லீலைகளில் மன்னர் நித்தியானந்தா. அவர், ஆர்த்தி ராவ் என்ற பெண் சீடரையும் வினய் பரத்வாஜ் என்ற ஆண் சீடரையும் பிடதி ஆசிரமத்திலும் மற்றும் அமெரிக்கா உட்பட பரந்து விரிந்து கிடக்கும் ஆசிரமங்களில் வைத்தும் கற்பழித்தார் என்கிற வழக்கு பெங்களூருவை அடுத்துள்ள ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
அதை ரத்து செய்யவேண்டும் என வழக்குப் போட்டார் நித்தியானந்தா. ராம்நகர் கோர்ட் அதனை தள்ளுபடி செய்தவுடன், 2012-ஆம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஒரு மருத்துவ ஆவணத்தை நித்தியானந்தா தாக்கல் செய்தார். ஃபோர்டிஸ் என்கிற மருத்துவமனையிலிருந்து பெற்றுவந்த அந்த ஆவணம் அதிர்ச்சியடைய வைத்தது. அதில், ""நான் உருவத்தில்தான் வளர்ந்த ஆண்மகனாக இருக்கிறேன். தாடி, மீசையெல்லாம் முளைத்திருக்கிறது, ஆனால் எனக்கு ஆண்மை இல்லை. என்னால் ஒரு பெண்ணிடம் செக்ஸ் சுகம் அனுபவிக்க முடியாது. ஏனென்றால் நான் ஆண்மை உறுப்பின் வளர்ச்சியின்மை என்கிற குறைபாடுடன்தான் வாழ்கிறேன். ஒரு ஆறு வயது பாலகனும் நானும் செக்ஸ் விஷயத்தில் சமமானவர்கள். ஒரு பெண்ணை என்னால் தாயாக மட்டுமே பார்க்க முடியும்'' என்று குறிப்பிட்டிருந்தார் நித்தியானந்தா. உயர்நீதிமன்றமோ மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் நித்தி. உச்சநீதிமன்றம் மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டதால், பெங்களூருவிலுள்ள விக்டோரியா மருத்துவமனையில் நித்தியானந்தாவிற்கு ஆண்மைப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதற்கு ஒத்துழைக்காமல் முரண்டுபிடித்தார். நித்திக்கு டாக்டர்கள் காட்டிய நீலப்படங்கள் மூலம் அவரது ஆண்மையின் அறிகுறி தெரியவர... "ஒரு பெண்ணை கற்பழிக்கக்கூடிய அளவிற்கு முழு தகுதிபெற்ற ஆண்மகன் இவர்' என மருத்துவ ரிப்போர்ட் தரப்பட்டது.
உடனே நித்தி அமெரிக்காவிலுள்ள ஒரு மருத்துவமனையிலிருந்து, "நான் ஆண்மகன் இல்லை' என ஒரு ரிப்போர்ட்டை பெற்றுவந்து வழக்கில் நுழைத்தார். அந்த ரிப்போர்ட்டை பொய் என கோர்ட் நிராகரித்தது. இந்த ஆண்மை விவகாரத்தை வைத்தே 2010-ல் தொடங்கப்பட்ட வழக்கில் நான்கு வருடங்களை கடத்திவிட்டார் நித்தியானந்தா.
