களமிறங்கி விட்டார் கமல். கொள்கையை விட மக்கள் நலனே முக்கியம் என்கிறது அவரது அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த வீட்டிலிருந்து, தனது அரசியல் பயணத்தைத் துவக்குவதற்காக, பிப்.20-ஆம் தேதி நண்பகலில் மதுரை வந்தார் கமல். ஏற்கெனவே மதுரையில் முகாமிட்டு, பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகளில் இருந்த "பிக்பாஸ்' டீமிடம் நிலவரங்களை விசாரித்துவிட்டு, காளவாசலில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அன்று இரவு தங்கினார்.
கலாம் குடும்ப ஆசி!
மறுநாள் 21-ஆம் தேதி அதிகாலை மதுரையிலிருந்து புறப்பட்டு, காலை 7:45 மணிக்கு இராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாமின் வீட்டிற்குள் சென்றார். கலாமின் அண்ணன் முகமது முத்துமீரான் மரைக்காயரிடம் ஆசி வாங்கிய கமல், அவருக்கு கடிகாரம் பரிசளித்தார். காலைச் சிற்றுண்டியை கலாமின் வீட்டில் சாப்பிட்ட கமல், சிறிய இடைவெளிக்காக, இராமேஸ்வரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனியார் தங்கும் விடுதிக்குத் திரும்பினார்.
காலை 9 மணிக்கு மீனவர்களுடனான சந்திப்புக்காக, கணேஷ் மகால் வந்தார் கமல். கமலிடம் குறைகளைச் சொல்லவும் கேள்விகள் கேட்கவும் மீனவப் பெண்கள், வர்த்தக அமைப்பினர், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் என முன் வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். ஏகப்பட்ட மீனவ மக்களும் வியாபாரிகளும் புகார் மனுக்களுடனும் காத்திருந்தனர். மேடை ஏறிய கமல், "நமக்கு உள்ள உரிமைகளை கேட்டுப் பெறுவோம், இன்னொரு நாளில் மீண்டும் உங்களுடன் கலந்தாலோசிக்க வருகிறேன்' என இரண்டே நிமிடத்தில் சுருக்கமாகப் பேசிவிட்டு, மீண்டும் தனியார் விடுதிக்குக் கிளம்பினார். இது மீனவர் பிரதிநிதிகளுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. கலாம் வீட்டிலும் கணேஷ் மகாலிலும் கமலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை, நடிகர் ஆர்.கே.சுரேஷ் தலைமையிலான பவுன்சர்கள் பார்த்துக் கொண்டனர்.
மீனவர் வருத்தமும் மகிழ்ச்சியும்!
தனியார் விடுதியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மீனவர் சங்கப் பிரதிநிதிகளைப் பார்த்ததும், ஆரத்தழுவினார் கமல். "நாங்கள் பொன்னாடை போர்த்துவதில்லை. இதுதான் ஆடை' என்றபடி கமல் கட்டிப்பிடித்ததில் நெகிழ்ந்தனர். இதனால் கணேஷ் மகாலில் வருத்தத்துடன் இருந்த மீனவப் பிரதிநிதிகள் மகிழ்ச்சியுடன் திரும்பினர். அடுத்ததாக, கடந்த இதழில் நாம் கூறியிருந்தது போல, கலாம் படித்த பள்ளிக்குள் செல்ல அனுமதி இல்லாததால், வெளியில் இருந்தபடியே பள்ளியைப் பார்த்துவிட்டு, பேய்க்கரும்பில் உள்ள கலாமின் நினைவிடத்திற்குச் சென்றார் கமல்.
இங்கும் வி.ஐ.பி.க்கள் செல்லும் தெற்கு வாயில் வழியாகச் செல்ல அனுமதி கிடைக்காததால், பொதுமக்கள் செல்லும் மேற்கு வாயில் வழியாகச் சென்றுவிட்டு, முதல் பொதுக்கூட்ட ஸ்பாட்டான இராமநாதபுரம் நோக்கி புறப்பட்டது கமலின் படை.
அங்கு அரண்மனை வாசல் முன்பாக போடப்பட்டிருந்த மேடையில் ஏறினார் கமல். சுட்டெரிக்கும் வெயிலிலும் காத்திருந்த மக்களைப் பார்த்ததும் கமல் முகத்தில் உற்சாகம் நிரம்பி வழிந்தது. ""இந்த மண்ணுக்கு வந்து 45 ஆண்டுகள் ஆகிறது. நான் உங்கள் வீட்டு விளக்கு, இதை ஏற்றி வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு'' என சுருக்கமாகப் பேசிவிட்டு, மதுரையை நோக்கிக் கிளம்பினார் கமல். தனது சொந்த ஊரான பரமக்குடியிலும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலும் பேசுவதாக இருந்த பொதுக்கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
கடைசி நேர ஆலோசனை!
