rowdy

ப்படி ஒரு லம்ப்பான கேட்ச்சிங் இருக்கும் என காக்கிச்சட்டையினரே எதிர்பார்க்கவில்லை. துப்பாக்கி புழக்கம் பெருகி வரும் மாநிலத்தில், நூற்றுக்கும் அதிகமான ரவுடிகள் ஒரே இடத்தில்கூடி ஒரு ரவுடியின் பிறந்தநாளைக் கொண்டாடி, கொலைக்கருவியான அரிவாளால் கேக் வெட்டும் காட்சிகள் தமிழகத்தையே பதற வைத்துள்ளன. போலீசார் ஏற்கனவே பொறி வைத்திருந்தாலும், உரிய "க்ளு' இல்லாமல் தவித்து வந்தனர். அப்படிப்பட்ட நிலையில், ஒரே இரவில் 73 ரவுடிகள் சிக்கிக்கொண்டது பெரிய வேட்டைதான். ஆனாலும், கேங்ஸ்டர் கொண்டாட்டத்தை நடத்திய "பர்த்டே பாய்' பினு உள்ளிட்ட முக்கிய ரவுடிகள் எஸ்கேப்பானதும் அவர்களின் அடுத்தகட்ட திட்டமும் அதிர்ச்சி ரகங்கள்.

ஒரே இடத்தில் 100க்கும் அதிகமான ரவுடிகளை ஒருங்கிணைக்க, கேங்கஸ்டர்ஸ் பயன்படுத்திய தொழில்நுட்பங்களும், அவர்களின் அட்டாக் ஆபரேஷன்களும் ஹைடெக் ரகம். அதைப் பற்றி ரவுடிகளை மடக்கிய போலீஸ் டீமின் உயரதிகாரி ஒருவர் நம்மிடம் விளக்கினார்.

Advertisment

rowdy0binu

""கடந்த ஜனவரி 9-ஆம் தேதி காலை சென்னை மாம்பலத்தில் காலை 730 மணியளவில் தன் மகளை கல்லூரி வாகனத்தில் ஏற்ற வந்த ரௌடி கந்தன் சில மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டான். அந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்கிற ரௌடி உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். வழக்கில் தொடர்புடைய மற்றொரு ரௌடியான பல்லு மதன் அந்த கொலை உட்பட பல வழக்குகளில் கோர்ட்டில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் சென்னை புறநகர் பகுதியான பள்ளிக்கரணையில் பதுங்கி இருக்கிறான் என தங்கவேலு என்கிற உதவி ஆய்வாளருக்கு தகவல் வந்தது. அதனடிப்படையில், பல்லு மதனை ஆய்வாளர் சிவக்குமார் ரவுடிகளை கண்காணிக்கும் பிரிவு துணை கமிஷனரான ஸ்டீபன் ஆகியோர் கைது செய்கின்றனர்.

Advertisment

உரிய முறையில் விசாரித்தபோதுதான் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இயங்கும் ரௌடிகளின் புதிய ஹைடெக் அவதாரத்தை நாங்கள் அறிய முடிந்தது.

rowdyspot

""எங்க யாருக்கும் நிரந்தர போன் நம்பர் கிடையாது. பொதுவான ஆளுங்க மூலமா, அண்ணனை பார்க்கணும்னு சொன்னாதான் எங்கள் தொடர்பு கிடைக்கும். அதுவும் செல்போனில் பேசமாட்டோம். எல்லாம் நாலு டிஜிட் ஆன்லைன் போன்தான். அதில் மெசேஜ் போடுவோம். அதில்தான் பேசுவோம். இப்பக்கூட பாருங்க இன்று இரவு சூளைமேடு பினு (எ) பின்னி அவனது அஸிஸ்டெண்ட்டுகள் விக்கி என்கிற விக்னேஷ், கணக்கு (எ) கனகராஜ் ஆகியோர் பினுவின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதற்காக குன்றத்தூர் பக்கத்துல ஒரு இடத்தில் கூடுறோம் நீங்க வாங்கன்னு ஆன்லைனில் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

கத்தி எல்லாம் ரெடி பண்ணிக்கிட்டிருக்கும் போதுதான் நீங்க வந்து பிடிச்சுட்டீங்க'' என அசால்ட்டாக சொன்ன அவனை பற்றி சிட்டி கமிஷனர் ஏ.கே.விசுவநாதனுக்கு தகவல் அளித்தார்கள்.

