ஆழ்வார்பேட்டையும் போயஸ் கார்டனும் அரசியல் களத்தில் விறுவிறுப்பைக் கூடுதலாக்கிக் கொண்டிருக்கிறது.
பிப்.14-ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து திரும்பிய கமல், இராமேஸ்வரத்தில் 21-ஆம் தேதி கட்சிப் பெயரை அறிவிப்பதற்கான வேலைகளை துரிதப்படுத்தினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் விஜய் டி.வி.யின் சி.இ.ஓ.மகேந்திரன், டைரக்டர் ராசி அழகப்பன், மதுரை மாவட்ட நற்பணி இயக்க நிர்வாகிகள் சிலருடன் ஆலோசனை நடத்தினார் கமல். அன்றைய தினமே வழக்கறிஞர்கள் சிலருடன் ஆலோசித்ததாக வந்த தகவலில் உண்மை எதுவும் இல்லை. ஏனெனில் கட்சியின் பெயரை, தனது நம்பிக்கைக்குரிய சீனியர் வக்கீல் ஒருவர் மூலம் தேர்தல் கமிஷனில் பதிவு செய்துவிட்டாராம் கமல். கமலின் வேண்டுகோளுக்கிணங்க ரகசியம் காக்கிறதாம் தேர்தல் கமிஷன்.
""கட்சிப் பெயர் ரகசியம் காப்பது சரி, மதுரையில் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தைப் பற்றி 17-ந்தேதி வரை ரகசியம் காத்ததுகூட அரசியல் என நினைத்துவிட்டார் கமல்'' என பொருமுகிறார்கள் நற்பணி இயக்க நிர்வாகிகள். கடந்த ஒரு மாதத்தில் நான்கு முறை இராமேஸ்வரத்திற்கும் மதுரைக்கும் விசிட் அடித்த நற்பணி இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர் கோவை தங்கவேல், ஐந்தாவது முறையாக கடந்த 15-ஆம் தேதி மதுரை வந்தார். வழக்கம் போல் ஆலோசனைக் கூட்டம் நடக்கும் ஓட்டலைத் தவிர்த்துவிட்டு, ஒரு சிறிய மெஸ்ஸின் மேல்மாடியில் கூட்டம் நடந்தது.
ஐம்பது நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டீ, காபி கூட ஏற்பாடு செய்யப்படவில்லை. நிர்வாகிகளிடையே பேசிய தங்கவேல், ""பல வருடங்களுக்கு முன்பு நமது சாரின் ‘"விருமாண்டி'’ படத்தின் துவக்க விழா, மதுரை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்தது. விழா நடத்த நமக்கு இடம் கொடுத்ததற்காக, அப்போதிருந்த மருத்துவக் கல்லூரி டீனை டிரான்ஸ்பர் பண்ணினார்கள். அதேபோல் இப்போது அரசரடி ரயில்வே மைதானத்தை ஏற்பாடு பண்ணியிருக்கும் ரயில்வே அதிகாரிக்கு எந்த நெருக்கடியும் வரக்கூடாது என சார்(கமல்) நினைக்கிறார். அதனால் ஒத்தக்கடையில் தனியாருக்குச் சொந்தமான இடத்தையே தேர்வு செய்திருக்கிறோம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமல் சாரே வெளியிடுவார்'' என்றார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட மதுரை நிர்வாகி ஒருவரிடம் பேசிய போது, ""கல்லூரி மாணவர்களையும் டீன் ஏஜ் வயதினரையும் அதிகளவில் நமது இயக்கத்தில் சேர்க்க வேண்டும் என தங்கவேல் சொல்லியிருப்பதெல்லாம் சரிதான். ஆனால் இப்ப எங்க மன்றத்துல வார்டுக்கு பதினைஞ்சு பேர்தான் இருக்கோம். இன்னும் நாலு நாள்தான் இருக்கு, பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தையாவது சொன்னாத்தான் மத்த வேலைகளைப் பார்க்க வசதியா இருக்கும்'' என்றார்.
