jeyar

ருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை அறுக்கும் வேலைகள் தமிழ்நாட்டில் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆண்டாளின் பெருமைகளைப் பேசிய கவிஞர் வைரமுத்துவின் கட்டுரையில், ஒரேயொரு வரியை உருவிக்கொண்டு அதை பிரச்சனைக்குரியதாக்கினார் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா.

தமிழகத்தின் பல பகுதிகளில் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்து அமைப்புகள் அவற்றை முன்னின்று நடத்தின. வைரமுத்துவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் எனக் கூறி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் தொடர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்து, பின்வாங்கினார்.

Advertisment

இது தொடர்பாக தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும் ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் நிறுவனருமான ஜெகத்ரட்சகன் வெளியிட்ட அறிக்கையில், வைரமுத்துவைக் கண்டித்ததுடன், துர்கா ஸ்டாலின் கேட்டுக்கொண்டதால் ஜீயர் தனது போராட்டத்தைக் கைவிட்டார் என்றும் குறுக்குசால் ஓட்டியிருந்தார். ஆனால் ஜீயர் அடங்காமல் அடாவடியைத் தொடர்ந்தார்.

jounalist""இந்து மக்களின் மனது புண்படும்படி பேசுவதைக் கண்டு இனியும் வேடிக்கை பார்க்கமாட்டோம். எங்களுக்கும் சோடா பாட்டில் வீசவும், கல் வீசவும் தெரியும். ஆனால், அதை நாங்கள் விரும்பவில்லை'' என்று, காவி உடுத்திய ஜீயர் மேடையில் அடாவடியாகப் பேசினார். பின்னர் ஆண்டாளிடம் அதற்கு மன்னிப்புகோரியதாக தெரிவித்தார். அர்ச்சனை செய்யும் வாய்களின் மொழிமாற்றத்தைக் கண்டு பலரும் வியப்பில் இருக்கின்றனர். "வரும் பிப்ரவரி 3ஆம் தேதிக்கு முன் வைரமுத்து ஆண்டாளின் சன்னிதியில் வந்து மன்னிப்பு கேட்காவிட்டால், மீண்டும் உண்ணாவிரதம் இருப்போம்' என அறிவித்திருக்கிறார் ஜீயர்.

Advertisment

ஜீயரின் இந்தப் பேச்சு குறித்து மூத்த வழக்கறிஞர் இளங்கோவன் நம்மிடம், ‘வைரமுத்து வருத்தம் தெரிவித்த பிறகும் எதற்காக மன்னிப்பு கேட்கச் சொல்லி நிர்பந்திக்கிறார்கள். அவர் ஆதாரங்களைத்தான் மேற்கோள்களாக காட்டினார். யாருக்கேனும் மனம் புண்பட்டிருந்தால், அவர் மேற்கோள்காட்டிய புத்தகத்தைத்தானே கொளுத்தியிருக்க வேண்டும். தான் பண்படவேண்டும் என்பதற்காகத்தான் ஒருவர் ஆன்மிகத்தை நாடுவார். அதற்கான குருவாக இருக்கும் ஒருவர் ‘"எனக்கு கல்வீசவும், பாட்டில் வீசவும் தெரியும்... ஆனால், அதையெல்லாம் செய்யமாட்டேன்...'’எனப் பேசியிருக்கிறார். ஆண்டாளை இழிவுபடுத்திவிட்டார் என்று வைரமுத்து மீது குற்றம்சுமத்தி அவர் ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். அதுபோல, மக்களை நோக்கி பாட்டில் வீசுவோம்-கல் வீசுவோம் எனப் பேசியவர்கள், மக்களிடம்தான் மன்னிப்பு கேட்கவேண்டும். ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்டேன் என்று சொல்லிக் கொண்டிருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?''’என்கிறார் ஆத்திரத்துடன்.

வைரமுத்துவின் கட்டுரையை வெளியிட்ட "தினமணி' பத்திரிகையின் ஆசிரியர் ஆண்டாளின் சன்னிதிக்கே சென்று சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்புக்கோரியதாக ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் தெரிவித்தார்.

