stalin

தொண்டர்களுக்கும் தலைமைக்கும் தொடர்பு அறுந்துவரும் நிலையிருப்பதாலும், உள்கட்சி சிக்கல்களால் தொடர் தோல்விகளைச் சந்திப்பதாலும் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பிப்ரவரி 1 முதல் 32 நாட்களுக்கான கள ஆய்வினை மேற்கொண்டிருக்கிறார். முதல் நாளில், , கோவை தெற்கு மற்றும் வடக்கு, நீலகிரி ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் கள ஆய்வை நடத்தி முடித்திருக்கிறார் ஸ்டாலின்.

பேராசிரியர் அன்பழகன், துரைமுருகன், ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் ஆய்வின் நோக்கத்தை விவரித்தனர். அதன்பிறகு, அவர்கள் நால்வரும் புறப்பட்டுவிட, ஸ்டாலின் மட்டும் உட்கார்வதற்காக ஒரு நாற்காலி மட்டும் மிச்சமிருந்தது. கூட்டத்தில் செல்போனுக்கு தடை போடப்பட்டிருந்தது. ஊடக கவரேஜும் கிடையாது.

Advertisment

வட்டச்செயலாளர்கள், அமைப்பாளர்கள், மா.செ. மற்றும் பகுதிச்செயலாளர்கள் என தனித்தனியாக மூன்று அமர்வுகளில் கள ஆய்வை நடத்தினார் ஸ்டாலின். ஆய்வின் துவக்கத்தில் பேசிய அவர், ""ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோற்றுப்போனோம். கொங்கு மண்டலம் கை கொடுத்திருந்தால் நாம்தான் ஆட்சியமைத்திருப்போம். கோஷ்டிகள் அதிகமிருப்பது கோவையில்தான். அதனை ஒழிக்காவிட்டால் கொங்கு மண்டலத்தில் நாம் கரையேற முடியாது.

Advertisment

கட்சித் தலைமைக்கும் மாவட்ட கழகத்துக்கும் தொடர்பு இருக்கிறது. ஆனால், மாவட்ட கழகத்துக்கும் நகர, ஒன்றிய, கிளைக்கழகங்களுக்கும் தொடர்பே இல்லை. ஏன், இந்த நிலை? உங்களுக்கு என்னதான் பிரச்சனை? உங்கள் மனதை அழுத்திக்கொண்டிருக்கும் விசயத்தை உடைத்துப்பேசுங்கள். பேச வேணாம் என நினைப்பவர்கள் இங்கு வைத்திருக்கும் புகார் பெட்டியில் கடிதமாக எழுதிப் போடுங்கள். அதை யாரும் படித்துவிட மாட்டார்கள். அப்படியே பண்டலாக கட்டி அதை என்னிடம் தான் ஒப்படைப்பார்கள். நான் படித்து நடவடிக்கை எடுத்து சரி செய்வேன். அதனால், பயமில்லாமல் புகார் எழுதிப்போடலாம்''’என கட்சியின் நிலமையை வருத்தத்துடன் சுட்டிக்காட்டி, தன்னுடைய நிலைப்பாடுகளை நம்பிக்கையுடன் வெளிப்படுத்தினார்.

dmkmeetகோவை -வடக்கு மாவட்ட 20-வது வட்டச்செயலாளர் தங்கவேலு, ""மாவட்டத்துக்கு நீங்கள் வரும்போது எங்களிடம் நீங்கள் பேசினால்தான் கட்சியின் உண்மை நிலை தெரியவரும். ஆனால், மாவட்ட நிர்வாகிகளோடு மட்டும் நீங்கள் பேசிவிட்டு சென்றுவிடுகிறீர்கள். அவர்கள் உண்மைகளை மறைத்து, உங்களின் மூடு பார்த்து அதற்குத் தோதாக பேசுகின்றனர். நீங்களும் நம்பிவிடுகிறீர்கள். தேர்தல் வரும்போது ரிசல்ட் கிடைப்பதில்லை. கிளைக்கழகங்களோடும் தலைமைக்கு தொடர்பு இருக்குன்னு தெரிந்தால்தான் உங்களிடம் பொய் பேசமாட்டார்கள்''’என்றார்.

