ladies-scooty

டும் நிதி நெருக்கடியில் தமிழ்நாடு அரசின் கஜானா தள்ளாடிவரும் நிலையில் ஜெயலலிதா பிறந்த நாளில் (பிப்.24) மானிய விலை ஸ்கூட்டி திட்டத்தை தொடங்கியே ஆக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

இதுகுறித்து நிதித்துறையினரிடம் நாம் விசாரித்தபோது, ""ஐந்து லட்சம் கோடிக்கும் அதிகமான கடன் சுமையில் சிக்கியிருக்கிறது இந்த அரசு. நிதி மேலாண்மை நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ள வரையறையின்படி, நிதி நெருக்கடி 3 சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான் இருக்கிறது என முதல்வர் கூறினாலும் அது ஏற்புடையதல்ல. ஏனெனில், கடன்கள் வாங்கித்தான் நிதி நெருக்கடியை சமாளிக்க வேண்டியுள்ளது. மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை 15 ஆயிரம் கோடி, ஜி.எஸ்.டி.யில் குறைந்த வணிகவரி உள்பட பல நெருக்கடிகள் உள்ளன.

ministers

Advertisment

மானிய விலை ஸ்கூட்டி திட்டத்திற்கு இந்த ஆண்டு மட்டும் 500 கோடி தேவை. 2018-19 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிறைவேற்றி அதில் இத்திட்டத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்யலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால், பட்ஜெட் தாக்கல் செய்ய கவர்னர் இன்னும் அனுமதிக்காததால், நடப்பாண்டின் நிதியிலேயே 50 கோடியும் ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஜெ. பிறந்த நாளில் பெயருக்குத் திட்டத்தை துவக்கி வைத்துவிட்டு தமிழகம் முழுவதும் இத்திட்டத்தை பட்ஜெட்டுக்குப் பிறகு நடைமுறைப்படுத்தலாமா என தற்போது ஆலோசிக்கப்பட்டிருக்கிறது'' என விவரிக்கின்றனர்.

அவசரம் ஏன்?

பதவியில் ஓராண்டை நிறைவு செய்துள்ள முதல்வர் எடப்பாடி, சசிகலா ஆதரவில் கடந்த ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றபோது 5 அறிவிப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முக்கியமானது மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கும் திட்டம். அப்போது ஆண்டொன்றுக்கு 200 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அதனை 500 கோடியாக உயர்த்திவிட்டனர். இதற்கு பின்னணியில் பலே ஊழல் மறைந்துள்ளது.

Advertisment

ஸ்கூட்டியின் விலையில் 50 சதவிகித மானியம் அல்லது 25,000 ரூபாய். இதில் எது குறைவாக இருக்கிறதோ அது வழங்கப்படும் என்பதுதான் திட்டத்தின் விதி. 500 கோடியில் 2 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்க முடியும். 32 மாவட்டத்துக்கும் தலா 6,250 பெண்கள் பயன்பெற முடியும். ஆனால், விண்ணப்பித்துள்ள 3 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்களில் 1 லட்சம் பெண்களுக்கு மட்டுமே ஸ்கூட்டி என்பதே முறைகேடு என்கிறது கோட்டை வட்டாரம்.

ஒதுக்கீடு எவ்வளவு?

""ஒவ்வொருவருக்கும் 25,000 மானியம் வழங்கினால் 500 கோடியில் 2 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்க முடியும். ஆனால், வண்டியின் விலையில் 50%தான் மானியம் என்பதால் 40,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு 20 ஆயிரம்தான் மானியம். அதிலும் மானியம் பெற அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகளில் பல கிராமப்பெண்களால் பூர்த்தி செய்ய முடியாது. நகரத்திலுள்ள பெண்களோ ஆண்டு வருமான விதிமுறையில் தகுதியிழப்பர். இந்த சிக்கல்களால் அதிகபட்சம் 1 லட்சம் பெண்களே பயன்பெறுவார்கள் என அரசு கணக்கிட்டுள்ளது. ஆனால், 3 லட்சம் பெண்களுக்கு வழங்கியதாக கணக்கு காட்டப்படும். அந்த வகையில், 200 ladiescootyகோடி மட்டுமே இத்திட்டத்திற்காக செலவிடப்படவிருக்கிறது. மீதியுள்ள 300 கோடியை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் ஆட்டையப் போட திட்டமிட்டுள்ளனர். ஆக, நிதி நெருக்கடி நேரத்தில் ஸ்கூட்டி திட்டத்தை நிறைவேற்ற துடிப்பதன் ரகசியம் 300 கோடி ஊழல்களுக்குத்தான்'' என்று ரகசியங்களை உடைக்கின்றனர் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள்.

