கணவர் நடராஜனின் மரணம் சசிகலாவை மனதளவில் பலகீனப்படுத்தியிருக்கிறது. இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள 15 நாள் பரோல் வாங்கியிருக்கிறார் சசிகலா. தஞ்சையிலேயே இருக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் பரோல் பெற்றிருந்த அவர், தரைவழி மார்க்கமாக தஞ்சைக்கு வர, வழியெங்கும் வரவேற்பு கொடுத்து அசத்தினார்கள் தினகரனின் ஆதரவாளர்கள்.
இறுதிச்சடங்கு முடிந்து 21-ந்தேதி இரவு தஞ்சை வீட்டில் திவாகரன், தினகரன், வெங்கடேஷ், விவேக் உள்பட முக்கிய உறவினர்களுடன் நீண்ட நேரம் விவாதித்திருக்கிறார் சசிகலா.
மன்னார்குடி உறவுகளுக்கு நெருக்கமானவர்களிடம் நாம் விசாரித்தபோது, ""நடராஜனின் உடலைக் கண்டு கண்கலங்கினார் சசிகலா. யாரிடமும் அதிகமாகப் பேசவில்லை. அழுகையை கட்டுப்படுத்த வீட்டிலிருந்த ஒரு அறைக்குள் சென்று தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் சசிகலா. உடலுக்கு மரியாதை செய்ய முக்கியப் பிரமுகர்கள் வந்தபோது மட்டும் அவர்களைப் பற்றி சசிகலாவிடம் விவரித்தார் தினகரன்.
நடராஜனின் உடல் அடக்கம் முடிந்த பிறகே உறவுப் பெண்களிடம் சகஜமாகப் பேசத்துவங்கினார் சசிகலா. அன்று இரவு திவாகரன், தினகரன் மற்றும் முக்கிய உறவினர்களுடன் சசிகலா பேசும்போது, ‘"எடப்பாடி, பன்னீர் மட்டும் துரோகிகள் இல்லை. நடக்கிற விசயங்களைப் பார்த்தால் எல்லா அமைச்சர்களுமே துரோகிகள்தான். பன்னீரை முதலமைச்சராக்கியதும் நான்தான்; பழனிச்சாமியை முதலமைச்சராக்கியதும் நான்தான். அமைச்சராக இருக்கிற ஒருத்தராவது தனக்கு எப்படி இந்த பதவி கிடைச்சதுன்னு யோசித்துப் பார்த்திருக்காங்களா? ஒருத்தருக்கும் நன்றி உணர்ச்சி இல்லை. இன்றைக்கு இருக்கிற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் கிடைக்க யார் காரணம்? நான்தானே? அப்படியிருந்தும் ஒரு பயலும் தஞ்சைக்கு வரவில்லை.
ஒவ்வொருத்தருக்காகவும் அக்காவிடம் (ஜெயலலிதா) எந்தளவுக்கு வாதாடியிருப்பேன்னு யாருக்காவது தெரியுமா? தெரியாது. அக்கா இருந்தபோது எனக்கு மரியாதை கொடுத்தார்கள். அதெல்லாம் நடிப்புங்கிறது இப்போதுதான் தெரியுது. இனி இவர்களை நம்பக்கூடாது. ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும்'’என ஆதங்கப்பட்டு பேசினார் சசிகலா.
தனது தம்பி திவாகரனைப் பார்த்து, "ஆட்சியே நம்முடைய ஆட்சிதான். எடப்பாடி, பன்னீர் எல்லாம் திருந்திட்டாங்க. நம்முடைய விசுவாசிகளாத்தான் இருக்காங்க'னு நீ அடிக்கடி சொன்னதெல்லாம் தப்பா போய்டுச்சி பார்த்தாயா? நான் வந்திருக்கேன்னு தெரிஞ்சி என்னை பார்க்க வரவேணாம்; அப்படி வந்தால் அவங்களோட எஜமான் (மோடி) கோவிச்சிக்குவாருங்கிறது எனக்குத் தெரியும். ஆனா, தெரிஞ்சும் தெரியாமலும் அமைச்சர்கள் பலபேருக்கும் ஏதேனும் ஒரு வகையில் இந்த மனுஷன் (நடராஜன்) ஹெல்ப் பண்ணியிருக்காருதானே. அந்த நன்றிக்காகவாவது வந்து ஒரு மாலை வெச்சிட்டுப் போறதுக்கு என்ன?'’என கோபத்தைக் கொட்டியிருக்கிறார் சசி.