22-வது வட்டச்செயலாளர் ஜார்ஜ், ""பேருக்குத்தான் நான் வட்டச்செயலாளர். ஆனா, எந்த வேலையும் என்னால் செய்ய முடியாது. அந்தளவுக்கு மாவட்டத்துக்கு வேண்டப்பட்ட ஆட்களின் அதிகாரம் என்னை முடக்கிப்போட்டிருக்கிறது. பூ மார்க்கெட் கிருஷ்ணமூர்த்தி ஒரே ஒரு முறைதான் கவுன்சிலரானார். இப்போ அவர் கோடீஸ்வரர். ஆனா, கட்சிக்கு என்ன பயன்? உண்மையா உழைக்கிற தொண்டர்கள் ஏழைகளாகத்தான் இருக்காங்க. வருசத்துக்கு ஒரு தடவையாவது தொண்டர்களின் உள்ளக்குமுறல்களை தலைமை கேட்டு அதுக்கேத்த நடவடிக்கையை எடுத்துச்சுன்னா கோவையில் நம் கட்சியை எவனாலும் அசைச்சிக்க முடியாது''‘என்றார் ஆவேசமாய். பேசிய வட்டச்செயலாளர்களின் குமுறல்கள் அனைத்தும் இதே ரீதியிலேயே இருந்தன.

இரண்டாவது அமர்வில் பேசிய வடக்கு மாநகர் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் கல்பனா, தெற்கு மாநகர் மகளிர் அணி அமைப்பாளர் மாலதி ஆகியோர், ""பெண்கள் அரசியலுக்கு வருவதே அரிதாக இருக்கு. அதையும் மீறி வந்தால் ஆண்கள் மரியாதை கொடுத்து கௌரவிக்கிறார்கள். ஆனால், கட்சியில் உள்ள பெண்கள்தான் பழி பேசுகிறார்கள். மாவட்டத்திலுள்ள பிரச்சனைகளை தலைமைக்குச் சொல்ல நீங்கள் ஒரு வழி ஏற்படுத்த வேண்டும். பெண்களுக்கு 50 சதவீதம் வாய்ப்புத் தரப்படும் என்கிறீர்கள். ஆனா, தேர்தல் சமயத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. இதனாலேயே நம் கட்சிக்கு பெண்களை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்றால் பொறுப்புகளில் இருப்பவர்கள்கூட வருவதில்லை. ஆனா, தேர்தல்னு வந்துட்டா சீட்கேட்டு திமுதிமுன்னு வந்து தங்கள் குடும்பத்து பெண்களுக்கு சீட் வாங்கிடுறாங்க. இதையெல்லாம் தலைமை கவனத்தில் எடுத்துக்கொண்டு தயவுதாட்சண்யமில்லாமல் ஆக்சன் எடுக்க வேண்டும்''‘என்றனர்.

நீண்ட நேரம் பேசிய மாலதி, ""உள்ளாட்சித் தேர்தலில் எனக்கு கட்சி சீட் ஒதுக்கியபோது, எங்க வட்டச் செயலாளர் என்ன கமெண்ட் செஞ்சார் தெரியுமா? "இவ எல்லாம் எப்படி சீட் வாங்கியிருப்பா தெரியுமா?' என உங்களிடம் சொல்ல முடியாத வார்த்தைகளைகொண்டு என்னைப் பேசினார். பெண்களான நாங்க உங்களைத்தான் சகோதரனா நினைச்சி நம்பியிருக்கிறோம்''‘என்றார் மிக ஆதங்கமாய்.

stalin

கலை இலக்கிய பகுத்தறிவுப்பேரவையின் துணை அமைப்பாளர் குறிச்சி உதயக்குமார், ’’""பகுதிச்செயளாளர் பிரபாகரன் சர்வாதிகாரி போல செயல்படுகிறார். நிர்வாகிகள் யாரையும் மதிப்பதில்லை. கூட்டம் நடத்தவும் அனுமதிப்பதில்லை. கட்சிக்காக எந்த துரும்பையும் எடுத்துப்போடாத அவரது குடும்பத்துக்குத்தான் வாய்ப்புகளை வாரிவாரி வழங்கியது தலைமை. பிரபாகரன் அப்பாவுக்கு சேர்மன் பதவி, அவரது மறைவுக்குப்பிறகு பிரபாகரனுக்கு சேர்மன் பதவி, இவரது அம்மாவுக்கும் சித்திக்கும் எம்.எல்.ஏ. சீட், கடந்த தேர்தலில் பிரபாகரனுக்கு எம்.எல்.ஏ.சீட் இப்படி சீட் வாங்கிய அவங்க குடும்பத்தில் யாராவது ஜெயித்தார்களா? 1500 வாக்குகள்ல தோத்துப்போனோம். வாக்கு எண்ணிக்கையின்போது மையத்தில் கடைசி வரைக்கும் பிரபாகரனோ, அவரது ஆட்களோ இருக்கவில்லை. இதுபற்றி ஒரு விசாரணை உண்டா? பேரூர் நடராஜன் போன்றவர்கள் கட்டிக்காத்த இயக்கம் இது. தி.மு.க. கோட்டையாக இருந்த இந்த பகுதி, இன்னைக்கு தேய்ந்து சுருங்கிப் போனதுன்னா அதுக்கு காரணம் மக்கள் விரும்பாதவர்களுக்கே வாய்ப்புகளை தருவதுதான். கோவையில் நாம் வலிமையாகணும்னா புதியவர்களுக்கும் மக்களோடு நெருங்கி இருப்பவர்களுக்கும் வாய்ப்புகளை பரவலாக்குங்கள். மாவட்டம் சொல்வதை மட்டுமே நம்பாமல் வேறு வழிகளிலும் கிரவுண்ட் ரியாலிட்டியை தலைமை அறிந்துகொள்ளவேண்டும்'' என தடையின்றிரீ பேச, அவருக்கு ஆதரவாக கைத்தட்டல்களும் பேசின.

