிடவில்லை. போராட்டங்கள் வேகம் எடுத்தன. பிரதமர் அலுவலகத்திலிருந்து தமிழக தலைமைச் செயலாளரை தொடர்புகொண்டு, "பா.ஜ.க.வுக்கு எதிராக தமிழகத்தில் மாணவர் போராட்டங்களை அனுமதிக்கக்கூடாது' என்று அறிவுறுத்தியது. இதையடுத்து முதல்வர் எடப்பாடியை சந்தித்து விவாதித்தார் கிரிஜா வைத்தியநாதன். பின்னர், டி.ஜி.பி. ராஜேந்திரன், உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி ஆகியோரைத் தொடர்புகொண்டு சில உத்தரவுகளையும் பிறப்பித்தார். இதனால் மாணவர்கள் களமிறங்காதபடி கவனிக்கத் தொடங்கியது காவல்துறை.

periyar-statue

அரசியல் கட்சிகளும் முற்போக்கு அமைப்புகளும் தொடர் போராட்டங்களில் இறங்கியதால் பெரும் பதற்றம் நிலவியது. தமிழக பா.ஜ.க. தலைமையகமான கமலாலயத்தை முற்றுகையிட முயன்றவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். சென்னை -அண்ணாசாலை போராட்டக் களமானது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் எச்.ராஜா உருவ பொம்மை தீயிடப்பட்டது. வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.

protestraja-protest

இந்நிலையில் கோவை பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக தந்தை பெரியார் தி.க.வைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதிகளில் பூணூலை அறுத்த திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த 4 பேர் ராயப்பேட்டை ஸ்டேஷனில் சரணடைந்தனர். அதிரடியான பதிலடியால் போராட்டக் களம் சூடுபிடிக்க, தீக்குள் கையைவிட்ட நிலைக்குள்ளான பா.ஜ.க.விலிருந்தே எச்.ராஜா மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற குரல்கள் வலுவடைந்தன. எல்லாவற்றையும் உற்றுக் கவனித்த டெல்லி பா.ஜ.க. தலைமை மேலும் கவலையடைந்தது. ஹெச்.ராஜா மீது எந்த நேரமும் நடவடிக்கை பாயலாம் என்ற நிலையே புதன் இரவு வரை நீடித்தது.

bjp-kovi-office

இறந்து 45 ஆண்டுகள் கடந்தபிறகும் கொள்கைகளால் தமிழ் மண்ணில் நிலைத்திருக்கும் பெரியாரை இன்றைய தலைமுறை இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் எனப் பல தரப்பினரும் நன்றியுடன் நினைவுகூர்ந்து போராட்டக் களம் கண்டது பெரியாரின் மகத்தான சமுதாயப் பணிக்குச் சான்றாக இருந்தது. பெரியாரை விமர்சிக்கும் இயக்கத்தினரும், திராவிடத்தை மறுக்கும் அமைப்பினரும்கூட இதில் அரசியல் பார்க்காமல் களம் இறங்கியது வியப்பைத் தந்தது. மதவாத சக்திகள் நுழைய முடியாத இடமாக தமிழகம் பாதுகாப்பாக இருப்பதற்கு காரணம் அந்த மாமனிதர்தான் என்பதை கட்சி-சாதி-மதம் அனைத்தையும் கடந்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள் தமிழர்கள். ஆம்... இது பெரியார் மண்.

-கீரன், இளையர், ராஜா

அட்மினா? யார் அது?

"லெனின் சிலையைப் போல பெரியார் சிலை உடைக்கப்படும்' என்று எச்.ராஜா-வின் பேஸ்புக் பதிவு மார்ச் 6 ஆம் தேதி காலை பதிவு செய்யப்பட்ட நிலையில், அப்போது விமானத்தில் தான் சென்று கொண்டு இருந்ததாகவும், தன்னுடைய அட்மின் தனக்கு உடன்பாடில்லாத கருத்தை பதிவு செய்துவிட்டதாகவும், அதனால் அந்தப் பதிவையும் அட்மினையும் நீக்கிவிட்டதாகவும் டெல்லியில் விளக்கமளித்தார் ராஜா. பேஸ்புக்கில் பதிவிடப்பட்டு, காலை 9.00 மணி அளவில் அந்தத் தகவல் பகிரப்பட்டு இருக்கிறது. அதை பார்த்து விட்டு சில நிருபர்கள் அவரின் உதவியாளரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது "இதை பிரச்சனை ஆக்கிவிட வேண்டாம்' என்று சொல்லி இருக்கிறார்.

"காலை 10.45 மணி அளவில்தான் விமான நிலையத்தின் உள்ளே சென்று இருக்கிறார் ராஜா. அப்படியானால் அவரே பதிவிட்ட தகவல்தானா அது, அவருக்குத் தெரியாமலோ ஒப்புதல் பெறாமலோ அட்மினால் நிலைத்தகவல் பதிவிடமுடியுமா' என ராஜாவின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம். ""ராஜாவின் பேஸ்புக் பக்கத்தைப் பார்த்துக் கொள்வது காரைக்குடியைச் சேர்ந்த பாலமுருகன் என்கிற பி.இ. பட்டதாரி. கடந்த ஆண்டு இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்கிறார். ஆனாலும் ராஜா அனுமதியின்றி எதையும் போடமுடியாது. "ஈவேரா ராமசாமி, சாதி வெறியர்' என எழுத்திலும் கருத்திலும் பிழையாகப் பதிவு செய்யப்பட்டதிலிருந்தே இது ராஜாவே போட்ட பதிவுதான்'' என்கிறார்கள் தில்லுமுல்லு ஸ்டைலை அறிந்த நெருக்கமானவர்கள். அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் இந்திரன் என்றால் எச்.ராஜா, அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன் என்றால் அட்மின்.

-சி.ஜீவா பாரதி

பதட்டம்

திரிபுராவில் லெனின் சிலை, திருப்பத்தூரில் பெரியார் சிலை என பா.ஜ.க. தரப்பு சிதைக்கத் தொடங்கியதும் நாடு முழுவதும் மதச்சார்பற்ற சக்திகள் இயல்பாக ஒருங்கிணையத் துவங்கின. சொந்த மாநில அரசியல் மாறுபாடுகளைக் கடந்து, லெனின் சிலை தகர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து, சி.பி.எம். நிலையை ஆதரித்தார் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி. அதே நாளில், கொல்கத்தாவிலும் பாரதிய ஜனசங்க தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜியின் சிலை தகர்க்கப்பட்டது. உத்தரபிரதேசத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை சிதைக்கப்பட்டது. இதனால் மத்திய உள்துறை அலர்ட்டாகி அனைத்து மாநிலங்களிலும் சிலை பாதுகாப்பையும், கலவரத் தடுப்பு நடவடிக்கையையும் உறுதி செய்ய வலியுறுத்தியது.