மாலை ஐந்து மணிக்கு மதுரை வந்த கமல், அதே நட்சத்திர ஓட்டலில் விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். கமல் மதுரைக்கு வருவதற்கு முன்பே வந்துவிட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் அவருடன் வந்த எம்.எல்.ஏ., சோம்நாத் பாரதியையும் வரவேற்க, கமல் சார்பில் யாரும் செல்லவில்லை.
இந்த விஷயம் கமலுக்குத் தெரிந்ததும் சற்றே பதற்றமானவர், நேராக கெஜ்ரிவால் தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்று அவரை தனது காரிலேயே அழைத்துக் கொண்டு, ஒத்தக்கடை பொதுக்கூட்ட ஸ்பாட்டை நோக்கிக் கிளம்பினார். இரவு 7:30-க்கு பொதுக்கூட்ட மேடையில் கமல் ஏறியதும் திரண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது. கூட்டத்தைப் பார்த்து நாலாபுறமும் கைகளை அகல விரித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் கமல்.
கமல் படை!
மேடையின் கீழே நிறுவப்பட்டிருந்த கொடி மேடைக்குச் சென்று, கட்சிக் கொடியை ஏற்றிவிட்டு, தனது கட்சியின் பெயர் "மக்கள் நீதி மய்யம்' என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதன்பின் மக்கள் நீதி மய்யத்தின் அகில இந்திய பொறுப்பாளராக கோவை தங்கவேலுவும் மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினர்களாக கோவை தங்கவேலு, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஏ.ஜி.மௌரியா, நடிகை ஸ்ரீபிரியா, நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், எழுத்தாளர் சுகா, ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், ஸ்டூடண்ட் ஜெராக்ஸ் சவுரிராஜன் உட்பட 10 பேர் அறிவிக்கப்பட்டனர். இப்படி பேச்சாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், நடிகை கொண்ட கலவையான பட்டியலை கவனமுடன் தயாரித்திருந்தார் கமல்.
கமலுடன் பல ஆண்டுகளாக பயணித்து வரும் டைரக்டர் ராசி அழகப்பன் பெயர் மிஸ்ஸிங். அதேபோல், "இப்போது பதவியில் இருக்கும் நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், எனது கட்சியில் சேர்கிறார்கள். அவர்களை மதுரை பொதுக்கூட்டத்தில் அறிவிப்பேன்' எனச் சொல்லியிருந்தார் கமல். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
""தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்று சக்தி கமலின் மக்கள் நீதி மய்யம் தான். டெல்லியில் ஊழல் கட்சியான காங்கிரசையும் மதவாத சக்தியான பி.ஜே.பி.யையும் எப்படி தோற்கடித்தோமோ, அதுபோல் தமிழ்நாட்டில் கமல் செய்வார்'' என்றார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால். ""தமிழகத்தில் இப்போது ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை கமல் நிரப்புவார்'' என பேசினார் பி.ஆர்.பாண்டியன்.
விளாசல்-வியூகம்!
இறுதியாக பேச வந்தார் கமல். ""நான் தலைவனாக வரவில்லை. உங்களின் கருத்துகளைக் கேட்கும் தொண்டனாகத்தான் வந்திருக்கிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குவார்ட்டரும் ஸ்கூட்டரும் ஒழியும். இந்த "மக்கள் நீதி மய்யம்' நாங்க கூட்டாகச் சேர்ந்து சமைத்த சோறு. ஊழல்வாதிகள் இந்தப் பருக்கையைத் தொட்டால் அவர்களின் விரல் சுடும்'' என்ற கமல், “"நீங்கள் நல்லது செய்வீர்கள் என்று நம்பினோம். நீங்கள் செய்யாததால் தான் நான் வந்திருக்கிறேன்' என ஆட்சியாளர்களுக்கு பஞ்ச் வைத்தார். இரவு 9:30 மணிக்கு கூட்டம் முடிந்ததும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களாகிவிட்ட கமல் நற்பணி இயக்கத்தினரின் முகத்தில் அப்படி ஒரு பரவசம்.
இதுவரை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகமாக இருந்த சென்னை- ஆழ்வார்பேட்டை அலுவலகம்தான் தற்போதைக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்டுவிட்டாலும், அடுத்து கட்சிக்கான சின்னத்தைப் பெறுவதற்கான வழிமுறைகள், சில சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டபின், மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்டக்குழு கூடும் என்கிறார்கள் தலைமையக நிர்வாகிகள். இதற்கிடையே மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்களும் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, இரண்டு பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவுடன் சென்னைக்கு கிளம்பி வர தகவல் போயுள்ளதாம்.