தேர்ந்தெடுப்பது எப்படி?

மானிய விலை ஸ்கூட்டி திட்டத்துக்காக, மாநிலம் முழுவதிலுமிருந்து 3,36,103 விண்ணப்பங்கள் வந்து குவிந்திருக்கின்றன. ஜெ. பிறந்தநாளான பிப்ரவரி 24 அன்று முதற்கட்டமாக 3,500 பேருக்கு ஸ்கூட்டி வழங்க எடப்பாடி அரசு திட்டமிட்டு வருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 100 முதல் 125 பயனாளிகளுக்கான பட்டியலைத் தயாரிக்கச் சொல்லியுள்ளது அரசு. பயனாளிகள் எப்படித் தேர்வுசெய்யப்பட போகிறார்கள் என்ற கேள்வியுடன் கிளம்பினோம்..

திருவண்ணாமலை மாவட்டத்தில் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் மகளிர் திட்ட அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “""மாவட்ட ஆட்சியர் தலைமையில் நகராட்சிகளுக்கு ஒன்று, கிராம அளவிலான பகுதிகளுக்கு ஒன்று என இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவில் ஆர்.டி.ஓ., மகளிர் திட்ட அதிகாரி, பி.டி.ஓ. அல்லது நகராட்சி கமிஷனர் அல்லது பேரூராட்சி அலுவலர் இருப்பர். கிராமப்புற மனுக்களை பி.டி.ஓ. அலுவலகமும், நகர்ப்புற மனுக்களை நகராட்சி அதிகாரிகளும் பரிசீலிப்பர். இரண்டுகட்ட பரிசீலனைக்குப் பின் தகுதியானவர்கள் பட்டியலை தயார்செய்து மகளிர் திட்ட அலுவலர்க்கு அனுப்புவர். அங்கு பயனாளிகள் ஸ்கூட்டர் வாங்க அனுமதி கடிதம் தரப்படும்.

வண்டி வாங்கியபின் ஆர்.சி. புக், வண்டி வாங்கியதற்கான ஆன்ரோடு பில் போன்றவற்றை மகளிர் திட்ட அலுவலகத்தில் தரவேண்டும். ஆர்.சி. புத்தகத்தில் மானிய விலை ஸ்கூட்டி என முத்திரை குத்திவிடுவோம். இதனால் மூன்றாண்டுகளுக்கு வண்டியை விற்கமுடியாது. ஸ்கூட்டி வாங்கியதற்கான தொகையிலிருந்து 50 சதவிகிதம் அல்லது 25,000 ஆயிரம் ரூபாயை பயனாளிகள் வங்கிக் கணக்கில் வரவுவைத்துவிடுவோம்'' என விளக்கினார். பயனாளிகள் 18 முதல் 40 வயதுக்குட்பட்டவராக இருத்தல்வேண்டும். இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் என பயனாளியாவதற்கு 24 நிபந்தனைகள் உள்ளன.

கமிஷன் எவ்வளவு?

திருவண்ணாமலை மாவட்டத்தில் பயனாளிகள் தேர்வு எப்படி நடக்கிறது என பார்த்துவர ஒரு ரவுண்ட் கிளம்பினோம். இங்கு 9,492 பேர் மனு செய்துள்ளார்கள். 2018-2019ஆம் ஆண்டில் 3518 பேருக்கு ஸ்கூட்டி தர முடிவுசெய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 125 பேரை தேர்வுசெய்யச் சொல்லி கேட்டிருக்கிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 18 ஒன்றியங்கள், 10 பேரூராட்சிகள் உள்ளன. நகராட்சிக்கு 7 பயனாளிகள், ஒன்றியத்துக்கு 4 பயனாளிகள், பேரூராட்சிக்கு 3 பயனாளிகள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.

வந்தவாசி நகராட்சியில் மட்டும் 280 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் லைசென்ஸ் உள்ளவர்கள் 45 பேர். வந்தவாசி ஒன்றியத்தில் விண்ணப்பித்தவர்கள் 450 பேர். இதில் லைசென்ஸ் உள்ளவர்கள் வெறும் 6 பேர் மட்டுமே. நாட்கள் நெருங்கிவரும் நிலையில் "முதல் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறணும்னா தனியா கவனிக்கணும்' என பேரம் ஆரம்பித்துவிட்டது.

நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், ""வந்தவாசியைச் சேர்ந்த ஒரு பெண்மணி என்கிட்ட வந்து, "5 (ஆயிரம்) ரூபா தந்துடு. அதிகாரிக்கு 2 ரூபா போயிடும். அடுத்த வாரம் உன் அக்கவுண்ட்டுக்கு 25 ஆயிரம் வந்துடும்'னு கட்சிக்காரர் சொல்லிட்டுப் போறார். தரலாமா வேண்டாமா?'' என கேட்டு நிலவரத்தை விளக்கினார்.