அலர்ட்டான கமிஷனர் உடனடியாக, ரவுடி பினுவின் பிறந்த நாள் விழா நடத்த இருக்கும் குன்றத்தூர் பகுதியின் இணை ஆணையாளர் சந்தோஷ்குமார், அந்த பகுதியின் காவல் மாவட்டமான அம்பத்தூர் காவல் மாவட்டத்தின் துணை ஆணையரான சர்வேஷ்ராஜ் ஆகியோரிடம் தகவல் தெரிவித்து ஆபரேஷனை முடுக்கி விட்டார்.

rowdy2

1950களில் அமெரிக்காவின் அப்பாலாசின் என்கிற பகுதியில் ஒரு கொண்டாட்டத்தில் கூடிய 60 மாஃபியா கும்பல் தலைவர்களை அமெரிக்க போலீஸ் வேட்டையாடியதை போல இந்த ஆபரேஷன் இருக்க வேண்டும் என திட்டமிட்ட காவல்துறை பிறந்த நாள் கொண்டாடும் பினுவிடம் துப்பாக்கி நிச்சயம் இருக்கும் என நம்பினார்கள். பினுவை சில வருடங்களுக்கு முன்பு துப்பாக்கியுடன் கைது செய்த ஆவடி துணை கமிஷனர் நந்தகுமாரிடம் அவனைப் பற்றிய விவரங்களை திரட்டினார்கள்.

நந்தகுமாரிடம் மட்டுமல்லாது போரூர் பகுதியைச் சேர்ந்த உதவி ஆணையாளர் கண்ணன், அந்த பகுதிக்கு அருகில் உள்ள பூந்தமல்லி உதவி கமிஷனர் ஆல்பிரெட் வில்சன் தலைமையில் டீம் அமைக்கப்பட்டது. அவர்கள் கீழ் கிருஷ்ணகுமார், சங்கரநாராயணன் உட்பட பத்து ஆய்வாளர்கள், 15 உதவி ஆய்வாளர்கள், நாற்பது காவலர்கள் மற்றும் துணை ஆணையர் சர்வேஷ்ராஜ் அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு படை போலீசார் என எழுபதுக்கும் மேற்பட்ட போலீசார் அடங்கிய டீம் அமைக்கப்பட்டது.

IPSvishஆபரேஷன் பற்றி உதவி ஆணையாளரான நந்தகுமாரிடம் கேட்டோம். ""மொத்தம் 6 தனியார் கார்களில் சீருடை அணியாமல் நாங்கள் பல்லு மதனை அழைத்துக்கொண்டு சென்றோம். அவனது செல்போன் மூலம் வாட்ஸ்அப் காலில் பினுவின் உதவியாளரான கனகுவிடம் ஸ்பீக்கர் போனில் பேச வைத்தோம்.. வண்டலூர் நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையின் சர்வீஸ் ரோடு பகுதியில் வடக்கு மலையம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு லாரி செட்டை அடையாளம் காட்டினான் பல்லு மதன். உடனே நாங்கள் 3 கார்களை அந்த லாரி ஷெட்டிற்கு பின்புறம் நிற்க வைத்தோம். 3 கார்களில் வந்த உயரதிகாரியின் உத்தரவு கிடைத்ததும் பாய்ந்தோம்'' என்றார்.

துணை ஆணையர் சர்வேஷ்ராஜ் நம்மிடம், ""இருட்டாக இருந்தது. லாரி ஷெட்டை சுற்றி முள்செடிகள். செம்பரம்பாக்கம் ஏரிப்பகுதி என்பதால் தண்ணீருக்கும் பஞ்சமில்லை. நாங்கள் நுழைந்ததும் "டேய் தடியா… சிக்கு… காப்ஸ்' என போலீசை குறிக்க ரவுடிகள் உபயோகிக்கும் வார்த்தைகளை சொல்லித் தப்பி ஓடினார்கள். நாங்கள் துப்பாக்கியை காட்டி, மிரட்டி சிக்கியவர்களை கைது செய்தோம். தப்பி ஓடியவர்கள் மலையம்பாக்கம் கிராமத்தில் ஒளிந்து கொண்டார்கள். உடனே நாங்கள் மலையம்பாக்கம் மக்களை திரட்டினோம். அவர்கள் எங்களுடன் சேர்ந்து ரவுடிகளை தேடினார்கள். பொதுமக்கள் உதவியால் சேற்றில் விழுந்தவர்கள், முள்புதரில் சிக்கியவர்கள் என இருபத்தைந்து ரவுடிகளை கைது செய்தோம். மொத்தம் 73 ரவுடிகள். அவர்கள் வந்த ஏழு கார், 1 ஆட்டோ, 42 பைக்குகள், 89 செல்போன்கள், 15 பட்டா கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம்'' என்கிறார்