அதேபோல தினகரனைப் பார்த்து, "சில மாதங்களாகவே தலைக்கனம் அதிகமாயிடுச்சி. யாரையும் மதிக்கிறதில்லை. உன்னுடைய நடவடிக்கையாலதான், அ.தி.மு.க. முக்கியஸ்தர்கள் நம்ம பக்கம் வராம இருக்காங்க; இருக்கிறவங்களும் உன்னைவிட்டு வெளியே போறாங்க'’என கடிந்துகொண்டிருக்கிறார் சசிகலா. இவற்றுக்கெல்லாம் திவாகரனும் தினகரனும் விளக்கம் சொல்ல முயற்சித்தபோது, "வேண்டாம்' என மறுத்துவிட்டாராம்.
ஒரு கட்டத்தில், "சிறையிலேயே என் வாழ்க்கை முடிந்துவிடும்னு எடப்பாடி, பன்னீர், அமைச்சர்கள் எல்லோரும் கணக்குப் போடுகிறார்கள். அது தப்புன்னு அவங்களுக்குக் காட்டுவேன். அக்கா கல்லறையில், உன்னோட கனவை நான் நிறைவேற்றுவேன். சதிகாரர்களையும் துரோகிகளையும் வேரறுப்பேன் என ஓங்கி அடித்து சபதம் எடுத்தேன். அதிலிருந்து நான் விலகப்போவதில்லை. அதிகாரம் கைக்கு வந்ததும் பழனிச்சாமியும் சதிகாரர்களோடு சேர்ந்து எனக்கு துரோகம் செய்து வருகிறார். இனி, அ.தி.மு.க.வில் யாரையும் நான் நம்பப்போவதில்லை.
அதிகாரம் இருக்கும் வரையில்தான் அ.தி.மு.க.ங்கிற கட்சி. எதிர்காலத்தில் அக்கட்சி இருக்காது. ஏன்னா, டெல்லியிடம் கட்சியை அடகு வெச்சிட்டாங்க. டெல்லி அரசியல் எப்படி இருக்கும்னு அக்காக்கிட்டே பாடம் படிச்சிருக்கேன். அ.தி.மு.க.வை இனி டெல்லி வளர விடாது. நாடாளுமன்றத் தேர்தலோடு பழனிச்சாமி-பன்னீரின் ஆட்டம் அடங்கிவிடும். அந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெறக்கூடிய ஒரு கான்செப்டை தருவேன். அதன்படி அரசியல் செய்யுங்கள். தண்டனைக் காலம் முடிந்து வெளியே வந்ததும் என்னுடைய அரசியல் எப்படிப்பட்டதாக இருக்கும்ங்கிறதை துரோகிகளுக்கு நிரூபிப்பேன். அக்கா கல்லறையில் நான் எடுத்த சபதத்தை முடிக்காமல் சாகமாட்டேன். இனி அவர்களை நான் மன்னிப்பதாக இல்லை. இதைப் புரிந்து பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியலை செய்யுங்கள்'’ என ஆவேசமாக பேசியிருக்கிறார் சசிகலா''’என விவரித்தனர்.
முக்கிய உறவினர்களிடம் சசிகலா பேசிய ஆவேசத்தையும் ஆதங்கத்தையும் அறிந்து பதட்டமடைந்திருக்கும் எடப்பாடி தரப்பினர், ""மத்திய அரசின் கெடுபிடியில் சிக்கியிருக்கிறோம். நடராஜனின் மரணம் டெல்லிக்கு தெரியப்படுத்தப்பட்டது. அங்கிருந்து வந்த உத்தரவினால்தான் தஞ்சைக்கு யாரும் வரமுடியாமல் போனது. மற்றபடி, நாங்கள் உங்கள் விசுவாசிகள்தான்''’என சசிகலாவுக்கு தெரியப்படுத்தும் முயற்சியில் குதித்துள்ளனர்.
-இரா.இளையசெல்வன்