""அந்தம்மா சி.எம்.மா இருந்தப்ப நாங்க சம்பாதிக்கமுடியல. மந்திரிங்க, எம்.எல்.ஏ.ங்க மட்டும் சம்பாதிச்சாங்க. ஊராட்சிமன்றத் தலைவர், கவுன்சிலர், சேர்மன்னு உள்ளாட்சி பதவிகள் இருந்ததால, தொகுப்பு வீடுகள், நூறு நாள் வேலைத் திட்டம், தெருவிளக்கு போடறதுனு கொஞ்சம் சில்லரை பார்த்தோம். அம்மா இறந்ததுக்கப்புறம் மந்திரிங்க, ஒ.செ.ங்க, ந.செ.ங்கதான் சம்பாதிக்கிறாங்க. அடிமட்ட கட்சி நிர்வாகிகள் ஒண்ணுமில்லாம நிற்கிறோம்.

நிர்வாகிங்க புலம்பலைப் பார்த்துட்டு, தினகரன் பின்னால போயிடக்கூடாதுன்னு, ஸ்கூட்டி திட்டத்தைக் கொண்டுவந்திருக்காரு முதல்வர். இதுல முதல்கட்டமா ஸ்கூட்டி வாங்கப்போறது கீழ்மட்ட கட்சி நிர்வாகிங்களோட குடும்பமா இருக்கிறது மாதிரி பார்த்துக்கிடுவாங்க. அதுக்கடுத்தபடியா கி.செ, வ.செ. ந.செ, ஊராட்சி செயலாளர் சொல்ற ஆளுங்களுக்கு கிடைக்கும்படி பார்த்துக்கிட மேலயிருந்து வாய்மொழி உத்தரவு போட்டிருக்காங்க. அதோட மந்திரி, மா.செ, எம்.எல்.ஏ.ங்க இதுல புகுந்து கமிஷன் வாங்கக்கூடாதுன்னும் சொல்லியிருக்காங்க'' என்கிறார்கள் எடப்பாடி அணியைச் சேர்ந்தவர்கள்.

25 ஆயிரம் ரூபாய் மானியத்துக்கு, சிபாரிசு செய்யும் கட்சிக்காரருக்கு 5 ஆயிரம், அதிகாரிகளுக்கு 2 ஆயிரம் என்பதே திருவண்ணாமலை நிலவரம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். கீழ்மட்ட நிர்வாகிகள் வளம் கொழிக்க இந்தத் திட்டம் என சொல்லப்பட்டாலும் அமைச்சர்கள் தொடங்கி அத்தனைபேரும் கமிஷன் பார்த்து வருகிறார்கள் என்பதே கள நிலவரம்.

அமைச்சர்களின் ஆர்வம்!

திருச்சி மாவட்டத்தில் மானிய ஸ்கூட்டிக்கு திருச்சி மாநகரிலிருந்து 7,619 விண்ணப்பங்களும், புறநகரிலிருந்து 6,607 விண்ணப்பங்களும் வந்துள்ளன. திருச்சி மாவட்டத்துக்கு 3,920 ஸ்கூட்டிகளுக்கு மானியத் தொகை வழங்கப்படுமெனத் தெரிகிறது. எனினும், தொகுதிக்கு 200 ஸ்கூட்டிவீதம் 9 தொகுதிகளுக்கு 1,800 ஸ்கூட்டிகள் மட்டுமே கொடுக்கமுடியும் என்றும் சொல்கிறார்கள் திருச்சி மாவட்ட மகளிர் திட்ட செயல் அலுவலக ஊழியர்கள்.

திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியங்கள், 3 நகராட்சிகள், 16 டவுன் பஞ்சாயத்துகள் உள்ளன. ஜெ. பிறந்தநாளன்று திருச்சி மாவட்டத்துக்கு முதற்கட்டமாக 100 ஸ்கூட்டிக்கான மானியம் ஒதுக்கப்படவிருக்கிறதாம். கிராமங்களுக்கு 2 ஸ்கூட்டிகள்… அதுவும் அந்தப் பகுதி கிளைச் செயலாளர் "டிக்' அடிப்பவருக்குதான் மான்யமாம்.

அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி தலா 30 பேருக்கு சிபாரிசு செய்கிறார்கள். எம்.பி.க்களான குமாரும் ரத்தினவேலும் தலா பத்து பேரை சிபாரிசு செய்கிறார்களாம். மீதமுள்ள 20 பேரை மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் தேர்வுசெய்கிறார் என பயனாளிகள் தேர்வு குறித்து திருச்சி அ.தி.மு.க.வினர் ஒரு கணக்குச் சொல்கின்றனர்.