""கூட்டம் நடக்கும் இடத்தை அறிவிப்பதில் ஏன் தாமதம்?'' கோவை தங்கவேலிடம் பிப்.16-ஆம் தேதி மாலை நாம் கேட்ட போது, ""17-ஆம் தேதி கமல் சாரே அறிவிப்பார்'' என்றார்.
தங்கவேல் கூறியது போல, கமல் நேரடியாக அறிவிக்காவிட்டாலும், கமலின் அரசியல் சுற்றுப்பயணப் பட்டியல், 17-ஆம் தேதி மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. நமது நக்கீரன் ஜன.26-28 தேதியிட்ட இதழிலேயே, இராமநாதபுரம் நகரில்தான் கமலின் முதல் பொதுக்கூட்டம் நடக்கவுள்ளதாக எழுதியிருந்தோம். இப்போது ரிலீசாகியுள்ள கமலின் அதிகாரப்பூர்வப் பட்டியலும் அதைத்தான் ஊர்ஜிதப்படுத்துகிறது.
நண்பகல் 12-30 மணிக்கு இராமநாதபுரம் அரண்மனை முன்பாக பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் கமல். அதற்கடுத்ததாக தனது சொந்த ஊரான பரமக்குடியிலும் பிற்பகல் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலும் பொதுக்கூட்டங்களில் பேசிவிட்டு, தமிழகத்தின் இரண்டாவது அரசியல் தலைநகரான மதுரை ஒத்தக்கடை வேளாண் பல்கலைக்கழகம் எதிரே இருக்கும் மைதானத்தில் கட்சிக் கொடி ஏற்றிவிட்டு, இரவு 8-10-க்கு பேச ஆரம்பித்து 9 மணிக்கு பொதுக்கூட்டத்தை நிறைவு செய்கிறார் கமல்.
நற்பணி இயக்க நிர்வாகிகள் கமலின் பொதுக்கூட்ட வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்க, உள்கட்டமைப்பு வேலைகளில் தீவிரம் காட்டினார் கமல். எம்.ஜி.ஆர்.முதல்வராக இருந்த போது, அவருக்கு தனிச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி செல்வராஜ், மாஜி தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் நல்லகண்ணு ஆகியோரைச் சந்தித்து ஆலோசனையும் ஆசியும் பெற்றார் கமல். எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கமல் என்கிற பேஸ்மட்டம் ஸ்ட்ராங்காகத்தான் இருக்கு, ஆனா மாவட்ட நிர்வாகிகள், களப் பணியாளர்கள் என்கிற பில்டிங்கை ஸ்ட்ராங் பண்ணியாக வேண்டும்.
கமலின் பொலிடிக்கல் கன்ஸ்ட்ரக்ஷன் இந்த பொஸிஷனில் இருக்கிறதென்றால், ரஜினியின் கன்ஸ்ட்ரக்ஷனில் பேஸ்மட்டமும் பில்டிங்கும் ஸ்ட்ராங்காக இருந்தாலும் பிளம்பரிங் மற்றும் வயரிங் ஒர்க்கில் கோளாறாகி சின்னச்சின்ன நீர்க்கசிவுகளும் எலெக்ட்ரிக் ஷாக் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
ரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலப் பொறுப்பாளர் வி.எம்.சுதாகர், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை ரஜினியின் அறிவுரைப்படி ஒத்திவைத்துள்ளதை பிப்.10-12 தேதியிட்ட நக்கீரனில் எழுதியிருந்தோம். மாவட்ட சுற்றுப்பயணத்தில் சில குழப்பங்களும் சர்ச்சைகளும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, சென்னை ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு மாவட்ட நிர்வாகிகளை அழைத்து, ஆலோசனை நடத்திவிட்டு, ரஜினியின் ஒப்புதலுடன், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளையும், செயற்குழு உறுப்பினர்களையும் நியமித்து வருகிறார் வி.எம்.சுதாகர்.
மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை சுதாகர் வெளியிட்டுக் கொண்டிருக்க, ரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளராக "லைக்கா' ராஜூ மகாலிங்கத்தை ரஜினி நியமித்த அறிவிப்பு, கடந்த 15-ஆம் தேதி திடீரென வெளியானது மாவட்ட நிர்வாகிகள் யாருக்குமே தெரியாதாம். இந்தப் பதவிக்கு வி.எம்.சுதாகரை எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, ராஜூ மகாலிங்கம் எப்படி உள்ளே வந்தார் என்பது குறித்து ரஜினி ஏரியாவில் விசாரித்தோம்.
""லைக்கா புரொடக்ஷன் தயாரிக்கும் ’"2.0'’ பட ஷூட்டிங்கின் போதே, தொடர்ச்சியாக ராஜூவை கண்காணித்து வந்துள்ளார் ரஜினி. பல நூறு கோடியில் உருவாகும் இப்படத்தின் பட்ஜெட்டை ராஜூ மகாலிங்கம் கையாளும்விதம், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரின் சுறுசுறுப்பு இதையெல்லாம் பார்த்துத்தான், மாவட்ட சுற்றுப்பயணங்களுக்கு சுதாகருடன் அனுப்பி டிரையல் பார்த்தார். எல்லா வகையிலும் தமது எதிர்கால அரசியலுக்குத் துணையாக இருப்பார் என்ற நம்பிக்கையில்தான் ராஜூ மகாலிங்கத்துக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்துள்ளார் ரஜினி. அதே நேரம் தனியாக இருக்கும் போது உரிமையுடன் ஒருமையில் பேசும் சுதாகருக்கு, கட்சிப் பெயர் அறிவித்தவுடன், கட்சியின் அவைத் தலைவர் பதவியோ, செயல் தலைவர் பதவியோ நிச்சயம் ரஜினி வழங்குவார்'' என்கிறது ரஜினி ஏரியா.
இதன் எஃபெக்ட்தான், கடந்த 16-ஆம் தேதி தேனி மாவட்ட நிர்வாகிகளிடையே வீடியோ மூலம் ரஜினி பேசியது ஒளிபரப்பப்பட்டது. அதில் பேசிய ரஜினி, ""நமக்குள் சண்டை வருமா என எதிர்பார்க்கிறார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும், எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் நமக்குள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். ஆண்டவன் நமக்கு துணை இருக்கான், உங்களுக்குத் துணையாக நான் இருக்கேன்'' என உருக்கமாகப் பேசியுள்ளார் ரஜினி.
தனது அரசியல் எண்ட்ரி அறிவிப்புக்குப் பின்பு, ""காவிரி வழக்கில், சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிக்கும் என்பதால் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது'' என பொதுப்பிரச்சனைக்கு ரஜினி கொடுத்த வாய்ஸுக்கு எதிராக கன்னட அமைப்புகள் சில கடுப்புடன் ரஜினியைப் பார்த்ததன் விளைவு, கர்நாடகாவில் ரஜினியின் கொடும்பாவியைக் கொளுத்தும் நிலைக்குப் போய்விட்டது. இதை டி.வி.களில் பார்த்த ரஜினி தரப்பு லேசாக ஜெர்க் ஆகி உள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் தலைமையைத் தொடர்பு கொண்ட ரஜினி மக்கள் மன்றத்தினர், வாட்டாள் நாகராஜ் கொடும்பாவியைக் கொளுத்த அனுமதி கேட்க, "அதெல்லாம் இப்போதைக்கு வேண்டாம்' என பதில் வந்துள்ளதாம்.
முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை கமல் சந்தித்து ஆலோசனை நடத்துவது போல், மதுரை கிரானைட் கொள்ளையை விசாரித்த சகாயம் ஐ.ஏ.எஸ்.சை சந்திக்கும் திட்டத்தில் இருக்கிறாராம். ரஜினி. இரு நட்சத்திரங்களின் படங்களையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் நிலையில், அவை வெளியாகும் முன்பு ரஜினி-கமலுக்கிடையிலான அரசியல் போட்டா போட்டி களைகட்டி விட்டது.
-ஈ.பா.பரமேஷ்வரன்,
ஷாகுல்