கட்சியின் செயல்பாடுகளை கிராமங்கள்வரை கொண்டு செல்லும் முயற்சிக்கு நிதி ஆதாரத்தைப் பெருக்கும் முனைப்பில் இருக்கிறார் விஜய் டி.வி.யின் சி.இ.ஓ.மகேந்திரன். இசை அமைப்பாளர் (சங்கர்) கணேஷின் மைத்துனரான மகேந்திரன், அரபு நாடுகளில் வசிக்கும் செல்வச் செழிப்பான மலையாளத் தொழிலதிபர்களைச் சந்திக்கச் செல்ல ஆயத்தமாகிறார்.
ம.நீ.ம.-ம.ந.கூ.!
அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவந்த கைங்கர்யத்தை கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிறப்பாக செய்த மக்கள் நலக் கூட்டணி மறுபடியும் உருவெடுக்கிறது. மாற்று அணி என்கிற தன் முயற்சியில்... சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல் மக்கள் நலக் கூட்டணியை மறுபடியும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் சி.பி.எம். தோழர்கள். கடந்த முறை விஜயகாந்தை முதல்வராக்குவோம் என்றார்கள். இந்த முறை கமல்ஹாசனை முதல்வராக்குவோம் என உணர்ச்சி பொங்க கோஷமிடப் போகிறார்கள் என்கிறது தோழர்களின் வட்டாரம்.
காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகளுடன் கூட்டணி வேண்டாம் என வலியுறுத்தும் சி.பி.எம்.மின் முன்னாள் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்தின் நண்பர்தான் நடிகர் கமல். அவரது கட்சி துவக்க விழாவுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் வாழ்த்து தெரிவித்தார். "கமலின் மக்கள் நீதி மய்யத்துக்கு தமிழக கட்சியின் அனுமதி இல்லாமல், கேரள முதல்வரும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராய் எப்படி வாழ்த்து சொன்னார்' என தோழர்கள் கேட்டதற்கு தலைமை சரியான பதிலை தரவில்லை.
யார்? யார்?
சி.பி.எம்., கமலோடு நெருங்குகிறது. ஆனால் சி.பி.ஐ. நெருங்கவில்லை. சி.பி.ஐ.யையும் நெருங்கும் நோக்கில்தான் கமல், நல்லகண்ணுவை சந்தித்தார். கமல் யாரையும் அரசியல் கணக்குகள் இல்லாமல் சந்திக்கவில்லை. அவரைச் சந்தித்த சீமானும் அரசியல் கூட்டணியில் இணையவேண்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
கமலின் மக்கள் நீதி மய்யம், சி.பி.எம்., நாம் தமிழர் கட்சி இவற்றுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்த கூட்டணி என்கிற கணக்கில் காய்கள் நகர்த்தப்படுகின்றன.
இந்தக் கூட்டணி நகர்வு குறித்து சி.பி.எம். கட்சியில் அதிருப்திகளும் உண்டு. "நாம் தமிழர் கட்சியை எந்த காலத்திலும் சி.பி.எம். ஏற்காது' என்கிறார்கள் தோழர்கள் சிலர். நாம் தமிழர் கட்சியினரும் "நாங்கள் பிம்ப நடிகர் அரசியலை ஏற்பதில்லை' என்று கமல் பற்றி சொல்கிறார்கள். தி.மு.க.வுடன் இணைந்து மக்கள் பிரச்சினைக்காக போராடும் விடுதலை சிறுத்தைகளும் கமல் கட்சியுடனான கூட்டணியை மறுக்கிறார்கள்.
வெளி வியூகம்!
பா.ஜ.க.வினரோ, ""இப்படி ஒரு கூட்டணி அமைந்தால்தான் தமிழகத்தில் பா.ஜ.க. எதிர்ப்பு ஓட்டு சிதறும். நாங்கள் கொடுத்த அசைன்மெண்ட்டை தெளிவாக செய்கிறார் கமல்'' என்கிறார்கள். ""இந்தக் கூட்டணியில் எங்கள் தே.மு.தி.க.வை இணைத்துக் கொள்ளுங்கள்'' என விஜயகாந்த் கேட்க, கமல் தரப்பு தயக்கம் காட்டியதாகவும் சொல்கிறார்கள் மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்ட நிர்வாகிகள்.