வசூலிப்பது யார்?

துணைமுதல்வரின் சொந்த மாவட்டமான தேனியில் ஸ்கூட்டி திட்ட நிலவரம் எந்த அளவில் இருக்கிறதென பார்த்தோம். ""ஆறு நகராட்சிகள், 22 பேரூராட்சிகள் மற்றும் 8 ஊராட்சிகள் என நீளும் இம்மாவட்டத்தில், “ஓ.பி.எஸ்.ஸின் தம்பி ராஜாவின் ஆதரவாளர்கள் குமார், முருகன், இக்பால், தங்கராஜ் உள்பட சிலர் ஸ்கூட்டி வாங்கித் தருவதாகக் கூறி 50-க்கும் மேற்பட்ட நபர்களிடம் 5000 ரூபாய் கமிஷன் வாங்கியிருக்கின்றனர். இப்படி கமிஷன் தந்தவர்களுக்குத்தான், ராஜாவின் சிபாரிசில் வண்டி கிடைக்கும். பொதுமக்களுக்குக் கிடைப்பது சந்தேகம்தான்'' என்கிறார் சமூக ஆர்வலரான சேது.

தேனி நகர அ.தி.மு.க. மகளிரணிச் செயலாளர் ராமுத்தாயிடம் கேட்டோம். ""ஓ.பி.எஸ். அண்ணன் சொன்னதன்பேரில் பொதுமக்கள், கட்சிக்காரர்களென விண்ணப்பம் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அவங்களுக்கெல்லாம் அண்ணன் பரிந்துரையின் பேரில் மானியம் வாங்கித்தருவேன்'' என்கிறார்.

""மற்ற மாவட்டங்கள்ல நகராட்சிக்கு 100 பேருக்குதான் மானிய ஸ்கூட்டி வழங்க அனுமதியுள்ளது. ஓ.பி.எஸ். தொகுதியான போடியில் 300 பேருக்கு கொடுக்கச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறது. நகரச் செயலாளர் பாலமுருகன், முன்னாள் சேர்மன் பழனிராஜ் இருவரும் ஓ.பி.எஸ். விசுவாசிகள். இவர்களுடைய பரிந்துரைக்குதான் அதிகாரிகள் செவிசாய்ப்பார்கள். நகரில் கிளைப் பொறுப்பிலுள்ள கட்சிக்காரர்கள், மனு போட்ட பெண்களின் பெற்றோரிடம் 2,000 முதல் 3,000 வரை கமிஷன் வாங்கிக்கொண்டு உறுதியளித்துவருகிறார்கள். இதனால் அண்ணனுக்குத்தான் கெட்ட பெயர் வரும்'' என்கிறார்கள் பேர் சொல்லத் தயங்கும் சில ரத்தத்தின் ரத்தங்கள்.

மேலிடத் திட்டம்!

மாவட்ட கலெக்டர் வெங்கடாசலமோ, ""தேனிக்கு மொத்தம் 1,700 பேருக்கு மானியம் ஒதுக்கியிருக்கிறார்கள். ஆனால், 3,500 விண்ணப்பங்கள் வந்துள்ளன. தகுதி, முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படும்'' என்கிறார். "பரிந்துரைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுமா?' என்றபோது, "அதற்கும்தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்' என்று அப்படியுமில்லாமல் இப்படியுமில்லாமல் நழுவினார்

தெர்மாகோல் புகழ் செல்லூர் ராஜு, மேடையொன்றில் பேசும்போது "அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு மட்டுமே அரசின் நலத்திட்ட உதவிகள்' என்றார். கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் அதையே மீண்டும் கூறியுள்ளார். "கட்சி நிர்வாகிகளுக்கான திட்டம்' என முதல்வர் அலுவலகத்திலி ருந்து சிக்னல் காட்டப்பட்டிருப்பதால் மந்திரி, மா.செ., எம்.எல்.ஏ. என ஆளுங்கட்சியின் பல தரப்பு நிர்வாகிகளின் சிபாரிசுகளையும் கலெக்டர் அலுவலகங்களில் பரிசீலிக்கப்படுகின்றன. ஆக, 90 சதவிகித ஸ்கூட்டி மானியம் அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கே போகப் போகிறது என்ற நிலையில்... சொந்தக் கட்சிக்காரர்களிடமே கமிஷன் தொகையை கூட்டிவாங்கும் கொள்ளைத் திட்டமாக மாறியிருக்கிறது ஸ்கூட்டி திட்டம்.

-இளையசெல்வன்

-சக்தி, து.ராஜா, ஜெ.டி.ஆர்., அருண்பாண்டியன்