பல தரப்புகளின் பாராட்டைப் பெற்றிருக்கிறார் நடிகை அமலாபால். இது அவரது கலைத்திறமைக்கு அல்ல... தைரியத்திற்காக!
நடிகை அமலாபால் கடந்தவாரம் சென்னை -மாம்பலம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் கொடுத்த புகாரால் கோலிவுட் ஏரியாவே பரபரப்பானது. ""பிப். 03-ஆம் தேதி மலேசியாவில் நடக்கவிருக்கும் கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் டான்ஸ் ஸ்கூலில் ரிகர்சல் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அழகேசன் என்பவர் தன்னை தொழிலதிபர் எனச் சொல்லிக் கொண்டு என்னிடம் அறிமுகமானார். "மலேசியாவில் எனது நண்பர் ஒருவர் கோடீஸ்வரராக இருக்கிறார். உங்களது கலை நிகழ்ச்சி முடிந்ததும், அவருடன் தனிமையில் இரவு விருந்தில் கலந்து கொண்டால் பல லட்சங்கள் கிடைக்கும்'’என அநாகரிகமாகப் பேசினார். அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என இன்ஸ்பெக்டர் சேகரிடம் புகார் அளித்தார்.
புகார் கொடுத்தது நடிகையாச்சே, அதுவும் தொழிலதிபர் மீதாச்சே. மாலை 6 மணிக்கு அமலாபால் கொடுத்த புகாருக்கு, உடனே ஸ்பீடாக களத்தில் இறங்கி, இரண்டே மணி நேரத்தில் அந்தத் தொழிலதிபரான அழகேசனை அள்ளி வந்து மாம்பலம் ஸ்டேஷனில் உட்காரவைத்தனர். விடிய விடியவும் விடிந்த பின்னும் விசாரணை நடத்திவிட்டு, பெண்ணின் மாண்புக்கு களங்கம் விளைவித்தல், பாலியல் தொல்லை உட்பட கடுமையான மூன்று பிரிவுகளில் வழக்குப் போட்டு புழல் ஜெயிலில் அடைத்துவிட்டனர்.
நெருங்கியது எப்படி?
பிரபல ஹீரோயினான அமலாபாலை அவ்வளவு எளிதில் அணுகி இந்த மாதிரி கேட்க முடியுமா? அதுவும் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதருக்குச் சொந்தமான இடத்திற்கே சென்று அழகேசன் பேசியது எப்படி? இதன் பின்னணியை நாம் விசாரிக்கத் தொடங்கினோம். டைரக்டர் ஏ.எல்.விஜய்யிடமிருந்து விவாகரத்துப் பெற்ற பிறகு, சென்னை -பட்டினப்பாக்கத்தில் உள்ள "சோமர்செட்' ஸ்டார் ஓட்டலில் தான் அமலாபால் தங்கியுள்ளார். நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாசின் "டிபெண்டர் குரூப்' கலாட்டா பண்ணிய அதே சோமர்செட் ஓட்டல்தான்.
இங்கிருந்தபடிதான் தனது மேனேஜர் பிரதீப் உதவியுடன் கால்ஷீட் கொடுப்பது, ஷூட்டிங்கிற்குப் போவது என பிஸியாக இருக்கிறார் அமலாபால். கானாத்தூரைச் சேர்ந்த தொழிலதிபரான அழகேசனும் இந்த ஓட்டலுக்கு அடிக்கடி செல்லக்கூடியவர். சினிமா பிரபலங்கள் பலரும் வீக் எண்ட் பார்ட்டிக்கு இந்த ஓட்டலுக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
மலேசியாவில் உள்ள பெண்கள் முன்னேற்ற சங்கம் என்ற அமைப்பு, அங்கு பெஞ்ச் மார்க் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நடத்தும் சித்ரா என்பவரை அணுகி, “"டேஸ்லிங் தமிழச்சி என்ற பெயரில் கலை நிகழ்ச்சி நடத்தப்போகிறோம். அதற்கு சில தமிழ் நடிகைகளை மலேசியாவிற்கு அழைத்து வர முடியுமா'’’என கேட்டிருக்கிறது. சித்ராவும் தனக்கு நெருக்கமான சென்னை சினிமா சோர்ஸுகள் மூலம், அமலாபால், ஹன்சிகா, ராய்லட்சுமி, ஐஸ்வர்யா தத்தா, இனியா, ரம்யா, ‘"மேயாத மான்'’ இந்துஜா ஆகியோரைக் கமிட் பண்ணியுள்ளார்.