காகிதப்பூவா, விதையா, மரபணு மாற்றப்பட்ட விதையா என கமல் கட்சி தொடங்குவதற்கு முன் விவாதங்கள் வெளிப்பட்ட நிலையில், மதுரையில் மக்கள் நீதி மய்யத்தின் கொடி ஏற்றப்பட்ட பிறகு, தி.மு.க. தரப்பு மிகக்கவனமாகவே கமலை கவனிக்கிறது. இருதரப்பிலும் வெளிப்படையான விமர்சனங்களைத் தற்போதைக்கு தவிர்ப்பது என உள்ளூர ஒரு புரிதல் ஏற்பட்டுள்ளது. இந்தப் புரிதல் நீடித்தால், தமிழக அரசியல் களத்தின் கூட்டணிக் கணக்குகள் மாறக்கூடும்.
"இந்தியன்-2' ஷூட்டிங்கிற்கு தயாராகும் கமல், தேர்தல் களத்தில் இறங்கவும் தயார் நிலையில்தான் இருக்கிறார்.
-தாமோதரன் பிரகாஷ், ஈ.பா.பரமேஷ்வரன், நாகேந்திரன், அண்ணல், ஷாகுல்
மக்கள் என்ன சொல்கிறார்கள்? சுரேஷ்(பரமக்குடி): நான் அம்மா கட்சிதான், ஆனா இப்ப நிலைமை சரியில்ல. எங்க ஊர்க்காரர் என்ன சொல்லப் போறார்னு கேட்க வந்தேன். கட்சிக் கொள்கைய அறிவிப்பார்னு சொன்னாக, ஆனா ஒண்ணும் சொல்லலியே. தங்கவேல்: நானும் ஏ.டி.எம்.கே.தான். என்கூட முப்பது பேர் வந்திருக்காங்க. கூட்டம் நல்லாத்தான் இருக்கு. ஆனா நம்ம ஊர்க்கூட்டம் மாதிரி இல்லாமல் வடநாட்டு ஸ்டைலில் இருக்கு. பரிமளா: என்னோட குடும்பமே தி.மு.க.தான். திராவிடம், பெரியார்னு பேசிக்கிட்டிருந்த கமலு இந்தக் கூட்டத்துல அதப்பத்தி எதுவுமே பேசலையே. வசந்தா: தமிழ்நாடே இப்ப ஐ.சி.யூ.வுல இருக்கு. இதக் காப்பாத்த யாரும் வரமாட்டாங்களான்னு நினைச்சுக்கிட்டிருக்கும்போது கமல் வந்துட்டாரு. ராணி: எம்.ஜி.ஆர்.மாதிரி சும்மா தகதகன்னு இருக்காரு கமலு. ஆமா பிக்பாஸ்ல வந்த ஓவியா வரலையா தம்பி. இப்பதைக்கு ஒண்ணும் சொல்றதுக்கில்லை, தேர்தல் வரும்போது பாத்துக்கலாம். அசோக்குமார்: பெங்களூர் நகர கமல் மன்றத் தலைவரா இருந்தேன். அங்கயிருந்து மொத்தம் 500 பேர் வந்துருக்கோம். கமல் நல்லாட்சி தருவார்னு நம்புறோம். செல்லதுரை: தி.மு.க.வுல நான் பொறுப்பில் இருந்தாலும் கமலின் தீவிர ரசிகன். தமிழக மக்களின் ஆசையை வீணடிக்கமாட்டார் என நம்புகிறோம். கிருத்திகா: இதுவரை அரசியலுக்கு வந்த சினிமா நடிகர்கள் எல்லாம் மக்களுக்கு நல்லது செய்வேன் என்றார்கள். அப்படி யாரும் நல்லது செஞ்சதா எனக்குத் தெரியல. இவராவது சொன்ன மாதிரி செய்றாரான்னு பார்ப்போம். மணி பட்டேல்: எங்களது தலைவர் கெஜ்ரிவாலும் கமலும் கைகோர்த்துவிட்டார்கள். தமிழகத்தில் எங்க கட்சியான ஆம் ஆத்மி இனிமே ஸ்ட்ராங்காயிரும். தானா சேர்ந்த கூட்டம்! மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக மீடியாக்களில் தெரிந்தாலும், மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் எப்படியும் ஐம்பதிலிருந்து எழுபதாயிரம் பேர் வரை திரள்வார்கள் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இருபத்தைந்தாயிரம் பேரே வந்திருந்தனர். ""இது காசு கொடுத்து கூட்டிய கூட்டம் அல்ல, தானா சேர்ந்த கூட்டம்'' என்கிறார்கள் மக்கள் நீதி மய்யத்தினர். |