அ.தி.மு.க. அரசியலில் திடீர் திருப்பமாக சமீப நாட்களில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. பா.ஜ.க.வை எதிர்க்கத் தயங்கி இதுவரை பம்மி வந்த அ.தி.மு.க. தலைவர்கள் திடீரென பா.ஜ.க.வை எதிர்த்து கருத்துத் தெரிவிக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது என்றும், தமிழகத்தின் திட்டங்களுக்கு போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்றும் சமீபத்தில் ஓ.பி.எஸ். கருத்து கூறியிருந்தார்.
அவருடைய இந்த திடீர் எதிர்ப்புக்கு காரணம் என்ன என்று டெல்லி வட்டாரத்தில் விசாரித்தோம். ஓ.பி.எஸ்.சின் எதிர்ப்புக்கு கொடுக்கல் வாங்கல்தான் அடித்தளமாக இருப்பதை புரிந்துகொள்ள முடிந்தது.
ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்திய போது சசிகலா அறையை மட்டும் சோதனை நடத்தினார்கள். அந்த அறையிலிருந்து கட்டுக்கட்டாக ஆவணங்களை அள்ளிச் சென்றனர். அந்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அவை பெரும்பாலும் ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் ஓ.பி.எஸ். வாங்கிய சொத்துகளின் ஆவணங்களாக இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையறிந்த பா.ஜ.க. மேலிடம், "ஜெயலலிதாவை ஏமாற்றி உங்கள் பெயருக்கு நீங்கள் வாங்கிய சொத்துகளை பறித்து சசிகலாவிடம் ஜெயலலிதா கொடுத்திருக்கிறார் என்றால், சசிகலாவைத்தானே ஜெயலலிதா நம்பியிருக்கிறார்' என்று ஓ.பி.எஸ்.ஸிடம் காட்டமாக கேட்டிருக்கிறது.
இந்தக் கடுப்பில்தான் ஓ.பி.எஸ். திடீரென தனது பா.ஜ.க. எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்கிறார்கள். இதுகுறித்து சசிகலா தரப்பில் விசாரித்தபோது அதை அவர்களும் ஆமோதித்தார்கள்.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் உள்ள சசிகலா அறையில் கைப்பற்றிய ஆவணங்களில் பெரும்பாலானவை ஓ.பி.எஸ்., நத்தம் விசுவநாதன், கரூர் அன்புநாதன் ஆகியோருடைய பெயரில் உள்ளவை. ஜெயலலிதாவுக்கு தெரியாமல் அவர்கள் சேர்த்த சொத்துகளின் ஆவணங்கள்தான். இதை வருமான வரித்துறை மூலம் அறிந்த பா.ஜ.க. மேலிடம் சசிகலாவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இதுவரை பா.ஜ.க.வை நெருங்க சசிகலா தரப்பு முயற்சி செய்து வந்தது. இப்போது, பா.ஜ.க. சசிகலா தரப்பை நெருங்கி வந்திருக்கிறது என்றார்கள்.
இதுபற்றி பா.ஜ.க. தரப்பில் விசாரித்தபோது, ""அவர்களும் இதை ஒப்புக் கொள்கிறார்கள். பாஜக ஆளும் பல மாநிலங்களில் கட்சிக்கு எதிரான மனநிலை உருவாகி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவை பார்த்திருப்பீர்கள். அரச குடும்பத்தை சேர்ந்த "அக்மார்க்' பா.ஜ.க. பெண்மணியான வசுந்தர ராஜே சிந்தியா முதல்வராக இருக்கும் நிலையில் இரண்டு எம்.பி., ஒரு எம்.எல்.ஏ இடைத்தேர்தலில் மூன்றையும் காங்கிரசிடம் பறிகொடுத்திருக்கிறது ஆளுங்கட்சியான பா.ஜ.க., மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரசிடம் தோல்வி. இதுபோல எல்லா மாநிலங்களிலும் பா.ஜ.க. எதிர்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில்தான், தமிழ்நாட்டில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.சை ஆதரித்து கட்சியின் பெயரைக் கெடுத்துக் கொண்டோம். இப்போதுள்ள நிலையில் அ.தி.மு.க. இப்படி அணிகளாக பிரிந்து கிடப்பதை பா.ஜ.க. விரும்பவில்லை. எல்லா அணிகளையும் இணைத்து கட்சியை ஒன்றாக்க விரும்புகிறது. இதற்காக எல்லாத் தரப்பினரோடும் பேச்சு நடத்துகிறோம்'' என்றார்கள்.
இந்த தகவல்களை உறுதி செய்த எடப்பாடி தரப்பு, "சசிகலா வந்தால் ஏற்கத் தயாராக இருப்பதாகவும், அவருடைய தலைமையை ஏற்க தயக்கம் இல்லை என்றும், தினகரனை ஒருபோதும் ஏற்கமாட்டோம்' என்றும் கூறினார்கள்.
அதேசமயம், தினகரன் தரப்பினரோ, "ஓ.பி.எஸ்.சையும், இ.பி.எஸ்.சையும் தவிர்த்துவிட்டு, செங்கோட்டையனை முதல்வராக்கினால் மட்டுமே இணைப்பு முயற்சியை ஆதரிப்போம்' என்கிறார்கள்.
இதற்கிடையே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு, ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரிய வழக்கு, குட்கா விவகாரத்தில் தகுதி நீக்க அபாயத்தை சந்திக்கும் 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு ஆகியவற்றில் விரைவில் தீர்ப்பு வரவிருக்கிறது.
ஆட்சிக்கு எதிராக அந்தத் தீர்ப்பு அமைந்துவிடுமோ என்கிற கிலிதான் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். தரப்பை பாடாய்படுத்துகிறது. சட்டவல்லுநர்களிடம் ஆலோசனை கேட்ட பா.ஜ.க. தரப்புக்கும் திருப்தியில்லை. இன்னமும் இ.பி.எஸ் அரசை நம்பி அ.தி.மு.க.வை ஆதரித்துவந்தால் தமிழகத்தில் காலூன்றும் வாய்ப்பை பா.ஜ.க. இழந்துவிடும் என டெல்லி நினைக்கிறது. முதல்கட்டமாக ஓ.பி.எஸ்ஸை ஓரங்கட்டும் வேலைகள் தொடங்கிவிட்டன. அதன்விளைவே, பா.ஜ.க.வுக்கு எதிரான ஓ.பி.எஸ்.ஸின் குரல்.
முதல்வர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள நினைக்கும் எடப்பாடியோ இன்னமும் முழுமையாக மத்திய அரசை எதிர்க்கும் நிலையில் இல்லை. மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு விரிவான வரவேற்பு அறிக்கை கொடுத்து, தன் விசுவாசத்தைக் காட்டியுள்ளார். அதேநேரத்தில், பா.ஜ.க.விடம் சரண்டராகிவிட்டதாக அ.தி.மு.க. தொண்டர்கள் நினைத்துவிடக்கூடாது என்பதால், சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்ற குரலும் அவரிடமிருந்து வெளிப்படுகிறது.
இவற்றையெல்லாம் பா.ஜ.க.வும் சசி தரப்பும் கவனித்தே வருகிறது. தெளிவும் உறுதியும்தான் அரசியல் தலைமைக்கான இலக்கணம். நல்லது-கெட்டது இவற்றைத் தாண்டி, சசிகலா தரப்பின் அரசியல் செயல்பாடுகளை கவனிக்கும் பா.ஜ.க. மேலிடம் பச்சைக்கொடியை அசைக்கத் தொடங்கியுள்ளது.
-தாமோதரன் பிரகாஷ்