அந்த பகுதிவாசியான வழக்கறிஞர் ரஞ்சித், ""கூட்டத்தைப் பார்த்து ஏதோ சினிமா சூட்டிங் என நாங்கள் நினைத்தோம். ஆனா யாரோ அடையாளம் தெரியாதவங்க ஓடி வந்து வீடுகள் பக்கம் பதுங்கினாங்க. அதுக்குள்ள மஃப்டியில் துப்பாக்கியுடன் போலீசார் அவர்களை துரத்தி வந்தார்கள். ஏதோ விபரீதம் நடக்குதுன்னு முதல்ல மக்கள் வீட்டுக்குள்ள போயிட்டாங்க. போலீஸ் உதவி கேட்டதால ரவுடிகளைத் தேடினோம். இந்த ரிங் ரோடு பகுதியில் நிறைய சமூக விரோத சம்பவங்கள் நடக்கிறது'' என்கிறார் பதற்றத்துடன்.

"ஸ்பாட்டில் கிடைத்த செல்போன்கள் மூலமாக ரௌடிகளின் நெட்வொர்க்கை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறோம்' என்கிற போலீசார், ""பிடிபட்ட 73 ரவுடிகளில் தீனன் என்கிற ரவுடி பல கொலைவழக்குகளில் தொடர்புடையவன். அதுபோல பத்துக்கும் மேற்பட்ட கொடூர ரௌடிகள் ஒரே சம்பவத்தில் எங்களிடம் சிக்கியிருக்கிறார்கள். கொலை செய்ய பயன்படுத்தும் அரிவாளால் கேக்கை வெட்டிய பினு அவனது உதவியாளர்களான கணக்கு மற்றும் விக்கி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகள் தப்பித்து விட்டார்கள். ஒவ்வொரு ரவுடியும் மிகவும் கொடூரமானவர்கள். நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒரு இடத்தில் குவிந்து நிற்பார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ரவுடிகளை சுடுவதற்கான அனுமதியும் கொடுக்கப்படலை. ரவுடிகள் திருப்பித் தாக்கினாலோ தப்பிக்க முயற்சித்தாலோ அதனை சமாளிப்பதற்கான ஃபோர்சும் இல்லை. மலையம்பாக்கத்திற்கு பக்கத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி வழியாக ரௌடிகள் தப்பிச் சென்றிருக்கக்கூடும். சிட்டி கமிஷனரின் சமயோசிதத்தால் இந்தளவு செயல்பட முடிந்தது'' என்றவர்கள், கமிஷனர் ஏ.கே.விசுவநாதன் வெளிப்படுத்திய கோபத்தையும் குறிப்பிட்டார்கள்.

rowdies

""நூற்றுக்கணக்கில் ரவுடிகள் நடமாட்டம் உள்ள சிட்டியில், எல்லா ரவுடிகளும் ஒரு இடத்தில் கூடி பிறந்த நாள் விழா கொண்டாடுகிறார்கள். இதையெல்லாம் கண்காணிக்க வேண்டிய உளவுத்துறை போலீசார் என்ன செய்கிறார்கள் என சென்னை மாநகர உளவுத்துறை உயரதிகாரிகளை நேரில் கூப்பிட்டு கடிந்து கொண்டார் கமிஷனர்'' என்ற விவரத்தையும் போலீசார் வெளிப்படுத்தினார்கள்.

ரௌடிகள் வட்டாரத்தில் நடப்பதை அறிய முயன்றபோது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிப்பட்டன. ""பிறந்தநாளை அமர்க்களப்படுத்திய ரவுடி பினுவுக்கும் சிறையில் இருக்கும் நாகேந்திரன் என்பவருக்கும் தொழில் போட்டி நடக்கிறது. நாகேந்திரன் தரப்பு பினுவிடம் இருந்த ராதாகிருஷ்ணன் என்பவரை, பினு கல்லீரல் பிரச்சினைக்காக கேரளாவில் ட்ரீட்மெண்ட்டில் இருந்தபோது கொத்திக் கொண்டு போனது. சாதாரண லாரி ஓட்டுநராக இருந்த ராதாகிருஷ்ணன் தனது துடிப்பான செயல்பாட்டால் ரௌடிகள் வட்டாரத்தில் பிரபலமானான். அவனால் நாகேந்திரனின் செல்வாக்கு கூடிவந்தது. அதேபோல் பினுவின் நட்பு வட்டாரத்தில் இருந்த சி.டி.மணியும், பிரபல ரவுடியாக மாறி வளர்ந்து வந்தான்.