சோமர்செட் ஓட்டலுக்கு அடிக்கடி போய் வரும் அழகேசனுக்கு அமலாபாலின் மேனேஜர் பிரதீப் பழக்கமாகியிருக்கிறார். டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரும் இந்த நட்பு ஜோதியில் ஐக்கியமாகியிருக்கிறார். மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் இப்ராஹிமின் பெர்சனல் அப்பாயின்ட்மெண்டுக்காக வெயிட்டான தொகையுடன் பிரதீப்பை அணுகிய அழகேசனுக்கு க்ரீன் சிக்னல் கிடைத்திருக்கிறது. பிரதீப் கொடுத்த ஐடியாபடியும் ஸ்ரீதருடனான நெருக்கத்தின் அடிப்படையிலும் அந்த டான்ஸ் ஸ்கூலுக்கே சென்றும் மலேசியா சித்ரா பெயரைச் சொல்லி எசகுபிசகாகக் கேட்டு எக்குத்தப்பாக மாட்டிக் கொண்டார் அழகேசன்.
கலை நிகழ்ச்சியா? ஸ்பெஷல் அப்பாயின்ட்மெண்ட்டா?
அமலாபால் சங்கதி பற்றி சினிமா தயாரிப்பாளர் ஒருவரிடம் பேசப் போனபோது, ஏகப்பட்ட கசமுசா சமாச்சாரங்களை அள்ளிக் கொட்டினார். “""பொதுவா நடிகைகள்னாலே பணக்காரனுங்களுக்கு சபலம் வரத்தான் செய்யும். எல்லா நடிகைகளும் அதற்கு ஒத்துப்போறதில்லை. ஆனா மார்க்கெட் இருக்கும்போதே கோடிகளைச் சம்பாதித்து, யாராவது ஒரு தொழிலதிபரையோ, அமெரிக்க இன்ஜினியரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டிலாகணும்கிற குறிக்கோளுடன் இந்த மாதிரி டார்க் ஏரியாவில் டிராவல் ஆவார்கள்.
மோடியின் பண மதிப்பிழப்பிற்குப் பிறகு, இப்போதிருக்கும் இந்திய சினிமாவின் டாப் லெவல் ஆர்ட்டிஸ்டுகள் எல்லாருமே யு.எஸ்.டாலர்களாகவும் யு.கே.பவுண்டுகளாகவும் வாங்குகிறார்கள். அதிலும் முக்கால்வாசிப் பேருக்கு ஹவாலா டிரான்ஸ்பர் சிஸ்டம்தான்.
மலேசியா, சிங்கப்பூர், லண்டன் தொழிலதிபர்களின் ஸ்பெஷல் அப்பாயின்ட்மெண்ட்டுக்காக டாலரோ, பவுண்டோ பக்காவாக டிரான்ஸ்பரான பின்னாலதான், கலை நிகழ்ச்சிகளையே ஹீரோயின்கள் கமிட் பண்ணுவார்கள். அதேசமயம், மோசமான ஆக்ஷன்களில் இறங்கி அலறவிட்டுவிடுவதால், துபாய் போன்ற அரபுநாட்டுத் தொழிலதிபர்களின் ஸ்பெஷல் அப்பாயின்ட்மெண்ட்டுகளை ஹீரோயின்கள் விரும்புவதில்லை''’என்பதோடு முடித்துக் கொண்டார்.
தனிச் சந்திப்பு நடப்பது எப்படி?
சென்னையில் உள்ள ஈவென்ட் மேனேஜ்மென்ட் பார்ட்டி ஒருவரிடம் கொக்கியைப் போட்டோம். “""ஒரு படம் ஒன்றரைப் படம் எடுத்த தயாரிப்பாளர்கள் கூட்டம் ஒண்ணு இருக்கு. அவர்கள்தான் ஹீரோயின்களின் மேனேஜர்களை கைக்குள் போட்டுக்கொண்டு, வெளிநாட்டு ஈவென்ட் மேனேஜ்மென்ட் ஆட்களோடு தொடர்பு வைத்துக்கொள்வார்கள்.