பத்திரிகை ஆசிரியரின் இந்தச் செயல் ஊடகத்துறையை அதிர வைத்துள்ளது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் அ.குமரேசன் நம்மிடம், ""தினமணி ஆசிரியர் இவ்வாறு செய்தது ஊடகச் சுதந்திர வரலாற்றில் இருட்டு நாள் என்றுதான் சொல்வேன். ஒரு ஊடகம் எந்தளவுக்கு சுதந்திரமாக கருத்துகளை வெளியிடுகிறதோ, அந்தளவுக்கு சமூகப் பொறுப்போடும் இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதே நேரத்தில் தினமணி பத்திரிகையில் வைரமுத்து எழுதி சர்ச்சைக்குள்ளான கட்டுரை, தினமணி இணையதளப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. அதுவே, அவர்கள் கொடுத்த கெடுபிடிகளுக்கும், மிரட்டல்களுக்கும் அந்த நிறுவனம் அஞ்சி பின்வாங்கியிருப்பதைக் காட்டுகிற மோசமான வெளிப்பாடுதான்.

அதுபோக, தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஆண்டாளின் சன்னிதிக்கே சென்று சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்புக்கேட்டார் என்ற தகவல் வருகிறது. அவர் தனிமனிதராக, இறை நம்பிக்கை உடையவராக இருந்துகொண்டு, தான் செய்த செயலுக்கு வருந்தி மன்னிப்புக் கோருவதில் பிரச்சினையில்லை. ஆனால், தமிழகத்தில் மிகப்பெரிய பாரம்பரியமிக்க பத்திரிகையின் ஆசிரியர் ஒருவர் இப்படிச் செய்வது, ஊடகச் சுதந்திரம் இருக்கிறது என்று நம்பிக்கொண்டிருக்கும் பலரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

இந்தியாவில் எமர்ஜென்சி வந்தபோது, தினமணி ஆசிரியராக இருந்த ஏ.என்.சிவராமன் எந்தளவுக்கு துணிச்சலாக அதை எதிர்கொண்டார் என்பதும், உண்மைகளைக் கொண்டுவர பாடுபட்டார் என்பதும் வழிகாட்டியாக நமக்கு இருக்கிறது. அதேபோல, தினமணியின் நிறுவனராக ராம்நாத் கோயங்கா இருந்தபோது ஆசிரியர் குழுவின் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது. இந்தளவுக்கு பாரம்பரியத்தில் முன்னுதாரணமான பத்திரிகைக்கே அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முடியாமல் பின்வாங்கவேண்டிய நிலை ஏற்படுகிறதென்றால், சமூகத்தில் மாற்று சிந்தனைகளை முன்வைக்கக்கூடிய, குறிப்பாக சிறிய ஊடகங்கள், இளம் பத்திரிகையாளர்கள், உண்மையைச் சொல்லவேண்டும் என்று விரும்பும் ஊடகவியலாளர்களின் நிலை என்னவாகும்? என்ற கேள்வியும் எழுகிறது. மக்களோடு சேர்ந்து உண்மையைப் பேச, மாற்றத்தை முன்வைக்க தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஊடகவியலாளர்கள், இந்த செயலை தங்களது விமர்சனங்களில் ஒன்றாக பதிவுசெய்துகொண்டு தங்களது கருத்துகளை தொடர்ந்து வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்''’என்கிறார் நம்பிக்கையுடன்.

தினமணி ஆசிரியர் தன்னை நம்பி, தான் முன்னின்று ஏற்பாடு செய்த விழாவில் கட்டுரை வாசித்து அதை பத்திரிகைக்கும் தந்த கவிஞர் வைரமுத்து பக்கம் நின்றிருக்க வேண்டியதுதான் பத்திரிகை தர்மம். எமர்ஜென்சி காலத்தில் சர்வ அதிகாரம் படைத்த பிரதமர் இந்திராவின் நெருக்கடிகளை துணிவுடன் எதிர்கொண்டு தர்மயுத்தம் நடத்தியவர் கோயங்கா. அந்த தர்மத்தை அவமதிக்கும் வகையில், தன்னை மட்டும் காப்பாற்றிக்கொண்டு தன்னை நம்பியவரை நட்டாற்றில் அம்போவென விட்டதுபோல தினமணி ஆசிரியர் செயல்பட்டிருக்கிறார்'' என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள் பலரும்.

தனக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்களை எல்லாம் ஆண்டாள் பார்த்துக்கொள்வார் என்று ஜீயர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். அவர் கூறியது உண்மையாக இருக்கும்பட்சத்தில், சமீப காலங்களில் தன்னைப் போன்றவர்களின் வாயிலிருந்து வெளிப்படும் கருத்துகளுக்கும் அது பொருந்தும் என்பதை அவர் உணரவேண்டும்.

-ச.ப.மதிவாணன்