கேரளாவில் இருந்து ட்ரீட்மெண்ட் முடிந்து திரும்பி வந்த பினு, தனது சகாக்களாக இருந்த ராதாகிருஷ்ணன், சி.டி.மணி உள்ளிட்டவர்களையும் அவனை ஆதரிப்பவர்களையும் சந்திக்க ஆசைப்பட்டான். அவர்களை ஒரே இடத்தில் கூட்டினான் அவ்வளவுதான். இது தொழில்முறையைத் தாண்டிய நட்பின் அடையாளம். பினு சாதாரண ஆள். அவனை விட பெரிய ஆட்களான நாகேந்திரன், காக்கா தோப்பு பாலாஜி எல்லாம் இருக்கிறார்கள். அவன் பிறந்த நாள் விழாவில் அரிவாளால் கேக் வெட்டியதை தவிர பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை'' என்கிறார்கள் பினு பக்கம் பேசும் ரவுடிகள்.

அவனது போட்டித் தரப்பினரோ, ""ஆள் கடத்தலில் பினு கில்லாடி. அவனுக்கு பலமே கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யும் அடியாட்கள் மூலம் கொள்ளை அடிப்பதுதான். அவன் பிறந்த நாள் என கூட்டம் கூட்டியதே தனக்கு தொழிலில் போட்டியாகி, எதிரிகளாக மாறிவிட்ட சி.டி.மணியையும் ராதாகிருஷ்ணனையும் கொலை செய்யத்தான். இதை தெரிந்து கொண்ட சி.டி.மணி, போலீசார் தேடி வரும் தன்னுடைய ஆதரவாளரான பல்லு மதனை வேண்டுமென்றே போலீசிடம் சிக்குவதுபோல செய்து, 100க்கும் அதிகமான ரவுடிகளுடன் பினு பிறந்த நாள் விழா கொண்டாடும் விஷயத்தை போலீசின் விசாரணையில் சொல்ல வைத்துள்ளான். தன்னைப் போட நினைத்த பினுவை, சி.டி.மணி தரப்பு பல்லு மதன் மூலம் போட்டுக்கொடுத்துள்ளது என்கிறார்கள்.

சென்னை நகரம் முழுவதும் நூற்றுக்கணக்கான ரவுடிகள் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பதும் அவர்கள் நவீன தொழில்நுட்பங்களுடன் இயங்குவதும் காவல்துறையை அதிரவைத்துள்ள நிலையில், பினு தப்பியதும் சி.டி.மணி தரப்பின் போட்டி சாம்ராஜ்ஜியமும் பழிக்குப்பழி ரீதியிலான கொலைகளுக்கு வழிவகுக்கும் என்ற அச்சமும் உள்ளது. நெட்வொர்க் பெரிது என்பதால் தமிழகம் முழுவதும் ஆபத்து சூழ்ந்துள்ளது. ரவுடிகளின் ரத்தவெறி முந்துகிறதா, போலீஸின் என்கவுண்ட்டர் டெக்னிக் முந்துகிறதா என்கிற அதிரடி ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது.

-தாமோதரன் பிரகாஷ் & அரவிந்த்

செம்மரக்கட்டை-அடையாள அட்டை!

பினு பார்ட்டி கொடுத்த லாரி ஷெட்டுக்கு பக்கத்தில் இருந்த குளத்தில் இருந்து 400 கிலோ செம்மரக்கட்டைகளை போலீசார் கண்டெடுத்திருக்கிறார்கள். அத்துடன் ரௌடிகளில் 14 பேர் பத்திரிகையாளர் என்ற அடையாள அட்டையை பயன்படுத்தியிருப்பதையும், ஒருவர் போலியாக வழக்கறிஞர் அடையாள அட்டையை வைத்திருந்ததையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். பார்ட்டி நடந்த லாரி ஷெட்டை நடத்தும் வேலு தலைமறைவானார்.