மூன்றாவது அமர்வில் மா.செ. மற்றும் பகுதிச் செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆய்வை நடத்தியபோது, மாவட்ட செயலாளர் முத்துச்சாமி மீது, மாவட்ட பொருளாளர் நாச்சிமுத்து குற்றச்சாட்டுகளை அடுக்க, "கட்சி சொல்வதைத்தான் நான் செய்கிறேன். யாரிடமும் பேதம் பார்ப்பதில்லை' என விளக்கமளித்தார் முத்துச்சாமி. இவருக்கு ஆதரவாக களத்தில் குதித்தார் உதயக்குமார். இதனால் சிறிது நேரம் லாவணி கச்சேரி மாதிரி ஆனது. இதே ரீதியிலேயே ப.செ.க்களின் பேச்சுக்கள் இருந்தன.

stalin

மூன்று அமர்விலும் தங்களுக்கு மேலிருக்கும் நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியதோடு, ""தவறு செய்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை இல்லாததால்தான் கோஷ்டிகளும் பொய்களும் கோவையில் அதிகரித்திருக்கிறது. இதுதான் கட்சியை பலவீனப்படுத்தி வருகிறது. மாவட்ட பிரச்சனைகளை மா.செ.க்களிடம் விவாதிப்பதை விட கிளைக்கழக நிர்வாகிகளிடம் தலைமை விவாதிக்க வேண்டும். உங்களை நாங்கள் நேரடியாகவோ அல்லது உங்களிடம் தகவல்களை மறைக்காமல் சொல்லும் நம்பிக்கையுடைய ஒருவரிடம் பேசவோ விரும்புகிறோம். அதற்கேற்ப ஒரு மொபைல் எண் தாருங்கள். அப்போது மாவட்டத்தில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளும் உங்களுக்கு தெரியவரும்'' என்று பலரும் கோரிக்கை வைத்தனர்.

அனைவரின் கருத்துகளையும் கவனமாக குறித்துக்கொண்ட ஸ்டாலின், இறுதியாக பேசும்போது, ‘‘""இப்படிப்பட்ட ஆய்வினை இதுநாள் வரை நடத்தாமல் இருந்திருக்கிறோமே என உணர்கிற அளவுக்கு உங்க பேச்சு இருந்தது. கட்சிக்கு துரோகமிழைப்பவர்கள், தவறு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. நிச்சயம் உடனுக்குடன் ஆக்ஷன் இருக்கும். மக்களிடம் மதிப்பில்லாதவர்களுக்கு இனி வாய்ப்பு கொடுக்கப்படாது. கோஷ்டி மனப்பான்மையை விட்டுவிட்டு கட்சியின் வெற்றிக்காக மட்டுமே கவனம் செலுத்துங்கள். உங்கள் குமுறல்களை இனி என்னிடம் நேரடியாக பகிர்ந்துகொள்ளும் வழிகள் ஏற்படுத்தப்படும். அது என்ன வழி என்பது உங்களுக்கு தெரிவிக்கப்படும்''‘என உருக்கமாகத் தொடங்கி உற்சாகம் தரும் வகையில் பேசினார் ஸ்டாலின். பின்னர் நிர்வாகிகளுடனும் தொண்டர்களுடனும் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். ஆய்வில் கிடைத்த உற்சாகம் களத்திலும் இருக்கும் என்ற நம்பிக்கை தி.மு.க தொண்டர்களிடம் உள்ளது. அதனை நிறைவேற்ற வேண்டிய சவாலான பொறுப்பு செயல்தலைவர் கைகளில்.

-இரா.இளையசெல்வன், அருள்குமார்