2014-ஆம் ஆண்டு இந்த கற்பழிப்பு வழக்கு விசாரணைக் கட்டத்திற்கு வந்தது. அப்போதும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என வழக்குப் போட்டு காலத்தைக் கடத்தினார். அதற்கடுத்து இந்த வழக்கு குற்றச்சாட்டு பதிவு என்கிற நிலைக்கு வந்தது. அதையும் இழுத்தடிக்க முயன்றார். இதைப்பார்த்து சலித்துப்போன உச்சநீதிமன்றம் 2017-ஆம் ஆண்டு வன்மையாக நித்தியானந்தாவை கண்டித்தது. உடனடியாக வழக்கை நடத்தி முடிக்க வேண்டுமென்று கர்நாடக நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
எட்டு ஆண்டுகளாக தம் மீதான கற்பழிப்பு வழக்கை தள்ளிப்போட்ட நித்தி, அதற்குள் அவர்மீது கற்பழிப்பு குற்றம் சுமத்திய ஆர்த்திராவ், வினய் பரத்வாஜ் ஆகியோருடன் இந்த கற்பழிப்பு வழக்கு மற்றும் நித்தி-ரஞ்சிதா வீடியோவுக்கு முக்கிய சாட்சியான லெனின் கருப்பன் மீதும் ஏகப்பட்ட வழக்குகளைத் தொடர்ந்தார். ஆர்த்தி மீதும் வினய் பரத்வாஜ் மீதும் அவர்கள் அமெரிக்காவில் வசித்து வந்தவர்கள் என்கிற அடிப்படையில் அமெரிக்காவில் வழக்குப் போட்டார் நித்தி. ஆர்த்திராவ் அந்த வழக்குகளில் சிக்காமல் இந்தியாவுக்கு வந்துவிட்டார். அமெரிக்காவில் இருக்கும் வினய் மூன்று வருடம் அமெரிக்க சிறைகளில் அடைபடும் அளவிற்கு நித்தியின் ஆட்டம் இருந்தது என்கிறார்கள் நித்திக்கு நெருக்கமானவர்கள்.
தற்பொழுது சட்டப்படிப்பை முடித்திருக்கும் ஆர்த்திராவ் நடத்திய கடுமையான போராட்டத்தின் மூலமாக ஒருவழியாக நித்தி மீதான கற்பழிப்பு வழக்கு ட்ரையலுக்கு வந்துள்ளது. "என்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்' என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவுடன் வழக்குப் போட்டார் நித்தி. அதை ராம்நகர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்துக்குப் போன நித்திக்காக ஆஜரான வழக்கறிஞர் சி.வி.நாகேஷ், புதிய வாதங்களை எடுத்துரைத்தார். ""நித்தி மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு கூறியவர்கள் அதை ஒரேநாளில் நடந்ததாகக் கூறவில்லை. பல இடங்களில், பல நாட்களாக நடந்தவை என்கிறார்கள். நித்தியானந்தா மீது புகார் கூறியவர்கள், அவருடன் விருப்பப்பட்டே உறவு வைத்து ஆன்மிகப் பேரின்பம் அடைந்துள்ளனர். இருவர் விருப்பத்துடன் நடந்த உடலுறவு, கற்பழிப்பு ஆகாது'' என்றார்.
இதற்கு ஆர்த்திராவின் வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ""ஆர்த்திராவ் என்பவர் கற்பழிப்புக் கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண். அப்படிப்பட்டவர்களைக் கேவலமாகப் பேசக்கூடாது என உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெரிவித்து, பாலியலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்துள்ளது'' என வாதிட்டார்.
"கற்பழிப்பு அல்ல... ஆன்மிக பேரின்பம்' என்ற நித்தியின் வாதம் Call boy (ஆண் விபச்சாரி) என கர்நாடக தினசரிகளில் தலைப்புச் செய்திகளானது. அதை எதிர்த்து, ""பாதிக்கப்பட்ட பெண்ணை கோர்ட்டில் இப்படி சித்தரிக்கக் கூடாது. குற்றம்சாட்டப்பட்டவர் நிரபராதி என்ற அளவில் மட்டுமே அவரது வக்கீலின் வாதம் அமைய வேண்டும். இந்த தரக்குறைவான வாதத்தை மீடியாக்கள் செய்திகளாக்கினால், பாதிக்கப்பட்ட பெண்ணின் கவுரவம் பாதிக்கப்படும்'' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கே கடிதம் எழுதியுள்ளாராம் ஆர்த்தி ராவ்.
மோசடித்தனங்கள் அனைத்துக்கும் புதுப்புது பெயர் வைத்து எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார் நித்தியானந்தா.
-தாமோதரன் பிரகாஷ்