சிங்கப்பூரிலோ, மலேசியாவிலோ ஹீரோயின்களின் கலை நிகழ்ச்சி கமிட் ஆனதுமே, விளம்பரம் வாங்குவதற்காக அங்குள்ள தொழிலதிபர்களை, மேற்படி ஒருசில ஹீரோயின்களின் விதவிதமான போட்டோக்களுடன் அப்ரோச் பண்ணுவார்கள். அதைப் பார்த்து கிறங்குபவர்கள், விளம்பரம் கொடுப்பதோடு மற்றவற்றிற்கான ரேட்டையும் பேசி முடித்துவிடுவார்கள். அந்த ரேட் விவகாரம், எப்படி செட்டில்மெண்ட் இதெல்லாம் சம்பந்தப்பட்ட ஹீரோயின்களுக்கு பாஸானதும் எல்லாம் ஓ.கே.ஆகிவிடும்.
கலை நிகழ்ச்சிக்கு முன்பும் பின்பும் தனிச்சந்திப்பு நடந்து முடிந்துவிடும். இந்தச் சந்திப்பு தொடர வேண்டும் என நினைக்கும் தொழிலதிபர்கள், தங்கமாகவோ, வைரமாகவோ கிஃப்ட் பார்சல் கொடுத்து ஏர்போர்ட்டில் சுங்கவரியும் கட்டி பிளைட் ஏற்றிவிடுவார்கள்''’என டீடெய்லாக சொல்லி முடித்தார். எதையும் கமிட் ஆகாமல் போனமா வந்தமான்னு இருக்கிற ஹீரோயின்களும் அதே பிளைட்டில் வந்து விடுவார்கள்.
அமலாபால் என்ன சொல்கிறார்?
போலீசில் புகார் கொடுத்த அமலாபாலின் தைரியத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார் நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால். நடிகை கஸ்தூரியும் அமலாபாலைப் பாராட்டியுள்ளார்.
அழகேசன் விவகாரத்தில் என்னதான் நடந்தது என அமலாபாலிடமே கேட்டோம். “""மலையாளத்தில் பிரபலமான பத்திரிகை நிருபர் ஒருவர், தன்னோட கல்யாணப் பத்திரிகை கொடுக்க, என்னோட கேரள வீட்டுக்கு வந்தார். அப்ப அங்க நின்ன காரைப் பார்த்துட்டுப் போய் "வரி ஏய்ப்பு மோசடி'ன்னு பரபரப்பாக்கிட்டாரு. அப்ப இருந்து ஒரு கும்பல் என்னைப் பின்தொடர்ந்து வருது. அந்தக் கும்பலின் சதிதான் இந்த மேட்டரும்''’என்றார்.
"உங்க மேனேஜர் பிரதீப் பற்றி’என நாம் கேட்டதும், ""பிரதீப்தான் எனக்கு இண்டஸ்ட்ரியில் எல்லா வகையிலும் பாதுகாப்பு''’என்பதுடன் முடித்துக்கொண்டார்.
டி.வி. சீரியல் நடிகையின் எக்ஸ்போர்ட்
டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண் டி.வி.சீரியல் நடிகைகளில் பிரபலமானவர். "பியூட்டி' சீரியலில் மெயின் கேரக்டர்களிலும், இப்போது ஹீரோவாக புரமோஷன் ஆகிவிட்ட, அப்போதைய வாசனை காமெடியனுடன் ஜோடி போட்டவர் அந்த நடிகை. இவரின் கணவர், சென்னை -கோலிவுட் ஏரியாவில் மாடலிங் ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.
சினிமா வாய்ப்புக்காகவும் மாடலிங்கிற்காகவும் இளம் பெண்கள் ஏகப்பட்ட பேர் இவரது ஸ்டுடியோவுக்கு வருவார்கள். அப்படிவரும் பெண்களிடம் கனிவாகப் பேசி, மலேசியா, சிங்கப்பூர், கனடாவுக்கு பேக்கேஜ் சிஸ்டத்தில் அனுப்புவதுதான் இவரது திருப்பணி.
மாடலிங் பெண்கள் தவிர, நன்கு முகம்தெரிந்த சீரியல் நடிகைகளின் போட்டோ ஆல்பம் ஒன்றை, தனது செல்போன் கேலரியில் வைத்திருப்பாராம் அந்த பியூட்டி. தொழிலதிபர்களுக்கு வாட்ஸ் அப்பில் போட்டோக்களை அனுப்பிவிடுவாராம்.
கலைநிகழ்ச்சி என்ற பெயரில் நடப்பதென்னவோ ஏகப்பட்ட கசமுசாக்கள். அலர்ட் பார்ட்டிகள் மட்டுமே இந்த வலையிலிருந்து தப்பிக்க முடியும்.
-ஈ.பா.பரமேஷ்வரன், அரவிந்த்
படம்: அசோக்